ஸஸவானப்பிரஸ்தம்
பெரும்பாலான மனிதர்கள் வயதான காலத்தில் மன அமைதி இல்லாமல் தவிப்பதைப் பார்க்கிறோம்.
அவர்களுக்கு ஏதேனும் பயன் அளிக்கலாம் என்ற நம்பிக்கையில், எனது வாழ்க்கையில் நான் பெற்ற சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வானப்பிரஸ்தம் என்றால் என்ன?
வானப்பிரஸ்தம் என்றால் “காட்டிற்குச் சென்று வாழ்வது” என்று பொதுவாகச் சொல்வார்கள்.
ஆனால், மாறிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில், வானப்பிரஸ்தத்திற்கு நாம் வேறுவிதமான பொருளைக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதைப் புரிந்துகொள்வதற்கு முன், நான் சந்தித்த சில அனுபவங்களைப் பார்ப்போம்.
அருகில் இருந்தும் தொலைவில்...
பணி நிமித்தமாக எனக்கு அடிக்கடி இடமாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எல்லாமே எதிர்பாராமல் இயல்பாக நடந்த மாற்றங்கள்தான்.
இதனால் என் மகனும் அடிக்கடி பள்ளிக்கூடத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, அவனைச் சொந்த ஊரில் பாட்டியுடன் தங்கவைத்து அங்கேயே படிக்க வைத்தேன். உறவினர்களும் அவனை நன்கு பார்த்துக்கொண்டார்கள்.
நான் வேலை நிமித்தமாக தூத்துக்குடிக்கு வந்துவிட்டேன். இங்கும் தொடர்ந்து தங்குவேனா என்பது தெரியாத நிலையில், மகனைச் சொந்த ஊரிலேயே படிக்கச் செய்தேன்.
ஒருநாள் என் குடும்ப நண்பர் ஒருவர் என்னிடம், “பையனைச் சொந்த ஊரில் விட்டது தவறு. அவனுக்குப் பெற்றோரிடம் பிரியம் இல்லாமல் போய்விடும்” என்று கூறினார். தன் மகனைத் தன்னுடனேயே வைத்திருப்பதைப் பற்றியும் பெருமையாகச் சொன்னார்.
நான் சிரித்துக்கொண்டே அவரிடம் சொன்னேன்:
“You think that your son is nearer to you; but he is far away from you.
You also think that my son is far away from me; but he is nearer to me.”
அதாவது,
“உங்கள் மகன் உங்கள் பக்கத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் அவன் உங்களைவிட்டு மனதளவில் தூரத்தில் இருக்கலாம்.
என் மகன் என்னைவிட்டு தூரத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் அவன் மனதளவில் என் அருகிலேயே இருக்கலாம்.”
அவர் ஏன் அப்படிச் சொன்னேன் என்று கேட்கவில்லை. இருந்தாலும், அதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.
அனுபவம் உணர்த்திய உண்மை
ஒருவரிடம் அளவுக்கு அதிகமான பாசம் அல்லது பிரியம் வைத்துவிட்டால், அவர் நம்மைவிட்டு மனதளவில் விலகிச் சென்றுவிட்டதைக்கூட நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது.
அதுவே பந்தத்தின் ஒரு வடிவம்.
காலம் மாறும்போது...
நண்பரும் நானும் பணி ஓய்வு பெற்றபின் ஒரே ஊரில் குடியேறினோம்.
ஒருமுறை அவரைப் பார்க்கச் சென்றபோது, அவர் மிகவும் வருத்தமாக இருந்தார்.
காரணம் கேட்டபோது,
“பையன் தூரத்தில் இருந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். நாங்கள் இங்கே தனிமையில் வாழ்கிறோம். உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை; உங்கள் பையன் கூடவே இருக்கிறான்” என்றார்.
நானும் என் மகனும் ஒரே அப்பார்ட்மெண்டில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தோம்.
நான் சிரித்துக்கொண்டே,
“நீங்கள் முன்பு சொன்னதையே இப்போது மாற்றிச் சொல்கிறீர்கள்” என்றேன்.
பின்னர் சொன்னேன்:
“You think that your son is far away from you; but he is nearer to you.
You also think that my son is nearer to me; but he is far away from me.”
அதாவது,
“உங்கள் மகன் தூரத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் அவன் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறான்.
என் மகன் அருகில் இருக்கிறான் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் நான் அவனிடமிருந்து மனதளவில் விலகியே இருக்கிறேன்.”
அனுபவம் உணர்த்திய உண்மை
வயதான காலத்தில் பிள்ளைகள் நம்மைவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டால், “அவர்கள் அருகில் இல்லையே” என்று நினைத்து வேதனைப்படுகிறோம்.
ஆனால், உண்மையான தொலைவு என்பது இடத்தால் ஏற்படுவதல்ல; மனதால் ஏற்படுவது.
பணம் இருந்தும் அமைதி இல்லையே!
இரண்டொரு மாதங்களுக்குப் பிறகு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.
அவர் மிகவும் சோகமாக இருந்தார். நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்.
அவரிடம் நான் சொன்னேன்:
“யாரோ ஒருவர் உங்களை கத்தியால் குத்திவிட்டார் என்பதற்காக, அந்தக் கத்தியை நீங்களே வெளியே எடுத்து மீண்டும் மீண்டும் உங்களைக் குத்திக்கொள்வது சரியா? நடந்த சம்பவத்தை விட்டுவிடுங்கள்.”
அவர் அதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து,
“பணம் இருந்தால் கடைசிக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். இப்போது நிறையப் பணம் இருக்கிறது; ஆனால் மனதில் நிம்மதி இல்லை” என்றார்.
நான் அவரிடம்,
“இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நீங்கள் சரி என்று சொன்னால், நான் தினந்தோறும் வருகிறேன். இருவரும் சேர்ந்து நிம்மதிக்கான வழியைத் தேடுவோம்” என்றேன்.
அதற்கு அவர்,
“நீங்கள் இனி எப்படி நடக்க வேண்டும் என்று சொல்வீர்கள். அது சரியானதாகவே இருக்கும். ஆனால், அதைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லையே” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஓஷோ சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.
நிரம்பிய கோப்பை
ஒரு தத்துவப் பேராசிரியருக்கு வாழ்க்கையைப் பற்றிய பல சந்தேகங்கள் இருந்தன. அவற்றிற்குச் சரியான விளக்கம் யாராலும் கொடுக்க முடியவில்லை.
மலை உச்சியில் வாழும் ஒரு ஜென் துறவியால் மட்டுமே தனது சந்தேகங்களுக்கு விடை அளிக்க முடியும் என்று கேள்விப்பட்டு, மிகவும் கஷ்டப்பட்டு மலையேறி அவரைச் சந்தித்தார்.
அவர் மிகவும் களைப்பாக இருப்பதைக் கண்ட துறவி,
“முதலில் அமருங்கள். உங்களுக்கு சூடாகத் தேநீர் தருகிறேன். அதை அருந்திவிட்டு உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்” என்றார்.
பேராசிரியர் அமர்ந்தார்.
துறவி கோப்பையில் தேநீர் ஊற்றத் தொடங்கினார்.
கோப்பை பாதி நிரம்பியதும் பேராசிரியர்,
“போதும்” என்றார்.
ஆனால் துறவி தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருந்தார்.
தேநீர் கோப்பையைத் தாண்டி தட்டில் வழியத் தொடங்கியது.
பேராசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.
“போதும்! நிறுத்துங்கள்!” என்று சத்தமாகச் சொன்னார்.
துறவி சிரித்துக்கொண்டே,
“கோப்பை நிரம்பிவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டீர்கள். அதற்கு மேல் தேநீரை ஊற்றினால் அது வழிந்துவிடும் என்பதும் உங்களுக்குத் தெரிகிறது.
அதைப்போலத்தான் உங்கள் மனமும். உங்கள் மனதில் ஏற்கெனவே நிறையக் கேள்விகள் நிரம்பியிருக்கின்றன. நான் கூறும் விளக்கங்களை உள்வாங்குவதற்கு அதில் இடம் இருக்கிறதா?” என்றார்.
பேராசிரியர் திகைத்தார்.
“நீங்கள் சொல்வது உண்மைதான். நான் ஊருக்குச் சென்று என் மனதைக் காலியாக்கிவிட்டு பின்னர் வருகிறேன்” என்றார்.
துறவி மீண்டும் சிரித்தார்.
“மனம் முழுவதும் காலியாகிவிட்டால், சந்தேகமே வராது. பிறகு ஏன் இங்கு வர வேண்டும்?” என்றார்.
அனுபவம் உணர்த்திய உண்மை
நாம் எங்கெங்கோ ஓடுகிறோம். எதை எதையோ தேடுகிறோம். விரும்பியவற்றை அடையவும் செய்கிறோம்.
ஆனால், ஒரு முக்கியமான உண்மையை மட்டும் மறந்துவிடுகிறோம்:
“Money will not bring you peace; peace depends upon the mind.”
பணம் மட்டும் மன அமைதியைத் தராது. மன அமைதியின் ஆதாரம் மனம்தான்.
வானப்பிரஸ்தத்தின் நோக்கம்
இப்போது வானப்பிரஸ்தத்திற்கு வருவோம்.
பண்டைய காலத்தில் வானப்பிரஸ்தம் மேற்கொள்ள விரும்பியவர்கள், தாங்கள் பேணிக்காத்து வந்த பொறுப்புகளைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குச் செல்வார்கள்.
இன்று பிள்ளைகளே வேலை நிமித்தமாகப் பெற்றோரை விட்டுவிட்டு வெளி ஊர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்றுவிடுகிறார்கள்.
ஆக, பெற்றோர்களும் பிள்ளைகளும் அன்றும் பிரிந்தார்கள்; இன்றும் பிரிகிறார்கள்.
ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
அன்று பெற்றோர்கள் தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று பெற்றோர்களின் மீது தனிமை திணிக்கப்படுகிறது.
அன்று அவர்கள் தனிமையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன?
பந்தங்களிலிருந்து விடுபடுவதற்காக.
வயதான காலத்தில் மனிதனுக்குத் தேவையானது மன அமைதிதான் என்பதையும், மனம் அமைதியாக இருந்தால்தான் இறையருளை உணர முடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
நம்மில் பலரும் இன்று தனிமையில் இருக்கிறோம்.
ஆனால், அது நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமை அல்ல. எந்த நோக்கத்திற்காக அந்தத் தனிமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் நமக்குத் தெரியவில்லை.
அதனால்தான் தனிமை நமக்கு வேதனையாகிறது.
பந்தம் என்றால் என்ன?
காட்டிற்குச் சென்றால்தான் பந்தங்களிலிருந்து விடுபட முடியுமா?
இல்லை.
முதலில் “பந்தம்” என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் பத்து ஆண்டுகளாக ஒரு வாடகை வீட்டில் வசித்தாலும், அதை “என்னுடைய வீடு” என்று சொல்வதில்லை. “நான் குடியிருக்கும் வீடு” என்றுதான் சொல்கிறோம்.
ஆனால் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட்டால், அதில் நாம் குடியிருக்காவிட்டாலும், “என்னுடைய வீடு” என்கிறோம்.
ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சுவது உறவின் அடையாளம்.
அதே குழந்தையை அந்த வீட்டில் வேலை செய்யும் ஒருவரும் கொஞ்சலாம். அது உறவு இல்லாத உறவு.
தாய்க்கு அந்தக் குழந்தையிடம் இருக்கும் பற்று காரணமாக, அந்த உறவு பந்தமாக மாறுகிறது.
பந்தம் என்றால் கட்டு, தளை.
ஒரு உயிரையோ, பொருளையோ “என்னுடையது” என்று மனதளவில் பற்றிக்கொள்ளும்போது அது பந்தமாகிறது.
இந்த “என்னுடைய” என்ற உணர்வுக்குக் காரணம் “நான்” என்ற அஹங்காரம்.
“நான்” மற்றும் “என்னுடைய”
மன அமைதிக்கு இடையூறாக இருப்பவை பெரும்பாலும் இந்த இரண்டு காரணிகள்தான்:
“நான்” — அஹங்காரம்.
“என்னுடைய” — பற்று.
“நான்” என்ற உணர்விலிருந்து “என்னுடையது” என்ற உணர்வு உருவாகிறது.
சொந்தப் பொருட்கள், உறவுகள், பதவி, புகழ் என அனைத்திலும் “என்னுடைய” என்ற உணர்வு அதிகரிக்க அதிகரிக்க, பந்தமும் அதிகரிக்கிறது.
அதனால்தான் சான்றோர்கள் கூறுகிறார்கள்:
“Possession of things is not the problem; possessor-feeling is the problem.”
பொருட்களை வைத்திருப்பது பிரச்சினையல்ல; “நான் இதன் உரிமையாளர்” என்ற மனப்பான்மையே பிரச்சினை.
வள்ளுவரும்,
“யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.”
என்று கூறுகிறார்.
அப்படியானால், “என்னுடைய” என்ற உணர்வை எப்படி அகற்றுவது?
பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைப்பது
அந்தக் காலத்தில் வயதானவர்கள் பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காட்டிற்குச் சென்றதன் ஆழமான நோக்கம் இதுதான்.
“என்னுடைய” என்ற எண்ணம் மனத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகல வேண்டும்.
அதன்பின் “நான்” என்ற அஹங்காரத்தையும் நலிவடையச் செய்ய முடியும்.
குடும்பத்தோடு இருந்துகொண்டே இதைச் செய்வது கடினம். அதனால்தான் அவர்கள் குடும்பச் சூழலிலிருந்து விலகி வாழ்ந்தார்கள்.
ஆனால், புதிய இடத்திற்குச் சென்ற பின்னரும் புதிய பந்தங்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு அழகான எடுத்துக்காட்டு பத்திரகிரியார் வாழ்க்கை.
பத்திரகிரியார் கற்றுக்கொடுத்த பாடம்
பட்டினத்தாரிடம் தீட்சை பெற்ற பத்திரகிரியார், குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூரில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
தினமும் பிச்சை எடுத்து, முதலில் குருவுக்குச் சமர்ப்பித்துவிட்டு பின்னரே உண்பார்.
ஒருநாள் பசியால் வாடிய ஒரு நாய் அவரிடம் வந்தது. அதன் பசியைக் கண்ட அவர், தன்னிடம் இருந்த உணவில் சிறிதளவை அதற்குக் கொடுத்தார்.
அன்றுமுதல் அந்த நாய் அவருடனேயே தங்கிவிட்டது.
ஒருநாள் பட்டினத்தாரிடம் இறைவன் ஏழை வடிவில் வந்து பிச்சை கேட்டார்.
பட்டினத்தார்,
“மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே செல்” என்று கூறினார்.
இறைவன் பத்திரகிரியாரிடம் சென்று,
“கிழக்கு கோபுர வாசலில் இருந்த ஒருவர், மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை இங்கே அனுப்பினார்” என்றார்.
பத்திரகிரியார் அதிர்ச்சியடைந்தார்.
“ஐயோ! இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும், நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே!” என்று வருந்தினார்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்:
வானப்பிரஸ்தம் என்பது பழைய பந்தங்களிலிருந்து மட்டும் விடுபடுவது அல்ல; புதிய பந்தங்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்வதும் ஆகும்.
பிள்ளைகள் வளர்ந்த பின்...
நான் ஒருமுறை ஒரு குடும்ப விழாவில் ஒருவரைச் சந்தித்தேன்.
அவருக்கு சுமார் அறுபத்தைந்து வயது இருக்கும்.
அவர் குடும்பத்தில் தனக்கு ஏற்படும் சில சங்கடங்களைப் பற்றி கூறி, அதிலிருந்து மீள்வதற்கான வழியைக் கேட்டார்.
நான் அவரிடம் இரண்டு வாக்கியங்களைக் கூறினேன்:
“Without ego one cannot grow.”
அவர், “சரிதான்” என்றார்.
பின்னர்,
“With ego one cannot glow.”
என்றேன்.
அதற்கும் அவர், “சரிதான்” என்றார்.
“அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது; அஹங்காரம் இருந்தால் அகமலர்ச்சி அடைய முடியாது என்றால், நாம் எப்போது அஹங்காரத்தை விட வேண்டும்?” என்று கேட்டேன்.
“அதுதான் புரியவில்லை” என்றார்.
அவருக்கு ஒரு சிறிய உதாரணம் சொன்னேன்.
ஒரு வீட்டின் தளம் கட்டப்படும்போது, அதைத் தாங்குவதற்காகப் பலகைகளையும் கம்புகளையும் பயன்படுத்துகிறோம். தளம் நன்றாக உறுதியானதும் அந்தப் பலகைகளையும் கம்புகளையும் அகற்றிவிடுகிறோம்.
அதைப்போலத்தான் பிள்ளைகளும்.
அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும்போது நம்முடைய பாதுகாப்பு அவர்களுக்குத் தேவை.
ஆனால் அவர்கள் வளர்ந்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலைக்கு வந்த பிறகும், நாம் அவர்களை சிறு குழந்தைகளாகவே பார்த்துக்கொண்டிருந்தால், நமது பாதுகாப்பே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும்.
அவர்களின் வாழ்க்கையில் நாம் தலையிடாமல் விலகி இருந்தாலே பல சங்கடங்கள் குறைந்துவிடும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் ஒரு அழகான உவமை நினைவுக்கு வருகிறது.
விதை முளைத்து செடியாக இருக்கும்போது, ஆடு மாடுகள் அதைத் தின்னாமல் இருக்க வேலி அமைக்க வேண்டும். ஆனால் அந்தச் செடி மரமாக வளர்ந்த பிறகு அந்த வேலியை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் அந்த வேலியே மரத்தின் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும்.
நாம் பிள்ளைகளிடம் வைத்திருக்கும் அளவுக்கு மீறிய பாசமும் இப்படிப்பட்ட வேலிதானோ?
“நான் யார்?”
“நான்” என்ற அஹங்காரத்தை அகற்றுவது எல்லோராலும் எளிதாகச் செய்யக்கூடிய காரியமல்ல.
ஆனால், “என்னுடைய” என்ற பற்றிலிருந்து விடுபட முயற்சி செய்யலாம்.
அதில் வெற்றி பெறும்போது “நான்” என்ற தன்முனைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடையும்.
இதற்கான முதல் படி அகத்தாய்வு.
இரமண மகரிஷியின் எளிய வழி:
“நான் யார்?”
என்று உனக்குள்ளேயே கேட்டு ஆராய்ந்து பார்.
அதைத் தர்க்க ரீதியாகவும் ஆராயலாம்.
I have a pen.
இங்கே “pen” என்பது object.
The pen has a cover.
இங்கே “pen” என்பது subject.
ஒரு பொருள் ஒரு சமயத்தில் subject ஆகவும் object ஆகவும் வரலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டாக இருக்க முடியாது.
இப்போது,
I have a body.
என்றால், body என்பது object.
அப்படியானால் “I” என்பது எது?
Think!
“நான்” மற்றும் “உடல்” இரண்டும் ஒன்றல்ல என்ற புரிதலே அகத்தாய்வின் தொடக்கமாக இருக்கலாம்.
நான்கு வழிகள்
“என்னுடைய” என்ற பற்றிலிருந்து விடுபடுவதற்கு பல வழிகள் உள்ளன.
தர்க்க ரீதியாக உண்மையை ஆராய்வது ஞான மார்க்கம்.
பிறரது நலனுக்காகப் பலனை எதிர்பாராமல் செயல்படுவது கர்ம மார்க்கம்.
கடவுளிடம் முழுமையாகச் சரணடைவது பக்தி மார்க்கம்.
மனத்தை ஒருமுகப்படுத்தி அக அமைதியை வளர்ப்பது தியான மார்க்கம்.
எந்த வழியைப் பின்பற்றினாலும், இறுதியில் கிடைப்பது ஞானம்தான்.
Everything ends in wisdom.
பக்தி மார்க்கத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தும், பலரால் பற்றிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
ரிஷி பதஞ்சலி கூறும் “ஈஷ்வர ப்ரணிதானம்” — இறைவனிடம் சரணடைதல் — இங்கே முக்கியமாகிறது.
நாம் கடவுளிடம் பலவற்றைக் கேட்கிறோம்.
ஆனால் உண்மையான சரணாகதி என்பது, அவர் எதைத் தந்தாலும் அதை அவரிடமிருந்து வரும் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வேண்டுவதாகும்.
எளிய வானப்பிரஸ்தம்
இந்த மார்க்கங்களில் முழுமையாகப் பயணிப்பது எல்லோராலும் முடியாது.
அவர்களுக்குக் கூட ஒரு எளிய வழி இருக்கிறது.
முதலில் “un-active” ஆக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதாவது, தன்முனைப்பின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தோடு இருந்தாலும், குடும்பச் சூழலில் இருந்து மனதளவில் விலகியிருக்க வேண்டும்.
Be in the family; be far away from the family.
தேவைப்பட்டால் மட்டுமே குடும்ப விவகாரங்களில் தலையிட வேண்டும்.
மன அமைதியை வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மனதை வேடிக்கை பார்ப்பது
சிறு வயதில் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு தேரோட்டத்தைப் பார்த்திருப்போம்.
தேர் ஓடும்போது அதன் பின்னால் ஓடினோம்.
வாலிப வயதில் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தோம்.
வயதானபின் நம்மால் ஓடவும் முடியாது; வடம் பிடித்து இழுக்கவும் முடியாது.
எனவே, வெறுமனே தேர் ஓடுவதை வேடிக்கை பார்க்கிறோம்.
அதைப்போல, வயதான காலத்தில் நமது மனதிற்குள் ஓடும் “தேரையும்” வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களுடன் இருக்கும்போது, நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வெறுமனே கவனியுங்கள்.
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உடனடியாக கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நடந்ததை மனதிற்குள் மீண்டும் மீண்டும் அசைபோட வேண்டாம்.
தனிமையில் இருக்கும்போது, ஆழ்மனத்திலிருந்து ஏதேனும் நினைவு வந்தால், அதை விமர்சிக்காமல் ஒரு பார்வையாளனாக கவனியுங்கள்.
அந்த நினைவு மறைந்ததும் அடுத்த நினைவு வரலாம்.
எதனுடனும் பயணம் செய்யாமல், அவற்றை வெறுமனே கவனித்துக்கொண்டிருங்கள்.
நாளடைவில் நினைவுகளின் தாக்கம் குறையத் தொடங்கும்.
மறக்க முடியாத சில நினைவுகள் மனதில் தொடர்ந்து இருக்கலாம். அவற்றை அழிக்க முயற்சி செய்வதற்குப் பதிலாக, அவை நம்மைத் தொந்தரவு செய்யாத நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது நாம்தான் நினைவுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும்; நினைவுகள் நம்மைப் புரட்டிப் பார்க்க அனுமதிக்கக் கூடாது.
ஒருமுகக் கவனம்
இதற்குப் பிறகு சிறிது நேரம் ஒருமுகக் கவனப் பயிற்சிக்கும் ஒதுக்கலாம்.
தீபம், இஷ்ட தெய்வத்தின் படம் அல்லது நமக்குப் பிடித்த வேறு ஏதேனும் பொருளைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதை சில நிமிடங்கள் கவனமாகப் பாருங்கள்.
பின்னர் கண்களை மூடி, மனக்கண்ணால் அதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
கவனம் சிதறினால் மீண்டும் கண்களைத் திறந்து அந்தப் பொருளைப் பாருங்கள்.
கண்களால் பார்ப்பது, கண்களை மூடி மனக்கண்ணால் பார்ப்பது என இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்தாலே போதும்.
தொடர்ந்து செய்தால், மனத்தை ஒருமுகப்படுத்தும் திறன் வளரத் தொடங்கும்.
இந்தப் பயிற்சியின் நோக்கம், மனத்தை வெறுமையாக்குவது அல்ல.
மனத்தின் மீது நமக்குள்ள அதிகாரத்தை மீண்டும் பெறுவதுதான்.
தியானம் — செய்வதில் தொடங்கி இருப்பதில் முடிகிறது
தாரணை முறையாக வளர்ந்த பிறகு தியானப் பயிற்சிக்குச் செல்லலாம்.
உண்மையில், தியானம் “செய்வதில்” ஆரம்பித்து “இருப்பதில்” முடிவடைகிறது.
முதலில் நாம் தேர்ந்தெடுத்த பொருளின் மீது கவனம் செலுத்துகிறோம்.
ஒரு கட்டத்தில், சும்மா இருக்கும்போதெல்லாம் நமது மனம் தானாகவே அந்த ஒருமுக நிலையில் நிலைக்கத் தொடங்கலாம்.
அதற்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் ஒவ்வொருவரின் உடல் நலம், மனப்பக்குவம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். எனவே அவற்றைத் தெரிந்த குருவின் மேற்பார்வையில் மேற்கொள்வது நல்லது.
பயிற்சி முழுமை அடையும் நிலையில், நாம் “நான் கர்த்தா” என்ற உணர்விலிருந்து விலகி,
“நான் வெறும் கருவி”
என்ற உணர்வுக்கு வரத் தொடங்குகிறோம்.
வானப்பிரஸ்தத்தின் உண்மையான பொருள்
ஆற்றில் மேலே நீரோட்டம் வேகமாக இருந்தாலும், அதன் அடியில் அமைதி இருக்கலாம்.
அதைப்போல, வாழ்க்கையின் மேல்மட்டத்தில் எவ்வளவு சலசலப்பு இருந்தாலும், நமது ஆழ்மனத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதுவே உண்மையான மன அமைதி.
வயதான காலத்தில் வானப்பிரஸ்தம் என்பது காட்டிற்குச் செல்வது மட்டுமல்ல.
குடும்பத்தை விட்டு விலகுவது அல்ல.
குடும்பத்தின் மீது உள்ள பந்தத்திலிருந்து விலகுவது.
பிள்ளைகளை விட்டுவிடுவது அல்ல.
அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ அனுமதிப்பது.
பொருட்களைத் துறப்பது அல்ல.
“என்னுடையது” என்ற மனப்பற்றைத் துறப்பது.
உலகத்தை விட்டு ஓடுவது அல்ல.
உலகத்தின் சலனங்கள் நம்மை ஆட்கொள்ளாத நிலையை அடைவது.
இறுதியில்,
“நான்” என்ற அஹங்காரம் நலிவடைந்து,
“என்னுடைய” என்ற பற்று குறைந்து,
“நான் கர்த்தா அல்ல; கருவி மட்டுமே”
என்ற உணர்வு வளரும்போது, வாழ்க்கையின் பாரமும் குறையத் தொடங்கும்.
அதன்பின் அங்கே “நான்” என்பதும் இல்லை; “தான்” என்பதும் இல்லை.
இருப்பது “இது” மட்டுமே.
அந்த நிலை நமது முயற்சியால் முழுமையாகக் கிடைப்பதல்ல.
அதன்பின் சொல்ல வேண்டியது ஒன்றே:
எல்லாம் அவன் செயல்.