Saturday, 5 September 2026

ஆன்மிக அரசியல்




திருக்குறள் வழி ஆன்மிக அரசியல்


                  முன்னுரை

இந்த இணைப்பில் உள்ள கருத்துகள், ‘மழலையின் கீதை’ நூலில் விளக்கப்பட்டுள்ள ஆன்மிக வாழ்வியல் கோட்பாடுகளை சமூக மற்றும் அரசியல் நிர்வாகத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு சிந்தனை முயற்சியாகும்.

இவை வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்காக எழுதப்பட்டவை. எனவே, இவற்றை ஆராய்ந்து, தமக்குச் சரியெனத் தோன்றுவதை ஏற்றுக்கொள்வது வாசகர்களின் விருப்பம்.
......................................................................


ஆன்மிக அரசியல் என்றால் என்ன?

நமது நாடு ஆன்மிகச் சிந்தனைகளில் ஆழமாக வேரூன்றிய ஒரு நாடு. அதே நேரத்தில், நாம் ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பின் கீழ் வாழ்கிறோம்.

ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சி சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அரசியல் அதிகாரத்துடன் தனி மனித ஒழுக்கமும், சமூகப் பொறுப்பும், அறநெறியும் இணைந்திருக்க வேண்டும்.

இதைத்தான் நான் “ஆன்மிக அரசியல்” என்று அழைக்கிறேன்.

நமது நாட்டிற்குத் தேவை ஆன்மிகத்தை அரசியலின் மீது திணிப்பது அல்ல; மாறாக, ஆன்மிகம் வலியுறுத்தும் சுயக்கட்டுப்பாடு, அறம், பொறுப்பு, பற்றின்மை, பிறர்நலம், நேர்மை ஆகிய பண்புகளை அரசியல் நிர்வாகத்தில் கொண்டு வருவது.

ஆன்மிகம் இந்து சமயத்தில் மட்டும்தானா இருக்கிறது?
இல்லை. பிற சமயங்களிலும் ஆன்மிகச் சிந்தனைகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல், சமயங்களுக்கு அப்பாற்பட்ட தத்துவ ஞானிகளிடமும் மனிதனின் ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, பிறர்நலம், இறைத்தன்மை போன்ற கருத்துகளைப் பார்க்க முடிகிறது.

எனவே, இங்கு நான் பயன்படுத்தும் “ஆன்மிகம்” என்பது எந்த ஒரு சமயத்திற்கும் மட்டும் உரியதல்ல.

அது மனிதன் தன்னைத்தானே செம்மைப்படுத்திக் கொண்டு, சமூக நலனுக்குப் பயன்படும் வகையில் வாழ்வதற்கான ஒரு பார்வை.

நல்லாட்சியின் அடிப்படைகள்

ஒரு ஜனநாயக நாடு சிறப்பாகச் செயல்படுவதற்கு அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன:
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது.
தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது.
மக்கள் சட்டத்தையும் அறநெறியையும் மதித்து வாழ்வதற்கான சூழலை உருவாக்குவது.
நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மொழிகள் மற்றும் பல்வேறு மரபுகளைப் பாதுகாப்பது.
நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்வது.
எதிர்காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே உணர்ந்து செயல்படுவது.

இதில் குறிப்பாக தனி மனித ஒழுக்கம், சமூகப் பொறுப்பு, பண்பாட்டுப் பாதுகாப்பு, எதிர்காலச் சிந்தனை போன்றவற்றில் ஆன்மிகக் கருத்துக்கள் பெரும் உதவியாக இருக்கலாம். அது எப்படி என்பதைப் பார்ப்போம்.

ஆன்மிகம் என்ன கற்றுக் கொடுக்கிறது?

ஆன்மிகம் வெறும் சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றிலேயே தங்கி விடுவதில்லை.

மனிதன் எப்படி வாழ வேண்டும்?
சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தனது ஆசைகளையும் கோபத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
பிறருடைய நலனில் எவ்வாறு அக்கறை கொள்ள வேண்டும்?
தன்னைவிட உயர்ந்த ஒரு நோக்கத்திற்காக எவ்வாறு வாழ வேண்டும்?

இத்தகைய கேள்விகளுக்குத்தான் ஆன்மிகம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

சமயங்களைச் சாராத தத்துவ நூல்களிலும் இதுபோன்ற கருத்துகள் காணப்படுகின்றன.

அதே நேரத்தில், சமய மறைநூல்கள் மனிதனின் ஒழுக்க வாழ்க்கையோடு, இறைத்தன்மையை அடைவது பற்றியும் பேசுகின்றன.

           குணமும் விதியும்

இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவ எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலன் தனது The Mastery of Destiny என்ற நூலில் செயல்கள், குணம், விதி ஆகியவற்றின் தொடர்பைப் பற்றி பேசுகிறார். மனிதனின் செயல்கள் அவனுடைய குணத்தை உருவாக்குகின்றன; குணத்தின் மூலம் அவனுடைய எதிர்காலமும் வடிவமைக்கப்படுகிறது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.

இந்தக் கருத்து நமது கர்மக் கோட்பாட்டுடன் சில இடங்களில் ஒத்த சிந்தனையைத் தருகிறது.
ஆக, ஆன்மிகம் என்பது சுய ஒழுக்கம், சமூகப் பொறுப்பு, மனித குண மேம்பாடு, இறைத்தன்மையை நோக்கிய பயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது.

அத்துடன், எப்படிப்பட்ட மனிதன் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடுவான்? என்ற கேள்விக்கும் அது விடை தருகிறது.

மனிதர்களின் நான்கு வகைகள்

2018-ஆம் ஆண்டு Nature Human Behaviour இதழில் வெளியான ஒரு ஆய்வு, உலகம் முழுவதிலிருந்தும் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட questionnaire responses-ஐ ஆய்வு செய்து, personality traits அடிப்படையில் நான்கு குறிப்பிடத்தக்க clusters இருப்பதாகக் குறிப்பிட்டது:

Reserved
Role model
Self-centered
Average

இந்த ஆய்வு neuroticism, extraversion, openness, agreeableness, conscientiousness ஆகிய ஐந்து personality dimensions-ஐ அடிப்படையாகக் கொண்டது.

இதை ஒரு முழுமையான மனித வகைப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், மனிதர்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ள ஒரு சிந்தனைக்கருவியாக இதைப் பயன்படுத்தலாம்.

நமது சமூக மற்றும் அரசியல் சிந்தனைக்கு ஏற்ற வகையில் இந்த நான்கு வகைகளையும் சற்றுத் தனிப்பட்ட முறையில் பார்க்கலாம்.

1. Reserved — ஒதுங்கி வாழ்பவர்கள்
சிலர் இயல்பிலேயே அமைதியான வாழ்க்கையை விரும்புவார்கள்.
கூட்டம், ஆரவாரம், பணம், புகழ் போன்றவற்றில் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்காது.
ஆனால் அதனால் அவர்கள் செயலற்றவர்கள் என்று அர்த்தமில்லை.

தங்களுக்கு முக்கியமான ஒரு நோக்கம் இருந்தால், அதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கக்கூடியவர்களாக இருக்கலாம்.

வெளியுலகிற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் போகலாம். எனவே, இவர்களை “செயலற்றவர்கள்” என்று முடிவு செய்துவிடக் கூடாது.

நமது பார்வையில், இவர்களை “தனிமையை விரும்பும் செயல்பாட்டாளர்கள்” என்று அழைக்கலாம்.

2. Role Model — முன்மாதிரியானவர்கள்
சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர்கள்.
இவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கலாம்.
ஆனால் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் ஒரு கட்டத்தில் அவர்களை அகத்தாய்விற்குள் அழைத்துச் செல்லலாம்.
அதன் தொடர்ச்சியாக, “போதும்” என்ற மனநிலையை அடைந்து, வெளிப்புற ஆரவாரத்திலிருந்து விலகி அமைதியாக வாழத் தொடங்கலாம்.

அவர்கள் திறமையையும் செயலாற்றும் ஆற்றலையும் இழந்தவர்கள் அல்ல.

செயலுக்குள் இருந்தபடியே மனத்தில் சமநிலையை அடைந்தவர்கள்.
தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்தாலும், பிறரை வஞ்சிக்காமல் பொருள் ஈட்டி, தேவைக்கு அதிகமானதை சமூக நலனுக்குப் பயன்படுத்துபவர்களையும் இந்தப் பிரிவில் சேர்க்கலாம்.

3. Self-Centered — சுயநல நோக்கமுடையவர்கள்
சிலர் தாங்கள் எண்ணிய குறிக்கோளை அடைவதற்காக மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
தடைகள் வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வார்கள்.
குறிக்கோளை அடையும் வரை விடாமல் போராடுவார்கள்.
இவர்களும் active வகையைச் சேர்ந்தவர்களே.

ஆனால் அவர்களுடைய செயல்களின் மையத்தில் தனிப்பட்ட நலம் மட்டுமே இருந்தால், அவர்களை சுயநல நோக்கமுடையவர்கள் என்று கூறலாம்.

அரசியலில் இத்தகைய மனிதர்கள் அதிகாரத்தை மக்களுக்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக,  தங்களுடைய நலனுக்காகப் பயன்படுத்தும் அபாயம் உண்டு.

4. Average — பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள்
சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க முடியாதவர்கள்.
யாரையாவது தலைவராகவோ, குருவாகவோ ஏற்றுக்கொண்டு, அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள்.

தங்களுடைய சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளாமல், ஒருவரை முழுமையாகச் சார்ந்திருப்பது சமூகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமான நிலை அல்ல.

அரசியலுக்கு யார் வர வேண்டும்?

இந்த நான்கு வகைகளையும் அரசியல் கோணத்தில் பார்த்தால், நேரடி அரசியலில் பெரும்பாலும் இரண்டு வகையான மனிதர்களே அதிகமாகக் காணப்படலாம்:
பொதுநல நோக்கமுடையவர்கள்
மற்றும்
தன்நல நோக்கமுடையவர்கள்.

முதல் முறையாக வாக்களிக்கும் போது, ஒரு வேட்பாளர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்து கொள்வது எளிதல்ல.

ஆனால், ஒருவர் ஆட்சிக்கு வந்த பிறகு அவரது செயல்பாடுகள் தெளிவாகத் தெரியத் தொடங்குகின்றன.
அதன்பிறகும் மக்கள் அதே தவறான தேர்வை மீண்டும் மீண்டும் செய்வார்களானால், அது ஒரு தனி நபரின் தவறு மட்டுமல்ல; வாக்காளர்களின் பொறுப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

எனவே, ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது உரிமை மட்டுமல்ல.
அது ஒரு பொறுப்பும் கூட.

ஆன்மிகம் அரசியலுக்கு எவ்வாறு உதவும்?

பொது நலத்தில் அக்கறை கொண்ட ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருக்கு ஆன்மிகம் எவ்வாறு உதவ முடியும்?

அதற்கு முதலில் ஆன்மிகம் என்றால் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்மிகம் — ஒரு வாழ்வியல்
ஆன்மிகம் மனிதன் எப்படி வாழ வேண்டும், சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

இதுபோன்ற கருத்துகள் சமயம் சாராத நூல்களிலும் உள்ளன.

ஆனால் நமது நாட்டில் இத்தகைய வாழ்வியல் கருத்துகளைப் போதித்த பலரும் கூடவே இறைவனைப் பற்றியும், இறைத்தன்மையை அடைவது பற்றியும் கூறியுள்ளனர்.
அதனால் அவை சமயச் சூழலோடு இணைந்து விட்டன.

இவற்றைத் தெரிந்துகொள்ள நாம் எல்லா மறைநூல்களையும் படிக்க வேண்டிய அவசியமில்லை.
அவற்றைப் புரிந்துகொள்வதும் எளிதல்ல.

ஆனால் திருவள்ளுவர் அவற்றில் பலவற்றை மிக எளிமையாகவும் இனிமையாகவும் கூறியிருக்கிறார்.

திருக்குறள் — வாழ்வியல் கையேடு

தனி மனிதன் தனது வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்பதை அறத்துப்பாலிலும், சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பொருட்பாலிலும் திருவள்ளுவர் விளக்குகிறார்.

அவற்றை முறையாக உள்வாங்கி, அதன்படி வாழத் தொடங்கினால், ஒரு சாதாரண மனிதன்கூட ஒரு முன்மாதிரியான மனிதனாக மாற முடியும்.

அதனால்தான் இந்தத் தொடரில் திருக்குறளை அரசியல் கோணத்திலும் பார்க்க விரும்புகிறேன்.

தினமும் மூன்று குறள்கள்

அறத்துப்பாலும் பொருட்பாலும் சேர்த்து 108 அதிகாரங்கள் உள்ளன; மொத்தம் 1080 குறள்கள்.

ஒரு நாளைக்கு மூன்று குறள்கள் படித்தால், ஒரு வருடத்தில் இப்பகுதியை முழுமையாகப் படித்துவிடலாம். தினமும் பதினைந்து நிமிடங்கள் போதுமானது.

அடுத்த வருடம் மீண்டும் முதலிலிருந்து படிக்கலாம்.
அப்போது புதிய பொருள் தோன்றலாம்.
ஏன்?
நூல் மாறவில்லை; நாம் மாறியிருக்கிறோம்.
நமது புரிதல் வளர வளர, அதே குறளுக்குள் புதிய பரிமாணங்கள் தோன்றுகின்றன.

தனி மனித வெற்றியும் நாட்டின் வெற்றியும்

ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டான் என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்வது?
பணமா?
புகழா?
அந்தஸ்தா?
அதிகாரமா?

சுவாமி சின்மயானந்தர் கூறியதாகப் பரவலாக மேற்கோள் காட்டப்படும் ஒரு கருத்து:
“Success in life is measured by the tranquility of the mind.”
அதாவது,
மன அமைதியே வாழ்க்கையின் வெற்றிக்கான ஒரு முக்கியமான அளவுகோல்.

பதஞ்சலியின்,
“யோகஶ் சித்தவ்ருத்தி நிரோதஃ”
என்ற சூத்திரமும் மனத்தின் அலைச்சலை அடக்கும் யோகநிலையைப் பற்றிப் பேசுகிறது.

அப்படியானால் ஒரு நாட்டின் வெற்றிக்கான அளவுகோல் என்ன?
என் பார்வையில்,
மக்கள் ஒன்றுபட்டு வாழ்கிறார்களா?
ஒருவரை ஒருவர் மதிக்கிறார்களா?
சட்டத்தின் முன் சமத்துவம் இருக்கிறதா?
அரசு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறதா?
எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுகிறதா?
என்பவையும் அந்த அளவுகோல்களில் அடங்கும்.

ஒன்றுபடுதல் — நாட்டின் வலிமை

ஒரு நல்ல கருத்து இவ்வாறு கூறப்படுகிறது:
Coming together is the beginning;
Keeping together is the progress;
Working together is the success.
தமிழில்:
ஒன்றாகச் சேர்வது தொடக்கம்;
ஒன்றுபட்டு இருப்பது முன்னேற்றம்;
ஒருமித்த நோக்குடன் செயல்படுவது வெற்றி.

இந்தியாவின் மிகப்பெரிய வலிமைகளில் ஒன்று அதன் பல்வகைத் தன்மை.

மதங்கள், மொழிகள், இனங்கள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள், பண்பாடுகள் எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே அரசியலமைப்பின் கீழ் ஒரே தேசமாக வாழ்வது நமது பெரும் சாதனை.

எனவே, வேறுபாடுகளை அழிப்பது அல்ல; வேறுபாடுகளுக்குள் ஒருமைப்பாட்டை உருவாக்குவதுதான் நல்ல அரசியலின் நோக்கம்.

எதிர்காலத்தை முன்கூட்டியே காணும் அறிவு

திருவள்ளுவர் கூறுகிறார்:
“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.”
— குறள் 429

ஆட்சியில் இருப்பவன் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடாது.

எதிர்காலத்தில் என்ன பிரச்சினைகள் வரலாம் என்று முன்கூட்டியே சிந்தித்து, அவை பெரிதாக மாறுவதற்கு முன்பே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதுவே நல்ல நிர்வாகம்.இன்றைய அரசியலில் இதனைப் பல துறைகளுக்குப் பயன்படுத்தலாம்:
கலாச்சார மாற்றங்கள்
சாதி மற்றும் சமூகப் பிளவுகள்
மக்கள் தொகை தொடர்பான சவால்கள்
வறுமை மற்றும் சமத்துவமின்மை
சட்டம் மற்றும் ஒழுங்கு
போதைப் பொருள் பழக்கம்
சுற்றுச்சூழல் பாதிப்பு
தேசிய பாதுகாப்பு
இணையவழி தவறான தகவல்கள்
சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை
இவற்றை உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல; தரவு, சட்டம், அறம், மனிதநேயம் ஆகியவற்றின் அடிப்படையில் கையாள வேண்டும்.

      கலாச்சாரப் பாதுகாப்பு

ஒரு நாட்டின் கலாச்சாரம் தானாகவே பாதுகாக்கப்படாது.

அடுத்த தலைமுறைக்கு அதை அறிமுகப்படுத்த வேண்டும்.

“இளமையில் கல்” என்பது இதற்குப் பொருத்தமான பழமொழி.

குழந்தைப் பருவத்தில் அவர்கள் ஆர்வத்துடனும் விரைவாகவும் கற்றுக்கொள்வார்கள்.

எனவே, நமது மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அறநெறி, நாட்டின் வரலாறு ஆகியவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியம்.

இதற்காக பெரிய கட்டிடங்கள் மட்டுமே தேவை என்று அவசியமில்லை.
அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், சிறிய சமூகக் கல்வி மையங்கள், வாசிப்பு வட்டங்கள், கலாச்சாரப் பயிற்சிகள் போன்றவற்றின் மூலமும் இதைச் செய்யலாம்.

“Unschooling” என்ற சொல்லை இங்கு பயன்படுத்த வேண்டுமானால், அதன் வழக்கமான கல்வியியல் பொருளைத் தவறாகப் புரியவிடாமல், பள்ளிக் கல்விக்கு வெளியே நடைபெறும் சமூக அடிப்படையிலான கற்றல் முயற்சிகள் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

அத்தகைய இடத்தில் ஆசிரியர் வெறும் பாடம் சொல்லுபவராக இல்லாமல், மாணவர்களுக்கு வாழ்வின் முன்மாதிரியாக மாறும்போது அவர் உண்மையான குரு நிலையை அடைகிறார்.

முதலில் தன் குற்றத்தைப் பார்ப்போம்

திருவள்ளுவர் கூறுகிறார்:
“ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.”
— குறள் 190

பிறருடைய குற்றத்தைப் பார்ப்பதற்கு முன் தன்னுடைய குற்றத்தையும் அதே அளவு கவனமாகப் பார்க்க வேண்டும்.

அதற்குப் பிறகு அவர் இன்னும் தெளிவாகக் கூறுகிறார்:
“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.”
— குறள் 436

அரசியலிலும் இதுவே பொருந்தும்.
“அவர்கள் தவறு செய்கிறார்கள்” என்று கூறுவதற்கு முன்,
“நாம் சரியாகச் செய்கிறோமா?”
என்று கேட்கும் மனப்பான்மை வேண்டும்.

சாதி — பிறப்பா? குணமா?

நம் சமூகத்தின் முக்கியமான சவால்களில் ஒன்று சாதிப் பிரிவினை.

சிலர் இதற்குக் காரணமாக வர்ணாஸ்ரம தர்மத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இங்கு ஒரு வேறுபாட்டை நினைவில் கொள்ள வேண்டும். வர்ணம் என்பது குணம், இயல்பு, திறன், செயல்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவ வகைப்பாடாக விளக்கப்படுகிறது.

நடைமுறையில் உருவான பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பை அதனுடன் அப்படியே ஒன்றாக்குவது கருத்தியல் ரீதியாக எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாகிவிடும்.

எது எப்படியிருந்தாலும், பிறப்பின் அடிப்படையில் மனிதனை உயர்ந்தவன்–தாழ்ந்தவன் என்று மதிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

திருவள்ளுவர் கூறுகிறார்:
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்.”
— குறள் 973

மனிதனின் உயர்வு பிறப்பால் அல்ல; அவனுடைய பண்பாலும் செயலாலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

  சட்டம் அனைவருக்கும் ஒன்று

சாதி, மதம், மொழி, இனம் எதுவாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உணர்வு வலுப்பெற வேண்டும்.

சில நிர்வாகச் சான்றுகளுக்காக சமூக வகைப்பாடுகள் தேவைப்படலாம். ஆனால் குழந்தைகளின் மனதில் சிறு வயதிலிருந்தே, “இந்தப் பெயரால் நான் உயர்ந்தவன்; அந்தப் பெயரால் அவன் தாழ்ந்தவன்” என்ற எண்ணம் உருவாகாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம்.

அதேபோல், பொதுப் பயன்பாட்டுக்கான இடங்கள் அதிகரிக்க வேண்டும்.

சமூகப் பிரிவினையை வலுப்படுத்தும் அமைப்புகளுக்குப் பதிலாக, அனைவரும் சமமாகப் பயன்படுத்தக்கூடிய பொது வசதிகள் உருவாக வேண்டும்.

    வருமுன் காப்பதே நல்லாட்சி

திருவள்ளுவர் கூறுகிறார்:
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.”
— குறள் 435

எதிர்காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே உணர்ந்து செயல்படாதவனின் வாழ்க்கை அழியும் என்கிறார்.

தனி மனிதனுக்குச் சொன்னாலும், இதை அரசுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

மக்கள் தொகை, வேலைவாய்ப்பு, உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல், நகரமயமாக்கல் போன்ற பல பிரச்சினைகளை அரசுகள் நீண்டகாலக் கணக்கில் அணுக வேண்டும்.

அரசியலின் வெற்றி அடுத்த தேர்தலை வெல்வதில் மட்டும் இல்லை; அடுத்த தலைமுறையை பாதுகாப்பாக விட்டுச் செல்வதிலும் இருக்கிறது.

     ஸஸவருவாயும் செலவும்

திருவள்ளுவர் கூறுகிறார்:
“ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை;
போகாறு அகலாக் கடை.”
— குறள் 478

வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் கேடு இல்லை.

இந்தக் கருத்து ஒரு குடும்பத்திற்கும் பொருந்தும்; ஒரு அரசுக்கும் பொருந்தும்.

அரசு வருவாயைப் பெறுவது மட்டுமல்ல; அதை எங்கு செலவிடுகிறது என்பதும் முக்கியம்.
வறியவர்களுக்கு உதவும் நலத்திட்டங்கள் அவசியமானவை.
ஆனால், உதவி உண்மையில் தேவைப்படுகிறவரைச் சென்றடைகிறதா?

அரசின் வளங்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறதா?

திட்டங்கள் நீண்டகால நன்மையை உருவாக்குகிறதா? என்பதையும் மதிப்பிட வேண்டும்.

நலத்திட்டம் என்பது செலவு அல்ல; சரியான இடத்தில் செய்யப்பட்ட முதலீடாக இருக்க வேண்டும்.

“கொலையிற் கொடியார்” — அரசியல் வாசிப்பு

திருவள்ளுவர் கூறுகிறார்:
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.”
— குறள் 550

இந்தக் குறளுக்கு பலவிதமான விளக்கங்கள் உள்ளன.

நான் இதனை அரசியல் கோணத்தில் சிந்திக்கும்போது, ஒரு கேள்வி எழுகிறது:

ஒரு மனிதனைக் கொல்வதைவிட ஒரு சமூகத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ பெரும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் எவை?

அவை நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதாக இருக்கலாம்.
சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுவதாக இருக்கலாம்.
வன்முறையைத் தூண்டுவதாக இருக்கலாம்.
அரசியலமைப்புச் சட்டத்தையும் நாட்டின் இறையாண்மையையும் திட்டமிட்டு பாதிப்பதாக இருக்கலாம்.

ஆனால், இவற்றில் எதற்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதை தனிநபரின் கருத்து தீர்மானிக்கக் கூடாது.
சட்டமும் நீதித்துறையும் அரசியலமைப்பும் தீர்மானிக்க வேண்டும்.

வள்ளுவர் “களை” என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.
நாட்டில் தீங்கு விளைவிக்கும் செயல்களை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்துவது அரசின் கடமை.

ஆனால் அதே நேரத்தில்,
கருத்து வேறுபாடு = தேசத்துரோகம்
என்று கருதுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

கருத்து வேறுபாட்டையும் சட்டவிரோதச் செயலையும் தெளிவாகப் பிரித்தறிய வேண்டும்.

வெளிப்படையான பகையும் மறைந்த நோக்கமும்

திருவள்ளுவர் கூறுகிறார்:
“தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.”
— குறள் 828

வெளியில் அன்பாகத் தோன்றியும் உள்ளுக்குள் தீய நோக்கம் கொண்டிருப்பவர்களைப் பற்றிய எச்சரிக்கையாக இதைப் பார்க்கலாம்.

அரசியலிலும் இது பொருந்தும்.
ஆனால் ஒருவருடைய உள்ளநோக்கை ஊகித்துக் கொண்டு குற்றவாளி என்று முடிவு செய்வது சரியல்ல.

செயல், ஆதாரம், சட்டம் — இவற்றின் அடிப்படையில்தான் அரசு முடிவு எடுக்க வேண்டும்.இதுவே ஜனநாயகத்தின் பாதுகாப்பு.

அரசின் செல்வம் மக்களுக்காக

திருவள்ளுவர் கூறுகிறார்:
“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.”
— குறள் 44

தவறான வழியில் பொருள் ஈட்டக்கூடாது. ஈட்டிய பொருளைத் தக்க முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இதை அரசின் நிர்வாகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.
ஆட்சியாளர்கள்:
ஊழலைத் தவிர்க்க வேண்டும்.
மக்களை அநியாயமாகச் சுரண்டக்கூடாது.
வருவாயை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
வறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதுகாக்க வேண்டும்.
எதிர்காலத் தேவைகளுக்குச் சேமிக்க வேண்டும்.
இதுவே நல்ல நிதி நிர்வாகம்.

கல்வி — நாட்டின் எதிர்கால முதலீடு

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கெல்லாம் இனிது.”
— குறள் 68

குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெற்றோருக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கே மகிழ்ச்சி தருகிறது.

அதனால் கல்வி என்பது ஒரு தனிநபரின் உரிமை மட்டுமல்ல.
அது நாட்டின் எதிர்கால முதலீடு.

ஒரு பொன்மொழி ஆசிரியர்களை நான்கு நிலைகளாகப் பிரிக்கிறது:
A poor teacher tells.
An average teacher explains.
A good teacher demonstrates.
An excellent teacher inspires.

இதில் கடைசி நிலைதான் மிக முக்கியமானது.
தகவலைக் கொடுப்பவர் ஆசிரியர்;
ஆர்வத்தை எழுப்புபவர் குரு.
குழந்தையின் உள்ளத்தில் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை எழுப்பும் ஆசிரியர்களை உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று.

பயனற்ற சொற்கள்

திருவள்ளுவர் கூறுகிறார்:
“பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல்;
மக்கட் பதடி எனல்.”
— குறள் 196

பயனற்ற சொற்களைப் பேசிக்கொண்டிருப்பவரை வள்ளுவர் கடுமையாகக் கண்டிக்கிறார்.

அரசியலில் இது இன்னும் முக்கியமானது. ஏனெனில் அரசியல்வாதியின் வார்த்தைகள் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும்.

மக்களைப் பிரிப்பதற்காகப் பேசப்படும் சொற்கள்,
பிறரை அவமதிப்பதற்காகப் பேசப்படும் சொற்கள்,
பொய்யான தகவல்களைப் பரப்பும் சொற்கள்,
வெறும் சத்தத்தை உருவாக்கும் சொற்கள் —
இவை அனைத்தும் நாட்டின் சிந்தனைத் தரத்தைத் தாழ்த்தக்கூடும்.

ஆயிரம் மலர்கள் இருந்தாலும், அவற்றை மாலையாக இணைக்க நூல் தேவை.

அதேபோல், மதம், மொழி, இனம், பண்பாடு எனப் பல வேறுபாடுகளைக் கொண்ட மக்களை ஒருமைப்படுத்துவது அரசியல் தலைமையின் முக்கியப் பொறுப்பு.
அரசியல்வாதி அந்த நூலாக இருக்க வேண்டும்; கத்தியாக அல்ல.

  பிறருக்குக் கேடு நினைக்காதே

திருவள்ளுவர் கூறுகிறார்:
“மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.”
— குறள் 204

இந்தக் குறளை நான் ஒரு முக்கியமான ஆன்மிக விதியாகப் பார்க்கிறேன்.

நமது செயல் நமது எண்ணத்திலிருந்து பிறக்கிறது.
பல நேரங்களில் செயல் வெளியில் நல்லதாகத் தோன்றலாம்; ஆனால் அதன் பின்னால் இருக்கும் நோக்கம் வேறாக இருக்கலாம்.

அதனால்தான் வள்ளுவர் எண்ணத்தையே எச்சரிக்கிறார்.
“கெடுவான் கேடு நினைப்பான்” என்ற பழமொழியையும் இதனுடன் ஒப்பிடலாம்.

பிறருக்குத் தீங்கு நினைப்பவன் உடனடியாகத் துன்பப்படாமல் இருக்கலாம்.

ஆனால் அந்த எண்ணம் அவனுடைய மனத்தையே முதலில் விஷமாக்குகிறது.

அதனால்,
பிறரை வெறுப்பதைவிட, அவரிடமிருந்து விலகுவது மேல்.

கேடு நினைப்பதைவிட, நம்மை நாமே காப்பது மேல்.

   ஸஒப்புரவு -- அரசின் உதவி

திருவள்ளுவர் கூறுகிறார்:
“ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.”
— குறள் 220

பிறருக்கு உதவி செய்வதால் தனக்கே இழப்பு வந்தாலும் உதவத் தயங்கக்கூடாது என்பதே குறளின் மையச் சிந்தனை.

ஒரு தனி மனிதனுக்கு இது பொருந்துவது போலவே, அரசுக்கும் ஒரு வகையில் பொருந்தலாம்.

உதாரணமாக, ஒரு அரசு ஒரு சமூகத் தீமையைத் தடுக்கும் கடுமையான சட்டத்தை கொண்டு வந்தால், சிலருக்கு உடனடி இழப்பு ஏற்படலாம்.
ஆனால் அதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாக்கப்படுமானால், அது பொதுநலத்தை நோக்கிய ஒப்புரவு என்று பார்க்கலாம்.

ஆட்சியாளன் எல்லோரையும் மகிழ்விப்பவன் அல்ல.
நீண்டகால பொதுநலனை முன்னிறுத்தி, நியாயமான முடிவுகளை எடுப்பவனே நல்ல ஆட்சியாளர்.

           “தக்கார்” யார்?

“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.”
— குறள் 212

“தக்கார்” என்ற சொல்லுக்கு நல்லவர், சான்றோர், தகுதியுடையவர் போன்ற பல பொருள்கள் கூறப்படுகின்றன.

அரசின் பார்வையில், உதவி தேவைப்படுபவரும், அந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்தக்கூடியவரும் “தக்கார்”
என்று ஒரு நிர்வாகப் பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.

“பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்ற பழமொழியைப் போல, உதவி செய்யும் போது தகுதியையும் தேவையையும் ஆராய வேண்டும்.

அரசின் வருவாய் முதலில்:
நாட்டின் பாதுகாப்பு,
அடிப்படை வசதிகள்,
கல்வி,
சுகாதாரம்,
கட்டமைப்பு,
எதிர்கால முதலீடுகள்
போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

அதன்பின், உண்மையில் தேவைப்படுகிறவர்களுக்கு உதவி சென்றடைய வேண்டும்.

  வளமான நாடு என்றால் என்ன?

“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.”
— குறள் 214
தனிப்பட்ட செல்வத்தை மட்டுமே சேர்த்துக் கொண்டிருப்பதை விட, சமூகத்திற்குப் பயன்படும் வகையில் வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை இந்தக் குறளில் காணலாம்.
அதேபோல் ஒரு நாட்டையும் பார்க்கலாம்.
மாடமாளிகைகள் உயர்ந்து நிற்பதால் மட்டும் ஒரு நாடு வளமானதாகிவிடாது.
அங்கு வாழும் சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா?
அவன் பசியின்றி வாழ்கிறானா?
அவனுடைய குழந்தைக்கு கல்வி கிடைக்கிறதா?
சுகாதார வசதி கிடைக்கிறதா?
பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கிறதா?
என்பதுதான் உண்மையான கேள்வி.
பசியைத் தீர்ப்பதே முதன்மை
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.”
— குறள் 226
நாட்டின் கட்டமைப்பு வளர வேண்டும்.
பொருளாதாரம் வளர வேண்டும்.
வருவாய் பெருக வேண்டும்.
எதிர்காலத்திற்குச் சேமிக்க வேண்டும்.
ஆனால், இவை அனைத்திற்கும் நடுவில் பசியால் தவிக்கும் மனிதன் இருக்கக்கூடாது.
வறியவரின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதே ஒரு நல்ல அரசின் முதன்மையான கடமைகளில் ஒன்று.
அரசியல்வாதியின் புகழ்
“புகழ்பட வாழாதார் தந்நோவார்; தம்மை
இகழ்வாரை நோவது எவன்?”
— குறள் 237
அரசியலுக்கு வருபவர்களின் நோக்கங்கள் வேறுபடலாம்:
சேவை மனப்பான்மை.
பொருள் சம்பாதிக்கும் ஆசை.
பதவி மற்றும் அதிகாரத்தின் மீது ஆசை.
சேவை மனப்பான்மையுடன் செயல்படுபவனைப் புகழ் தேடி வரலாம்.
ஆனால் அவரையும் சிலர் விமர்சிக்கலாம்.
அதனால் மனம் தளர வேண்டியதில்லை.
அதே நேரத்தில், விமர்சனம் வந்தால் அதை முழுவதுமாக நிராகரிக்கவும் கூடாது.
நியாயமான விமர்சனத்திலிருந்து கற்றுக்கொள்வதும் தலைமைப் பண்பே.
திருவள்ளுவர் கூறுகிறார்:
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”
— குறள் 151
ஊழலற்ற அரசியல்
“சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.”
— குறள் 311
செல்வம் கிடைத்தாலும் பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கை.
அரசியலில் இதனை ஒரு எளிய விதியாக மாற்றலாம்:
“அதிகாரம் கிடைத்தாலும் ஊழல் செய்யாதே.”
ஆனால் அதைவிட உயர்ந்த நிலை ஒன்று உண்டு.
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.”
— குறள் 315
பிறருடைய துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் மனம் அரசியல்வாதிக்குத் தேவை.
மேலும்,
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.”
— குறள் 319
என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
வலிமையான அரசின் ஆறு அடையாளங்கள்
திருவள்ளுவர் கூறுகிறார்:
“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”
— குறள் 381
ஒரு வலிமையான அரசுக்கு ஆறு அடிப்படைகள்:
வலிமையான படை
நல்ல குடிமக்கள்
வளமான பொருளாதாரம்
திறமையான அமைச்சு
நம்பகமான நட்பு
வலிமையான அரண்
இவற்றுடன் ஒரு நல்ல ஆட்சியாளனுக்குத் தேவையான பண்புகளையும் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
அறிவு.
துணிவு.
இரக்கம்.
முயற்சி.
காலத்தை உணர்ந்து செயல்படுதல்.
அறநெறி.
குற்றமின்மை.
வீரம்.
மானம்.
காட்சிக்கு எளிமை.
கடுஞ்சொல் கூறாமை.
கடும் சொற்களையும் பொறுத்துக் கொள்ளும் பக்குவம்.
நிதி ஆதாரங்களை முறையாக நிர்வகிக்கும் திறன்.
இவை அனைத்தும் இன்றைய நல்லாட்சிக்கும் பொருந்தக்கூடியவை.
ஆட்சியாளனுக்கு ஊன்றுகோல்
திருவள்ளுவர் கூறுகிறார்:
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.”
— குறள் 415
வழுக்கும் இடத்தில் ஊன்றுகோல் உதவுவது போல, ஒழுக்கமுள்ளவர்களின் அறிவுரை உதவும்.
ஆட்சியாளனுக்கு அறிவுரை கூறுபவர்கள் வெறும் ஆதரவாளர்களாக இருக்கக்கூடாது.
அவர் தவறு செய்தால் “இது தவறு” என்று சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
அமைச்சர்கள் வேகமாகச் செயல்பட வேண்டியவர்கள்.
அவர்களுக்கு அறிவுரை கூறுபவர்கள் நிதானமாகவும் விவேகமாகவும் சிந்திக்க வேண்டும்.
ஆனால் இங்கும் வள்ளுவரின் எச்சரிக்கை பொருந்துகிறது:
ஊன்றுகோல் வலிமையானதாக இருந்தால்தான் அது உதவும்.
அதாவது அறிவுரை வழங்குபவர்களும் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி குறைவாக இருந்தாலும் அனுபவ அறிவு மிகுந்த ஒருவர் சான்றோராக இருக்கலாம்.
அதேபோல், உயர்ந்த பதவியில் இருப்பவர் சான்றோராகவே இருப்பார் என்று கருதவும் முடியாது.
தவறிலிருந்து கற்றுக்கொள்வது
“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.”
— குறள் 434
நல்ல ஆட்சியாளர் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.
தவறு நடக்கலாம்.
ஆனால் அந்தத் தவறிலிருந்து கற்றுக்கொண்டு, மீண்டும் அதே தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
துணிந்து செயல்படுவதில் ஏற்படும் நல்லநோக்குடைய தவறையும், தனநலத்திற்காகச் செய்யப்படும் குற்றத்தையும் ஒன்றாகக் கருதக்கூடாது.
தவறு செய்தால் திருத்திக்கொள்;
குற்றம் செய்யாதே;
குற்றம் நடந்தால் மறைக்காதே.
இதுவே நல்ல நிர்வாகத்தின் அடிப்படை ஒழுக்கமாக இருக்கலாம்.
திருக்குறளும் பகவத்கீதையும்
திருக்குறளையும் பகவத்கீதையையும் நான் இரண்டு பெரிய ஆன்மிகக் களஞ்சியங்களாகப் பார்க்கிறேன்.
இரண்டிற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
திருக்குறள், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
அது வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளையும் சமூக நெறிகளையும் கூறுகிறது.
பகவத்கீதை, வாழ்க்கையின் சிக்கல்களுக்குள் சிக்கியிருக்கும் மனிதன் எவ்வாறு தன்னை உயர்த்திக்கொள்ளலாம் என்பதைப் பல்வேறு பாதைகளின் மூலம் காட்டுகிறது.
கர்மம்.
பக்தி.
தியானம்.
ஞானம்.
ஒவ்வொரு மனிதனும் தன் இயல்புக்கேற்ற வழியைப் பயன்படுத்தி உயர முடியும் என்று கீதை வழிகாட்டுகிறது.
Everything ends in Wisdom.
வாழ்க்கையில் தவறிவிட்டவர்களுக்கும் கீதை நம்பிக்கையை அளிக்கிறது.
தவறு செய்தவன் என்ன செய்ய வேண்டும்?
மனத்தை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும்?
செயலில் இருந்தபடியே பற்றின்றி எப்படி வாழ வேண்டும்?
என்பதற்கெல்லாம் அது வழிகாட்டுகிறது.
இறுதியாக...
திருக்குறளை மேற்கோள் காட்டி இன்னும் நிறைய எழுதலாம்.
ஆனால், பெரியவர்கள் கூறுவதுபோல்,
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.”
எனவே, இந்தத் தொடரை இத்துடன் நிறுத்துகிறேன்.
இருப்பினும் ஒரு தனிப்பட்ட கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
திருக்குறளும் பகவத்கீதையும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் நூல்கள் அல்ல.
ஒன்று வாழ்க்கையின் நெறியை காட்டுகிறது.
மற்றொன்று வாழ்க்கையின் நெருக்கடிக்குள் இருந்து விடுபடும் வழிகளை காட்டுகிறது.
ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டு மற்றொன்றைத் தவிர்க்க வேண்டியதில்லை.
இரண்டையும் ஆழமாகப் படித்தால், ஒன்று நம்மை நல்ல மனிதனாக வாழச் செய்யும்.
மற்றொன்று அந்த நல்ல வாழ்க்கையின் வழியாக நம்மை நாமே அறிந்துகொள்ளச் செய்யும்.
அதுவே எனக்குக் கிடைத்த அனுபவப் புரிதல்.
இந்தக் கட்டுரையில் கூறப்பட்ட அரசியல் கருத்துகள் அனைத்தும் என் தனிப்பட்ட சிந்தனைகளே.
உங்களுக்கு உடன்பாடு இல்லாத இடங்களில் உடனடியாக மறுப்பதற்குப் பதிலாக,
“இவர் எந்தக் கோணத்தில் இதைப் பார்க்கிறார்?”
என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
திருவள்ளுவர் நட்பைப் பற்றி கூறுகிறார்:
“நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.”
— குறள் 784
உண்மையான நட்பு என்பது வெறுமனே பாராட்டுவது அல்ல.
தவறு தெரிந்தால் சுட்டிக்காட்டுவதும் ஆகும்.
அதேபோல், உண்மையான வாசிப்பும் வெறுமனே ஏற்றுக்கொள்வது அல்ல.
சிந்திப்பதும், ஆராய்வதும், ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் — அனைத்தும் வாசகரின் உரிமைகள்.
நான் எழுத்தாளர் அல்ல.
நாட்டின் நலனையும், மனிதனின் ஆன்மிக உயர்வையும் விரும்பும் ஒரு சாதாரண மனிதன்.
அவ்வளவுதான்.

என்றும் அன்புடன்,
உங்களில் ஒருவன்.



 

No comments:

Post a Comment