அன்பு
அன்பை அறியாத, அன்பை வெளிப்படுத்தாத உயிரினமே இருக்காது.
ஆனாலும், "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவர் கூடவே "அஃதிலார் .." என்று எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்.
முரண்பாடாகத் தோன்றினாலும், இதுவே யதார்த்தம்.
அன்பு, அதன் விரிவு, அவற்றின் பரிமாணம் போன்றவற்றை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருப்பதை சிலரிடம் காண்கிறேன்.
நான் 'அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது, உணர்ந்து கொண்டது' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எனது எண்ணங்களை பதிவிடுகிறேன்.
எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கவில்லை.
இருந்தாலும் ஒரு சிலருக்கு இவை பயன்படலாமே என்ற நப்பாசைதான்.
மேலே தொடர்வதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருக்கவேண்டி உள்ளது.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல வேதனைகளுக்கான காரணம் இதில்தான் அடங்கி இருக்கிறது.
தாயன்பிற்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது என்பார்கள்.
தாயிடம் அன்பு இல்லையென்பது அல்ல; நாம் சாதாரணமாக ‘தாயன்பு’ என்று சொல்லும்போது, அதில் அன்புடன் பாசமும் கலந்திருக்கும் அல்லவா?
சற்று சிந்தித்துப் பாருங்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டுவது அன்பா அல்லது பாசமா?
இரண்டும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இரண்டிற்குமிடையே நிறைய இடைவெளி உள்ளது.
(அன்பு பொதுவானது; பாசம் வாசம் செய்யுமிடம் ஆழ்மனம். இதுபற்றி பின்னர் பார்ப்போம்)
'அன்பே சிவம்' என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்; ஆனால், 'பாசம்' என்று வரும்பொழுது அவர்களது அறிவுரை அதற்கு எதிராக இருக்கிறது.
"பாசவினைகள் பற்றது நீங்கி.." என்கிறது 'கந்தசஷ்டி கவசம்'.
"ஆசைவலைப் பாசத் தகப்பட்டு மாயாமல்..." என்கிறார் பத்திரகிரியார்.
தங்கள் பிள்ளைகளிடம் பாசத்தை காட்டும் பெற்றோர்கள், எந்த இடத்தில் அதிலிருந்து பின்வாங்கி 'இனி நாம் அன்பை மட்டுமே காட்டவேண்டும்' எனக் கற்றுக்கொள்வதே இல்லை; இதுவே வயதான காலத்தில் அவர்கள் படும் துன்பத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது.
அன்பு அதன் இயல்பில் இனிமையானது; தூய்மையானது; பரிசுத்தமானது; களங்கமற்றது.
அதனால்தான் பிறந்த குழந்தையால் கள்ளமில்லாமல் சிரிக்கமுடிகிறது.
அன்பு அதன் இயல்புப்படி ஒரு மூலப்பொருளைப் போன்றது. முதலில் அன்பு 'ஆசையாக' மனத்தில் உருவெடுக்கிறது. பின்னர் அது 'பாசம், பேராசை, காமம்' என மாறி ஆழ்மனம் வரை சென்று விடுகிறது. அதன்பின் அன்பு தூய்மையாக இருப்பதில்லை.
குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும், 'class-ல first rank வாங்கவேண்டும்' என்பது போன்ற ஆசைகளை ஊட்டி விடுகிறோம்.
விளைவு; அந்தக் குழந்தையிடமிருந்த பரிசுத்தமான அன்பு காணாமல் போய்விடுகிறது. அதன் களங்கமற்ற தன்மையும் மறைந்துவிடுகிறது.
"மீண்டும் குழந்தையாக மாறாதவரையில் ..." என்கிறார் ஏசுபிரான். அதன் அர்த்தம் என்ன?
மீண்டும் குழந்தைக்கே உரிய மனநிலை வந்தால் மட்டுமே, அந்த மனிதனிடம் தூய்மையான அன்பை எதிர்பார்க்க முடியும் என்பதுதான்.(இது என்னுடைய புரிதல்)
எந்தவொரு மனிதனும் 'அன்பின்' துணைகொண்டு இரு வேறு திசைகளில் பயணம் செய்ய முடியும்.
ஒரு பயணம் அகவுலகம்சார்ந்தது; மற்றொன்று புறவுலகம் சார்ந்தது.
அகவுலகப் பயணம் பற்றறுக்க உதவும்; புறவுலகப் பயணம் ஏற்கனவே உள்ள பற்றை மேலும் வலுப்பெறச் செய்யும்.
அகவுலகப் பயணம் நம்மை தூய அன்பில் தக்க வைக்கும். புறவுலகப் பயணம் நம்மை தூய அன்பிலிருந்து வெகு தூரம் இழுத்துச்சென்றுவிடும்.
சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் அக உலகப் பயணம் செய்யத் தகுதியானவர்கள்.
ஏனெனில் அவர்கள் இயல்பாகவே தனித்திருக்க விரும்புவார்கள். அத்துடன் 'அகத்தாய்வு' செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.
வாழைத்தாரில் உள்ள காய்கள் பருத்துவரும்போது, அதன் சீப்பின்மேல் படர்ந்திருந்த தோல் கழன்று கீழே விழுவதுபோல், அகத்தாய்வில் தீவிரம் கூடக்கூட, பற்றின் காரணமாக ஆழ்மனத்தில் இடம்பெற்ற தேவையில்லாத பதிவுகள் ஒவ்வொன்றாக நீங்கிவிடும்.
"As the man progresses in his "inward expansion", the lower tendencies in him automatically drop off." .. Swami Chinmayanandha
பற்றறுத்த மனம், தூய அன்பாக மாறிவிடும். அதன்பின் அவர்களிடமிருந்து வெளிப்படுவது கருணையாக இருக்கும்.
அத்தகைய மனிதர்களிடம் கீழ்க்கண்ட பாவனைகள் இருக்கும்.
1. அவர்களிடம் அஹங்காரம் இருக்காது.
2. எந்த இடத்திலும் தம்மை முன்னிலை படுத்த முயற்சிக்க மாட்டார்கள்.
3. எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் பொறுமையுடன் கையாள்வார்கள்.
4. தம்மை 'கர்த்தா' என நினைக்க மாட்டார்கள்; மாறாக தம்மை இறைவனின் 'கருவி'யாகவே எண்ணுவார்கள்.
5. வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் என எதுவுமே அவர்களை பாதிக்காது.
(இவை ஒரு சில உதாரணங்களே)
இறையருள் பெற்ற இவர்கள் கருணையை மழையெனப் பொழிவார்கள். அவர்கள் தேடிச்சென்றது இறையருளை வேண்டி. ஆனால், நமது கண்களுக்கு அவர்களிடமிருந்து வெளிப்படும் கருணை மட்டுமே தெரியும்.
பொருளைத் தேடி ஓடுகின்ற பலருள், சிலருக்கு மட்டுமே அதிர்ச்சி வைத்தியம் மூலம், புறவுலகை விட்டு அகவுலகிற்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கிறது. பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரிநாதர் போன்றோர் இதற்கு உதாரணமாக இருப்பவர்கள்.
மற்றவர்கள் -- அதாவது 'இரஜோகுணவாதிகள்' மற்றும் 'தமோகுணவாதிகள்' -- அவர்கள் பெறும் அனுபவங்களின் அடிப்படையிலேயே தேவையான மாற்றங்களை செய்யவேண்டி உள்ளது.
இரஜோ குணவாதிகளிடம் தன்முனைப்பு அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள்.
இவர்களில் சிலர் மட்டுமே பொதுநலத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் சமூக சேவையில் ஈடுபட்டு பலவித இன்னல்களுக்கும் ஆளாவார்கள்.
புறவுலகில் செயல்புரிதல், அகத்தாய்வு, சுயசிந்தனை - - இம்மூன்றும் இவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கும். மனதில் நிம்மதியின்றி ஒருவிதமான தவிப்பில் இருப்பார்கள்.
நல்லதொரு வழிகாட்டியின் துணை கிடைத்தால், தன்முனைப்பு குறைந்து அகவுலகில் பிரவேசித்து விடுவார்கள்.
இவர்களைத்தவிர வேறு சில மனிதர்களும் அகவுலக வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பெறுவார்கள். அவர்கள் புறவுலகில் பணிபுரிந்தாலும், புறவுலக நாட்டமின்றி வாழ்ந்து வருவார்கள். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இனி சிக்கல்கள் நிறைந்த புறவுலகப் பயணம் பற்றி பார்ப்போம்.
அதற்கு முன் இரண்டு பயணங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
"அகவுலகில் இறைவனைத் தேடுகிறோம்; புறவுலகில் இறைவனை வேண்டுகிறோம்."
இறைவனை வேண்டும்பொழுது, அருளைக் கேட்டால் அது அகவுலகப் பயணம் ஆகிவிடும்; பொருளைக் கேட்டால் அது புறவுலகப் பயணமாகிவிடும்.
அருளைத் தேடும் பயணமும், பொருளைத் தேடும் பயணமும் ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செல்பவை. இரண்டு பாதையிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியாது.
"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு" என்கிறார் வள்ளுவர்.
(செல்வத்தை வேண்டினால் புறவுலகில் பயணம் செய்; ஞானத்தை தேடினால் அகவுலகில் பயணம் செய்).
அருள், பொருள் என்ற இரண்டு பாதைகளில் எதை முதன்மையாகத் தேடுகிறோம் என்பதுதான் திசையை நிர்ணயிக்கிறது
மனிதன் தனக்குள்ளே பயணித்தால், இறைவனை உணரலாம். (தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் .. திருமூலர்).
தனக்கு வெளியே பயணித்தால் செல்வத்தை சேர்க்கலாம்.
நாம் ஆலயங்களுக்கு செல்கிறோம். அங்கு ஆண்டவனைத் தேடுகிறோமா அல்லது ஆண்டவனிடம் வேண்டுகிறோமா? சற்று சிந்தித்து பாருங்கள். பல உண்மைகள் புரியும்.
ஆண்டவனிடம் வேண்டுவதில் தவறில்லை; வேண்டிப் பெற்றதை அனுபவிப்பதிலும் தவறில்லை.
ஆனால், அப்படி அனுபவிக்கும் பொழுது நமது அஹங்காரம் வளராமல் இருக்க, நாம் ஆண்டவனை மறவாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அது எப்படி முடியும் என்று நினைக்கலாம்.
ஒரு ரயிலில் பயணம் செய்கிறோம். நாம் ரயிலை ஓட்டுவதில்லை. இருந்தாலும் நாம் ரயிலில் பயணம் செய்வதை உணர்கிறோம் அல்லவா?
அதைப்போல வாழ்க்கை நெடுகிலும் ஆழ்மனம் இறைவன் புகழை பாடிக் கொண்டே இருக்கவேண்டும்; நாமும் எந்த வேலையில் இருந்தாலும், அதைப் பற்றிய உணர்வோடு இருக்க வேண்டும்.
"ஆடும் பணியென்று அலைந்து திரிந்தாலும் -இறைவன் புகழ் பாடும் பணியொன்றில் பயணிப்ப தெக்காலம்?"
வாழ்க்கை நெடுகிலும் நமது ஆழ்மனம் இறைவன் புகழை பாடிக் கொண்டிருக்க, நாமும் நாள் முழுவதும் அதைப் பற்றிய உணர்வோடு இருக்க முடிந்தால், அகவுலகப் பாதையில் பயணம் செய்யாமலே அதன் பயனை அடைந்து விடலாம்.
அருள் நிறைந்த மனிதனாக மாறி, கருணை மழை பொழிய ஆரம்பிக்கலாம்.
எளிதாகத் தோன்றினாலும் நம்மால் இதை நடைமுறைப்படுத்த முடிவதில்லை.
காரணம் ஆழ்மனத்தில் ஏற்கனவே நிறைய கழிவுகள் உள்ளன. அவற்றை 'வாசனா பதிவுகள்' என்றும், 'ஆணவமலம்' என்றும் சொல்கிறார்கள்.
முல்லா தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அதை பார்த்த நண்பர் "என்ன தேடுகிறீர்கள்" என்றார்.
"வீட்டில் ஊசியைத் தொலைத்து விட்டேன்; அதைத்தான் தேடுகிறேன்" என்றார் முல்லா.
அதை வீட்டில் அல்லவா தேடவேண்டும் என்று கேட்டதற்கு "இங்குதானே வெளிச்சமாக இருக்கிறது" என்று முல்லா பதில் சொன்னார்.
வேடிக்கையாகத் தோன்றினாலும், முல்லா நம்மை பார்த்து பரிகாசம் செய்கிறார்.
உள்ளுக்குள்ளே கடவுளை வைத்துக்கொண்டு, நாம் வெளியே கடவுளைத் தேடுவது கண்டு ஏளனம் செய்கிறார்.
'அன்பே சிவம்' என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். 'அன்பும், சிவமும்' இரண்டல்ல என்கிறார் திருமூலர்.
நம்மிடம் இருப்பது அன்பென்றால், நம்மால் 'சிவத்தை' ஏன் உணர முடியவில்லை?
உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தால், நம்மிடமிருந்து 'கருணை' மழையெனப் பொங்க வேண்டாமா? ஏன் அது பொய்த்து விட்டது?
கங்கை நதி புறப்படும் இடத்தில் சுத்தமாகத்தான் இருக்கிறது. அதுதான் கடலிலும் கலக்கிறது. ஆனாலும், அதன் வழிநெடுகிலும் கழிவுகள் சேர்ந்து, அதை மாசுபடுத்தி விடுகிறது.
சுத்தமாக பயணத்தை தொடங்கிய கங்கைநதி பயணத்தின் முடிவில் அசுத்தமான ஒன்றாக மாறி விடுகிறது.
அதேபோல் நமது வாழ்க்கைப் பயணத்திலும், பலவகையான அசுத்தங்கள் புனிதமான 'அன்பை' மூடி மறைத்து விடுகிறது.
தசரதனின் அன்பை, பாசம் மூடியது; கைகேயியின் அன்பை, பேராசை மூடியது; இராவணின் அன்பை, காமம் மூடியது; சகுனியின் அன்பை, கோபம் மூடியது. நம்முடைய அன்பை, எது மூடியிருக்கிறது?
அன்பு தூய்மையானது; பரந்து விரியக்கூடியது; எல்லைகளற்றது. இருந்தாலும் "தூய அன்பு" என்றும் சொல்கிறார்களே!
அப்படியானால் 'அன்பு' என்பதற்கும், 'தூய அன்பு' என்பதற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?
ஒரு மனிதன் தன் உறவுகளுடன் அன்பாக நடந்துகொள்கிறான். ஆனால், சக மனிதர்களிடம் வெறுப்பை, கோபத்தை காட்டுகிறான்.
அவனை எப்படி அன்பான மனிதன் என்று சொல்லமுடியும்?
இது "பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா! மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!" என்று கவிஞர் எழுதிய பாடலை அல்லவா நினைவு படுத்துகிறது.
எதிர்மறை உணர்வுகள் ஏதுமின்றி, எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிந்தால் அதுவே "தூய அன்பாகும்".
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்று தாயுமானவர் பாடுவது "தூய அன்பின்" அடையாளம்.
எல்லா மனிதர்களிடமும் 'அன்பு' இருக்கிறது; அது 'தூய அன்பாக' மாறுவதற்கு எது தடையாக இருக்கிறது?
மனிதன் ஒரு பொருளை - - அது உயிருள்ள பொருளாக இருந்தாலும் அல்லது உயிரற்ற ஜடப்பொருளாக இருந்தாலும் - - தொடர்ந்து நினைக்கும் பொழுது, அந்த நினைவு பற்றாக (attachment) மாறிவிடுகிறது.
பற்றிய ஒன்று பற்றாகமாறி, அது அந்த மனிதனைப் பற்றி அவனது மனத்தில் ஆசையாக உருவெடுக்கிறது.
இந்த ஆசை என்பது அவனது உணர்வு மனத்தில் பதிவது. ஒருவேளை அந்த ஆசை நிறைவேறாவிட்டால்கூட, அவன் அதை மறந்துவிடலாம்.
ஆனால், அந்த ஆசை தொடர்ந்து வளருமேயானால், அது ஆழ்மனம்வரை சென்றுவிடுகிறது.
அங்கு அது பாசமாகவோ, பேராசையாகவோ அல்லது காமமாகவோ வேர்கொண்டு விடுகிறது.
மனிதனுக்கு வரும் பலவித பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த ஆழ்மனப் பதிவுகளே.
இத்தகைய பதிவுகளை அகற்றும் வித்தையைக் கற்றுக்கொண்டு விட்டால், மனம் அமைதியாகும்; உள்ளத்திலிருந்து தூய்மையான அன்பு வெளிப்படும்.
மதத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று ஆழ்மனப் பதிவுகளைக் களைவது எப்படி என்று வழிகாட்டுவதற்காகத்தான்.
ஒரு திரைப்பட பாடலில், பிச்சை எடுத்து வாழும் பெண் இவ்வாறு பாடுகிறாள் - - "ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா - இது ஈசனுக்கு ஓய்வுநேர விளையாட்டம்மா".
அவள் புலம்புவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், நம்மில் பலரும் புலம்புகிறோமே! அது ஏன்?
நம்மிடம் அறிவு இருக்கிறது; சிந்திக்கும் திறனும் இருக்கிறது. இருந்தும் சிந்திக்க மறுக்கிறோமே! அது ஏன்?
"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்" -- என்கிறார் வள்ளுவர்.
இதற்கான காரணங்கள் பல - -
* தவறான முன்முடிவுகள்
* அவநம்பிக்கை
* காரணங்களை ஆராய தன்னால் முடியாது என்ற எண்ணம்
* எல்லாம் தலைவிதி என்று நினைப்பது
இதுபோன்ற பல காரணங்களினால், நாம் அன்பை மீட்டெடுக்கும் முயற்சியை விட்டு விடுகிறோம்.
"நான் அன்பான மனிதன்தானே; ஏன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்" என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால், விடைதான் கிடைப்பதில்லை.
இதற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணர் "மூன்றே" வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார். கீதையில் உள்ள அற்புதமான சுலோகங்களில், இதுவும் ஒன்று.
கீதையில் அர்ஜுனன் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறான் - -"கிருஷ்ணா, மனிதன் விருப்பமில்லாமல் இருந்தாலும், எது அவனை பாபம் செய்யத் தூண்டுகிறது?".
கிருஷ்ணன் பதில் சொல்லுகிறார் - -"ரஜோ குணத்தின் காரணமாக மனதில் எழும் காமமும், குரோதமுமே இதற்கு காரணம். இவையே உனது பரம வைரி என அறிந்துகொள்".
.. பகவத்கீதை -- அத்தியாயம் 3/36,37
'ரஜோ குணம், காமம் மற்றும் குரோதம்' மூன்றும் நமக்கு பரிச்சயமான வார்த்தைகள்தான். ஆனால் மேலோட்டமாக படித்துவிட்டு போய்விடுகிறோம். அதனால், நாம் படும் அனைத்து வேதனைகளுக்கும் காரணமாக இருப்பது இவைதான் என்பதைப் புரிந்துகொள்ள மறந்து விடுகிறோம். ஆழமாக பார்க்க வேண்டிய விஷயம் இது.
'காமம், குரோதம் மற்றும் ரஜோ குணம்' ஆகிய மூன்றை மட்டும், பாபம் செய்வதிற்கான காரணிகள் என்று கிருஷ்ணன் ஏன் குறிப்பிட்டார் என்பது புரியவேண்டுமானால், அவர் சொல்லும் கூற்றின் ஆழத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
'ரஜோ குணத்தின் காரணமாக வரும் காம, குரோதம்' என்று கிருஷ்ணன் சொல்கிறார். அப்படியானால் சத்துவ குணம் உள்ளவர்களும், தமோ குணம் உள்ளவர்களும் பாபம் செய்ய மாட்டார்களா என்று நினைக்கலாம்.
மூன்று குணங்களையும் சார்ந்தவர்களின் பண்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று தெரிந்தால்தான், கிருஷ்ணன் ஏன் 'ரஜோ' குணத்தை மட்டும் குறிப்பிட்டார் என்பது புரியும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதலாவது உண்மை, மனிதனால் பாபம் செய்ய முடியாது என்பதுதான். பாபம் என்பது செயலல்ல; செயலின் விளைவாக நமக்குள் ஏற்படும் பின்விளைவு.
ஆக, செயல் புரிந்தால் மட்டுமே பாபம் வருவதற்கான வாய்ப்பு உண்டு.
செயல்புரிவதற்கு 'தன்முனைப்பு' (அஹங்காரம்) மிகவும் அவசியம்.
ஒரு மனிதனின் தன்முனைப்பிற்கு அடித்தளமாக இருப்பது, அந்த மனிதனின் ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள். இதனையே 'வாசனா' என்றும் சொல்கிறார்கள்.
சத்துவ குணம் நிறைந்த மனிதன், தனது ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்கி விடுகிறான்; அல்லது பெருமளவு குறைத்து விடுகிறான். எனவே அவனிடம் தன்முனைப்பு இருப்பதில்லை. அவன் இறைவனின் கருவியாக மாறிவிடுகிறான். அதன்பின் அவன் எதைச் செய்தாலும், தன் மூலமாக "அவன்" செயல்புரிகிறான் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறான். அதனால் அவனுக்கு பாபம் செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
"தமோ குணத்தைப்" பொறுத்தவரை நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது.
பட்டியலின மக்கள் அனைவரும் 'தமோ குணம்' உள்ளவர்கள் என பலரும் நினைக்கின்றனர். அது மாபெரும் தவறு.
யார் மந்த புத்தியுடனும், சோம்பல் மிகுந்தும் காணப்படுகிறார்களோ, அவர்களை மட்டுமே 'தமோ குண வாதிகள்' என அழைக்கலாம்.
அப்படிப்பட்டவர்களிடம் தன்முனைப்பு மந்தநிலையில் இருக்கும்; அதைக்கூட அவர்கள் உணரமாட்டார்கள். யாராவது அவர்களை தூண்டிவிட்டால் மட்டுமே அவர்களால் செயல்பட முடியும்.
மற்றவர்கள் சொன்னதை செய்தோம் என்பதால் அவர்களுக்கு தாம் செய்வது பாபம் என்றுகூடத் தோன்றாது.
இப்போது 'காம - குரோத' என்ற வார்த்தைகளைப் பற்றி பார்ப்போம்.
கிருஷ்ணன் 'காம' என்று சொல்லும்போது, 'அதீத ஆசை' (lust) என்ற அர்த்தத்தில் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
'குரோதம்' என்றால் கோபம் என்று அர்த்தம். ஆசை இருந்தால் கோபம் வருவது இயற்கை என்பதால்தான், ரஜோ குணம் நிரம்பப் பெற்ற மனிதனுக்கு காமம், கோபம் இரண்டும் வரும் என்கிறார்.
மனிதனிடம் அன்பு மட்டும் இருந்தால், கோபம் வர வாய்ப்பில்லை; ஆனால், அன்பு ஆசையாக மாறிவிட்டால் கோபம் வருவதை தவிர்க்க இயலாது என்கிறார்.
காரணம் -- ஆசைப்பட்ட பொருள் கிடைக்காதோ என்ற பயம், கிடைக்காவிட்டால் கோபம்.
ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ, அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம், போய்விட்டாலோ கோபம்.
ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டால், அன்பு தூய்மையான அன்பாக மாறும்; நாமும் இறையருளை உணரத் தொடங்கலாம்.
"இருள்சேர் இருவினையும் சேரா.." என்று வள்ளுவர் சொல்லும்போது இந்தப் பதிவுகளின் நீக்கத்தையே குறிப்பிடுகிறார்.
மதம் இந்தப் பதிவுகளை நீக்குவதற்கு பல வழிமுறைகளைக் கற்றுத்தருகிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:-
*தன்னடக்கம்*
இதை பணிவு, நாணம், கூச்சம், தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளுதல் எனப் பலவாறாகக் கூறலாம்.
சுருக்கமாக சொன்னால் 'தன்னை முன்னிலைப் படுத்தாமல் ஒதுங்கி இருப்பது' என சொல்லலாம்.
இதில் என்ன கஷ்டம் என நினைக்கத் தோன்றும். உண்மையில் பக்குவம் அடையாத மனிதனால், பக்குவம் அடைய விரும்பாத மனிதனால் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.
தந்தை வயதான காலத்தில் குடும்ப பொறுப்பை மகனிடம் கொடுத்துவிடுகிறார்.
ஆனால், அவரால் ஒதுங்கி இருக்க முடிகிறதா? வழிகாட்டியாக மாறவேண்டியவர், தொடர்ந்து எஜமானனாக இருக்க விரும்புவது ஏன்?
எனக்குத் தெரிந்த ஒரு அதிகாரி பணி ஓய்வு பெற்றபின், கோயிலுக்கு சென்றவரால் நிம்மதியாக கடவுளை வணங்க முடியவில்லை. காரணம் அலுவலகத்தில் முன்னர் மரியாதை செய்தவர்கள், தன்னை கோயிலில் கண்டுகொள்ளவே இல்லை என்ற கவலைதான்.
தவறு யாருடையது? பணி ஓய்வு பெற்ற பின்பும், பதவியை சுமந்து கொண்டிருப்பது தேவைதானா?
"நேதி நேதி" என்ற வார்த்தை 'பிரஹதாரண்ய உபநிஷத்தில்' வருகிறது. அதாவது நான் "இதுவல்ல, இதுவல்ல" என ஒவ்வொன்றாக ஒதுக்கித் தள்ளுவது.
எதையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ, அதன் காரணமாக வரும் எந்தத் துக்கமும் நம்மை தாக்குவதில்லை என்கிறார் வள்ளுவர் - -
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்".
இந்தப் பண்பினைக் கடைப்பிடிக்க எந்த பயிற்சியும் தேவையில்லை; அறிவுபூர்வமான புரிதலே போதுமானது.
*பாசாங்கு செய்யாமை*
நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று சொல்வதுண்டு. பொய்யொழுக்கம்?
கீதையில் பகவான் 'மித்யாசாரம்' என்று கூறுகிறார். 'ஆசாரம்' என்றால் ஒழுக்கம்; 'மித்யா' என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக் கொள்ளுதல். ஒழுக்கமின்மை அல்ல; இது பொய்யொழுக்கம்.
ஒரு அறிவிலி தன்னை அறிவாளி எனக் காட்டிக் கொள்வதைப் போன்றது.
இதனைத்தான் 'பாசாங்கு' என்று சொல்வார்கள்.
இவர்கள் 'உள்ளொன்று வைத்து புறமொன்று' பேசுபவர்களாக இருப்பார்கள்.
ஆணவமலம் நீங்க வேண்டுமென்றால், இந்தப் போலித்தனம் இருக்கக்கூடாது.
"தன்னெஞ்சறிவது பொய்யற்க.." என்கிறார் வள்ளுவர்.
*அஹிம்சை*
அஹிம்சை என்றால் யாரையும் துன்புறுத்தாமல் இருத்தல் என நினைக்கிறோம்.
மனதால்கூட யாரையும் துன்புறுத்தக்கூடாது. அதுதான் அஹிம்சையின் அடையாளம்.
துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏன் வருகிறது? நாம் கோபம் கொள்வதால்தான் வருகிறது.
ஏதோவொரு சம்பவம் நம்மை காயப்படுத்தும் பொழுது, அதன் காரணமாக நமது ஆழ்மனதில் ஒரு பதிவு நிகழ்ந்து, அந்த நிகழ்வு கோபத்தை தூண்டுகிறது. அந்தப் பதிவு நிகழாமல் பார்த்துக் கொண்டால், நமக்கு கோபமும் வராது; அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
இதற்கு ஒரேவழி நாம் விரும்பாத சம்பவங்கள் நடந்தால், அவற்றை உதாசீனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
எதிரியைவிட மோசமான எதிரி, எதிரி நம்மை உதாசீனம் செய்வதுதான்.
"Enemy's worst enemy is the ignorance of the enemy's enemy".
இதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நமக்கு கோபம் வரும் வாய்ப்பு குறைந்துவிடும்.
அதனால்தான் புத்தரும் "உதாசீனனாக" இரு என்கிறார்.
.....
*உடைமைத்தன்மையின்மை*
நாம் வீடு, கார் என பலவற்றை சொந்தமாக வைத்திருப்போம். ஆனாலும், நமக்கு 'அவற்றின் சொந்தக்காரர்' என்ற உணர்வு இல்லாதிருக்க வேண்டும். இதைத்தான் 'உடைமைத்தன்மையின்மை' என்று சொல்கிறார்கள்.
அவை என்னுடைய உடைமைப் பொருள்கள் என்ற எண்ணம் இருக்குமானால், அவற்றை பற்றிய எண்ணங்களை ஆழ்மனதிலிருந்து நீக்குவது கடினம்.
அவற்றை அனுபவிப்பதில் தவறில்லை; ஆனால், 'உடைமைத்தன்மை' உணர்வு மட்டும் இருக்கக்கூடாது.
(Possess things; but don't have the possessor feeling)
'அஷ்டவக்ர கீதையில்' மஹராஜா ஜனகர் இவ்வாறு கூறுகிறார் - -
"Me nasti kinchan athava me sarvam"
"ஜனகர் என்ற முறையில் பார்த்தால் எதுவுமே என்னுடையது இல்லை; என்னுள் உறையும் இறைவனாகப் பார்த்தால் எல்லாமே என்னுடையதுதான்".
உள்ளிருக்கும் இறைத்தன்மையை உணர வேண்டுமானால், நாம் 'உடைமைத்தன்மை'யிலிருந்து வெளியேறியாக வேண்டும்.
(உடைமைத்தன்மையின்மை பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உறவுகளுக்கும் பொருந்தும்தானே என்று ஒருவர் கேட்டிருந்தார்.
உண்மைதான். உடைமைத்தன்மையின்மை குறித்து பொருளுக்கு சொன்ன கருத்துக்கள் அனைத்தும், உறவுகளுக்கும் பொருந்தும்.
ஆனால், பொருள் - உறவு இரண்டிற்கும் இடையே ஒருசில முக்கிய வித்தியாசங்கள் உண்டு.
பொருளைப் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பேராசையாகவும், உறவைப் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பாசமாகவும் பதிவாகிறது.
மற்றும் பற்று (attachment) என்று வரும்போது பொருளைவிட பாசம்தான் முன்னிலை வகிக்கும்.
பொருள் தன் கையை விட்டு சென்று விட்டால், சில காலம் கழித்து அதன் நினைவு ஆழ்மனதில் இருந்து அகன்று விடும்.
ஆனால், உறவு தன்னைவிட்டு அகன்றாலும் (உ.ம். பெண்ணின் திருமணம்), பாசம் எளிதில் ஆழ்மனதிலிருந்து நீங்குவதில்லை.
ஆகவே பாசம் சம்பந்தப்பட்டப் பதிவுகளை ஆழ்மனதிலிருந்து நீக்குவது மிகவும் கடினம்.)
.....
*கூட்டத்திலிருந்து தனிமைக்கு*
கூட்டமாக இருப்பது சத்துவ குண மனிதர்களுக்கு ஒத்து வராத ஒன்று. அவர்கள் பெரும்பாலும் தனிமையையே விரும்புவார்கள்.
தனிமையில் இருப்பது சுய பரிசோதனைக்கும், சுய விசாரணைக்கும் ஏற்றது.
ரஜோ குணம் நிறைந்த மனிதர்களுக்கு, குறிப்பாக சுயநலம் உள்ளவர்களுக்கு தனிமை என்பது கசப்பான விஷயம்.
யாருமே தன்னுடன் இல்லாமல் தனியாக இருப்பது வேறு; தனிமை என்பது வேறு.
ஆழ்மனப்பதிவுகளை நீக்குவதற்கு அகத்தாய்வு மிகவும் முக்கியம். அது தனிமையில் இருந்தால்தான் முடியும்.
எனவே ஒவ்வொருவரும் சிறிது நேரமாவது 'தனிமையில்' இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
.....
*சுயத்தை அறிதல்*
பழைய பாடல் ஒன்றில் பாடல் வரி இப்படி இருக்கும் - - "நானே நானா, யாரோதானா..."
நீ எதுவுமே செய்யவேண்டாம்; 'நான் யார்' என்று உன்னையே கேட்டுப்பார் என்கிறார் இரமண மஹரிஷி.
இதைச் செய்வதற்கு நமக்கு தெளிந்த அறிவு வேண்டும். அதை மூன்று வழிகளில் பெறலாம்.
1. *நேரடி அறிவு*. அதாவது புலன்களின் உதவியின்றி அறிந்து கொள்வது.
புலன்களின் உதவியின்றி அறிந்து கொள்வது என்றால் என்ன?
எனது நண்பனிடம் பரமாத்மா, ஜீவாத்மா பற்றி விளக்குவதற்கு 'ஆற்று நீர், குடத்து நீர்' உதாரணத்தைக் குறிப்பிட்டேன். அதாவது குடத்து நீரை ஆற்றில் கொட்டி விட்டால் குடத்து நீர் தனது தனித்தன்மையை இழந்து விடுவது போல, ஜீவாத்மாவும் அதனை மூடியிருக்கும் திரை விலகிவிட்டால் அது பரமாத்மாவோடு ஒன்றாகக் கலந்துவிடும் என்றேன்.
அவனுக்கு அது புரிந்தது; என்றாலும் குதர்க்கமாக ஒரு கேள்வியை எழுப்பினான். "குடத்து நீரை கரையில் கொட்டினால், ஆற்று நீரோடு கலக்காதே" என்றான். அவன் ஏற்றுக் கொள்ளும்படியாக வேறு எதைச் சொல்லலாம் என சிந்தித்தேன்.
பதில் தெரியாதபோது 'விசார' நிலைக்கு சென்றுவிடுவேன். உடனே பதில் கிடைக்கவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் பதில் தோன்றும். பதில் யார் மூலம் வந்தது என்று தெரியாது. நிச்சயமாக அது விவேகமாக சிந்தித்து அறிந்த பதிலாக இருக்காது.
அப்படித் தோன்றிய பதில் -- அறை முழுவதும் காற்றால் நிரம்பி உள்ளது. அறையில் காற்றடைக்கப்பட்ட பலூன் பறந்து கொண்டிருக்கிறது. திடீரென பலூன் வெடித்து விட்டால், பலூனுக்குள் இருந்த காற்று வெளிக்காற்றோடு இரண்டறக் கலந்து விடும்.
இதுதான் புலன்களின் உதவியின்றி பெறப்படும் 'நேரடி அறிவு'.
இந்த உதாரணத்தை நண்பன் முழுமனத்தோடு ஏற்றுக் கொண்டான்.
2. *ஊக அறிவு* இதற்கு விவேகம் தேவைப்படுகிறது.
'இது என் வீடு' என்று சொல்லும்போது, வீடு வேறு நான் வேறு என்றாகிறது.
'இது என் உடல்' என்று சொல்லும்போது, நான் உடலுக்கு வேறானவன் என்பது புரிகிறதல்லவா? இது ஊகத்தில் அறிவது.
3. *சான்றோர் வாய்மொழி கேட்டல்* விவேகமாக சிந்திக்க முடியாதவர்கள் இதனைக் கடைப்பிடிக்கலாம்.
'வாய்மொழி' என்று சொல்லும்போது, அது அவர்கள் வாய்மொழி மூலமாக வந்த நூல்களாகவும் இருக்கலாம்.
இதில் ஒரு பிரச்சனையும் உள்ளது. தவறான மனிதர்களை நாம் சான்றோராகத் தேர்வு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*பார்வையாளனாக இருப்பது*
நமக்கு தினந்தோறும் செய்யக்கூடிய கடமைகள் உண்டு. அத்துடன் நாம் ஏற்றுக்கொண்ட மற்றும் ஒப்புக்கொண்ட கடமைகளும் உண்டு.
அவற்றை செயல்படுத்தும் பொழுது நமக்கு பிடிக்காத இடைஞ்சல்கள் வரலாம். அதேபோல் மற்ற சமயங்களிலும் நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கலாம்.
அதுபோன்ற சமயங்களில் பதிலளிக்க (respond) வேண்டியிருந்தால், நாம் பதில் அளிக்கவேண்டும்.
இல்லையெனில், எந்தவித எதிர்வினையும் (react) செய்யாமல் வெறுமனே ஒரு பார்வையாளனாக இருந்துவிட வேண்டும்.
இது எளிதானதாகத் தோன்றினாலும் கடைப்பிடிக்கக் கஷ்டமாக இருக்கும்.
ஏனெனில், எதிர்வினையாற்றி பழக்கப்பட்டிருந்த மனதை 'சும்மா வேடிக்கை பார்' என்று சொன்னால் அது கேட்காது. நாம்தான் கொஞ்சம் விழிப்பாக இருந்து அதை நாம் விரும்பியபடி செயல்பட வைக்க வேண்டும்.
இது சரியாக நடந்தால், நடைபெறும் சம்பவம் நம் மனதில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் ஆழ்மனப் பதிவுகளில் மேலும் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப் படும்.
.....
*வேடிக்கைபார் .. தொடராதே*
நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கும் போது, 'பார்வையாளனாக' இருப்பது எப்படி என்று பார்த்தோம்.
பல சமயங்களில் சம்பவங்கள் நடக்காவிட்டாலும், நாம் பார்வையாளனாக இருக்க நேரிடும்.
உணர்வு மனதிற்கு நான்கு வாசல்கள் உண்டு. (ஒரு கற்பனை தான்).
மனம் ஒரு வாசல் வழியாக புலன்களின் துணையோடு புறவுலகை தொடர்பு கொள்கிறது.
ஒரு வாசல் வழியாக அது புத்தியோடு தொடர்பு கொள்கிறது.
மற்றொரு வாசல், அது தான் பெறும் அனுபவங்களை பதிவு செய்யும் அறையோடு தொடர்பு கொள்கிறது.
இன்னொரு வாசல், ஆழ்மனம் உணர்வு மனதோடு தொடர்பு கொள்வதற்கு. (உணர்வு மனதால் ஆழ்மனதை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது).
ஆழ்மனதில் உள்ள பதிவுகளின் தன்மைக்கு ஏற்ப, அது உணர்வு மனதை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கும்.
உணர்வு மனம் வேறு வேலைகளில் மூழ்கியிருந்தால், அந்தத் தூண்டுதல்களைக் கவனிக்காது.
வேறு வேலைகள் இல்லாதபோது, உணர்வுமனம் ஆழ்மனதிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப கனவுகள் காண ஆரம்பித்துவிடும்.
அது புதிய வீடு கட்டுவதாக, எதிரியை பழிவாங்குவதாக, விடுமுறையில் எப்படியாவது ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதாக -- இப்படி பலவிதமான கனவுகளாக இருக்கலாம்.
அதுபோன்ற சமயங்களில் புத்தியின் துணைகொண்டு ஆராய்ந்து பார்த்து, அவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்றால் நாம் விலகி நின்று மனதின் கனவுகளை மூன்றாவது மனிதன்போல வேடிக்கை பார்க்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாம் மனதுடன் சேர்ந்து பயணம் செய்யக்கூடாது.
அப்படி செய்தால் உணர்வு மனம் நம்மை தவறான வழியில் நடக்கவைத்துவிடும்.
மனம் காணும் கனவுகளை நாம் ஆதரிக்கவில்லை என்பது தெரிந்தால் மனம் அடங்க ஆரம்பித்து விடும்.
ஆழ்மனதிற்கும் தான் தூண்டுவதால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததும், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி விடும்.
*எளிமையாக இரு*
'எளிமையாக இரு' என்றால் ஏழையாக இரு என்று அர்த்தமில்லை.
எளிமை என்றால் தேவையில்லாத செலவினங்களைக் குறைப்பது மற்றும் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்ப்பது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். . இதன்மூலம் நமது அஹங்காரம் வலுப்பெறுவதைத் தவிர்த்துவிடலாம்.
*மௌனமாக இரு *
"Be silent, by silencing the action; Be silent, by silencing the thought; Be silent, by silencing the mind; Be silent, without knowing the silence".
தினசரி வாழ்வில் நாம் சும்மா இருக்க வேண்டிய நேரங்களும் வரும்.
அந்த மாதிரி நேரங்களில் நாம் தேவையற்ற செயல்களில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே மாதிரி தேவையற்ற எண்ணங்கள் எழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது இரண்டும் ஒழுங்காக நடைபெற வேண்டுமென்றால், அது போன்ற சமயங்களில் மனம் மௌனமாக இருந்தால்தான் முடியும் .
அதன்பின் நாம் மௌனமாக இருப்பது தெரியாமலே மௌனமாக இருக்க வேண்டும்.
எவ்வளவுதான் முயன்றாலும் மனதால் மௌனமாக இருக்க முடியாது. ஆழ்மனப் பதிவுகள் உணர்வு மனதை சும்மா இருக்க விடாது.
தேவையற்றதை மனம் சிந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால், மனதை வேறு திசையில் திருப்ப வேண்டும். என்ன செய்யலாம்?
சின்ன சின்ன பயிற்சிகள் மூலம், நாம் மனதை பக்குவப்படுத்த முயற்சி செய்யலாம்.
உதாரணத்திற்காக இரண்டு பயிற்சிகளைப் பற்றி குறிப்பிடுகிறேன். ஒன்று சாதனத்தை பயன்படுத்தி செய்வது; மற்றொன்று சாதனத்தின் உதவியின்றி செய்வது.
இது மாதிரி, உங்களுக்கு எது சாத்தியமோ, அதன்படி நீங்கள் பயிற்சி செய்யலாம்.
சும்மா இருக்கும் நேரங்களில் செய்யலாம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தை அதற்காக ஒதுக்கினால் நல்லது.
இந்தப் பயிற்சிகள் பெரியோர்கள் சொன்னதுதான். உங்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.
("Mind will succumb to the thing to which it is repeatedly diverted"
மனதால் ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்கமுடியாது. அது ஒன்றிலிருந்து மற்றொன்று எனத் தாவிக்கொண்டே யிருக்கும். அதனால்தான் "மனம் ஒரு குரங்கு" என்கிறார்கள்.
அதே நேரம், அதை திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை மாத்திரம் நினைக்க வைத்தால், அது அதற்கு பழக்கமான ஒன்றாக மாறிவிடும்.)
*சாதனத்துடன் கூடிய பயிற்சி*
உங்களுக்கு சவுகரியமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லா நாட்களிலும் ஒரே நேரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிறிய அகல் விளக்கை ஏற்றுங்கள். தீபத்தின் ஒளியில் விளக்கு தெரியாத மாதிரி சின்ன விளக்காக இருந்தால் நல்லது.
விளக்கு உங்கள் கண்ணுக்கு நேராக அல்லது சிறிது குறைவான உயரத்தில் இருக்க வேண்டும்.
எரியும் தீபத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடம் உற்றுப் பாருங்கள். கவனம் வேறு எங்கும் செல்லக் கூடாது.
பிறகு கண்ணை மூடிக்கொண்டு (அழுத்தமாக அல்ல; லேசாக) அந்த தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் தொடர்ந்து பாருங்கள்.
திடீரென்று மனம் வேறு எங்கோ செல்வதை உணர்வீர்கள்.
அப்போது கண்ணைத் திறந்து பயிற்சியை முதலிலிருந்து ஆரம்பியுங்கள்.
இது பழக்கத்திற்கு வந்த பிறகு, சும்மா இருக்கும் நேரங்களில் கண்ணை மூடிக்கொண்டு தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் காண முயற்சி செய்யுங்கள்.
.....
*சாதனங்களின் உதவியின்றி செய்யும் பயிற்சி*
பல காரணங்களால் சிலரால் குறிப்பிட்ட நேரங்களிலோ அல்லது ஏதேனும் சாதனங்களின் உதவிகொண்டோ பயிற்சியை செய்வது முடியாததாக இருக்கலாம்.
அத்தகைய மனிதர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
சும்மா இருக்கும் நேரங்களில் (வீட்டிலா, வெளியிலா என்பது பிரச்சினையே அல்ல) தனது மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
மூச்சு பயிற்சி ஏதும் செய்யக்கூடாது. வெறுமனே மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.
மூச்சோடு கலந்து உங்களுக்குப் பிடித்த மந்திரத்தை, மௌனமாக நாக்கும் அசையாமல், சொல்லுங்கள்.
உதாரணமாக உங்களுக்குப் பிடித்த மந்திரம் "ஓம் நமசிவாய" என்றால், மூச்சை உள்ளே இழுக்கும்போது "ஓம்" என்றும், மூச்சை வெளியே விடும்போது "நமசிவாய" என்றும் உச்சரியுங்கள்.
இந்த பயிற்சிக்கு பலன் மிக அதிகம். ஏனெனில், இந்த மந்திரம் நாளடைவில் உணர்வு மனத்திற்கும், ஆழ்மனத்திற்கும் இடையே ஒரு தடுப்பு சுவர்போலச் செயல்படத் தொடங்கும்.
அதன்பின் ஆழ்மனப் பதிவுகள் உணர்வு மனத்தை உசுப்பேத்துவது குறையும்.
அவரவர் விருப்பப்படி பிற மந்திரங்களையும் உபயோகிக்கலாம். உதாரணமாக ---
ஓம் சரவணாய
நமோ நாராயண
ஓ ஜீசஸ்
இதை தொடர்ந்து கடைப்பிடித்தால், இது பழக்கத்திற்கு வந்துவிடும்.
இதுபோன்ற பயிற்சிகள் மனதில் குறிப்பிட்ட பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மனம் சும்மா இருக்கும் வேளைகளில் அங்குமிங்கும் அலைபாய்வது குறையும்.
முடிவுரை
குழந்தை பிறக்கும் போது, அன்பு அதன் இயல்பாக இருக்கும். ஆனாலும், முற்பிறவியின் முடிவில் இருந்த ஆழ்மனப் பதிவுகள் 'பிராரப்த கர்மா' என்ற பெயரில் தொடர்ந்து வருவதால், அன்பு 'தூய அன்பாக' இல்லாமல் மாசுடன் கூடிய அன்பாக இருக்கும்.
மனிதன் தனது சக்தியை புறவுலகில் செலுத்தும்போது, மாசுடன் கூடிய அன்பு பாசமாக, பேராசையாக, காமமாக (அதீத ஆசை) உருவெடுத்து அவனை நிலைகுலையச் செய்துவிடுகிறது.
அதே சக்தி அகவுலகில் நுழைந்தால், அன்போடு கலந்திருந்த மாசு நீங்கி தூய அன்பாக மாறி அவனை கருணை நிரம்பிய மனிதனாக மாற்றி விடுகிறது.
மனிதனிடமிருந்த அன்பு தூய அன்பாக மாறும் பொழுது, அந்த மனிதன் விழிப்புணர்வின் ஆரம்ப நிலையை அடைகிறான்.
அவனிடம் இருந்த விழிப்புணர்வு முழுமை அடையும் பொழுது, அவனது உள்ளம் கருணையால் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.
அவன் மக்களால் மதிக்கப்படும் மகானாக அடையாளம் காணப்படுவான்.
சித்தத்தின் மீது படர்ந்திருந்த பதிவுகள் நீங்கிய காரணத்தால், அவனது ஆழ்மனம் (உணர்வற்ற மனம்) சித்தத்தில் இருந்து நீங்கி விடுகிறது.
('இறந்தார்க்கும்' என்று வள்ளுவர் சொல்வது இவர்களைக் குறித்துத்தான் என நான் எண்ணுகிறேன்)
சித்தத்திலிருந்த மறைப்பு (ஆழ்மனம்) விலகியதால், இறையருள் அவனை சூழ்ந்துகொள்கிறது.
அவனும் உள்ளிருந்து (bliss sheath) பெருகும் ஆனந்தத்தை உணர்ந்து கொள்கிறான்.
"சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடுகிறார் தாயுமானவர்.
"மனமிறக்க ஞானி பிறக்கிறான்" என்று சொல்வதும் இதனால்தான்.
ஆழ்மனம் இறந்த நிலையில், அவனது உணர்வு மனம், தூய அன்பின் காரணமாக கருணையால் நிரம்பி வழிகிறது.
"கருணை பொங்கும் உள்ளம் - அது கடவுள் வாழும் இல்லம்" --கவிஞர் கண்ணதாசன்.