Tuesday, 25 August 2026

அன்பு



                அன்பு


அன்பை அறியாத, அன்பை வெளிப்படுத்தாத உயிரினமே இருக்காது.

ஆனாலும், "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவர் கூடவே "அஃதிலார் .." என்று எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்.

முரண்பாடாகத் தோன்றினாலும், இதுவே யதார்த்தம்.

அன்பு, அதன் விரிவு, அவற்றின் பரிமாணம் போன்றவற்றை புரிந்துகொள்வதில்  சிக்கல்கள் இருப்பதை சிலரிடம் காண்கிறேன்.

நான் 'அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது, உணர்ந்து கொண்டது' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எனது எண்ணங்களை பதிவிடுகிறேன்.

எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கவில்லை.

இருந்தாலும் ஒரு சிலருக்கு இவை பயன்படலாமே என்ற நப்பாசைதான்.



மேலே தொடர்வதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருக்கவேண்டி உள்ளது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல வேதனைகளுக்கான காரணம் இதில்தான் அடங்கி இருக்கிறது.

தாயன்பிற்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது என்பார்கள்.

தாயிடம் அன்பு இல்லையென்பது அல்ல; நாம் சாதாரணமாக ‘தாயன்பு’ என்று சொல்லும்போது, அதில் அன்புடன் பாசமும் கலந்திருக்கும் அல்லவா?

சற்று சிந்தித்துப் பாருங்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டுவது அன்பா அல்லது பாசமா?

இரண்டும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இரண்டிற்குமிடையே நிறைய இடைவெளி உள்ளது.

(அன்பு பொதுவானது; பாசம் வாசம் செய்யுமிடம் ஆழ்மனம். இதுபற்றி பின்னர் பார்ப்போம்)




'அன்பே சிவம்' என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்; ஆனால், 'பாசம்' என்று வரும்பொழுது அவர்களது அறிவுரை அதற்கு எதிராக இருக்கிறது.

"பாசவினைகள் பற்றது நீங்கி.." என்கிறது 'கந்தசஷ்டி கவசம்'.

"ஆசைவலைப் பாசத் தகப்பட்டு மாயாமல்..." என்கிறார் பத்திரகிரியார்.



தங்கள் பிள்ளைகளிடம் பாசத்தை காட்டும் பெற்றோர்கள், எந்த இடத்தில் அதிலிருந்து பின்வாங்கி 'இனி நாம் அன்பை மட்டுமே காட்டவேண்டும்' எனக் கற்றுக்கொள்வதே இல்லை; இதுவே வயதான காலத்தில் அவர்கள் படும் துன்பத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது.

அன்பு அதன் இயல்பில் இனிமையானது; தூய்மையானது; பரிசுத்தமானது; களங்கமற்றது.

அதனால்தான் பிறந்த குழந்தையால் கள்ளமில்லாமல் சிரிக்கமுடிகிறது.



அன்பு அதன் இயல்புப்படி ஒரு மூலப்பொருளைப் போன்றது. முதலில் அன்பு 'ஆசையாக' மனத்தில் உருவெடுக்கிறது. பின்னர் அது 'பாசம், பேராசை, காமம்' என மாறி ஆழ்மனம் வரை சென்று விடுகிறது. அதன்பின் அன்பு தூய்மையாக இருப்பதில்லை.



குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும், 'class-ல first rank வாங்கவேண்டும்' என்பது போன்ற ஆசைகளை ஊட்டி விடுகிறோம்.

விளைவு; அந்தக் குழந்தையிடமிருந்த பரிசுத்தமான அன்பு காணாமல் போய்விடுகிறது. அதன் களங்கமற்ற தன்மையும் மறைந்துவிடுகிறது.



"மீண்டும் குழந்தையாக மாறாதவரையில் ..." என்கிறார் ஏசுபிரான். அதன் அர்த்தம் என்ன? 

மீண்டும் குழந்தைக்கே உரிய மனநிலை வந்தால் மட்டுமே, அந்த மனிதனிடம் தூய்மையான அன்பை எதிர்பார்க்க முடியும் என்பதுதான்.(இது என்னுடைய புரிதல்)


எந்தவொரு மனிதனும் 'அன்பின்' துணைகொண்டு இரு வேறு திசைகளில் பயணம் செய்ய முடியும்.

ஒரு பயணம்  அகவுலகம்சார்ந்தது; மற்றொன்று புறவுலகம் சார்ந்தது.

அகவுலகப் பயணம் பற்றறுக்க உதவும்; புறவுலகப் பயணம் ஏற்கனவே உள்ள பற்றை மேலும் வலுப்பெறச் செய்யும்.

அகவுலகப் பயணம் நம்மை தூய அன்பில் தக்க வைக்கும். புறவுலகப் பயணம் நம்மை தூய அன்பிலிருந்து வெகு தூரம் இழுத்துச்சென்றுவிடும்.



சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் அக உலகப் பயணம் செய்யத் தகுதியானவர்கள். 

ஏனெனில் அவர்கள் இயல்பாகவே தனித்திருக்க விரும்புவார்கள். அத்துடன் 'அகத்தாய்வு' செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

வாழைத்தாரில் உள்ள காய்கள் பருத்துவரும்போது, அதன் சீப்பின்மேல் படர்ந்திருந்த தோல் கழன்று கீழே விழுவதுபோல், அகத்தாய்வில் தீவிரம் கூடக்கூட, பற்றின் காரணமாக ஆழ்மனத்தில் இடம்பெற்ற தேவையில்லாத பதிவுகள் ஒவ்வொன்றாக நீங்கிவிடும்.

"As the man progresses in his "inward expansion", the lower tendencies in him automatically drop off."                                 ..  Swami Chinmayanandha 

பற்றறுத்த மனம், தூய அன்பாக  மாறிவிடும். அதன்பின் அவர்களிடமிருந்து வெளிப்படுவது கருணையாக இருக்கும்.


அத்தகைய மனிதர்களிடம் கீழ்க்கண்ட பாவனைகள் இருக்கும். 

1. அவர்களிடம் அஹங்காரம் இருக்காது.

2. எந்த இடத்திலும் தம்மை முன்னிலை படுத்த முயற்சிக்க மாட்டார்கள்.

3. எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் பொறுமையுடன் கையாள்வார்கள்.

4. தம்மை 'கர்த்தா' என நினைக்க மாட்டார்கள்; மாறாக தம்மை இறைவனின் 'கருவி'யாகவே எண்ணுவார்கள்.

5. வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் என எதுவுமே அவர்களை பாதிக்காது.

(இவை ஒரு சில உதாரணங்களே)


இறையருள் பெற்ற இவர்கள் கருணையை மழையெனப் பொழிவார்கள். அவர்கள் தேடிச்சென்றது இறையருளை வேண்டி. ஆனால், நமது கண்களுக்கு அவர்களிடமிருந்து வெளிப்படும் கருணை மட்டுமே தெரியும்.



பொருளைத் தேடி ஓடுகின்ற பலருள், சிலருக்கு மட்டுமே அதிர்ச்சி வைத்தியம் மூலம், புறவுலகை விட்டு அகவுலகிற்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கிறது. பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரிநாதர் போன்றோர் இதற்கு உதாரணமாக இருப்பவர்கள்.



மற்றவர்கள்  -- அதாவது 'இரஜோகுணவாதிகள்' மற்றும் 'தமோகுணவாதிகள்'  -- அவர்கள் பெறும் அனுபவங்களின் அடிப்படையிலேயே தேவையான மாற்றங்களை செய்யவேண்டி உள்ளது.

இரஜோ குணவாதிகளிடம் தன்முனைப்பு அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள்.



இவர்களில் சிலர் மட்டுமே பொதுநலத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் சமூக சேவையில் ஈடுபட்டு பலவித இன்னல்களுக்கும் ஆளாவார்கள்.

புறவுலகில் செயல்புரிதல், அகத்தாய்வு, சுயசிந்தனை - - இம்மூன்றும் இவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கும். மனதில் நிம்மதியின்றி ஒருவிதமான தவிப்பில் இருப்பார்கள்.

நல்லதொரு வழிகாட்டியின் துணை கிடைத்தால், தன்முனைப்பு குறைந்து அகவுலகில் பிரவேசித்து விடுவார்கள். 


இவர்களைத்தவிர வேறு சில மனிதர்களும் அகவுலக வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பெறுவார்கள். அவர்கள் புறவுலகில் பணிபுரிந்தாலும், புறவுலக நாட்டமின்றி வாழ்ந்து வருவார்கள். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.



இனி சிக்கல்கள் நிறைந்த புறவுலகப் பயணம் பற்றி பார்ப்போம்.

அதற்கு முன் இரண்டு பயணங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

"அகவுலகில் இறைவனைத் தேடுகிறோம்; புறவுலகில் இறைவனை வேண்டுகிறோம்."

இறைவனை வேண்டும்பொழுது, அருளைக் கேட்டால் அது அகவுலகப் பயணம் ஆகிவிடும்; பொருளைக் கேட்டால் அது புறவுலகப் பயணமாகிவிடும்.

அருளைத் தேடும் பயணமும், பொருளைத் தேடும் பயணமும் ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செல்பவை. இரண்டு பாதையிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியாது.

"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு" என்கிறார் வள்ளுவர். 

(செல்வத்தை வேண்டினால் புறவுலகில் பயணம் செய்; ஞானத்தை தேடினால் அகவுலகில் பயணம் செய்).

அருள், பொருள் என்ற இரண்டு பாதைகளில் எதை முதன்மையாகத் தேடுகிறோம் என்பதுதான் திசையை நிர்ணயிக்கிறது 

மனிதன் தனக்குள்ளே பயணித்தால், இறைவனை உணரலாம். (தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் .. திருமூலர்).

தனக்கு வெளியே பயணித்தால் செல்வத்தை சேர்க்கலாம்.



நாம் ஆலயங்களுக்கு செல்கிறோம். அங்கு ஆண்டவனைத் தேடுகிறோமா அல்லது ஆண்டவனிடம் வேண்டுகிறோமா? சற்று சிந்தித்து பாருங்கள். பல உண்மைகள் புரியும்.

ஆண்டவனிடம் வேண்டுவதில் தவறில்லை; வேண்டிப் பெற்றதை அனுபவிப்பதிலும் தவறில்லை. 

ஆனால், அப்படி அனுபவிக்கும் பொழுது நமது அஹங்காரம் வளராமல் இருக்க, நாம் ஆண்டவனை மறவாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அது எப்படி முடியும் என்று நினைக்கலாம்.



ஒரு ரயிலில் பயணம் செய்கிறோம். நாம் ரயிலை ஓட்டுவதில்லை. இருந்தாலும் நாம் ரயிலில் பயணம் செய்வதை உணர்கிறோம் அல்லவா?

அதைப்போல வாழ்க்கை நெடுகிலும் ஆழ்மனம் இறைவன் புகழை பாடிக் கொண்டே இருக்கவேண்டும்; நாமும் எந்த வேலையில் இருந்தாலும், அதைப் பற்றிய உணர்வோடு இருக்க வேண்டும்.

"ஆடும் பணியென்று அலைந்து திரிந்தாலும் -இறைவன் புகழ்    பாடும் பணியொன்றில் பயணிப்ப தெக்காலம்?"

வாழ்க்கை நெடுகிலும் நமது ஆழ்மனம் இறைவன் புகழை பாடிக் கொண்டிருக்க, நாமும் நாள் முழுவதும் அதைப் பற்றிய உணர்வோடு இருக்க முடிந்தால், அகவுலகப் பாதையில் பயணம் செய்யாமலே அதன் பயனை அடைந்து விடலாம். 

அருள் நிறைந்த மனிதனாக மாறி, கருணை மழை பொழிய ஆரம்பிக்கலாம்.

எளிதாகத் தோன்றினாலும் நம்மால் இதை நடைமுறைப்படுத்த முடிவதில்லை.

காரணம் ஆழ்மனத்தில் ஏற்கனவே நிறைய கழிவுகள் உள்ளன. அவற்றை 'வாசனா பதிவுகள்' என்றும், 'ஆணவமலம்' என்றும் சொல்கிறார்கள்.



முல்லா தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அதை பார்த்த நண்பர் "என்ன தேடுகிறீர்கள்" என்றார்.

"வீட்டில் ஊசியைத் தொலைத்து விட்டேன்; அதைத்தான் தேடுகிறேன்" என்றார் முல்லா.

அதை வீட்டில் அல்லவா தேடவேண்டும் என்று கேட்டதற்கு "இங்குதானே வெளிச்சமாக இருக்கிறது" என்று முல்லா பதில் சொன்னார்.

வேடிக்கையாகத் தோன்றினாலும், முல்லா நம்மை பார்த்து பரிகாசம் செய்கிறார்.

உள்ளுக்குள்ளே கடவுளை வைத்துக்கொண்டு, நாம் வெளியே கடவுளைத் தேடுவது கண்டு ஏளனம் செய்கிறார்.



'அன்பே சிவம்' என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். 'அன்பும், சிவமும்' இரண்டல்ல என்கிறார் திருமூலர்.

நம்மிடம் இருப்பது அன்பென்றால், நம்மால் 'சிவத்தை' ஏன் உணர முடியவில்லை?

உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தால், நம்மிடமிருந்து 'கருணை' மழையெனப் பொங்க வேண்டாமா? ஏன் அது பொய்த்து விட்டது?



கங்கை நதி புறப்படும் இடத்தில் சுத்தமாகத்தான் இருக்கிறது. அதுதான் கடலிலும் கலக்கிறது. ஆனாலும், அதன் வழிநெடுகிலும் கழிவுகள் சேர்ந்து, அதை மாசுபடுத்தி விடுகிறது.

சுத்தமாக பயணத்தை தொடங்கிய கங்கைநதி பயணத்தின் முடிவில் அசுத்தமான ஒன்றாக மாறி விடுகிறது.



அதேபோல் நமது வாழ்க்கைப் பயணத்திலும், பலவகையான அசுத்தங்கள் புனிதமான 'அன்பை' மூடி மறைத்து விடுகிறது.

தசரதனின் அன்பை, பாசம் மூடியது; கைகேயியின் அன்பை, பேராசை மூடியது; இராவணின் அன்பை, காமம் மூடியது; சகுனியின் அன்பை, கோபம் மூடியது. நம்முடைய அன்பை, எது மூடியிருக்கிறது?



அன்பு தூய்மையானது; பரந்து விரியக்கூடியது; எல்லைகளற்றது. இருந்தாலும் "தூய அன்பு" என்றும் சொல்கிறார்களே! 

அப்படியானால் 'அன்பு' என்பதற்கும், 'தூய அன்பு' என்பதற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?



ஒரு மனிதன் தன் உறவுகளுடன் அன்பாக நடந்துகொள்கிறான். ஆனால், சக மனிதர்களிடம் வெறுப்பை, கோபத்தை காட்டுகிறான்.

அவனை எப்படி அன்பான மனிதன் என்று சொல்லமுடியும்?

இது "பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா! மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!" என்று கவிஞர் எழுதிய பாடலை அல்லவா நினைவு படுத்துகிறது.



எதிர்மறை உணர்வுகள் ஏதுமின்றி, எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிந்தால் அதுவே "தூய அன்பாகும்".

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்று தாயுமானவர் பாடுவது "தூய அன்பின்" அடையாளம்.

எல்லா மனிதர்களிடமும் 'அன்பு' இருக்கிறது; அது 'தூய அன்பாக' மாறுவதற்கு எது தடையாக இருக்கிறது?



மனிதன் ஒரு பொருளை - - அது உயிருள்ள பொருளாக இருந்தாலும் அல்லது உயிரற்ற ஜடப்பொருளாக இருந்தாலும் - - தொடர்ந்து நினைக்கும் பொழுது, அந்த நினைவு பற்றாக (attachment) மாறிவிடுகிறது.

பற்றிய ஒன்று பற்றாகமாறி, அது அந்த மனிதனைப் பற்றி அவனது மனத்தில் ஆசையாக உருவெடுக்கிறது.

இந்த ஆசை என்பது அவனது உணர்வு மனத்தில் பதிவது. ஒருவேளை அந்த ஆசை நிறைவேறாவிட்டால்கூட, அவன் அதை மறந்துவிடலாம்.

ஆனால், அந்த ஆசை தொடர்ந்து வளருமேயானால், அது ஆழ்மனம்வரை சென்றுவிடுகிறது.

அங்கு அது பாசமாகவோ, பேராசையாகவோ அல்லது காமமாகவோ வேர்கொண்டு விடுகிறது.



மனிதனுக்கு வரும் பலவித பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த ஆழ்மனப் பதிவுகளே.

இத்தகைய பதிவுகளை அகற்றும் வித்தையைக் கற்றுக்கொண்டு விட்டால், மனம் அமைதியாகும்; உள்ளத்திலிருந்து தூய்மையான அன்பு வெளிப்படும்.

மதத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று ஆழ்மனப் பதிவுகளைக் களைவது எப்படி என்று வழிகாட்டுவதற்காகத்தான்.



ஒரு திரைப்பட பாடலில், பிச்சை எடுத்து வாழும் பெண் இவ்வாறு பாடுகிறாள் - -                                "ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா - இது                ஈசனுக்கு ஓய்வுநேர விளையாட்டம்மா".

அவள் புலம்புவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், நம்மில் பலரும் புலம்புகிறோமே! அது ஏன்?

நம்மிடம் அறிவு இருக்கிறது; சிந்திக்கும் திறனும் இருக்கிறது. இருந்தும் சிந்திக்க மறுக்கிறோமே! அது ஏன்?



"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்"   --  என்கிறார் வள்ளுவர்.

இதற்கான காரணங்கள் பல - -

* தவறான முன்முடிவுகள்                         

* அவநம்பிக்கை

* காரணங்களை ஆராய தன்னால் முடியாது என்ற எண்ணம்

* எல்லாம் தலைவிதி என்று நினைப்பது

இதுபோன்ற பல காரணங்களினால், நாம் அன்பை மீட்டெடுக்கும் முயற்சியை விட்டு விடுகிறோம்.



"நான் அன்பான மனிதன்தானே; ஏன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்" என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால், விடைதான் கிடைப்பதில்லை.

இதற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணர் "மூன்றே" வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார். கீதையில் உள்ள அற்புதமான சுலோகங்களில், இதுவும் ஒன்று. 


கீதையில் அர்ஜுனன் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறான் - -"கிருஷ்ணா, மனிதன் விருப்பமில்லாமல் இருந்தாலும், எது அவனை பாபம் செய்யத் தூண்டுகிறது?".

கிருஷ்ணன் பதில் சொல்லுகிறார் - -"ரஜோ குணத்தின் காரணமாக மனதில் எழும் காமமும், குரோதமுமே இதற்கு காரணம். இவையே உனது பரம வைரி என அறிந்துகொள்".

.. பகவத்கீதை -- அத்தியாயம் 3/36,37 



'ரஜோ குணம், காமம் மற்றும் குரோதம்' மூன்றும் நமக்கு பரிச்சயமான வார்த்தைகள்தான். ஆனால் மேலோட்டமாக படித்துவிட்டு போய்விடுகிறோம். அதனால், நாம் படும் அனைத்து வேதனைகளுக்கும் காரணமாக இருப்பது இவைதான் என்பதைப் புரிந்துகொள்ள மறந்து விடுகிறோம். ஆழமாக பார்க்க வேண்டிய விஷயம் இது.


'காமம், குரோதம் மற்றும் ரஜோ குணம்' ஆகிய மூன்றை மட்டும், பாபம் செய்வதிற்கான காரணிகள் என்று கிருஷ்ணன் ஏன் குறிப்பிட்டார் என்பது புரியவேண்டுமானால், அவர் சொல்லும் கூற்றின் ஆழத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.



'ரஜோ குணத்தின் காரணமாக வரும் காம, குரோதம்' என்று கிருஷ்ணன் சொல்கிறார். அப்படியானால் சத்துவ குணம் உள்ளவர்களும், தமோ குணம் உள்ளவர்களும் பாபம் செய்ய மாட்டார்களா என்று  நினைக்கலாம்.

மூன்று குணங்களையும் சார்ந்தவர்களின் பண்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று தெரிந்தால்தான், கிருஷ்ணன் ஏன் 'ரஜோ' குணத்தை மட்டும் குறிப்பிட்டார் என்பது புரியும்.



நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதலாவது உண்மை, மனிதனால் பாபம் செய்ய முடியாது என்பதுதான். பாபம் என்பது செயலல்ல; செயலின் விளைவாக நமக்குள் ஏற்படும் பின்விளைவு.

ஆக, செயல் புரிந்தால் மட்டுமே பாபம் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

செயல்புரிவதற்கு 'தன்முனைப்பு' (அஹங்காரம்) மிகவும் அவசியம்.

ஒரு மனிதனின் தன்முனைப்பிற்கு அடித்தளமாக இருப்பது, அந்த மனிதனின் ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள். இதனையே 'வாசனா' என்றும் சொல்கிறார்கள். 



சத்துவ குணம் நிறைந்த மனிதன், தனது ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்கி விடுகிறான்; அல்லது பெருமளவு குறைத்து விடுகிறான். எனவே அவனிடம் தன்முனைப்பு இருப்பதில்லை. அவன் இறைவனின் கருவியாக மாறிவிடுகிறான். அதன்பின் அவன் எதைச் செய்தாலும், தன் மூலமாக "அவன்" செயல்புரிகிறான் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறான். அதனால் அவனுக்கு பாபம் செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.


"தமோ குணத்தைப்" பொறுத்தவரை நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது.

பட்டியலின மக்கள் அனைவரும் 'தமோ குணம்' உள்ளவர்கள் என பலரும் நினைக்கின்றனர். அது மாபெரும் தவறு.

யார் மந்த புத்தியுடனும், சோம்பல் மிகுந்தும் காணப்படுகிறார்களோ, அவர்களை மட்டுமே 'தமோ குண வாதிகள்' என அழைக்கலாம்.

அப்படிப்பட்டவர்களிடம் தன்முனைப்பு மந்தநிலையில் இருக்கும்; அதைக்கூட  அவர்கள் உணரமாட்டார்கள். யாராவது அவர்களை தூண்டிவிட்டால் மட்டுமே அவர்களால் செயல்பட முடியும். 

மற்றவர்கள் சொன்னதை செய்தோம் என்பதால் அவர்களுக்கு தாம் செய்வது பாபம் என்றுகூடத் தோன்றாது.



இப்போது 'காம - குரோத' என்ற வார்த்தைகளைப் பற்றி பார்ப்போம்.

கிருஷ்ணன் 'காம' என்று சொல்லும்போது, 'அதீத ஆசை' (lust) என்ற அர்த்தத்தில் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  




'குரோதம்' என்றால் கோபம் என்று அர்த்தம். ஆசை இருந்தால் கோபம் வருவது இயற்கை என்பதால்தான், ரஜோ குணம் நிரம்பப் பெற்ற மனிதனுக்கு காமம், கோபம் இரண்டும் வரும் என்கிறார்.


மனிதனிடம் அன்பு மட்டும் இருந்தால், கோபம் வர வாய்ப்பில்லை; ஆனால், அன்பு ஆசையாக மாறிவிட்டால் கோபம் வருவதை தவிர்க்க இயலாது என்கிறார்.

காரணம் -- ஆசைப்பட்ட பொருள் கிடைக்காதோ என்ற பயம், கிடைக்காவிட்டால் கோபம்.

ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ, அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம், போய்விட்டாலோ கோபம்.





ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டால், அன்பு தூய்மையான அன்பாக மாறும்; நாமும் இறையருளை உணரத் தொடங்கலாம்.

"இருள்சேர் இருவினையும் சேரா.." என்று வள்ளுவர் சொல்லும்போது இந்தப் பதிவுகளின் நீக்கத்தையே குறிப்பிடுகிறார்.


மதம் இந்தப் பதிவுகளை நீக்குவதற்கு பல வழிமுறைகளைக் கற்றுத்தருகிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:-


*தன்னடக்கம்*

இதை பணிவு, நாணம், கூச்சம், தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளுதல் எனப் பலவாறாகக் கூறலாம்.

சுருக்கமாக சொன்னால் 'தன்னை முன்னிலைப் படுத்தாமல் ஒதுங்கி இருப்பது' என சொல்லலாம்.

இதில் என்ன கஷ்டம் என நினைக்கத் தோன்றும். உண்மையில் பக்குவம் அடையாத மனிதனால், பக்குவம் அடைய விரும்பாத மனிதனால் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.

தந்தை வயதான காலத்தில் குடும்ப பொறுப்பை மகனிடம் கொடுத்துவிடுகிறார்.

ஆனால், அவரால் ஒதுங்கி இருக்க முடிகிறதா? வழிகாட்டியாக மாறவேண்டியவர், தொடர்ந்து எஜமானனாக இருக்க விரும்புவது ஏன்?


எனக்குத் தெரிந்த ஒரு அதிகாரி பணி ஓய்வு பெற்றபின், கோயிலுக்கு சென்றவரால் நிம்மதியாக கடவுளை வணங்க முடியவில்லை. காரணம் அலுவலகத்தில் முன்னர் மரியாதை செய்தவர்கள், தன்னை கோயிலில் கண்டுகொள்ளவே இல்லை என்ற கவலைதான்.

தவறு யாருடையது? பணி ஓய்வு பெற்ற பின்பும், பதவியை சுமந்து கொண்டிருப்பது தேவைதானா?

"நேதி நேதி" என்ற வார்த்தை 'பிரஹதாரண்ய உபநிஷத்தில்' வருகிறது. அதாவது நான் "இதுவல்ல, இதுவல்ல" என ஒவ்வொன்றாக ஒதுக்கித் தள்ளுவது.

எதையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ, அதன் காரணமாக வரும் எந்தத் துக்கமும் நம்மை தாக்குவதில்லை என்கிறார் வள்ளுவர் - -

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்".

இந்தப் பண்பினைக் கடைப்பிடிக்க எந்த பயிற்சியும் தேவையில்லை; அறிவுபூர்வமான புரிதலே போதுமானது.


*பாசாங்கு செய்யாமை*

 நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று சொல்வதுண்டு. பொய்யொழுக்கம்?

கீதையில் பகவான் 'மித்யாசாரம்' என்று கூறுகிறார். 'ஆசாரம்' என்றால் ஒழுக்கம்; 'மித்யா' என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக் கொள்ளுதல். ஒழுக்கமின்மை அல்ல; இது பொய்யொழுக்கம். 

ஒரு அறிவிலி தன்னை அறிவாளி எனக் காட்டிக் கொள்வதைப் போன்றது.

இதனைத்தான் 'பாசாங்கு' என்று சொல்வார்கள்.

இவர்கள் 'உள்ளொன்று வைத்து புறமொன்று' பேசுபவர்களாக இருப்பார்கள்.

ஆணவமலம் நீங்க வேண்டுமென்றால், இந்தப் போலித்தனம் இருக்கக்கூடாது.

"தன்னெஞ்சறிவது பொய்யற்க.." என்கிறார் வள்ளுவர்.


*அஹிம்சை*

அஹிம்சை என்றால் யாரையும் துன்புறுத்தாமல் இருத்தல் என நினைக்கிறோம்.

மனதால்கூட யாரையும் துன்புறுத்தக்கூடாது. அதுதான் அஹிம்சையின் அடையாளம்.

துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏன் வருகிறது? நாம் கோபம் கொள்வதால்தான் வருகிறது.

ஏதோவொரு சம்பவம் நம்மை காயப்படுத்தும் பொழுது, அதன் காரணமாக நமது ஆழ்மனதில் ஒரு பதிவு நிகழ்ந்து, அந்த நிகழ்வு கோபத்தை தூண்டுகிறது. அந்தப் பதிவு நிகழாமல் பார்த்துக் கொண்டால், நமக்கு கோபமும் வராது; அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

இதற்கு ஒரேவழி நாம் விரும்பாத சம்பவங்கள் நடந்தால், அவற்றை உதாசீனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

எதிரியைவிட மோசமான எதிரி, எதிரி நம்மை உதாசீனம் செய்வதுதான்.

"Enemy's worst enemy is the ignorance of the enemy's enemy".

இதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நமக்கு கோபம் வரும் வாய்ப்பு குறைந்துவிடும். 

அதனால்தான் புத்தரும் "உதாசீனனாக" இரு என்கிறார்.

.....

*உடைமைத்தன்மையின்மை*     

நாம் வீடு, கார் என பலவற்றை சொந்தமாக வைத்திருப்போம். ஆனாலும், நமக்கு 'அவற்றின் சொந்தக்காரர்' என்ற உணர்வு இல்லாதிருக்க வேண்டும். இதைத்தான் 'உடைமைத்தன்மையின்மை' என்று சொல்கிறார்கள்.

அவை என்னுடைய உடைமைப் பொருள்கள் என்ற எண்ணம் இருக்குமானால், அவற்றை பற்றிய எண்ணங்களை ஆழ்மனதிலிருந்து நீக்குவது கடினம்.

அவற்றை அனுபவிப்பதில் தவறில்லை; ஆனால், 'உடைமைத்தன்மை' உணர்வு மட்டும் இருக்கக்கூடாது.

(Possess things; but don't have the possessor feeling)

'அஷ்டவக்ர கீதையில்' மஹராஜா ஜனகர் இவ்வாறு கூறுகிறார் - -

"Me nasti kinchan athava me sarvam"

"ஜனகர் என்ற முறையில் பார்த்தால் எதுவுமே என்னுடையது இல்லை; என்னுள் உறையும் இறைவனாகப் பார்த்தால் எல்லாமே என்னுடையதுதான்".

உள்ளிருக்கும் இறைத்தன்மையை உணர வேண்டுமானால், நாம் 'உடைமைத்தன்மை'யிலிருந்து வெளியேறியாக வேண்டும்.


(உடைமைத்தன்மையின்மை பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உறவுகளுக்கும் பொருந்தும்தானே என்று ஒருவர் கேட்டிருந்தார்.

உண்மைதான். உடைமைத்தன்மையின்மை குறித்து பொருளுக்கு சொன்ன கருத்துக்கள் அனைத்தும், உறவுகளுக்கும் பொருந்தும்.

ஆனால், பொருள் - உறவு இரண்டிற்கும் இடையே ஒருசில முக்கிய வித்தியாசங்கள் உண்டு.

பொருளைப் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பேராசையாகவும், உறவைப் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பாசமாகவும் பதிவாகிறது.

மற்றும் பற்று (attachment) என்று வரும்போது பொருளைவிட பாசம்தான் முன்னிலை வகிக்கும்.

பொருள் தன் கையை விட்டு சென்று விட்டால், சில காலம் கழித்து அதன் நினைவு ஆழ்மனதில் இருந்து அகன்று விடும்.

ஆனால், உறவு தன்னைவிட்டு அகன்றாலும் (உ.ம். பெண்ணின் திருமணம்), பாசம் எளிதில்  ஆழ்மனதிலிருந்து நீங்குவதில்லை.

ஆகவே பாசம் சம்பந்தப்பட்டப் பதிவுகளை ஆழ்மனதிலிருந்து நீக்குவது மிகவும் கடினம்.)

.....

*கூட்டத்திலிருந்து தனிமைக்கு*

கூட்டமாக இருப்பது சத்துவ குண மனிதர்களுக்கு ஒத்து வராத ஒன்று. அவர்கள் பெரும்பாலும் தனிமையையே விரும்புவார்கள்.

தனிமையில் இருப்பது சுய பரிசோதனைக்கும், சுய விசாரணைக்கும் ஏற்றது. 

ரஜோ குணம் நிறைந்த மனிதர்களுக்கு, குறிப்பாக சுயநலம் உள்ளவர்களுக்கு தனிமை என்பது கசப்பான விஷயம்.

யாருமே தன்னுடன் இல்லாமல் தனியாக இருப்பது வேறு; தனிமை என்பது வேறு.

ஆழ்மனப்பதிவுகளை நீக்குவதற்கு அகத்தாய்வு மிகவும் முக்கியம். அது தனிமையில் இருந்தால்தான் முடியும்.

எனவே ஒவ்வொருவரும் சிறிது நேரமாவது 'தனிமையில்' இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

.....

*சுயத்தை அறிதல்*

பழைய பாடல் ஒன்றில் பாடல் வரி இப்படி இருக்கும் - -                       "நானே நானா, யாரோதானா..."

நீ எதுவுமே செய்யவேண்டாம்; 'நான் யார்' என்று உன்னையே கேட்டுப்பார் என்கிறார் இரமண மஹரிஷி.

இதைச் செய்வதற்கு நமக்கு தெளிந்த அறிவு வேண்டும். அதை மூன்று வழிகளில் பெறலாம்.

1. *நேரடி அறிவு*. அதாவது புலன்களின் உதவியின்றி அறிந்து கொள்வது.

புலன்களின் உதவியின்றி அறிந்து கொள்வது என்றால் என்ன?

எனது நண்பனிடம் பரமாத்மா, ஜீவாத்மா பற்றி விளக்குவதற்கு 'ஆற்று நீர், குடத்து நீர்' உதாரணத்தைக் குறிப்பிட்டேன். அதாவது குடத்து நீரை ஆற்றில் கொட்டி விட்டால் குடத்து நீர் தனது தனித்தன்மையை இழந்து விடுவது போல, ஜீவாத்மாவும் அதனை மூடியிருக்கும் திரை விலகிவிட்டால் அது பரமாத்மாவோடு ஒன்றாகக் கலந்துவிடும் என்றேன்.

அவனுக்கு அது புரிந்தது; என்றாலும் குதர்க்கமாக ஒரு கேள்வியை எழுப்பினான். "குடத்து நீரை கரையில் கொட்டினால், ஆற்று நீரோடு கலக்காதே" என்றான். அவன் ஏற்றுக் கொள்ளும்படியாக வேறு எதைச் சொல்லலாம் என சிந்தித்தேன். 

பதில் தெரியாதபோது 'விசார' நிலைக்கு சென்றுவிடுவேன். உடனே பதில் கிடைக்கவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் பதில் தோன்றும். பதில் யார் மூலம் வந்தது என்று தெரியாது. நிச்சயமாக அது விவேகமாக சிந்தித்து அறிந்த பதிலாக இருக்காது.

அப்படித் தோன்றிய பதில் -- அறை முழுவதும் காற்றால் நிரம்பி உள்ளது. அறையில் காற்றடைக்கப்பட்ட பலூன் பறந்து கொண்டிருக்கிறது. திடீரென பலூன் வெடித்து விட்டால், பலூனுக்குள் இருந்த காற்று வெளிக்காற்றோடு இரண்டறக் கலந்து விடும்.

இதுதான் புலன்களின் உதவியின்றி பெறப்படும் 'நேரடி அறிவு'.

இந்த உதாரணத்தை நண்பன் முழுமனத்தோடு ஏற்றுக் கொண்டான்.

2. *ஊக அறிவு* இதற்கு விவேகம் தேவைப்படுகிறது.

'இது என் வீடு' என்று சொல்லும்போது, வீடு வேறு நான் வேறு என்றாகிறது.

'இது என் உடல்' என்று சொல்லும்போது, நான் உடலுக்கு வேறானவன் என்பது புரிகிறதல்லவா? இது ஊகத்தில் அறிவது.

3. *சான்றோர் வாய்மொழி கேட்டல்* விவேகமாக சிந்திக்க முடியாதவர்கள் இதனைக் கடைப்பிடிக்கலாம்.

'வாய்மொழி' என்று சொல்லும்போது, அது அவர்கள் வாய்மொழி மூலமாக வந்த நூல்களாகவும் இருக்கலாம்.

இதில் ஒரு பிரச்சனையும் உள்ளது. தவறான மனிதர்களை நாம் சான்றோராகத் தேர்வு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


*பார்வையாளனாக இருப்பது*

நமக்கு தினந்தோறும் செய்யக்கூடிய கடமைகள் உண்டு. அத்துடன் நாம் ஏற்றுக்கொண்ட மற்றும் ஒப்புக்கொண்ட கடமைகளும் உண்டு.

அவற்றை செயல்படுத்தும் பொழுது நமக்கு பிடிக்காத இடைஞ்சல்கள் வரலாம். அதேபோல் மற்ற சமயங்களிலும் நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கலாம்.

அதுபோன்ற சமயங்களில் பதிலளிக்க (respond) வேண்டியிருந்தால், நாம் பதில் அளிக்கவேண்டும்.

இல்லையெனில், எந்தவித எதிர்வினையும் (react) செய்யாமல் வெறுமனே ஒரு பார்வையாளனாக இருந்துவிட வேண்டும்.

இது எளிதானதாகத் தோன்றினாலும் கடைப்பிடிக்கக் கஷ்டமாக இருக்கும்.

ஏனெனில், எதிர்வினையாற்றி பழக்கப்பட்டிருந்த மனதை 'சும்மா வேடிக்கை பார்' என்று சொன்னால் அது கேட்காது. நாம்தான் கொஞ்சம் விழிப்பாக இருந்து அதை நாம் விரும்பியபடி செயல்பட வைக்க வேண்டும்.

இது சரியாக நடந்தால், நடைபெறும் சம்பவம் நம் மனதில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் ஆழ்மனப் பதிவுகளில் மேலும் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப் படும்.

.....

*வேடிக்கைபார் .. தொடராதே*

நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கும் போது, 'பார்வையாளனாக' இருப்பது எப்படி என்று பார்த்தோம்.

பல சமயங்களில் சம்பவங்கள் நடக்காவிட்டாலும், நாம் பார்வையாளனாக இருக்க நேரிடும்.

உணர்வு மனதிற்கு நான்கு வாசல்கள் உண்டு. (ஒரு கற்பனை தான்).

மனம் ஒரு வாசல் வழியாக புலன்களின் துணையோடு புறவுலகை தொடர்பு கொள்கிறது.

ஒரு வாசல் வழியாக அது புத்தியோடு தொடர்பு கொள்கிறது.

மற்றொரு வாசல், அது தான் பெறும் அனுபவங்களை பதிவு செய்யும் அறையோடு தொடர்பு கொள்கிறது.

இன்னொரு வாசல், ஆழ்மனம் உணர்வு மனதோடு தொடர்பு கொள்வதற்கு. (உணர்வு மனதால் ஆழ்மனதை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது).

ஆழ்மனதில் உள்ள பதிவுகளின் தன்மைக்கு ஏற்ப, அது உணர்வு மனதை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கும்.

உணர்வு மனம் வேறு வேலைகளில் மூழ்கியிருந்தால், அந்தத் தூண்டுதல்களைக் கவனிக்காது. 

வேறு வேலைகள் இல்லாதபோது, உணர்வுமனம் ஆழ்மனதிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப கனவுகள் காண ஆரம்பித்துவிடும். 

அது புதிய வீடு கட்டுவதாக, எதிரியை பழிவாங்குவதாக, விடுமுறையில் எப்படியாவது ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதாக -- இப்படி பலவிதமான கனவுகளாக இருக்கலாம்.

அதுபோன்ற சமயங்களில் புத்தியின் துணைகொண்டு ஆராய்ந்து பார்த்து, அவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்றால் நாம் விலகி நின்று மனதின் கனவுகளை மூன்றாவது மனிதன்போல வேடிக்கை பார்க்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாம் மனதுடன் சேர்ந்து பயணம் செய்யக்கூடாது.

அப்படி செய்தால் உணர்வு மனம் நம்மை தவறான வழியில் நடக்கவைத்துவிடும்.

மனம் காணும் கனவுகளை நாம் ஆதரிக்கவில்லை என்பது தெரிந்தால் மனம் அடங்க ஆரம்பித்து விடும்.

ஆழ்மனதிற்கும் தான் தூண்டுவதால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததும், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி விடும்.


*எளிமையாக இரு*

'எளிமையாக இரு' என்றால் ஏழையாக இரு என்று அர்த்தமில்லை. 

எளிமை என்றால் தேவையில்லாத செலவினங்களைக் குறைப்பது மற்றும் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்ப்பது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். . இதன்மூலம் நமது அஹங்காரம் வலுப்பெறுவதைத் தவிர்த்துவிடலாம்.


*மௌனமாக இரு *

"Be silent, by silencing the action;              Be silent, by silencing the thought;            Be silent, by silencing the mind;                 Be silent, without knowing the silence".

தினசரி வாழ்வில் நாம் சும்மா இருக்க வேண்டிய நேரங்களும் வரும். 

அந்த மாதிரி நேரங்களில் நாம் தேவையற்ற செயல்களில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

அதே மாதிரி தேவையற்ற எண்ணங்கள் எழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  

இது இரண்டும் ஒழுங்காக நடைபெற வேண்டுமென்றால், அது போன்ற சமயங்களில் மனம் மௌனமாக இருந்தால்தான் முடியும் . 

அதன்பின் நாம் மௌனமாக இருப்பது தெரியாமலே மௌனமாக இருக்க வேண்டும். 



எவ்வளவுதான் முயன்றாலும் மனதால் மௌனமாக இருக்க முடியாது. ஆழ்மனப் பதிவுகள் உணர்வு மனதை சும்மா இருக்க விடாது. 

தேவையற்றதை மனம் சிந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால், மனதை வேறு திசையில் திருப்ப வேண்டும். என்ன செய்யலாம்? 

சின்ன சின்ன பயிற்சிகள் மூலம், நாம் மனதை பக்குவப்படுத்த முயற்சி செய்யலாம்.



உதாரணத்திற்காக இரண்டு பயிற்சிகளைப் பற்றி குறிப்பிடுகிறேன். ஒன்று சாதனத்தை பயன்படுத்தி செய்வது; மற்றொன்று சாதனத்தின் உதவியின்றி செய்வது. 

இது மாதிரி, உங்களுக்கு எது சாத்தியமோ, அதன்படி நீங்கள் பயிற்சி செய்யலாம்.

சும்மா இருக்கும் நேரங்களில் செய்யலாம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தை அதற்காக ஒதுக்கினால் நல்லது.

இந்தப் பயிற்சிகள் பெரியோர்கள் சொன்னதுதான். உங்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.


("Mind will succumb to the thing to which it is repeatedly diverted"

மனதால் ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்கமுடியாது. அது ஒன்றிலிருந்து மற்றொன்று எனத் தாவிக்கொண்டே யிருக்கும். அதனால்தான் "மனம் ஒரு குரங்கு" என்கிறார்கள்.

அதே நேரம், அதை திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை மாத்திரம் நினைக்க வைத்தால், அது அதற்கு பழக்கமான ஒன்றாக மாறிவிடும்.)



*சாதனத்துடன் கூடிய பயிற்சி*

உங்களுக்கு சவுகரியமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  

எல்லா நாட்களிலும் ஒரே நேரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய அகல் விளக்கை ஏற்றுங்கள். தீபத்தின் ஒளியில் விளக்கு தெரியாத மாதிரி சின்ன விளக்காக இருந்தால் நல்லது.

விளக்கு உங்கள் கண்ணுக்கு நேராக அல்லது சிறிது குறைவான உயரத்தில் இருக்க வேண்டும்.

எரியும் தீபத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடம் உற்றுப் பாருங்கள். கவனம் வேறு எங்கும் செல்லக் கூடாது.

பிறகு கண்ணை மூடிக்கொண்டு (அழுத்தமாக அல்ல; லேசாக) அந்த தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் தொடர்ந்து பாருங்கள்.

திடீரென்று மனம் வேறு எங்கோ செல்வதை உணர்வீர்கள்.

 அப்போது கண்ணைத் திறந்து பயிற்சியை முதலிலிருந்து ஆரம்பியுங்கள்.

இது பழக்கத்திற்கு வந்த பிறகு, சும்மா இருக்கும் நேரங்களில் கண்ணை மூடிக்கொண்டு தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் காண முயற்சி செய்யுங்கள்.

.....

*சாதனங்களின் உதவியின்றி செய்யும் பயிற்சி*

பல காரணங்களால் சிலரால் குறிப்பிட்ட நேரங்களிலோ அல்லது ஏதேனும் சாதனங்களின் உதவிகொண்டோ பயிற்சியை செய்வது முடியாததாக இருக்கலாம்.

அத்தகைய மனிதர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

சும்மா இருக்கும் நேரங்களில் (வீட்டிலா, வெளியிலா என்பது பிரச்சினையே அல்ல) தனது மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். 

மூச்சு பயிற்சி ஏதும் செய்யக்கூடாது. வெறுமனே மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.

மூச்சோடு கலந்து உங்களுக்குப் பிடித்த மந்திரத்தை, மௌனமாக நாக்கும் அசையாமல், சொல்லுங்கள்.

உதாரணமாக உங்களுக்குப் பிடித்த மந்திரம் "ஓம் நமசிவாய" என்றால், மூச்சை உள்ளே இழுக்கும்போது "ஓம்" என்றும், மூச்சை வெளியே விடும்போது "நமசிவாய" என்றும் உச்சரியுங்கள்.

இந்த பயிற்சிக்கு பலன் மிக அதிகம். ஏனெனில், இந்த மந்திரம் நாளடைவில் உணர்வு மனத்திற்கும், ஆழ்மனத்திற்கும் இடையே ஒரு தடுப்பு சுவர்போலச் செயல்படத் தொடங்கும்.

அதன்பின் ஆழ்மனப் பதிவுகள் உணர்வு மனத்தை உசுப்பேத்துவது குறையும்.

அவரவர் விருப்பப்படி பிற மந்திரங்களையும் உபயோகிக்கலாம். உதாரணமாக  ---

ஓம் சரவணாய

நமோ நாராயண

ஓ ஜீசஸ்

இதை தொடர்ந்து கடைப்பிடித்தால், இது பழக்கத்திற்கு வந்துவிடும்.

இதுபோன்ற பயிற்சிகள் மனதில் குறிப்பிட்ட பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மனம் சும்மா இருக்கும் வேளைகளில் அங்குமிங்கும் அலைபாய்வது குறையும்.

 

               


                முடிவுரை 


குழந்தை பிறக்கும் போது, அன்பு அதன் இயல்பாக இருக்கும். ஆனாலும், முற்பிறவியின் முடிவில் இருந்த ஆழ்மனப் பதிவுகள் 'பிராரப்த கர்மா' என்ற பெயரில் தொடர்ந்து வருவதால், அன்பு 'தூய அன்பாக' இல்லாமல் மாசுடன் கூடிய அன்பாக இருக்கும்.


மனிதன் தனது சக்தியை புறவுலகில் செலுத்தும்போது, மாசுடன் கூடிய அன்பு பாசமாக, பேராசையாக, காமமாக (அதீத ஆசை) உருவெடுத்து அவனை நிலைகுலையச் செய்துவிடுகிறது.

அதே சக்தி அகவுலகில் நுழைந்தால், அன்போடு கலந்திருந்த மாசு நீங்கி தூய அன்பாக மாறி அவனை கருணை நிரம்பிய மனிதனாக மாற்றி விடுகிறது.

மனிதனிடமிருந்த அன்பு தூய அன்பாக மாறும் பொழுது, அந்த மனிதன் விழிப்புணர்வின் ஆரம்ப நிலையை அடைகிறான்.

அவனிடம் இருந்த விழிப்புணர்வு முழுமை அடையும் பொழுது, அவனது உள்ளம் கருணையால் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.

அவன் மக்களால் மதிக்கப்படும் மகானாக அடையாளம் காணப்படுவான்.

சித்தத்தின் மீது படர்ந்திருந்த பதிவுகள் நீங்கிய காரணத்தால், அவனது ஆழ்மனம் (உணர்வற்ற மனம்) சித்தத்தில் இருந்து நீங்கி விடுகிறது. 

('இறந்தார்க்கும்' என்று வள்ளுவர் சொல்வது இவர்களைக் குறித்துத்தான் என நான் எண்ணுகிறேன்)

சித்தத்திலிருந்த மறைப்பு (ஆழ்மனம்) விலகியதால், இறையருள் அவனை சூழ்ந்துகொள்கிறது.

அவனும் உள்ளிருந்து (bliss sheath) பெருகும் ஆனந்தத்தை உணர்ந்து கொள்கிறான். 

"சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடுகிறார் தாயுமானவர்.

"மனமிறக்க ஞானி பிறக்கிறான்" என்று சொல்வதும் இதனால்தான்.  


ஆழ்மனம் இறந்த நிலையில், அவனது உணர்வு மனம், தூய அன்பின் காரணமாக கருணையால் நிரம்பி வழிகிறது.


"கருணை பொங்கும் உள்ளம் - அது கடவுள் வாழும் இல்லம்"                           --கவிஞர் கண்ணதாசன்.




‌        

Sunday, 16 August 2026

கருணை பொங்கும் உள்ளம்

   கருணை பொங்கும் உள்ளம்


'பாவ மன்னிப்பு' படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் ...

"கருணை பொங்கும் உள்ளம் - அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்."

மிக சாதாரணமாக தோன்றும் வரிகள். ஆனால், ஆழமான பொருள் நிறைந்த வரிகள்.

இதில் முதல் இரண்டு வரிகளுக்கான விளக்கத்தை தொடரின் முடிவில் தருகிறேன். கடைசி இரண்டு வரிகளை மட்டும் கொஞ்சம் ஆராய்வோம்.

மூன்றாவது வரியில்
"கருணை மறந்தே வாழ்கின்றார்" என்று சொல்கிறார். 'மறந்தே' என்ற வார்த்தைக்கு எந்த மாதிரி பொருள் கொள்வது?





தந்தை தன் குடும்பத்தாருடன் வெளியே கிளம்புகிறார். வீட்டைப் பூட்டிவிட்டு, காருக்கு அருகில் வந்தபின்தான் 'கார் சாவியை' எடுத்துவர மறந்து விட்டது நினைவிற்கு வருகிறது.

'மறந்து விட்டது' என்றால் காருக்கு சாவி இருக்கிறது; ஆனால், வீட்டிலிருந்து அதை எடுத்துவர மறந்து விட்டார் என பொருள் கொள்ளலாம்.





"கருணை மறந்தே வாழ்கின்றார்" என்ற வரியில் உள்ள "மறந்தே" என்ற வார்த்தையை எப்படி புரிந்து கொள்வது? 

கருணை என்பது ஒரு பொருளாக இருந்தால், எங்கேயோ மறந்து வைத்து விட்டார் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், அது பொருள் அல்லவே!?





கருணை என்பது நமது மனதிலிருந்து வெளிப்படும் ஒரு உணர்வு.

'மறந்தே' என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? கருணை என்ற ஒன்று உள்ளது; முறையாக பயிற்சி செய்தால் எந்த மனிதனும் அதை அடைய முடியும்.

கருணை பொங்கும் உள்ளமே மனித வாழ்க்கையின் உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும்.

ஆனால், இந்தப் புரிதல்கூட இல்லாமல் வாழும் மனிதன், அடிப்படை உண்மையை மறந்துவிட்டு வேறு எதற்காகவோ கடவுளைத் தேடி அலைகின்றானே என எண்ணி வருந்துகிறார் கவிஞர்.





உண்மையான பக்தன் என்றால் அவன் மனதில் கருணை பொங்கி வழிய வேண்டும். இறைவனிடம் 'சரணாகதி' அடைந்தால் மட்டுமே, உள்ளத்தில் கருணை பொங்கும். ஆனால், நம்மிடம் 'சரணாகதி' பாவனை இல்லையே!? நாம் வேறு பல வேண்டுதல்களை அல்லவா கடவுள் முன் வைக்கிறோம்.

அதற்கு காரணமாக இருப்பது, நமது ஆழ்மனதில் இருக்கும் 'பதிவுகள்தானே'!?





'ஆழ்மனம்' சம்பந்தமாக சில கேள்விகள் முன்வைக்கப் படுகினறன. அவை ...

1. ஆழ்மனத்தில் (sub-concious mind) பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன? 

2. அது எவ்வாறு அகங்காரமாக மாறுகிறது?.  

3. சூப்பர் கான்சியஸ் மைண்ட் என்று ஒன்று உள்ளதே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?

4. ஆழ்மனப் பதிவுகளை எப்படி நீக்குவது?




ஆழ்மனம் என்பது அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் ஒரு பகுதிதான். இருப்பினும், மனிதன் எதிர்கொள்ளும் எல்லாவித துன்பங்களுக்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஆழ்மனம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்வோம்.




மனம் என்றால் என்ன?

நமக்கு மூளை என்றால் எது என்று தெரியும். புத்தி என்றாலும் எதுவென்று தெரியும்; மூளையின் ஒரு பகுதிதான் புத்தியாக செயல்படுகிறது என்பதும் தெரியும். ஆனால், மனம் என்றால் என்னவென்று கேட்டால், ஒரே மாதிரியான பதில் கிடைப்பதில்லை.

Mind is the impression of the past experiences .. Swami Chinmayananda
மனம் என்பது புறவுலகில் நாம் சந்திக்கும் அனுபவங்கள் சங்கமிக்கும் இடம். அது மூளையில்தான் நடைபெறுகிறது.

ஆக, மூளையின் ஒரு பகுதி புத்தியாகவும், மற்றொரு பகுதி மனமாகவும் இயங்குகின்றன. மனமும் 'உணர்வு மனம்', 'உணர்வற்ற மனம்' என இரணடு பிரிவுகளாக இயங்குகிறது. உணர்வற்ற மனதைத்தான் நாம் ஆழ்மனம்
(Subconscious-mind) என்று சொல்கிறோம்.

உணர்வு மனதில் ஏற்படும் பதிவுகள் நீடித்து நிற்பதில்லை; ஆனால், ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை.





முதலாவது கேள்வி:-
ஆழ்மனத்தில் பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன? 

ஆழ்மனதில் பதிவுகள் எந்தெந்த வழிகளில் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

புறவுலகில் இருந்து வரும் தாக்கங்களை உணர்வு மனம் ஐம்புலன்களின் உதவியுடன் எதிர்கொள்கிறது. அதனால் ஏற்படும் அனுபவத்தை அது ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். 

மனம் எதிர்கொள்ளும் தாக்கம்    வலிமையானதாக இருந்தால், அது ஆழ்மனம் வரை சென்றுவிடும். அந்தத் தாக்கத்தை ஆழ்மனம் விரும்பி ஏற்றுக்கொண்டால், அங்கு ஒரு பதிவு நிகழ்ந்து விடும். 

உதாரணம்:-  சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்பட பாடலைக் கேட்டேன். அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. குறிப்பிட்ட பாடலை இரண்டொரு தடவைதான் கேட்டிருப்பேன். இருந்தாலும் அந்தப் பாடல் என்னை மிகவும் ஈர்த்ததால் முழு பாடலும் என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அந்தப் பாடலில் இருந்து ஒரு சரணம் ...
".. ஏழடுக்கு மாளிகையில்
இருக்கிற பேர்வழிகள்
எத்தனையோ தப்புத்தண்டா
பண்ணுவாங்க
ஏழை எளியவங்க
இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு
பண்ணுவாங்க

இது தெரியும்
அது தெரியாது .."

ஆழ்மனதில் பதிவுகள் நிகழ்வதற்கு இது ஒரு வழி. 





வீட்டில் குழந்தை பிறந்தால், அதன் தாய் அதனிடம் அன்பை பொழிகிறாள். அன்பை வெளிப்படுத்துவதுடன் அந்தக் குழந்தையின் மீது பற்றும் வைக்கிறாள். (it is only a mental attachment and not any physical attachment). விளைவு .. அன்பாக இருந்த ஒன்று ஆசையாகவும், அதனைத் தொடர்ந்து பாசமாகவும்  மாறி, ஆழ்மனதில் பதிவாகி விடுகிறது.

நாம் எந்த ஒன்றின் மீது பற்று வைத்தாலும், அது தொடரும்போது 
(அது நம்மிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்),  முதலில் அது ஆசையாகவும், பின்னர் அது பாசமாகவோ, பேராசையாகவோ ஆழ்மனம் வரை சென்று விடுகிறது.





பிரச்சனை என்னவென்றால், எந்த ஒன்றின் மீது ஆசை வைத்தாலும், அதன் பின்னணியில் பயமும், கோபமும் இருக்கும். 

ஆசைப் பட்ட ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்கா விட்டால் கோபம் -- அந்த ஒன்று கிடைத்து விட்டாலோ, அது தன்னை விட்டு போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ அதற்கு யார் காரணமோ அவர் மீது கோபம். 

ஆழ்மனப் பதிவு என்று வந்துவிட்டால் இது ஒரு தவிர்க்க இயலாத சுழற்சியாகிவிடுகிறது.





பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்தை மனப்பாடம் செய்கிறார்கள். அதன் நோக்கம் என்ன?

குறிப்பிட்ட பாடத்தை திரும்பத் திரும்ப படிக்கும் போது, அந்தப் பாடத்தை பற்றிய நினைவு ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. அதன்பின் அதனை எளிதாக நினைவு படுத்திக் கொள்ளலாம்.

கடவுளை வணங்கும் போது நமக்கு பிடித்த பாடல்களை பாடுகிறோம். தொடர்ந்து பாடி வந்தால் அந்தப் பாடல்கள் நமது ஆழ்மனதில் பதிவாகி விடுகின்றன. பின்னர் அவற்றை நினைவில் கொள்வது எளிதாகி விடுகிறது.

திருக்குறள் பாடல்களை படித்து நினைவில் கொள்ள விரும்புகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதல் நாள் முதலாவது குறளை பத்து தடவை படிக்க வேண்டும். மறுநாள் முதலாவது குறளை ஒருதடவை படித்து விட்டு, அடுத்த குறளை பத்து தடவை படிக்க வேண்டும். அடுத்த நாள் முதல் இரண்டு குறள்களையும் ஒருதடவை படித்துவிட்டு அடுத்த குறளை பத்து தடவை படிக்க வேண்டும். இந்த முறையைக் கடைப்பிடித்தால், நாம் படித்த பாடல்கள் அனைத்தும் எளிதாக ஆழ்மனம் வரை சென்று விடும்.

 



குடிப்பழக்கம் இல்லாத ஒருவன் எப்படி குடிகாரனாக மாறுகிறான்?

நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக குடிக்கப் பழகியவன், தொடர்ந்து குடித்து வந்தால் அது பழக்கமாக மாறி ஆழ்மனதில் ஒரு பதிவை ஏற்படுத்தி விடுகிறது. பின்னர் 'குடிப்பது' என்பது தன்னிச்சையாக நடைபெறும் செயலாகி விடுகிறது.

Pizza, புரோட்டா, ஐஸ்கிரீம், அதிக உப்பு கலந்த தின்பண்டங்கள், குடிப்பழக்கம், பீடி, சிகரெட் போன்றவை உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும், அவற்றை ஏன் அடிக்கடி உபயோகிக்கிறோம்?

அதற்கு காரணமாக இருப்பது அவற்றைப் பற்றிய பதிவுகள் ஆழ்மனதில் இருப்பதால்தான். நமக்கு அது தெரிவதில்லை; ஆனால், அந்தப் பதிவுகள்தான் அவற்றை மீண்டும் மீண்டும் உபயோகிக்க நம்மை தூண்டுகின்றன.

   



நல்ல அனுபவங்களாக இருந்தாலும், கெட்ட அனுபவங்களாக இருந்தாலும் உணர்ச்சி பொங்க அவற்றை எதிர் கொள்ளும்போது, அவை நமது ஆழ்மனதில் புதிய பதிவுகளை ஏற்படுத்தி விடும்.

மனிதனுக்கு ஏற்படும் இனவெறி, சாதிவெறி, மதவெறி போன்றவைகளுக்கு காரணமாக இருப்பது அவனுள் தோன்றும் உணர்ச்சி பெருக்கம் தான்.





பல நேரங்களில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் உணர்வு மனதோடு தங்கிவிடும். ஆனாலும், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட அனுபவம் ஆழ்மனம் வரை சென்று விடும்.

நமது மனம் புண்படும்படி ஒருவர் பேசி விடுகிறார். அது நமது உணர்வு மனதில் ஒரு பதிவை நிகழ்த்துகிறது. பின்னர் நாம் அதையே நினைத்துக் கொண்டிருந்தால், அந்தப் பதிவு ஆழ்மனம் வரை சென்று விடும்.

    



அடுத்தது, கற்பனையில் செய்யப்படும் பதிவுகள். 

இதில் பல வகையான பதிவுகள், அந்தந்த மனிதனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடைபெறும்.

இல்லாததை நினைத்து ஏங்குவது, அடைய முடியாத ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவது, தேவையில்லாமல் கவலைப் படுவது போன்று விதவிதமான பதிவுகள் ஆழ்மனதில் இடம் பெறும்.

'மனப்பிராந்தி' என்று பலர் சொல்வதுண்டு. அது பெரும்பாலும் தேவையற்ற பயத்தை குறிப்பதாகவே இருக்கும். இதுவும் கற்பனையின் காரணமாக ஏற்படும் பதிவுதான்.

இவை அனைத்தும் ஆரம்பத்தில் ஒரு எண்ணமாக மட்டுமே தோன்றும். அதையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால், அந்த எண்ணங்கள் ஆழ்மனம் வரை சென்று விடும்.

ஆழ்மனதில் பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதற்கு இந்த விளக்கங்கள் போதும் என எண்ணுகிறேன்.





இனி, இந்தப் பதிவுகள் காரணமாக என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்:

1. "மனமே உனது உற்ற நண்பன்; அதுவே உனது முக்கிய எதிரியும் கூட" என்று கிருஷ்ணன் கூறுகிறார். அவர் மனம் என்று பொதுவாகக் கூறினாலும், நண்பனாகவோ, எதிரியாகவோ இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது "ஆழ்மனப் பதிவுகள்தான்".

2. மனிதனுக்குள் ஏற்படும் inner-suffocation, depression போன்றவைகளுக்கும் இவையே காரணம்.

3. மனிதன் பல நேரங்களில் தன்னிலை மறந்து தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்தால், அவற்றின் பின்னணியில் இருப்பதுவும் ஆழ்மனப் பதிவுகளே.

4. இரவு நேரத்தில் மனிதனை தூங்கவிடாமல் அல்லல் படுத்துவதும் இந்தப் பதிவுகளே.

5. "பெற்றது பொய்யுடல்
முன்செய் வினைப்பயன்..."
மனிதன் இறக்கும் போது ஆழ்மனதில் பதிவுகள் இருந்தால், அவனுக்கு மறுபிறவி உண்டு என சில சமயங்கள் சொல்கின்றன. அதனால்தான் வள்ளுவர் "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" எனக் கூறுகிறார்.

6. மனிதனின் உள்ளத்தில் 'கருணை' பெருக்கெடுக்கத் தடையாக இருப்பதும், இந்த ஆழ்மனப் பதிவுகளே.





கருணை, இரக்கம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

இரக்கம் என்பது உணர்ச்சியில் பிறப்பது. கொடிய மனம் படைத்த மனிதனிடம் கூட இரக்கம் பிறப்பதைக் காணலாம். பேரிடர் காலங்களில் பலரும் இரக்கம் காட்டுவதைக் காண முடியும். பல சமயம், தனி மனிதர்களும், தேவைப்படின், பிறரிடம் இரக்கம் காட்டுவதுண்டு.

கருணை என்பது உணர்வில் கலந்தது. அது குறிப்பிட்ட மனிதர்களிடம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்‌. ஆனால், அதை அவர்கள் வெளியே பறைசாற்றுவதில்லை. நாமாக அதை உணர்ந்தால் தான் உண்டு.

எல்லா மனிதர்களிடமும் இரக்கம் இருப்பதைப் போன்று, கருணையும் இருக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.





இரண்டாவது கேள்வி:-
அது  (ஆழ்மனப் பதிவுகள்) எவ்வாறு அகங்காரமாக மாறுகிறது?.  

ஆழ்மனப் பதிவுகளை "பீஜம்"
என்கிறார் ரிஷி பதஞ்சலி. பீஜம் என்றால் உயிர்ப்புடன் கூடிய விதைகள் என்று பொருள்.

ஆழ்மனப் பதிவுகள் அகங்காரமாக மாறுவதில்லை. ஆழ்மனப் பதிவுகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, மனிதனினிடம் தன்முனைப்பு (அகங்காரம்) செயல்படத் துவங்குகிறது.

ரஜோ குணம் மிகுந்த மனிதனிடம், தன்முனைப்பின் வேகம் மிகுந்து காணப்படும்.

அவன் சத்துவ குணத்தில் பிரவேசித்தால், அகங்காரம் நலிவடையத் தொடங்கி விடும்.

   



மூன்றாவது கேள்வி:-
சூப்பர் கான்சியஸ் மைண்ட் என்று ஒன்று உள்ளதே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான்காவது கேள்வி:- ஆழ்மனது பதிவை (பதிவுகளை) எப்படி நீக்குவது?

நான்காவது கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு, மூன்றாவது கேள்விக்கு வருவோம்.

ஆழ்மனப் பதிவுகளை நம்மால் நீக்க முடியாது என்பதுதான் உண்மை. அவைகளாக நீங்கினால் தான் உண்டு.

".. பாச வினைகள் பற்றது நீங்கி"
... 'பற்றது நீக்கி' என்று
பாடவில்லை.

".. அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" ... 'பற்றை விடற்கு' என வள்ளுவர் பாடவில்லை.

"ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில் ஒன்றிநிற்ப தெக்காலம்?"
.. பத்திரகிரியார்.





ஆசை வலைபின்னி பாசத்தில் நம்மை தள்ளி விடுகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்க வேண்டும் என்கிறார்; அதாவது இறை சிந்தனையில் இரு என்கிறார்.

ரிஷி பதஞ்சலி "ஈஸ்வர ப்ரணிதானத்"; இறைவனிடம் சரணடைவது
என்கிறார்.

முழு நேரமும் இறை சிந்தனையில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தால், ஆழ்மனதில் இருந்த தேவையற்றப் பதிவுகள் ஒவ்வொன்றாக நம்மைவிட்டு நீங்கிவிடும்; பாச உணர்வும் மறைந்து விடும்.  

மனம் இறை சிந்தனையால் நிரம்பியிருந்தால், உள்ளத்திலிருந்து பாசம் விலகிவிடும்; தூய்மையான அன்பு மட்டுமே அங்கு குடிகொள்ளும்.





'சூப்பர் கான்சியஸ் மைண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?' என ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.

இந்தத் தொடருக்கும்,  'சூப்பர் கான்சியஸ் மைன்ட்'-கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற சந்தேகம் வரலாம். நிச்சயமாக சம்பந்தம் உண்டு.

கான்சியஸ் மைன்ட்  (conscious mind) -- உணர்வு மனம்;
சப்-கான்சியஸ் மைன்ட் (Sub-conscious mind) .. ஆழ்மனம். இதை உணர்வற்ற மனம் (unconscious mind) என்றும் சொல்வார்கள்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு மனங்களும் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டவை. ஆனால், 
 'சூப்பர் கான்சியஸ் மைண்ட்' 
(Super-conscious mind) 
விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாத ஒன்று. இது உணர்வு மனம் மற்றும் உணர்வற்ற மனம் இரண்டும் கடந்த நிலை!! இதை எப்படி புரிந்து கொள்வது?





".. மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடுகிறார் தாயுமானவர்.

"..மனமிறக்க.." என்றால், மனம் இல்லாமல் போய் விடும் என்று அர்த்தமல்ல; மனம் இருக்கும், ஆனால் மனதை ஆழ்மனப் பதிவுகள் மூலம் ஆட்டிவைத்த "நான்" என்ற அகங்காரம், "எனது" என்ற மமகாரம் இரண்டும் நலிந்து அவற்றின் 'தன்முனைப்பு' வெகுவாகக் குறைந்து விடும்.

அதன் பின்னர், அந்த மனிதனின் இயக்கம் இரண்டு வழிகளில் மாறிவிடும்:-
1. ஆழ்மனதின் உந்துதல் இல்லாமல், ஐம்புலன்கள் தரும் கருத்துக்களுக்கு இடம் அளிக்காமல், மனிதனால் புறவுலகத் தாக்கங்களை நேரடியாக எதிர் கொள்ள முடிகிறது. புறவுலகத் தாக்கங்களை நேரடியாக எதிர்கொள்ளும் பொழுது, அவற்றின் பின்னணியில் இருக்கும் 'காரணிகளையும்' அவனால் புரிந்து கொள்ள முடிகிறது.

2. அவனது இயக்கத்தில் பெரிய மாறுதல்கள் இருந்தாலும், அதன் பின்னணியில் இருப்பது "சித்தத்தின் உள்ளிருந்து பெருக்கெடுத்து அவனை முற்றிலும் சூழ்ந்து கொள்ளும் உள்ளொளிதான்".

இந்த நிலையில் அந்த மனிதனை இயக்குவது "சூப்பர் கான்சியஸ் மைண்ட்" (super-conscious mind) என்று சொல்லலாம். இது எனது தனிப்பட்ட கருத்து.





பொதுவாக நாம் எல்லோரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். (இது ஒரு கற்பனைதான்)

'நான்' என்று சொல்லும் போது, அது வெறும் புள்ளிதான். ஆனால், கூடவே 'எனது' என்ற ஒன்று வந்துவிட்டால் .. அது உயிருள்ளதாக இருந்தாலும், உயிரற்றதாக இருந்தாலும்.. அங்கு ஒரு வட்டம் உருவாகி விடும். வெகு விரைவில் 40, 50 'எனது' ஒன்றுகூடி வட்டத்தைப் பெரிதாக்கி விடும். 'எனது' என்பதன் எண்ணிக்கை கூடக்கூட, மனிதனின் அகங்காரம் மேலும் மேலும் வலுவடைந்து விடும்.





அகங்காரம் உள்ள மனிதனிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அகங்காரம் புறவுலகம் சார்ந்தது; கருணை அகவுலகம் சார்ந்தது.

மனிதனிடம் கருணை பிறக்க வேண்டுமென்றால், அவனது அகங்காரம் நலிவடைய வேண்டும். அதற்கு, பற்றின் காரணமாக வட்டத்தில் இருக்கும் 'எனதின்' (my) எண்ணிக்கை குறைந்து, முடிவில் வட்டம் காணாமல் போக வேண்டும்; அல்லது 'எனது' என்ற பற்று நம்மை விட்டு நீங்க வேண்டும்.





அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு சிலரே 'வட்டத்தில்' மாட்டிக் கொள்ளாமல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். ரமண மகரிஷி, ஆதி சங்கரர் போன்றவர்கள் சிறு வயதிலேயே புறவுலக வாழ்க்கையைத் துறந்து  வெளியேறியவர்கள்.





இன்னும் சிலர் வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த அதிர்ச்சி காரணமாக வட்டத்தை துறந்து வெளியேறி விடுகின்றனர் ...
பட்டினத்தாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு "காதறுந்த ஊசி";
பத்திரகிரியாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு "கழுமரம்";
அருணகிரிநாதருக்கு
அதிர்ச்சியைக் கொடுத்தது அவரது "சகோதரி".





புத்தரைப் போன்றவர்கள் தங்களைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை தேடி வட்டத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.





அப்படியானால், வட்டத்தில் சிக்கித் தவிக்கும் இல்லற வாசிகள் உள்ளத்தில் கருணை மலர வாய்ப்பே இல்லையா?

  



ஆழ்வார்கள், நாயன்மார்கள் எனப் பலர் நம்மால் வணங்கத்தக்கவர்களாக உள்ளனர். அவர்களில் இல்லறவாசிகளும் அடங்குவர். அந்த அளவிற்கு அவர்கள் உயர்ந்து நிற்க காரணம் என்ன?

நம்மிடம் இல்லாத ஒரு சிறப்பு அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அது எது?

நம்மிடம் இருக்கும் ஒன்று அவர்களிடத்தில் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான காரணம். அது நம்மை ஆட்டிப் படைக்கும் "அகங்காரம்".





ஜனக மகாராஜா ஒரு நாட்டையே ஆட்சி செய்தார். இருந்தும் அவரால் அகங்காரத்தை விட்டு பற்றற்ற வாழ்க்கை வாழ முடிந்தது. 

அவரோடு ஒப்பிட்டால், நம்முடைய 'எனதின்' (my) எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் நம்மால் பற்றின்றி வாழ முடியவில்லை. பற்றின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?





ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் அனைவரும் இறைவனிடம் சரணடைந்தவர்கள். இறைவனிடம் சரணடைந்து விட்டால், அதன்பின் அந்த மனிதனிடம் அகங்காரம் இருப்பதில்லை. பல்வேறு காரணங்களால் நம்மால் சரணடைய முடியவில்லை என்றால், அடுத்து என்ன செய்யலாம்?





தினந்தோறும் சில மணித் துளிகள் ஒதுக்கி அகத்தாய்வு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். முறையாக செய்து வந்தால் சில வாழ்வியல் உண்மைகள் புரியும்; எனது (my) என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ, அவற்றின் மீது கொண்ட பற்றும் குறைந்துவிடும்.

நாளடைவில் நமது எண்ண ஓட்டம் "ஆக்ஞா" சக்கரத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிடும். அது இறைவனின் இருப்பிடம் அல்லவா? அதன்பின் "கருணை" உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்ளும்.

அதனால்தான் கவிஞரும்
"கருணை பொங்கும் உள்ளம் - அது
கடவுள் வாழும் இல்லம்" என்கிறார்.

                       (முற்றும்)

Sunday, 9 August 2026

ஆற்றில் கிடந்தும் .. பட்டினத்தார்

         ஆற்றில் கிடந்தும்

(பட்டினத்தார்  பாடலின் வழியாக
 "மறு கரை" பற்றி ஒரு சிந்தனை)
    
நம்மில் பெரும்பாலோர் பின்பற்றுவது "பக்தி மார்க்கம்". ஆலயங்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது, வீட்டில் பூஜை செய்வது, சடங்கு, சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பது, ஆக எல்லாவற்றிலும் மன திருப்தியோடு கலந்து கொள்கிறோம்.

'எல்லாம் அவன் செயல்' என்பதையும் புரிந்து கொள்கிறோம். 

ஆனாலும், மனம் தேவையற்ற கவலைகளினாலும், பயத்தினாலும் அல்லல் படுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அதிலும் முதுமை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்; 'கவலைப் படுவதே' முக்கிய வேலையாக மாறிவிடுகிறது. இதற்கு தீர்வுதான் என்ன?



பட்டினத்தார் ஒரு பாடலில் நம்மை திட்டுவதுபோலத் திட்டி, மறைமுகமாக ஒரு வழியையும் காட்டுகிறார்.

வாழ்வியல் தத்துவம் பற்றி பட்டினத்தார் பல கோணங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

"ஒன்றென்றிரு தெய்வம்
உண்டென்றிரு.." என்று பாடும் போது பட்டினத்தார் 'மனமே உனக்கு உபதேசம் இதே', 'நெஞ்சே உனக்கு உபதேசம் இதே' என்று அறிவுரை சொல்கிறார்.

ஆனால், அவரே இன்னொரு பாடலில் மனதைக் கடுமையாகக் கடிந்து கொள்கிறார். அந்தப் பாடல் ..
"நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? 
நீ மனமே 

மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல் 

ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்? 

ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!"



நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. பட்டினத்தார் உண்மையில் அவரது மனதைத்தான் கடிந்து கொண்டாரா அல்லது நம்மைத்தான் (பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டவர்களை) கண்டனம் செய்கிறாரா?

பாடலின் இரண்டாவது வரியில் "மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை" என்று சொன்னவர், கடைசி வரியில் "படித்துறை இருந்தும் வழியறியாமல் அலைகின்றையே!" என்று சொல்லியிருக்கலாம்.

அதற்குப் பதிலாக 'ஆற்றில் கிடந்தும்' என்ற வார்த்தையைக் கூடுதலாகப் சேர்த்து "ஆற்றில் கிடந்தும்
துறையறியாமல் அலைகின்றையே!" என்று ஏன் சொன்னார்?

தவிர, "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தையில் ஒரு அழுத்தம் தெரிகிறது.

கூடவே 'குடும்ப வாழ்க்கையை' ஏன் 'ஆற்றோடு' ஒப்பிடுகிறார்?

நிச்சயமாக இதற்கு ஒரு காரணம் இருக்கும். அது என்னவாக இருக்கும்?

        

      
பட்டினத்தார் இந்தப் பாடல் மூலம் பக்தர்களைக் கடிந்து கொள்கிறாரோ எனத் தோன்றினாலும், "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தைகளைப் பார்த்ததும் அவர் ஏதோ குறிப்பிட விரும்புகிறார் எனபது புரிந்தது.

அது என்னவாக இருக்கும் எனச் சிந்தித்த போது, தென்கச்சி            திரு. சுவாமிநாதன் அவர்கள் சொன்ன கதைதான் ஞாபகத்திற்கு வந்தது. அந்தக் கதை ...

ஒரு வீட்டில் ஐந்து சகோதரர்கள் இருந்தனர். (அவர் சகோதரர்கள் என்று சொன்னது ஐந்து விரல்களைத்தான்). சகோதரர்களுக்கிடையே ஒரு சந்தேகம் வந்து விடுகிறது .. 'தங்களுக்குள் யார் பெரியவரென்று?'.

கட்டை விரல் சொல்கிறது .. "நான்தான் பெரியவன். கிணற்றில் நீர் இறைத்தால் நீங்கள் நால்வரும் ஒரு பக்கம் கயிற்றைப் பிடிக்கிறீர்கள்; நான் ஒருவன் மட்டுமே கயிற்றை மறுபக்கம் பிடிக்கிறேன். அப்படியானால் நான்தானே பெரியவன். அது மட்டுமல்ல; பத்திரங்களில் எனது ரேகையை மட்டும்தானே நம்புகிறார்கள்".

சுட்டு விரல் சொல்கிறது ..
"நீ சொல்வது உண்மைதான். ஆனால், மற்றவர்கள் தவறு செய்யும்போது அதை சுட்டிக் காட்டும் தகுதி எனக்கு மட்டும்தானே உள்ளது. எனவே நான்தானே பெரியவன்"

நடு விரல் சொல்கிறது ..
"அதெல்லாம் எதற்கு; எல்லாரும் எழுந்து நிற்போம். யார் பெரியவர் என்பது தானேத்தெரிந்து விடும்".

மோதிர விரல் சொல்கிறது .. "எது எப்படியோ; எல்லாரும் மோதிரத்தை என்மீதுதானே போட்டு அழகு பார்க்கிறார்கள். அப்படியானால் எல்லாரையும் விட நான்தானே உசத்தி".

சுண்டு விரலுக்குத் தன்னைப் பற்றி பெருமையாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. இதைக் கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாட, அந்தக் கடைக்குட்டி பையன் சோர்வாக ஓர் மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பிக்கிறான். 

அங்கு வந்த நாரதர் அவன் காதில் எதையோ சொல்கிறார். அதைக் கேட்டதும் சுண்டு விரல் மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து சொன்னது..

"நீங்கள் ஆயிரம் சொல்லலாம். ஆனால், கடவுளுக்குப் பக்கத்தில் யார் இருக்கிறார் என்பதுதானே முக்கியம். நாம் எல்லாரும் சேர்ந்து கடவுளை வணங்கும் போது நான்தானே முதலில் நிற்கிறேன். அப்படியானால் நான்தானே பெரியவன்!?".


நாரதர் என்ன சொல்லியிருப்பார்? 
உங்கள் ஐந்து பேரில், நீ மட்டும்தான் கடவுளின் அருகில் இருக்கிறாய். அது தெரியாமல், அண்ணன்களிடம் உள்ள தகுதிகள் போன்று தன்னிடம் ஒன்றும் இல்லையே என்று புலம்புகிறாயே! அதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா என சொல்லியிருக்கலாம்.


          
மேலே சொன்ன கதை நினைவிற்கு வந்ததும், பட்டினத்தார் "ஆற்றில் கிடந்தும்" என்ற வார்த்தைகளை ஏன் குறிப்பிட்டார் என்பது புரிந்தது. 

மேலே சொன்ன கதையில் ஐந்து சகோதரர்கள் என்றால், இங்கு நான்கு சகோதரர்கள் ..
ஞானத்தை தேடுபவர், 
கர்மத்தில் ஈடுபடுபவர், 
தியானத்தில் கவனம் செலுத்துபவர் மற்றும் பக்தியில் நாட்டம் கொள்பவர்.


எனது புரிதலில் மறு கரை

(இனி வருவது பட்டினத்தார் பாடலின் நேரடி விளக்கம் அல்ல. 'மறு கரை' என்ற உருவகத்தை அடிப்படையாகக் கொண்டு, அத்வைதக் கோணத்தில் நான் புரிந்து கொண்ட சில சிந்தனைகளைப் பகிர்கிறேன்)

பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டவன் மற்றவர்களைப் பார்த்து, நம்மால் அவர்களைப் போல் ஞான மார்க்கத்திலோ, கர்ம மார்க்கத்திலோ, தியானத்திலோ ஈடுபாடு கொள்ள முடியவில்லையே என்று நினைத்திருக்கலாம். 

அவனைப் பார்த்து பட்டினத்தார் 
'அவர்கள், தாங்கள் ஆற்றங்கரையில் தான் இருக்கிறோம் என்பதை உணராமல், அவர்களுக்கே உரிய வழியில் ஆற்றைத் தேடி வெளியே ஓடுகிறார்கள். முடிவில் இந்த ஆற்றுக்கு வந்துதான் அடுத்த கரையில் ஏற முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் திரும்பி வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நீயோ "எல்லாம் அவன் செயல்" என்று எண்ணி ஆற்றில் இறங்கி விட்டாய். அப்படி இருந்தும், எதிரே இருக்கும் படித்துறையில் ஏறுவதை விடுத்து, வீணே இங்கும் அங்குமாக அலைகின்றாயே' என்று
சொல்வதுபோல் தோன்றியது.



கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு ... "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தானாம்" என்று. 

கையில் இருக்கும் வெண்ணையை உருக்குவதற்குப் பதிலாக, மற்றவர்களைப் பார்த்து அவர்களெல்லாம் நெய் வாங்கக் கடைக்குப் போகிறார்கள்; என்னிடம் நெய் வாங்கப் பணம் இல்லையே என்று புலம்புவதைப் போல, எதிரே இருக்கும் படித்துறையில் ஏறுவதை விடுத்து எதற்காக மற்றவர்களைப் பார்த்துப் புலம்ப வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், "ஆற்றில் கிடந்தும்.." என்று பட்டினத்தார் கூறினாரோ எனத் தோன்றுகிறது.

               

                                                                  ஆறு, மனிதனின் வாழ்க்கை இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதனின் மனத்திலும் எண்ண அலைகள், சிந்தனை என்று ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கும்.

வெள்ளம் வரும்போது ஆற்றுத் தண்ணீர் கலங்கி காணப்படும். மனிதனிடமும் கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் பொங்கி வழியும் போது, தேவையற்ற தவறான எண்ண அலைகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.




எல்லாம் சரி; ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் உண்டு. மனிதனின் வாழ்க்கையும் இரண்டு கரைகளுக்கு ஊடே தான் பயணம் செய்கிறதா?

"மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை" என்று பட்டினத்தார் கூறும்போது, 'இதே கரையில் மீண்டும் மீண்டும் பிறக்காதே; அடுத்த பிறவியிலாவது மறு கரையில் பிறக்க முயற்சி செய்' எனக் கூறுகிறாரா?






ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை இருப்பது போல், சம்சார பந்தத்தில் உழல்பவனுக்கும் இரண்டு பக்கமும் கரைகள் உண்டா எனக் கேட்டால், ஆமாம், உண்டு என வள்ளுவர் கூறுகிறார்.

வள்ளுவர் கூறுகிறார் ..
"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு"
.. குறள் 374.

ஒன்று பொருள் சார்ந்த உலகம்; மற்றொன்று அருள் சார்ந்த உலகம்.



நாம் அனைவருமே பொருள் சார்ந்த உலகம் இருக்கும் கரையில் தான் பிறந்து வளர்கிறோம். அதிலேயே மடிந்தும் போகிறோம்.
 
பொருள் சார்ந்த உலக வாழ்க்கையை விடுத்து, சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு அருள் சார்ந்த உலகம் நிறைந்த கரையில் பிறக்க நினைத்தாலும், அதனால் கிடைக்கும் பயன்கள் நமக்குத் தெரிவதில்லை.



மறுகரையில் ஏறினால் அவனது மனதில் உள்ள ஆசைகள் ஒவ்வொன்றாக மறைந்து விடும். அவன் "ஆணவம், கன்மம், மாயை" இவற்றிலிருந்து விடுபட்டு விடுவான். 



நமது நோக்கம் நம்மை ஆட்டுவிக்கும்
பொருட்செல்வம் என்ற கரையிலிருந்து விலகி அருட்செல்வம் நிறைந்த கரையை அடைவதுதான் என்பதாக இருக்க வேண்டும். அது ஒன்றே பிறப்பினை உருவாக்கும் ஆசைகளை அறுக்கும் வழியாகும்.

அதனால்தான் வள்ளுவரும் 
"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள"
(குறள் 241) எனப் பாடுகிறார்.


அன்பர் ஒருவர் 'மறு கரையைப்' பற்றி சில கேள்விகளை முன் வைத்தார். இது சம்பந்தமாக நான் முன்னரே நினைத்ததுண்டு. தேவையில்லாமல் அதைப் பற்றி எழுத வேண்டாம் என நினைத்தேன். இப்பொழுது எழுத வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
எனது எண்ணங்கள் "அத்வைத" கோட்பாட்டின் படி நான் புரிந்து கொண்டவை.



"பொருள் தேடி புண்பட்டு
பொய்யுலகில் வாழாமல்
அருள் தேடி அன்புற்று 
அகமகிழ்வ தெக்காலம்?"

ஒரு கரையில் நாம் பிறந்து அங்கு பொருளைத் தேடி ஓடுகிறோம். மறு கரைக்கு சென்று விட்டால் அருள் நம்மைத் தேடி வரும்.

மறு கரையை அடைந்து அதன் பின் இறப்பு வந்தால், அதன்பின் மூன்று விதமான விளைவுகள் ஏற்படும். அவை ..

1. மறு கரையை அடைந்து விட்டோம்; ஆனாலும் மும்மலங்களும் முழுமையாக மறையவில்லை.
அந்த நிலையில் இறப்பு வந்தால், மீண்டும் பிறக்கும்போது அருள் நாட்டம் உள்ள மனிதனாக பிறப்போம்.

2. மும்மலங்களும் ஆழ்மனதிலிருந்து முழுமையாக நீங்கிய பின் (ஜீவாத்மாவை சுற்றியுள்ள மாயத்திரை விலகுமுன் மரணம் நேர்ந்தால்), அந்த மனிதனுக்கு மீண்டும் பிறப்பதற்கான விருப்பம் எதுவும் இருக்காது. அந்த நிலையில் இறைவன் விரும்பினால் மட்டுமே மீண்டும் ஒரு பிறவி வரும்.

அதுபோன்ற பிறவியில் அவன் ஒரு ஞானியாக, ஒரு சித்தராக அல்லது ஒரு "அவதார புருஷனாக" இந்த பூமியில் வலம் வருவான். 

3. ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியே. இருப்பினும், அது ஒரு மாயத் திரையின் உள்ளே இருப்பதால், அதனை ஜீவாத்மா என பிரித்து உணர்கிறோம்.
ஜீவாத்மாவை சுழ்ந்துள்ள மாயத் திரையின் மீது, நமது வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களைப் பதிவு செய்கிறோம்; அதன் காரணமாக அதனை "ஆழ்மனம்" என்கிறோம். இந்தப் பதிவுகள் அனைத்தும் நீங்கப் பெற்று, அதன்பின் ஜீவாத்மாவைச் சூழ்ந்துள்ள மாயத் திரையும் அழிந்து விட்டால், அந்த மனிதன் மோட்ச நிலையை அடைந்து விடுகிறான். இனி ஜீவாத்மா உடலை விட்டு "சகசிரதளம்" வழியாக வெளியேறி விடும்.

உடலை விட்டு நீங்கிய பின் அது பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடும்.

பின் அந்த மனிதனுக்கு பிறவியேதும் கிடையாது.
(இது என்னுடைய புரிதல் மட்டுமே)




பட்டினத்தார் பக்தனிடம்
'மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதே. நீ ஆற்றில்தானே இருக்கிறாய். எதிர்த்தால் போல் படித்துறை இருக்கிறது. போய் ஒவ்வொரு படியாக ஏறி கரையின் மேலே போக வேண்டியதுதானே' எனக் கூறுகிறார்.

('இரண்டு கரைகள்' என்றதும் அன்பர்களுக்கு பலவிதமான சந்தேகங்கள் வருகின்றன. இரண்டு கரைகள் என்பது உதாரணத்திற்காக சொல்லப்பட்ட ஒன்று. உண்மையில் கரையென்று எதுவும் கிடையாது.

வேண்டுமானால்,
'பந்தங்களில் மாட்டிக் கொண்ட நிலை'; 'பந்தங்களில் இருந்து விலகி விட்ட நிலை' எனச் சொல்லலாம்.)



படித்துறையில் ஏறுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் காட்டுகின்றனர்.

ரிஷி பதஞ்சலி "ஈஸ்வர ப்ரணிதானத்" என்கிறார். அதாவது இறைவனை சரணடைவதின் மூலம் படிகளைக் கடந்து செல்லலாம் என்கிறார்.

பத்திரகிரியார் "ஓசைமணி தீபத்தில் ஒன்றிவிடு" என்கிறார்.

திருவள்ளுவர் "பற்றற்றான் பற்றினை பற்றிக்கொள்" என்கிறார்.

இவை கூட வேண்டாம்; கடவுளை வணங்கும் போது பொருள் சார்ந்த எதையும் வேண்டாமல், அதற்குப் பதிலாக...

"இறைவா, நீ எதைக் கொடுத்தாலும், அதை உன் பிரசாதமாக ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை நீ கொடுப்பது எனக்கு மிகுந்த வேதனையைத் தருமானால் அதைத் தாங்கக்கூடிய சக்தியை மட்டும் கொடு" என்று வேண்டுங்கள்; நீங்கள் கரையேறி விடலாம்.

இதைத்தான் 'சரணாகதி' என்று சொல்கிறார்களோ!!








    

 










.





              




 







  















               











.
























 











































           













 

திருமந்திரம் 85




           திருமந்திரம் 85


"நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின் 
ஊன்பற்றி நின்ற  உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே"
.. திருமந்திரம் 85

மேலே உள்ள பாடலின் கடைசி இரண்டு வரிகளில் வரும் வார்த்தைகளை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது சுவாசத்திற்கும், "ஓம் நமசிவாய" எனும் மந்திரத்திற்கும் இடையே ஒரு ஒத்திசைவு உள்ளது.

சுவாசம் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் 1:2 என்ற விகிதத்தில் இருக்கும். "ஓம் நமசிவாய" எனும் மந்திரமும் அதே விகிதத்தில் தான் உள்ளது. 
(ஓம் .. 3; நமசிவாய .. 6)


எனவே, மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது மௌனமாக "ஓம்" என்று உச்சரியுங்கள்; மூச்சுக் காற்றை வெளி விடும் போது மௌனமாக "நமசிவாய" என்று உச்சரியுங்கள்.

மற்ற மந்திரங்கள் 1:2 என்ற விகிதத்தில் இருக்காது. ஆனால், பயிற்சி செய்யும் பொருட்டு சிறிய மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு - -
அயம் ஆத்மனே
ஓம் சரவணாய
ஓம் கிருஷ்ணாய
ஓம் வெங்கடேச
நமோ நாராயண
ஓ லார்ட்
ஓ ஜீசஸ்




இதனை 'பிரணாயாமப் பயிற்சி' செய்யும்போதும் பயன்படுத்தலாம்; சும்மா இருக்கும் மற்ற நேரங்களிலும், மூச்சு வந்து போவதைக் கவனித்து அதனுடன் இந்த மந்திரத்தைச் சேர்த்து சொல்லலாம்.



இந்தப் பயிற்சியை முறையாக செய்து வந்தால், அது உங்களுக்கும், ஆழ்மனப் பதிவுகளுக்கும் இடையே ஒரு நிரந்தரப் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி விடும்.

அதன்பின் ஆழ்மனதில் உள்ள 'எதிர்மறை உணர்ச்சிகளால்' உங்களை உசுப்பேத்த முடியாது.
 
இதனால்தான் மாணிக்கவாசகரும் "இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி" என்று பாடினாரோ?

இனி, பாதுகாப்பு கவசம் எப்படி உருவாகிறது எனப் பார்ப்போம்.




நாம் தினந்தோறும் தேவாரம். திருவாசகம், கந்த சஷ்டி கவசம் என ஏதாவது ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறோம். அவை ஆழ்மனதில் நினைவுப் பெட்டகத்தில் தங்கி விடுகின்றன. தேவைப்படும்போது அவற்றை நம்மால் நினைவுகூற முடிகிறது.

நாம் சாப்பிடும் உணவு உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் வழியாகப் பயணிக்கிறது.

உணவிலிருந்து சத்துக்களைப் பிரித்தெடுத்து அது இரத்தமாக மாறி நாளங்களில்  ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆக, ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது.
ஆனால், நாம் சுவாசத்தோடு "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரிக்கும்போது என்ன நடக்கிறது?




நாம் சுவாசிக்கும் போது ஆக்சிஜன் மட்டும் வருவதில்லை; கூடவே பிராணவாயுவும்  உள்ளே வருகிறது. 

நம்மால் உச்சரிக்கப்படும் மந்திரம் பிராண வாயுவோடு இணைந்து உடல் முழுவதும் பரவியிருப்பது போன்ற ஒரு உணர்வு உருவாகிறது.
(இது என் அனுபவம்)

பிராண வாயு மட்டுமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லக் கூடிய தன்மை உடையது. ஆக, உடலில் உள்ள திசுக்கள் அனைத்தும் பிராண வாயுடன் வரும் மந்திரத்தைப் பற்றிக் கொண்டு விடுகிறது.

இதனைத்தான், இந்தப் பற்றுதலைத் தான் திருமூலர் "..ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.." என்று கூறுவதாகத் தோன்றுகிறது.





அடுத்த வரியில் "தான் பற்றப் பற்ற" என்று சொல்கிறாரே; அந்தத் "தான்" எதைக் குறிக்கிறது?

"தான்" என்பது தன்னுடைய ஊனுடம்பைத்தான் குறிக்கிறது. அப்படி என்றால், "ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்" என்று சொன்னவர் "தான் பற்றப் பற்ற" என மீண்டும் ஏன் சொல்கிறார்?


உடம்பைப் பார்த்து திருமூலர் "ஒரு தடவை மந்திரத்தைப் பற்றிக் கொண்டதும் நிறுத்திவிடாதே. அந்த மந்திரம் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் பரவ வேண்டும். ஆகவே மீண்டும் மீண்டும் மந்திரத்தைப் பற்றிக் கொண்டே இரு. அப்படிப் பற்றினால்தான் உன்னால் 'தலைப்பட' முடியும்" எனக் கூறுகிறார்.



"தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே". 'தலைப்படும்' என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. நாம் நமக்கே உரிய பாணியில் அதனைப் புரிந்து கொள்வோம்.




உடல் மந்திரத்தை உள்வாங்கி உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் அதனைப் பரவச் செய்து விட்டால், தன்னிச்சையாக அந்த மந்திரம் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.

அத்துடன் நாம் என்ன செயல் செய்து கொண்டிருந்தாலும், அந்த மந்திரம் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.

நாம் அதை உணராமல் இருக்கலாம். ஆனாலும், அது தன்னிச்சையாக உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.



                 
உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் மந்திரத்தை நம்மால் இரு தருணங்களில் உணர முடியும்.

வேலைகள் எதுவுமின்றி சும்மா இருக்கும்போது, நாம் பயிற்சியின் போது  உச்சரித்து வந்த மந்திரம் மூச்சோடு கலந்து தானே முன்வந்து நிற்கும் .. (தலைப்படும் தானே!). தவிர, நமது சுவாசத்தைக் கவனித்தால் அதன் கூடவே பயணிக்கும் மந்திரத்தின் அதிர்வலைகளை உணரலாம். 
சிலரால் அதை உணர முடியாமல் போகலாம்.




ஆனால் இரண்டாவது தருணம் மிகச் சரியாக அதை உணர வைக்கும்.

நமது ஆழ்மனதில்   'எதிர்மறை உணர்ச்சியின்' காரணமாக உருவாகும் பதிவுகள், நமது முதல்தர எதிரிகளாகும். அவை எப்போதும் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம்மை உசுப்பேத்திவிடத் தயங்காது. அதன் காரணமாக நாமும் சில காரியங்களைச் செய்து பின்னர் அதன் விளைவுகளைச் சந்தித்து வருந்த நேரிடும்.

இப்பொழுதோ அந்தப் பிரச்சினை இருக்காது. ஏனெனில் நம்முள் உச்சரிக்கப்படும் மந்திரம் உணர்வு மனத்திற்கும், ஆழ்மனத்திற்கும் இடையே ஒரு தடுப்பு கவசமாக மாறி 'எதிர்மறை உணர்ச்சிகள்' நம்மை உசுப்பேத்த விடாமல் பார்த்துக் கொள்ளும்        

இதன் காரணமாக, 'எதிர்மறை உணர்ச்சி' பதிவுகள் படிப்படியாக வலிமை இழந்து, சத்துவ குணம் மேலோங்கத் தொடங்கும்.

'எதிர்மறை உணர்ச்சி' பதிவுகள் நீங்க, நீங்க நாமும் நம்மை அறியாமலே சத்துவ குணம் மிக்க மனிதர்களாக மாற ஆரம்பித்து விடுவோம்.




இது தவிர, வேறு ஒரு முக்கிய நன்மையும் நமக்குக் கிட்டும். எந்தவித இடைஞ்சலும் இன்றி நாம் தியானம் செய்ய ஆரம்பித்து விடலாம்.
                        
நாம் செய்த மந்திரத்தோடு இணைந்த மூச்சுப் பயிற்சிக்கும், அட்டாங்க யோகத்தில் வரும் "தாரணைக்கும்" உள்ள வித்தியாசம் என்ன?



"பிரத்தியாகாரம்" என்பது வெளியே சஞ்சரிக்கும் மனதை தடுத்து, அதை உட்பக்கமாக கவனம் செலுத்த வைக்கும் ஒரு செயலாகும். ஏனெனில், மனம் வெளியே செல்லாமல் இருந்தால்தான் நம்மால் "தாரணையைச்" சரியாக கடைப்பிடிக்க முடியும். தாரணை வெற்றி பெற வேண்டுமானால் மனதைக் கட்டுக்குள் வைப்பது அவசியமான ஒன்று.
 (It is an act of 'over-powering')

மூச்சுப் பயிற்சியில் இதற்கானத் தேவை எதுவும் இல்லை. காரணம் இந்தப் பயிற்சி மனதின் உதவியின்றி நடப்பது.
(It is an act of 'overcoming')




தாரணையில் நாம் மனதில் ஒருமுக கவனத்தைக் கொண்டுவந்து, அதை தியானம் செய்வதற்காகப் பக்குவப் படுத்துகிறோம். ஏனெனில், தாரணையில் ஈடுபடும்போது மனதை தியான நிலைக்குப் பக்குவப் படுத்த வேண்டுமென்ற ஒரு நோக்கம் இருந்தது. 

ஆனால், நாம் செய்யும் மூச்சுப் பயிற்சியில் அந்த விதமான நோக்கம் எதுவும் கிடையாது. இருப்பினும், பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றால், மனம் அதற்கான பக்குவத்தை அடைந்து விடுகிறது.




நாம் செய்து வந்த மூச்சுப் பயிற்சியினால் கிடைக்கும் இரண்டாவது மிகப்பெரிய நன்மை, நம்மால் எளிதாக தியான நிலையை அடைந்து விட முடியும் என்பதுதான்.

தியானம் செய்வது எப்படி என்று பலரும் பல விதமாகச் சொல்லித் தருகிறார்கள். முறைகள் வேறுபட்டாலும், அவை அனைத்தும் இறுதியில் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன. 

அந்த இலக்கு — 
"அஹங்காரத்தின் அழிவு."





சிவலிங்க தியானம் மற்றும் தியான அனுபவம்


சிவலிங்க தியானம் .....
விசாரத்திலிருந்து அனுபவம் வரை



               முன்னுரை


அன்பு நண்பர்களுக்கு,
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், எந்த யோக மரபின் அதிகாரப்பூர்வ விளக்கங்களாகவோ, சாஸ்திரங்களுக்கு மாற்றாகவோ எழுதப்பட்டவை அல்ல.

இவை அனைத்தும், வேதாந்தத்தின் ஒளியில் சிந்திக்க முயன்ற ஒரு சாதகரின் அகத்தாய்வு, விசாரம், ஊகம் மற்றும் தியான அனுபவங்களின் பதிவுகள் மட்டுமே.

இந்தப் பயணத்தின் தொடக்கம் "சிவலிங்கம்" பற்றிய ஒரு சிறிய கேள்விதான். அந்தக் கேள்வி, ஆக்ஞா சக்கரம், பிராணன், மனம், தியானம் ஆகியவற்றைப் பற்றிய பல புதிய கேள்விகளை எழுப்பியது.

அவற்றிற்கான விடைகளை பிறரிடம் தேடுவதற்குப் பதிலாக, எனக்குள்ளேயே விசாரிக்க முயன்றேன்.

அந்த விசாரத்தின் முதல் கட்டமே "சிவலிங்க தியானம்".

அதன் தொடர்ச்சியாக, நான் மேற்கொண்ட தியானப் பயிற்சியில் ஏற்பட்ட அனுபவங்களும், அதனால் எழுந்த புதிய புரிதல்களும் "தியானம்" என்ற இரண்டாம் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இந்த நூலில் சில கருத்துக்கள் உங்களுடைய புரிதலோடு ஒத்துப்போகலாம்; சில கருத்துக்கள் ஒத்துப்போகாமல் இருக்கலாம். அது இயல்பானதே.

எனவே, இதில் கூறப்பட்டவற்றை இறுதி உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் சொந்த விசாரத்திற்கும், தியானப் பயிற்சிக்கும் இவை ஒரு சிறிய தூண்டுகோலாக இருந்தால், அதுவே இந்த நூலின் நோக்கம் நிறைவேறியதாக நான் கருதுவேன்.

இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நான் அன்புடன் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று.
என் கருத்துக்களை நம்பாதீர்கள்; விசாரியுங்கள்.

என் அனுபவங்களைப் பின்பற்றாதீர்கள்; நீங்களே அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

*****      *****      *****      *****      *****

1. சிவலிங்க தியானம்  


முதலில் இந்தக் கட்டுரையை எழுத ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், "சிவலிங்கம்" பற்றி கொச்சையாகவும், அருவருப்பாகவும் ஊடகங்களில் பகிர்வுகளைப் பார்க்கும்போது, நமது அனுபவத்தை சொல்வதில் தவறில்லை என நினைத்துக்கொண்டேன். 


ஒரு சில சிவன் கோயில்களைத் தவிர்த்து மற்றெல்லாக் கோயில்களிலும் "சிவலிங்கத்தை" கர்ப்பக்கிருகத்தில் வைத்து வணங்குகிறார்கள். 

பல வெளிநாடுகளிலும் கூட, "சிவலிங்கம்" இருப்பதை ஊடகங்கள் வாயிலாகப் பார்த்திருக்கிறோம்.

பிற தெய்வங்களுக்கான கோயில்களில், சம்பந்தப்பட்ட கடவுளின் சிலையை வைத்து வணங்குகிறார்கள். 

ஆனால், சிவன் கோயிலில் மட்டும் "சிவலிங்கத்தை" வைத்து வணங்குவதை பார்க்கும்போது, வியப்பாக இருக்கும்.

"சிவலிங்கம்" உருவானது எப்படி என்ற கதைகளைப் படித்தாலும், அவற்றை மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனாலும் "சிவலிங்கம்" நமக்கு எதையோ உணர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட குறியீடு என்ற உணர்வு மட்டும் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது.

அது என்னவாக இருக்கும்?





இயல்பாகவே ஆரவாரம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால், எனக்கு 'பிரத்தியாஹாரம்' எளிதில் கைகூடியது.

அதனைத் தொடர்ந்து 'தாரணையும்' எளிதாகவே இருந்தது.

ஆனால், 'தியானப் பயிற்சியில்' மனதால் முழுமையாக இயங்க முடியவில்லை.

காரணம் மனதில் சந்தேகம் எழுந்தால், அதற்கு விடை கிடைக்காவிட்டால் எனது செயல் நின்றுவிடுகிறது. வெறும் நம்பிக்கையை வைத்து எந்த காரியத்திலும் என்னால் பங்கு கொள்ள முடிவதில்லை.




தியானப்பயிற்சியை மேற்கொள்ள முயன்றபோதும், அதே பிரச்சினைதான். மனதில் சில சந்தேகங்கள் வந்துவிட்டன.

அவை..

1. 'தியானம்' என்பது அஷ்டாங்க யோகத்தில் வருகிறது. தியானம் செய்யும்போது, 'ஆக்ஞா' சக்கரத்தில் கவனம் வைக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கும், தியானத்திற்கும் என்ன சம்பந்தம்?

2. 'ஆக்ஞா' சக்கரம் எங்கு இருக்கிறது என்றால், பலவிதமான பதில்கள் வருகின்றன. எதை சரியென்று எடுத்துக் கொள்வது?

3. ஏழு சக்கரங்களில், முதல் ஆறு சக்கரங்களும் முதுகுத் தண்டில் உள்ளன என்றால், 'ஆக்ஞா' சக்கரம் மட்டும் புருவ மத்தியில் உள்ளது என்று ஏன் சொல்லவேண்டும்?

விடை கிடைக்காதபோது, அமைதியில் ஆழ்ந்துவிடுவது எனது பழக்கம். ஒரு சில நாட்கள் கழித்து ஏதோவொரு வழியில் விடை கிடைக்கும்.

இதற்கும் ஒரு விடை கிடைத்தது. அந்த விடை 'உள்ளிருந்து' வந்தது. அப்படி ஒரு விடையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அந்த விடை ..
"சிவத்தை எடு; அவத்தை விடு"





எனக்குள் தோன்றிய விடை, நான் எதிர்பார்க்காத ஒன்று. ஆனாலும், அது ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது.

எனது தேடுதலை சிவலிங்கத்திலிருந்து ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன்.

சிவலிங்கம் என்றவுடன் "சிவனது" நினைவு வருவது இயல்பு. இது ஒன்றுடன் ஒன்று என ஒரு சங்கிலியாகத் தொடர்ந்தது. 



அந்த சங்கிலியின் கண்ணிகள் ..

1. சிவலிங்கம்

2. தியானம் ("சிவன்" எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால்) அவரே ஒரு "தியான மூர்த்தி" தானே!

3. 'ஆக்ஞா' சக்கரம் (தியானத்தில் 'ஆக்ஞா'வில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்)

4. ஏழு சக்கரங்கள் ('ஆக்ஞா'வும் ஒரு சக்கரம்)

5. இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை நாடிகள்

6. முதுகெலும்பு

7. முதுகெலும்பை ஒட்டி உள்ள சுரப்பிகள்

8. பஞ்ச பூதங்கள்

மேலை சொன்ன அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளது.

எனது தேடல் எப்படி பயணித்தது என்று சொல்கிறேன்.




எனக்கிருந்த இரண்டு முக்கிய சந்தேகங்கள் ..

1. தியானத்திற்கும், 'ஆக்ஞா' சக்கரத்திற்கும் என்ன சம்பந்தம்?

2. 'ஆக்ஞா' சக்கரம் எங்கு இருக்கிறது?

சிவலிங்கம் பற்றியும், ஆக்ஞா சக்கரம் பற்றியும் பல விதமான விளக்கங்கள் உள்ளன. இவற்றில் எதை ஏற்றுக்கொள்வது என்று புரியவில்லை.

அத்துடன் 'சிவலிங்கம்' எதையோ சுட்டிக் காட்டுவதாகவும் ஒரு உணர்வு.

எனவே நாமே தேடுவோம் என முடிவுசெய்து விட்டேன்.

எனது புரிந்து கொள்ளும் திறமைக்கு ஏற்ப, எனது கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினேன்.




மனிதனின் தண்டு வடத்தில் சுழுமுனை நாடி உள்ளது. இதில்தான் குண்டலினி சக்தியை மேலெழும்பச் செய்யும் ஆறு சக்கரங்கள் உள்ளன. 
இந்த ஆறு சக்கரங்களும் தண்டு வடத்தின் கீழேயிருந்து மேல்நோக்கி செல்கின்றன. அவை சூட்சும வடிவில் உள்ளவை. நமது கண்களுக்கு புலப்படுவதில்லை.

அவைகளின் பெயர்கள் ..
1. மூலாதாரம்
2. சுவாதிட்டானம்
3. மணிபூரகம்
4. அநாகதம்
5. விசுத்தி
6. ஆக்ஞா

இவை தவிர உச்சந்தலையில் ஒரு சக்கரம் உண்டு. அந்த ஏழாவது சக்கரத்தின் பெயர் 'சகசிரதளம்'.




'சிவலிங்கம்', அஷ்டாங்க யோகம், ஏழு சக்கரங்கள் மற்றும் குண்டலினி
சக்தி .. இவற்றைப் பற்றி ஞானியர், சான்றோர்கள், பண்டிதர்கள் இவர்களெல்லாம் எழுதியவற்றை தொகுக்க எண்ணினால், பல நூறு பக்கங்கள் தேவைப்படும். அந்த அளவுக்கு ஆழமாகவும், நுணுக்கமாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார்கள்.

இங்கு நான் எனது தேடலை, எனது அனுபவத்தை மட்டுமே பதிவு செய்கிறேன். இது சிறு குழந்தை மணல் வீடு கட்டுவதைப் போன்றது. 

எனவே இதனை மற்றவற்றோடு ஒப்பீடு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.





ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு சுரப்பியுடன் (gland) தொடர்புடையதாக உள்ளது. அத்துடன் முதல் ஐந்து சக்கரங்களும் பஞ்ச பூதங்களுடன் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) தொடர்பு உடையவை என்கிறார்கள். இதனை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

"மூலாதாரம்" 
இது ஏழு சக்கரங்களில் முதலாவதாக வருவது. இது பஞ்சபூத கூறுகளில் ஒன்றான 'நிலத்துடன்' சம்பந்தப் பட்டது என்கிறார்கள்.

மனித உடல் முழுவதும் பஞ்ச பூதங்களின் மூலக்கூறுகளால் ஆனது என்றாலும், மனிதனின் புதிய பிறவிக்கு காரணமாக இருப்பவை ஆணின் 'விந்துப்பை' மற்றும் பெண்ணின் 'கருப்பை'. எனவே இந்த இரண்டு சுரப்பிகளும் மூலாதார சக்கரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்கிறார்கள்.


"சுவாதிட்டானம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "நீருடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'சிறுநீரகங்கள்'.


"மணிபூரகம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "நெருப்புடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'கணையம்'.


"அனாகதம்"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "காற்றுடன்" சம்பந்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'தைமஸ்'.


"விசுத்தி"
இது பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான "ஆகாயத்துடன்" சம்பந்தப்பட்டது என்கிறார்கள். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பி 'தைராய்டு'.




விந்துப்பையை 'நிலத்தோடு' சம்பந்தப் படுத்தியதற்கு ஒரு காரணம் உண்டு. 
"... காயமே இது பொய்யடா - வெறும்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த மண்ணுபாண்டம் ஓடடா..." என ஒரு சித்தர் பாடியிருக்கிறார்.
அவர் உடம்பை மண்ணுக்கு சமம் என்கிறார்.

சிறுநீரகங்கள் 'நீரோடு' சம்பந்தப்பட்டது ஏன் என்பது புரிகிறது.

கணையம் 'நெருப்போடு' சம்பந்தப் பட்டது என்று சொல்வதற்கு
என்ன காரணம் இருக்க முடியும்? 

உடம்பு சூடாக இருக்கிறது என்றால், பொதுவாக வயிற்றில்தான் கை வைத்துப் பார்க்கிறோம். எனவே இதுவும் சரியாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.

தைமஸ் 'காற்றோடு' சம்பந்தப் பட்டது என்கிறார்கள். இதுவும் சரியாகவே தோன்றுகிறது.

ஆனால், விசுத்திக்கும் ஆகாயத்திற்கும் என்ன சம்பந்தம்?




"விசுத்தி" சக்கரம் பஞ்சபூத மூலக்கூறுகளில் ஒன்றான ஆகாயத்துடன் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். 

ஆகாயம் உடலின் எல்லா இடத்திலும் இருக்கும் என்றாலும், விசுத்தி சக்கரம் அமைந்துள்ள கழுத்தின் மேலே அமைந்துள்ள வெற்றிடத்தை (ஆகாயம்) நம்மால் உணர முடிகிறது.

அத்துடன் 'பருமை' முதல் 'நுண்மை' வரை என்று பார்த்தாலும், ஆகாயம் மற்ற பூதங்களைவிட நுண்மையானது என்பதால் (சொல்லப் போனால் நுண்மையானது என்று கூட வரையறுக்க முடியாது), சுழுமுனை நாடியின் மேல்பகுதியில் வருவதுதான் சரிதான் எனத் தோன்றியது.





மனிதனின் கீழ்த்தாடையிலிருந்து மேலே செல்லும் வெற்றிடம் மூளையின் கீழ் பகுதியில் முட்டி நாசித் துவாரத்தை நோக்கி சென்று விடுகிறது.

கீழ்த்தாடையிலிருந்து மூளையின் கீழ் பகுதிவரை இருக்கும் வெற்றிடத்தை வரைபடமாகப் பார்த்தால், அது பரிசோதனைக் கூடத்தில் இருக்கும் 'சோதனைக் குழாயை' கவிழ்த்து வைத்திருப்பது
போலத் தோன்றும்.

"சிவலிங்கத்தில்" நாம் காணும் "லிங்கமும்" அந்த வடிவில் தானே இருக்கிறது!?





ஒவ்வொரு வருடமும் 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் அமர்நாத் குகையின் உட்புறத்தில் சிவலிங்கத்தின் பனிக்கட்டிச் சிலை மே முதல் ஆகஸ்ட் வரையில் தானாக உருவாகின்றது. இது 'லிங்க' வடிவத்தில் அமைந்திருக்கும். 

அத்துடன் அந்த இடம் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடம் (51 சக்தி பீடங்களில் ஒன்று) என்றும் புராண வரலாறு ஒன்று சொல்கிறது.

அப்படியானால், குகையில் இறங்கும் பனி, தேவியின் தொண்டைப் பகுதியில் விழுந்து, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து குகையின் முகட்டில் முட்டி பனிக்கட்டி சிலையாக காட்சி அளிக்கிறதா?

இந்த உருவகப் படுத்தும் தன்மை, மனிதனின் தொண்டை பகுதிக்கு மேலே இருக்கும் வெற்றிடத்தை 'லிங்கமாக' கருத வேண்டும் என சுட்டிக் காட்டுகிறதா?




லிங்கம் என்பதற்கு எல்லா பொருட்களும் அதில் ஒன்று படும்; பின் அங்கிருந்து உருவாகி தனித்தனியாய் வெளிப்படும் (merge and emerge) என்று அர்த்தம் சொல்கிறார்கள். 

 இதே பண்பு ஆகாயத்திற்கும் (வெளி) உண்டு. மற்ற நான்கு பூதங்களும் இதில் ஒடுங்கி மறைவதும் உண்டு; புதிதாகத் தோன்றுவதும் உண்டு.





"ஆக்ஞா" சக்கரம்

இது மனதோடு சம்பந்தப்பட்டது என்று சொல்கிறார்கள். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பியின் பெயர் 'கபசுரப்பி' (பிட்யூட்டரி சுரப்பி).

(சக்கரங்கள் என்று சொன்னாலும், அவை அனைத்தும் சூட்சுமமானவை; புலன்களால் காண முடியாதவை)




சுழுமுனை நாடியில் உள்ள முதல் ஐந்து சக்கரங்களும் சுழுமுனையில் இருப்பதாக சொன்னவர்கள், இந்த சக்கரம் மட்டும் 'புருவ மத்தியில்' உள்ளது என்று ஏன் சொல்கிறார்கள்?

தொண்டைப் பகுதியில் இருந்து மேல்நோக்கி செல்லும் வெற்றிடம் மூளையின் கீழ் பக்கத்தில் முட்டி நாசி இருக்கும் பக்கமாகத் திரும்புகிறது என பார்த்தோம்.

எனவே மூளையின் கீழ் பகுதியில் வெற்றிடம் முட்டும் இடத்தில் 'ஆக்ஞா' சக்கரம் இருப்பதாக சொன்னால் அது தவறா?

சொல்லப்போனால், இந்த இடமும், புருவ மத்தியும் ஒரே படுக்கைக்கோட்டில் தான் வருகின்றன.





ஒரு சித்தர்
"உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே” எனப் பாடுகிறார்.

உச்சியில் இருக்கும் சக்கரத்தின் பெயர் "சகசிரதளம்". ஆனால் அதற்கும் சுழுமுனை நாடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தவிர, சித்தர் "உச்சிக்கு கீழடியோ" மற்றும் "அண்ணாவுக்கு மேலே வைத்த" என்றதனால், அவர் குறிப்பிடுவது "ஆக்ஞா" சக்கரம் இருக்கும் பகுதி என்று கருதுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.





"ஆக்ஞா" சக்கரத்திற்கும், "பிட்யூட்டரி" சுரப்பிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

ஆக்ஞா சக்கரத்திற்கு மற்ற சக்கரங்களை ஆளுமை செய்யும் பண்பு உண்டு. அதனால்தான் அதன் பெயர் "ஆக்ஞா" என்று உள்ளது. (தமிழில் ஆணை என்கிறார்கள்)

பிட்யூட்டரி சுரப்பிக்கும் மற்ற சுரப்பிகளை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு. அதனால்தான் அதனை தலைமை சுரப்பி (master gland) என்றும் சொல்கிறார்கள்.




மூளைக்கு கீழே "ஆக்ஞா" சக்கரம் இருக்கும் இடத்தில்
தியானத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதனால்தான், புருவ மத்தியில் கவனம் செலுத்து என்று சொன்னார்களா?




சிவலிங்கத்தின் வடிவ அமைப்பில், 
தரைப் பகுதியை ஒட்டி ஒரு பரந்த வட்ட வடிவமான பாகம்; அதன்மீது மேலே உள்ள சிறிய வட்ட வடிவத்தை இணைக்கும் ஒரு தூண் போன்ற பகுதி; மேலே உள்ள சிறிய வட்டப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள லிங்கம்.

சிவலிங்கத்தை பார்க்கும்போது எனக்கு அது சுட்சும வடிவில் உள்ள "ஆக்ஞா" சக்கரம் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது.




"சிவலிங்கத்தின் கீழே உள்ள பரந்த வட்ட வடிவம், அதன்மீது உள்ள தூண், மேலே உள்ள சிறிய வட்டம், அதன் மீது இருக்கும் லிங்கம்" முதலியவை முறையே "மனித உடலின் தோள்பட்டை, கழுத்து, கீழ்த்தாடை, அங்கிருந்து மேலே மூளையின் அடிப்பாகத்தை நோக்கி செல்லும் வெற்றிடம்" ஆகியவற்றை குறிப்பிடுவது போன்ற உணர்வு.

தண்டுவடம் மூளையை சந்திக்கும் இடத்தில்தான் பிட்யூட்டரி சுரப்பியுடன் சம்பந்தப்பட்ட "ஆக்ஞா" சக்கரம் இருக்கக்கூடும் என்றும், "சிவலிங்கத்தின்" அமைப்பு, அதை சுட்டிக்காட்டுவது போல் உள்ளது எனவும் எனக்குத் தோன்றியது.

இந்தக் கருத்து உங்களுக்கும் சரியெனத் தோன்றினால், அந்த இடத்தில் கவனத்தை வைத்து தியானம் செய்யலாம்.



தியானத்தில் அமரும் பொழுது, உங்கள் தோள்பட்டை, கழுத்து, தொண்டைப் பகுதி, அதிலிருந்து மேலே செல்லும் வெற்றிடம் என ஒவ்வொரு இடத்திலும் கவனம் செலுத்தி தண்டுவடம் மூளையை சந்திக்கும் இடத்தை தியானப் பொருளாக மாற்றுங்கள்.

தொண்டைக்குழியிலிருந்து மனம் வெற்றிடத்தை தொடர்ந்து செல்லும்போது, மூளையின் அடிப்பகுதியை சந்தித்ததும் மனம் தானாகவே நின்றுவிடும். ஏனெனில், சுழுமுனை நாடி மூளையை சந்திக்கும் இடத்தை அதனால் உணர முடியும்.




பலரும் பலவித முறைகளில் தியானம் செய்வதுண்டு. ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இங்கு குறிப்பிட்டுள்ள முறையில் தியானம் செய்தால், அதற்கு என்ன பெயர் வைக்கலாம்?

"சிவலிங்க தியானம்" என்று சொல்லலாமா?



          இடைமுன்னுரை

சிவலிங்க தியானம் தொடரில், சிவலிங்கத்தை ஒரு தியானக் குறியீடாக எனக்குப் புரிந்த விதத்தைப் பகிர்ந்திருந்தேன்.
அந்த விசாரம் அங்கேயே முடிவடையவில்லை.

தியானத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்தபோது, மனம், பிராணன், மூச்சு, ஆக்ஞா சக்கரம், ஒருமுகக் கவனம், அமைதி ஆகியவற்றைப் பற்றிப் பல புதிய கேள்விகள் எழுந்தன.

அவற்றிற்கான விடைகளைத் தேடும் முயற்சியே இந்த இரண்டாம் பகுதி.
எனவே, "தியானம்" என்ற இந்தப் பகுதியை, முதல் பகுதியின் தொடர்ச்சியாகவே வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கும் நான் பகிர்ந்திருப்பது சாஸ்திரத்தின் இறுதி முடிவுகள் அல்ல.

ஒரு சாதகரின் விசாரமும், பயிற்சியும், அனுபவமும் மட்டுமே.

*****      *****      *****      *****      *****   


2.  தியானம்  


"சிவலிங்கம்" என்பது பிட்யூட்டரி சுரப்பி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டும் ஒரு குறியீடு மட்டுமே எனத் தோன்றியது.

ஐந்து சக்கரங்களும் தண்டு வடத்தை ஒட்டி இருக்கும் போது, ஆறாவது சக்கரம் மட்டும் நெற்றியின் வெளிப்புறம் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது.

தவிர, விசுத்தி சக்கரம் ஆகாயம் சம்பந்தப்பட்டது என்பதால், உடல் முழுவதும் ஆகாயம் (வெற்றிடம்) பரவி உள்ளது என்றாலும் அதை உணர்ந்து அறியக்கூடிய இடம் தொண்டையின் அடிப்பகுதியில் இருந்து 'உள்நாக்கின்' பின்புறமாக மேலே சென்று மூளையின் அடிப்பாகத்தைத் தொட்டு, பின் நாசிக் துவாரத்தை நோக்கி நகர்ந்து செல்லும் பகுதி மட்டும்தான் என்பதும் புரிந்தது. 

மூளையின் அடிப்பாகத்தை இந்த வெற்றிடம் தொடும் இடத்தில்தான் 'பிட்யூட்டரி' சுரப்பி உள்ளது. எனவே இங்குதானே சூட்சுமவடிவிலான "ஆக்ஞா" சக்கரமும் இருக்க வேண்டும் என்றும் தோன்றியது.

எனது எண்ணத்திற்கு வலு சேர்ப்பது போல் சித்தர்களின் பாடல்களும் இருப்பதை அறிந்தேன்.

".. அண்ணாக்கி னுள்ளே அகண்ட வெளிகாட்டி.."
.. திருமந்திரம் (599)

"உச்சிக்குக் கீழது உண்ணாக்கு மேலது"  
.. திருமந்திரம் (1780)

"உச்சிக்குப் கீழடியோ.." என அழுகுணிச் சித்தர் பாடுகிறார்.



நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றிற்குத் தொடர்புடைய சக்கரங்கள் இருக்குமிடத்தை எளிதாக ஊகிக்க முடியும். ஆனால், "ஆக்ஞா" சக்கரம் என்று வரும்பொழுது அது இருக்கும் இடத்திற்கு நமது மனதைக் கொண்டு செல்வது கொஞ்சம் சிரமமான காரியம்தான். இங்குதான் "சிவலிங்கம்" என்னும் குறியீடு நமக்கு உதவியாக உள்ளது.




இப்பொழுது, சிவலிங்கத்தின் அடித்தட்டோடு உங்களின் தோள்பட்டையைப் பொருத்திக் கொள்ளுங்கள்.

அப்படியானால், அடித்தட்டின் மேலே உள்ள தண்டு என்பது உங்களது கழுத்து; தண்டின் மேலே உள்ள சிறிய தட்டைப் போன்றது உங்கள் தாடைப் பகுதி; லிங்கம் என்பது தொண்டையின் அடிப்பகுதியில் இருந்து உள் நாக்கின் பின்புறம் வழியாக மேலே சென்று மூளையின் அடிப்பாகத்தில் முட்டும் வெற்றிடம்தான். 

            

சிவலிங்கத்தை மனதில் எண்ணிக்கொண்டு, தோள்பட்டையில் ஆரம்பித்து, பின்பு கழுத்து, தாடை, தொண்டையின் பின்புறமுள்ள வெற்றிடம், அதன் உச்சி என ஒன்றன்பின் ஒன்றாக மனதைக் கொண்டுசென்று இறுதியாக பிட்யூட்டரி சுரப்பியின் அருகில் "ஆக்ஞா" சக்கரம் உள்ளதாக எண்ணி அதை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினேன்.



ஆரம்பத்தில் அது சரியாகவேப் பட்டது. ஆனால், ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 'வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய' கதையாக, தியானத்திலிருந்து விடுபட்டு மனம் ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டது.


எனது தியான முயற்சியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, மனதில் இரண்டு கேள்விகள் எழுந்தன. 
அவை - -
1. ஆக்ஞா சக்கரம் பிட்யூட்டரி சுரப்பி உள்ள இடத்தில்தான் உள்ளதா?

2. எனது தியானப் பயிற்சியில் ஏதேனும் தவறு உள்ளதா?


தியானப் பயிற்சியில் தான் ஏதோவொரு தவறு இருப்பதாக எண்ணினேன். ஏனெனில், பிட்யூட்டரி சுரப்பி உள்ள இடத்தில்தான் ஆக்ஞா சக்கரமும் இருக்கும் என்ற எனது எண்ணத்தில் எந்தவித மாற்றமுமில்லை.

அப்படியானால், தியானப் பயிற்சியில் என்ன தவறு நேர்ந்தது?
பழையபடி அகத்தாய்வில் இறங்கிவிட்டேன்.




இரண்டு வழிகளில் அகத்தாய்வு செய்ய முடியும். ஒன்று "தர்க்கம்"; மற்றொன்று "விசாரம்".

"தர்க்கம்" என்பது ஒருவர் மற்றவர்களுடன் விவாதம்          செய்து, அதன் பின்விளைவாக  அகத்தாய்வு செய்வது.

"விசாரம்" என்பது சுயமாக சிந்தித்து விடை காண்பதைக் குறிக்கும்.




மறைநூல்கள் சொல்லும் கருத்துக்குப் பலரும் பலவிதமான விளக்கங்கள் கொடுப்பதுண்டு. அவற்றில் எது சரியென முடிவு செய்வதில் குழப்பம் வரும் பொழுது, நமது நண்பர்கள், நமக்குத் தெரிந்த அறிஞர்கள் போன்றவர்களுடன் விவாதம் செய்து ஒரு முடிவுக்கு வருவோம். இந்த முறை "தர்க்கம்" என அழைக்கப்படும்.



"விசாரத்தில்" மற்றவர்களின் விளக்கங்களை விட்டுவிட்டு, நமக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடுகிறோம். நமது முயற்சியைப் பொறுத்து, நமக்குள்ளேயே விடையைக் காண முடியும்.

            

முதலில் கண்டபடி திரியும் மனதை ஓரிடத்தில் நிலைநிறுத்தப் பழக்க வேண்டும். அதை "தாரணை" என்கிறார்கள்.

எந்த ஒன்றில் மனதை நிலை நிறுத்தினோமோ, அந்த ஒன்றில் தொடர்ந்து மனதின் கவனத்தை செலுத்தினால் அதுதான் "தியானம்" எனப் பலரும் சொல்வதுண்டு‌. ஆனால், எந்த ஒன்றின் மீது கவனம் செலுத்தினாலும், மனம் தியான நிலையிலிருந்து நழுவி விடுவதைக் காண முடிகிறது.

அதனால்தான் எந்தப் பொருளையும் நினைக்காமல், தியானம் செய்கிறோம் என்ற உணர்வும் இல்லாமல் இருப்பதுவே உண்மையான தியானம் என்கிறார்கள்.

ஆனால், எதையும் நினைக்காமல் தியானம் செய்வது எப்படி என்பது ஒரு புதிராகத் தெரிந்தது.

           


எதையும் நினைக்காமல் தியானம் செய்வது எப்படி என்பது தெரிந்த பின்பும், மனம் நழுவி வெளியே சென்று விடுவதை நிறுத்த முடியவில்லை.

என்னதான் பிரச்சினை என அறிந்து கொள்வதற்காக, கற்றவற்றை அசைபோட ஆரம்பித்தேன். பரீட்சை எழுதப்போகும் மாணவன் தான் படித்த எல்லாப் பாடங்களையும் மீண்டும் திருப்பிப் பார்ப்பதுபோல், நானும் ஏற்கனவே கற்றவற்றை மீண்டும் அசைபோட்டேன். மனதில் நிறைய கேள்விகள் எழுந்தன.


அவை - -
1. மூச்சை உள்ளே இழுக்கும்போது 'ஆக்ஸிஜன்' உள்ளே வருகிறது. ஏன் அதனை பிராண வாயு என்று சொல்கிறோம்?

2. பிராண வாயு என்பதற்கும், பிராணன் என்ற சொல்லுக்கும் என்ன சம்பந்தம்?

3. பிராணன் என்றால் என்ன?

4. பிராணன் என்ற சொல்லுக்கும், பிராண சக்தி என்ற சொல்லுக்கும் இடையே என்ன வேறுபாடு?

5. காற்று, வாயு ‌‌.. இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?

6. நாம் விரும்பாவிட்டாலும் மனம் வெளியே சென்றுவிடுகிறதே! அது எதனால்?

   


மனிதன் "விசார" நிலையில் ஆழ்ந்து விட்டால், அவன் புறவுலக நாட்டத்திலிருந்து விடுபட்டு அகவுலகில் சிந்திக்கத் தொடங்கிவிட்டான் எனலாம். 

இருந்தாலும் எவ்வளவுதான் சிந்தித்தாலும் விடை ஏதும் கிடைக்காதபோது அமைதியாக, மௌனமாக இருந்துவிட வேண்டும். பொறுமையுடன் காத்திருந்தால், விடையை எப்படித் தேடுவது என்று என்றாவது ஒருநாள் தெரிந்து விடும். அதுதான் எனக்கும் நேர்ந்தது.




மனித உடலில் உள்ள ஜீவாத்மாவைப் பல பெயர்களில் குறிப்பிடுவதுண்டு. அதன் மீது ஒன்றன் மேல் ஒன்றாக 
ஐந்து உறைகள் உள்ளன என்றும் சொல்வார்கள். அவை - -
1. உணவு உறை
2. காற்று உறை
3. மன உறை
4. புத்தி உறை
5. ஆனந்தமய உறை

இவைகளில் காற்று உறை உடலுக்கும், மனதிற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது.

இந்தக் காற்றின் பெயரை "பிராணன்" என அழைக்கிறார்கள். இது உடலில் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என ஐந்து பிரிவுகளாகச் செயல்படுகிறது. 
(இதனைப் பத்து பிரிவுகளாகவும் சொல்வதுண்டு)


            

"பிராண" வாயு புறவுலகப் பொருட்களை மனதோடு இணைப்பதற்கு உதவுகிறது.
ஐம்புலன் கருவிகள் (ஐம்பொறிகள்) மூலமாக எது மனிதனை வந்தடைந்தாலும், அது மனதினை அடைவதற்குக் காரணமாக இருப்பது "பிராண" வாயுதான். (It is a faculty of perception)

அத்துடன் மனம் செயல்படுவதற்கும், "பிராண" வாயுவின் இயக்கம் தேவையாக உள்ளது.




பிராணாயாமப் பயிற்சியின் போது 'கும்பகம்' செய்தால், 'கும்பகம்' எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ அவ்வளவு நேரம் மனம் செயலற்று போய்விடும்.

அப்படியானால் மூச்சின் இயக்கம் நிற்கும்போது மட்டும்தான் பிராணனின் இயக்கம் நின்றுவிடுமா?

மூச்சின் இயக்கம் நடைபெறும் போதும், பிராணனின் இயக்கத்தை நிறுத்த முடியாதா?

தியானம் நன்கு நடைபெற, மனதில் எந்த அசைவும் இருக்கக் கூடாது என்கிறார்கள். மனதில் எந்த அசைவும் இருக்கக்கூடாது என்றால், பிராணனின் இயக்கம் நிற்க வேண்டும்.

மூச்சோடு இணைந்து இயங்கும் "பிராணனை" எப்படி தடுத்து நிறுத்துவது?

   



"பிராணன்" என்றால் என்ன, அதன் இயக்கம் எப்படி இருக்கும், மூச்சு வந்து போவதை பிராணவாயு என்று சொல்கிறார்களே; அப்படியானால் மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கும்போது பிராண சக்தியும், ஆக்ஸிஜனும் சேர்ந்தே வருகிறதா; அதேபோல் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது பிராண சக்தியும் கரியமிலவாயுவுடன் சேர்ந்தே வெளியேறுகிறதா எனப் பல சந்தேகங்கள் மனதில் எழுந்தன.




இது சம்பந்தமாக பலரும் பலவித விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் எதை சரியென்று ஏற்றுக் கொள்வது?

மேலும், 'கும்பகம்' செய்யும்போது பிராணன் அசைவற்று நின்றுவிடும் என்கிறார்கள். பிராணன் அசைவின்றி இருந்தால் மனமும் செயலற்று விடும். அது தியானம் செய்வதற்கு ஏற்ற ஒன்றுதான். ஆனால், 'பிராணாயாமம்' செய்யும்போது 'கும்பகம்' ஒரு சில விநாடிகளே நீடிக்கும். பின், அது எப்படி தியானத்திற்குப் பயன்படும்?





ஒரு வழியாக, 'பிராணனைப்' பற்றி திருமூலர் சொல்வதை அறிந்தபின், எனக்கான விடையும் கிடைத்தது.    

"ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.."
(பிராணனை இழுத்துப் பூரித்து உள்ளே கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் இல்லை)
.. திருமந்திரம் 571

"திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகிலர் ஆரும்"
(பிராண வாயு ஒடுங்கும் நிலையை எவரும் அறியவில்லை)
.. திருமந்திரம் 720

பிராணனைப் பிடித்து ஒடுக்கும் வழியை எவரும் அறியவில்லை என்கிறார் திருமூலர். கூடவே, பிரணானைப் பிடித்து மனதோடு ஒடுங்கச் செய்ய முடியும் என்றும் சொல்கிறார்.

 "பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் பிராணன் இருக்கின்.‌"
(பிராணன் வெளியில் செல்லாது மனதோடு அடங்கி இருக்கின்).. திருமந்திரம் 567

"வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்.."
(பிராணனை இழுத்துத் தன்வசப் படுத்தி அடக்கியிருந்தால்..)
.. திருமந்திரம் 569

"ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப் பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லீரேல்.." 
(புரவியை அதாவது பிராணனை வெளியே விடாமல் கட்டிவைத்தால்..)
.. திருமந்திரம் 722

பிராணனைப் பிடித்து உள்ளே மனதோடு கட்டிப்போடுவது எப்படி என்று எவரும் அறியவில்லை; பிராணனை மனதோடு கட்டிப்போடும் முறையை அறிந்து கொண்டால், உள்ளிருக்கும் பேரொளியைக் காணலாம் எனக் கூறுகிறார் திருமூலர்.

    




திருமந்திரம் 571-ல் "..காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.." என்று சொன்ன திருமூலர் தொடர்ந்து சொல்கிறார்..
"..காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே".
(‌.. அங்ஙனம் காற்றைக் கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் இயமனைக் கடக்கும் குறிக்கோள் பெற்றவர் ஆவார்)

காற்றைப் பிடிக்குங் கணக்கறிவார் இல்லை என்று சொன்ன திருமூலர் கூடவே காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்தவர் இயமனை உதைக்கும் வலிமையைப் பெறுவர் என்கிறார்.




இங்கு காற்று என்பது 'பிராணனைக்' குறிக்கிறது. இதனைக் கொஞ்சம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.

'பிராணன்' என்பது ஒரு வாயு. இது மனித உடலில் பத்து பிரிவாகப் பிரிந்து வேலை செய்கிறது .. ஒரு அரசாங்கத்தில் பல துறைகளுக்கான அமைச்சர்கள் இருப்பதைப்போல. 




பிராணன் பத்து விதமான பெயர்களுடன் இயங்கினாலும், பிராணன் மட்டுமே மனிதனுக்கு வெளியே உள்ள பிரபஞ்ச சக்தியோடு இணைந்து செயல் படும் தன்மை உடையதாக இருக்கிறது. அது மனதிற்கும் புறவுலகப் பொருட்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது.





அதாவது வீட்டில் உள்ள மின் இணைப்பு, வீட்டிலுள்ள மின் சாதனங்களுக்கும் வெளியிலிருந்து வரும் மின்சாரத்திற்கும் இடையே ஒரு இணைப்புக் கருவியாகச் செயல்படுவதைப் போல, பிராணன் பிரபஞ்ச சக்திக்கும் மனிதனின் மனதிற்கும் இடையே ஒரு இணைப்புக் கருவியாகச் செயல்படுகிறது.

அந்தக் கருவியைத்தான் அதாவது பிராணனைத்தான் பிரபஞ்ச சக்தியோடு இணைக்க விடாமல் பிடித்து வைத்தால் கூற்றுவனையும் உதைக்கலாம் என்கிறார் திருமூலர்.

     





"காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்" என்று சொன்ன திருமூலர், காற்றை வயப்படுத்தி 'கும்பகம்' செய்வது எப்படி என்பதற்கும் குறிப்புகள் தருகிறார்.

"மன்மனம் எங்குஉண்டு வாயுவும் அங்குஉண்டு; மன்மனம் எங்குஇல்லை வாயுவும் அங்குஇல்லை.."
(மனம் எங்கு உள்ளதோ, வாயுவும் அதாவது பிராணனும் அங்கு இருக்கும்; மனம் எங்கு இல்லையோ, வாயுவும் அங்கு இருக்காது) 
.. திருமந்திரம் 620


"ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்குஇருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு.."
(உள்ளம் ஒடுங்கி ஒருமைநிலை அடைந்து நின்றால், பிராணனும் அங்குக் கட்டுப்பட்டு நின்று விடும்) 
... திருமந்திரம் 666



'ஒடுங்கி' என்றால் மனம் அகவுலகில் பிரவேசித்து விட்டது என அர்த்தம். இதைத்தான் 'பிரத்யாஹாரம்' என ரிஷி பதஞ்சலி குறிப்பிடுகிறார்.

ஒடுங்கிய மனம் அங்கேயே இருக்க வேண்டும் என்கிறார் திருமூலர். அப்படி இருந்தால், 'பிராணனும்' உள்ளுக்குள் ஒடுங்கி அடங்கிவிடும் என்கிறார். 

அந்த நிலையில், பிராணன் வெளியுலகில் உள்ள பிரபஞ்ச சக்தியுடன் இணைப்பில் இருக்காது; அதன் காரணமாக மனமும் வெளியில் சென்று சஞ்சரிக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிடும்.





தியானம் செய்ய வேண்டுமானால் மூன்று நிபந்தனைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது:-
1. 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்குமிடத்தில் 'ஆக்ஞா' சக்கரம் இருப்பதாக எண்ணி, அந்த இடத்தில் நமது மனதை நிலைநிறுத்தி தியானிக்க வேண்டும்.
2. தியானம் செய்யும்போது எந்தப் பொருளையும் நினைக்கக்கூடாது.
3. தியானம் செய்யும் நேரங்களில் நமது 'பிராணன்' மனதோடு சேர்ந்து 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தில் ஒடுங்கி இருக்க வேண்டும்.




மூன்று நிபந்தனைகளையும் படித்தவுடன் நமது மனதில் பல கேள்விகள் வந்துவிடும்‌.
அவற்றிற்கான விளக்கங்களைக் கொடுத்துவிட்டு, பின் 'தியானப் பயிற்சி' பற்றி பார்ப்போம்.

ஏனெனில், குழப்பம் நிறைந்த மனதுடன் தியானம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் நம்மால் எந்தவித வெற்றியையும் காண முடியாது.




மனதில் எழும் முக்கியமான கேள்விகள்- -
1. வால்மீகி, துருவன் போன்றோர் பறவுலகில் இருந்துகொண்டு ஏதோவொன்றை மனதில் நினைத்துத்தானே தவம் செய்தார்கள்; அதன்மூலம் அவர்கள் விரும்பியதை அடைந்தார்களே! அது எப்படி?

2. அதேநேரம் பெரும்பாலான
பயிற்சி நிலையங்களில், ஒரு பொருளில் தொடர்ந்து கவனத்தைச் செலுத்துங்கள்; அதுதான் தியானம் என்கிறார்களே!

3. தியானம், தவம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?





நாம் இல்லற தர்மத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் பெரும்பாலும் 'மன அமைதி' வேண்டியே தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானத்தில் ஈடுபட்டாலும், மனம் பலவித ஆசைகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. எனவே நம்மால் ஒருமுகக் கவனத்துடன் (ஏகாக்கிரக சிந்தனை) தியானம் செய்ய முடிவதில்லை. 

அத்துடன் 'பிராணனும்' மனதுடன் ஒடுங்காமல் இருப்பதால், மனம் மிகவும் எளிதாக தியானத்திலிருந்து நழுவி விடுகிறது.




வால்மீகியும், துருவனும் புறவுலக தியானத்தில்தான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் இருந்தது 'ஒருமுக கவனம்'. அத்துடன் அவர்கள் தியானம் செய்யும் பொழுது இல்லறத்தைப் பற்றி (குடும்பத்தைப் பற்றி) முழுவதுமாக அக்கறையின்றி இருந்து விடுகிறார்கள்.



வால்மீகி 'மரா' என்ற மரத்தின் பெயரை உச்சரித்து தியானம் செய்தார்; துருவன்
மகா விஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். இருவரது மனமும் புறவுலகில் இருந்தாலும், அவர்களது கவனம் ஒரே பொருளின் மீது ஒடுங்கி, ஒருங்கி இருந்ததால் அவர்களது 'பிராணனும்' மனதுடன் ஒடுங்கி விடுகிறது. எனவே, அவர்களின் தியானத்திற்கு எந்தவொரு இடையூறும் வருவதில்லை.

தொடர்ந்து தொய்வின்றிச் செய்யப்படுவதால், தியானம் "தவம்" என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.

     



"Meditation is not so simple as some Eastern teachers appear to indicate; nor is it as difficult as Westerners sometimes suppose". .. Excerpt from the book "Meditation" published by Sri Ramakrishna Math.
('தியானம்' என்பது கீழை நாட்டில் உள்ள சில ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வளவு எளிமையானது அல்ல; அதேநேரம் மேலை நாடுகளில் உள்ளவர்கள் நினைப்பது போல் அவ்வளவு கடினமானதும் அல்ல)

தியானம் என்றால் என்ன; அதை எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டால், பலவிதமான விளக்கங்கள் வரும். தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்று கேட்டாலும், பலவிதமான பதில்கள் கிடைக்கும்.




என்னைப் பொறுத்தவரை தியானத்தை முறையாகச் செய்தால், ஆரம்பத்தில் 'அமைதியான மனம்' என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; முடிவில் 'உள்ளிருந்து பெருகும் ஆனந்தம்' என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

இடையில் என்ன நடக்கும் -- அதை நீங்கள் அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள்.


     


(நான் செய்யும் தியானமுறை பற்றி குறிப்பிடுகிறேன்.

ஏற்கனவே பல முறைகளைக் கடைப்பிடித்துப் பார்த்தேன் ; பலன் ஏதும் இல்லை. தற்பொழுது கடைப்பிடிக்கும் முறை பயனுள்ளதாக உள்ளது. யாருக்கேனும் பயன் படலாம் என எண்ணி இதைப் பொதுவெளியில் பதிவு செய்கிறேன்.

இதுபோல்தான் வேறு இடங்களில் கற்றுக் கொடுக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

முன்னால் சொன்னவற்றில் நிறைய ஊகங்கள் இருந்தன; ஆனால், எனது தியான முறை உண்மையானது.

நான் தியானம் எப்படி செய்கிறேன்; அப்பொழுது என்னில் என்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறேன். எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறவர்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள்.

ஆனால், ஓர் எச்சரிக்கை - -
இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக இதனைச் செய்யக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)

    

மனதை 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தில் நிலை நிறுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. ஆனால், மனதில் எதையும் நினைக்காமல் இருப்பது 
எப்படி என்பதுதான் தெரியவில்லை.

'நமசிவாய' மந்திரத்தை மௌனமாக சொன்னாலும், உடனே 'சிவலிங்கம்' நினைவிற்கு வந்துவிடுகிறது. கூடவே 'நடராஜர்' சிலை, 'சிதம்பரம்' கோயில், கைலாயம் என ஒவ்வொன்றாக மனதில் தோன்ற, மனம் நழுவி வெளியே ஓடி விடுகிறது.

மனதின் இயல்பே எதையாவது ஒன்றை நினைப்பதுதான். ஆனால், நினைக்கும் ஒன்றுக்கு உருவம் இருக்கக்கூடாது என்றால், அது எப்படி முடியும் என எண்ணினேன்.




உருவமற்ற ஒன்றை எப்படி நினைக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்தேன்‌.

குழம்பிய நிலையில் இருந்தபோது உபநிடதத்தில் உள்ள மஹாவாக்கியம் என் நினைவிற்கு வந்தது .. "Ayam Atma Brahma" (அயம் ஆத்மா பிரம்மா). "அத்வைதத்தில்" இந்த ஆத்மாவும் பிரம்மமே என பொருள் கூறுவார்கள்.

சிந்திக்க ஆரம்பித்தேன். இந்த இடத்தில் 'பிரம்மா' என்பது 'பரம்பொருளை' குறிக்கிறது.

பரம்பொருளுக்கு உருவம் கிடையாது. ஆனால், 'பிரம்மா' என்ற சொல்லிற்கு 'எப்பொழுதும் விரிவடைந்து கொண்டிருப்பது' (ever expanding) என்ற விளக்கமும் உண்டு.

எனவே 'பிரம்மா' என்று சொன்னவுடன் Milky Way என்னும் galaxy (பால்வெளி) நினைவிற்கு வந்துவிடுகிறது.

பிரம்மாவிற்குப் பதிலாக "ஆத்மாவை" நினைத்தால் என்ன என்று தோன்றியது.

    



"ஆத்மா" என்று சொல்லும்போது எந்தவொரு பொருளும் மனதில் தோன்றவில்லை. எனவே "ஆத்மாவை" நினைத்து தியானம் செய்யலாம் என நினைத்தேன்.

 


"ஆத்மா" என்ற வார்த்தையை எப்படி உபயோகிக்கலாம் என சிந்தித்தேன். "அயம் ஆத்மா" என்பதை சிறிது மாற்றி "அயம் ஆத்மனே" என்று சொல்லிப் பார்த்தேன்.  ஏனெனில் அது மூச்சின் ஓட்டத்திற்கு இசைவாக இருந்தது.

மூச்சின் ஓட்டம் 1:2 என்ற விகிதத்தில் இருக்கும்; "அயம் ஆத்மனே" 3:6 என்ற விகிதத்தில் உள்ளது .. அதாவது 1:2.

எனவே, மூச்சை உள்ளே இழுக்கும்போது 'அயம்' என்றும், மூச்சை வெளிவிடும்போது 'ஆத்மனே' என்றும் .. மௌனமாக உச்சரிப்பேன்.






புதிய முறையில் தியானப் பயிற்சியை ஆரம்பித்தேன்.

வழக்கம்போல 'அர்த்த பத்மாசனத்தில்' அமர்ந்து கொண்டு, தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் மூச்சை உள்ளே இழுத்து பின் வெளியே விடுவதில் கவனம் செலுத்தினேன். கூடவே 'அயம் ஆத்மனே' என்றும் மௌனமாக உச்சரித்துக் கொண்டேன்.

இரண்டொரு தடவை உச்சரித்த பின்பு, மூச்சோடு கூட தொண்டையின் உட்புறமும் கவனத்தை செலுத்தினேன்.

அடுத்து மூச்சோடு பயணம் செய்யும் மனதை, அதிலிருந்து விலக்கி
கவனத்தை உள்நாக்கின் பின்புறமும், கடைசியாக 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்திலும்
செலுத்தி, மனதை அந்த இடத்தில் நிலைபெறச் செய்தேன்.

இப்பொழுது மனதில் எந்தவொரு உருவமும் தென்படவில்லை.

பதிலாக "மன்மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு" என்று சொன்ன திருமூலரின் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்டேன்.




தியானப் பயிற்சியின் ஆரம்ப நிலையில் 'அர்த்த பத்மாசனத்தில்' அமர்ந்து, கைகளைக் கோர்த்து மடியினில் வைத்து, 'அயம் ஆத்மனே' என மௌனமாக உச்சரித்து, தொண்டைக் குழியில் கவனம் வைத்து முடிவில் மனதை 'பிட்யூட்டரி'
சுரப்பி இருக்கும் இடத்தில் நிலை நிறுத்தினேன்.




இப்பொழுது அப்படி இல்லை; நேராக எதையும் உச்சரிக்கத் தேவையின்றி
மனதை 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்கும் இடத்தில் நினைத்தவுடன் நிலை நிறுத்த முடிகிறது.

திருமந்திரம் 566-வது பாடலில் திருமூலர் இவ்வாறு கூறுகிறார் ..
"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே".

பறவையை விட வேகமாக செல்லக்கூடியது 'பிராணன்' என்கிறார். பிராணனை குதிரையோடு (புரவி) ஒப்பிடுவது சித்தர்களின் பழக்கம். காரணம் குதிரையைப் போன்று பிராணனையும் அடக்குவதும் மிகவும் கடினம்.

ஏனெனில், சுற்றித் திரியும் மனதை அடக்குவதே கடினம்; இவ்வளவுக்கும் மனம் நம் உள்ளே தான் உள்ளது. பிராணனோ பிரபஞ்ச சக்தியோடு இணைந்த ஒன்று. எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிக மிகக் கடினம்.

இருந்தாலும் 'பிராணனை' அடக்குவதற்கு திருமூலர் சொன்னதுதான் "மன்மனம் எங்கு உண்டு; வாயுவும் அங்கு உண்டு".

மனமும், பிராணனும் ஒரே இடத்தில் ஒடுங்கிய பின், உடலில் என்ன நிகழ்வுகள் நடந்தன என்று பார்ப்போம்.

   



இந்த முறையில் 'தியானம்' செய்தபோது உடலில் நடந்த நிகழ்வுகள் புதியதாகத் தோன்றின. அவை ...
1. மூச்சை உள்ளே இழுத்தபோது வழக்கம்போல் மார்புக்கூடு விம்மி கழுத்தை நோக்கி மேலே நகர்ந்தது.

2. மூச்சை வெளியே விடும்போது மார்புக்கூடு இறங்கி பழைய நிலைக்கு வரவில்லை. எந்த அளவிற்கு ஏறி நின்றதோ அந்த அளவிலேயேத் தங்கிவிட்டது.

3. மாறாக, வயிற்றிலிருந்து காற்று வெளியே செல்வது போன்ற உணர்வு; காரணம் வயிறு உள்ளே ஒடுங்கியதுதான்.

4.அடுத்தமுறை மூச்சை இழுக்கும்போது, மார்புக்கூடு மேலும் கொஞ்சம் மேலே ஏறியது.

5. வயிறு இன்னும் கொஞ்சம் உள்ளே ஒடுங்கியது.

6. நான்கு-ஐந்து தடவைகள் மூச்சு உள்ளே வந்து வெளியே சென்றபின், இதற்குமேல் விரிவடைய முடியாது என்ற நிலைக்கு மார்புக்கூடும், இதற்குமேல் ஒடுங்க முடியாது என்ற நிலைக்கு வயிற்றுப் பகுதியும் தள்ளப்பட்டு விட்டன.

7. அதன்பின் மூச்சுக் காற்று உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும், அடிவயிற்றுப் பகுதியில் ஏற்படும் சிறிய அசைவின் மூலம் மட்டுமே உணர முடிந்தது.

இந்தப் பயிற்சியில் எத்தனை நிமிடங்கள் வேண்டுமானாலும், மனதில் எந்த உருவத்தையும் எண்ணாமல் இருக்க முடிந்தது.

முதன்முதலாக, விழிப்பு நிலையிலும் மனம் 'அமைதியாக' இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

    



மூச்சை உள்ளே இழுக்கும்போது மேலே ஏறிய மார்புக்கூடு கீழே இறங்காமல் இருந்ததற்குக் காரணம், மனதோடு பிராணனையும் பிடித்து வைத்ததுதானா என்ற சந்தேகம் தோன்றியது.

திருமூலரின் பாடல் நினைவிற்கு வந்தது.
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை..."
இதிலிருந்து ஒரு உண்மை புரிந்தது.

மூச்சை உள்ளே இழுக்கும்போது வெளியில் இருந்து வரும் பிராண சக்தி (பிராணன்) மார்புக்கூட்டை மேலே ஏற்றுகிறது; மூச்சை வெளியே விடும்போது பிராண சக்தியின் உதவி இல்லாததால், மார்புக்கூட்டால் கீழே இறங்கமுடியவில்லை.

மார்புக்கூடு கீழே இறங்காத காரணத்தினால்,
 'பிராணன்' மனதோடு கூட 'பிட்யூட்டரி' சுரப்பி இருக்குமிடத்தில் ஒடுங்கி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
..... ..... .... .....

இதில் சொல்லப்பட்டக் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்கள், இந்த தியான முறையைப் பயிற்சி செய்யலாம். சுமார் இரண்டு நிமிடங்கள் காலையிலும், மாலையிலும் செய்யலாம்.

தியானம் சரியான முறையில் கடைப்பிடிக்கப் பட்டால், பின்பு தியானம் செய்யும் நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.

ஆனால், ஏற்கனவே சொன்னதுபோல
இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

என்றும் அன்புடன்,
உங்களில் ஒருவன்.

           

                     முடிவுரை

இந்த கட்டுரையை முடிக்கும்போது, மனதில் ஒரு திருப்தியும், ஒரு பணிவும் மட்டுமே இருக்கின்றன.

திருப்தி — எனக்குள் எழுந்த கேள்விகளை என்னால் இயன்ற அளவிற்கு நேர்மையாக விசாரித்துப் பதிவு செய்துள்ளேன்.

பணிவு — நான் கண்டவை அனைத்தும் முழுமையான உண்மைகள் என்று சொல்லும் அருகதை எனக்கு இல்லை.

வேதாந்தம் கூறுவது போல, உண்மை என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் அல்ல; ஒவ்வொருவரும் தாமே அறிந்து கொள்ள வேண்டிய அனுபவம்.

இந்தப் பயிற்சியின் போது நான் குறிப்பிட்டுள்ள அனுபவங்கள், எனது தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமே. இதே அனுபவங்கள் அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வொருவரின் உடல், மனம், சாதனைப் பக்குவம் ஆகியவற்றைப் பொறுத்து அனுபவங்கள் மாறுபடலாம்.

அதனால், இந்த நூலில் உள்ள எந்தக் கருத்தையும் வெறுமனே நம்ப வேண்டாம். அவற்றை உங்கள் சொந்த விசாரத்திற்கும், சாதனைக்கும் உட்படுத்திப் பாருங்கள். உண்மையானது நிலைத்திருக்கும்; உண்மையல்லாதது தானாகவே விலகிவிடும்.

இந்தக் கட்டுரையால் ஒருவருக்காவது தியானத்தின் மீது ஆர்வம் பிறந்தால், மன அமைதியை நோக்கி ஒரு சிறிய அடி எடுத்து வைக்கத் தூண்டப்பட்டால், அல்லது தன்னைப் பற்றிய ஒரு புதிய கேள்வி அவருக்குள் எழுந்தால், அதுவே இந்த எழுத்தின் பலன்.

இந்த நூலை நான் ஒரு ஆசிரியராக எழுதவில்லை. சத்தியத்தைத்
தேடிக்கொண்டிருக்கும் ஒரு சாதகராகவே எழுதியிருக்கிறேன்.

எனது தேடல் இன்னும் தொடர்கிறது.


அன்புடன்,
உங்களில் ஒருவன்


(முன்னுரை, இடைமுன்னுரை மற்றும் முடிவுரை மூன்றையும் வழங்கியது ChatGPT)