Saturday, 29 August 2026

ஆன்மா

                  ஆன்மா


              முன்னுரை

தலைப்பு "ஆன்மா" என்று இருந்தாலும், இந்தத் தொடர் "மனம்" பற்றியதுதான்.

"சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.‌."
".. தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்"
"ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி.."
என்றெல்லாம் நமது சமய நூல்களில் கூறப்பட்டிருந்தாலும், நம்முள் இருக்கும் இறைவனை/இறை சக்தியை தரிசனம் செய்ய முடியாமல் அல்லது உணர முடியாமல் தடுக்கும் காரணிகள் எவை?

அத்தகையக் காரணிகளை அகற்றுவது எப்படி?

அவற்றை அகற்றி விட்டால், சித்தத்தின் உள்ளிருக்கும் உள்ளொளியைத் தரிசிக்க முடியுமா?

இந்தத் தொடரில் இவற்றைப் பற்றித்தான் ஆராயப் போகிறோம்.

இவற்றில் சமய நூல்களில் இருந்து நான் புரிந்து கொண்டதும், எனது சொந்த ஊகங்களும் கலந்துள்ளன. எனவே நீங்கள் அனுபவித்து உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
..................................................................


                      
நம்மை உள்ளிருந்து இயக்குவது "ஆன்மா" என்கிறார்களே; அப்படியானால் அதைப் பார்க்க முடியுமா? இது ஒரு நண்பரின் கேள்வி.

வாளால் வெட்டமுடியாததும், நெருப்பால் சுடமுடியாததும், நீரால் நனைக்க முடியாததும், காற்றால் உலர்த்த முடியாததுமான ஆன்மாவிற்கு எந்தவித உருவமும் கிடையாது; அதனால் அதைப் பார்க்கவும் முடியாது. ஆனால், அதை உணர முடியும்.

அதற்கு முன்னால் நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது "ஆன்மாவை" உணர்ந்து கொள்ள வேண்டுமானால், அதற்கான வழிகளை மற்றவர்கள் எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஆன்மாவை உணர்வதற்கான முயற்சிகளை நாம்தான் மேற்கொள்ள வேண்டும். 




ஆன்மாவைப் பற்றி எழுதுவதென்றால் நிறைய எழுதலாம். ஆனாலும், நம் புரிதலுக்கு எது தேவையோ அந்த அளவில் நிறுத்திக் கொள்வோம்.

நமக்கு உள்ளே இருப்பதை "ஜீவாத்மா" என்றும், நமக்கு வெளியே "பரமாத்மா" இருக்கிறார் என்றும் சொல்கிறோம். ஏன் இந்த வேறுபாடு?

ஒரு பெரிய மைதானத்தின் நடுவே ஒரு வீடு மட்டும் இருந்தால், பொதுவாக நாம் சொல்வது 'தூரத்தில் ஒரு வீடு தெரிகிறது; சுற்றிலும் வெட்ட வெளியாக (space) இருக்கிறது' என்பதுதான்.
அப்படியானால் வீட்டின் உள்ளே வெட்டவெளி இல்லையா? ஒருவேளை வீட்டின் சுவர் இடிந்துவிட்டால் அது இருந்த இடமும் வெட்டவெளி தானே!

வீடு இருந்ததனால் வெட்டவெளி என்கிறோம். இல்லையெனில் அது வெறும் 'வெளிதான்' (space).

பரமாத்மா மற்றும் ஜீவாத்மா வின் தொடர்பும் இதைப் போன்றதுதான். உடலை விட்டுவிட்டால் அங்கு ஜீவாத்மா இல்லை; இருப்பது பரமாத்மா மட்டுமே. 

சொல்லப்போனால் பரமாத்மா என்று சொல்வது கூட தவறுதான். வெறுமனே "ஆத்மா" தான்; பரம்பொருளின் மறுபெயர் என்றும் சொல்லலாம்.

இந்துக்கள் பரம்பொருள் என்று சொல்வதைத்தான் கிருஸ்தவர்கள் பரமபிதா என்கிறார்கள்; முஸ்லிம்கள் அல்லா என்கிறார்கள். வார்த்தைகள் வேறு வேறாக இருக்கலாம்; அவற்றிற்குப் பொதுவான பெயர் ஒன்று உண்டு .. அதுதான் "இறைவன்". அதனால்தான் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று சொன்ன மாணிக்கவாசகர் எல்லா நாட்டையும் குறிப்பிடும் போது 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று பாடுகிறார்.

ஜீவாத்மா மற்றும் பரமாத்மா என்ற இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொள்வதற்காக, வீடு மற்றும் வெட்டவெளி இரண்டையும் உதாரணமாகக் குறிப்பிட்டோம். ஆனால், அதில் ஒரு மாறுபாடு உள்ளது.

 

மனிதன் இறந்தவுடன் அவனது உடலை விட்டுப் பிரிந்த 'ஜீவாத்மா', வீட்டின் சுவர் இடிந்தவுடன் வீட்டினுள் இருந்து வெளியேறும் வெளி (space) இரண்டையும் ஒப்பிட்டதில் ஒரு மாறுபாடு உள்ளது. 

ஜீவாத்மா உடலை விட்டு வெளியேறினாலும், அது பரமாத்வுடன் இணையாமல் தனியாகவே இருக்கும். மேலே கூறிய உதாரணத்தில் சிறிய மாற்றம் செய்தால், அதை நாம் புரிந்து கொள்ளலாம்.

வீட்டின் சுவர் இடிந்து விழும் சமயத்தில் வீட்டின் உள்ளே இங்கும் அங்குமாக பறந்து கொண்டிருந்த ஒரு பலூன்,  வீட்டை விட்டு வெளியேறினால் வெட்ட வெளியில் அது தனியாகப் பறந்து கொண்டிருக்கும். அதைப்போன்று, உடல் மரித்தபின் உடலிலிருந்து வெளியேறிய ஜீவாத்மா, பரமாத்வுடன் இணையாமல் தனியாகவே பயணிக்கும். காரணம் அது கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாயத் திரையின் உள்ளே இருப்பதுதான்.

உடல் மரித்தாலும் மாயத்திரை கிழிபடாததால் (!) ஜீவாத்மாவால் பரமாத்வுடன் இணைய முடிவதில்லை.

இதைப் பற்றி மேற்கொண்டு நாம் ஆராயப் போவதில்லை. ஏனெனில், நமது நோக்கம் 'ஆன்மாவை' எப்படி உணர்வது என்பது மட்டும்தான்.

கண்ணுக்குப் புலப்படாத மாயத்திரையினால் மூடப்பட்ட ஜீவாத்மாவை நாம் "சித்தம்" என அழைக்கிறோம்.



"சித்தம்" என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

வீட்டில் உள்ள ஒரு குழல் விளக்கை (Tube light) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருப்பது என்ன ?

குழல் விளக்கு கண்ணாடியால் ஆன ஒரு உருவம். விளக்கின் உள்ளே மெர்குரி நீராவியும், ஒரு வகையான வாயுவும் கலந்துள்ளன. மின் இணைப்பு கிடைத்ததும் மெர்குரி ஒளிர்கிறது. அதன் ஒளி அதனை மூடியுள்ள கண்ணாடித் தகடை ஊடுறுவி வெளியே வெளிச்சத்தைக் பாய்ச்சுகிறது.

ஜீவாத்மாவின் இருப்பும் இதைப் போன்றதே. கண்ணுக்குப் புலனாகாத ஒரு மாயத் திரையின் உள்ள ஜீவாத்மா உள்ளது. அதைத்தான் நாம் "ஆன்மா" என்று அழைக்கிறோம்.

அதுதான் மனிதன் இயங்குவதற்கான சக்தியைக் கொடுக்கிறது. அதனில் இருந்து வெளிப்படும் ஒளியானது மனிதனை ஆட்கொண்டு அவனைப் பரவசப் படுத்தக் கூடியது. அதனால்தான்
மாணிக்கவாசகர் இவ்வாறு பாடுகிறார் ..
"..ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மய
தேனினைச் சொரிந்து.."
(.. என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து..)

    


மாணிக்கவாசகர் "உள்ளொளி பெருக்கி" என்கிறார். உள்ளொளி பெருகும் இடம் ஆன்மாதான். ஆனாலும் நேரடியாகப் பொருள் கொள்ளக்கூடாது.


பிரபஞ்சம் முழுவதும் பரம்பொருளின் இறை சக்தி பரவி உள்ளது. அது நாத, விந்து .. அதாவது ஒலியும் ஒளியும் கலந்தது. அதன் ஒரு பகுதிதான் நம்முள் "ஆன்மாவாக" உள்ளது. அதைத்தான் நாம் ஜீவாத்மா என்றும் சொல்கிறோம்.


அது கண்ணுக்குப் புலப்படாத ஒளியால் நிரம்பப் பெற்றது. மேற்கொண்டு பெருக வேண்டிய அவசியமில்லை. ஆனால், மாணிக்கவாசகர் ஏன் "உள்ளொளி பெருக்கி" என்கிறார்?


ஆன்மாவின் ஒளி சித்தத்தின் மாயத் திரையைத் தாண்டி பெருக்கெடுத்து தன்னைப் பரவசப்படுத்த வேண்டும் என்கிறார். அதனை 'அழியாத ஆனந்தமயத் தேன்' என்கிறார்.


அப்படியானால், இந்தப் பாடலைப் பாடும் பொழுது 'உள்ளொளி' பெருக்கெடுத்து அவரை ஆட்கொள்ள வில்லையா? அல்லது, நம்மை மனதில் கொண்டு நமக்காக அந்த வேண்டுதலை வைத்தாரா?


எது எப்படியோ, 'ஆன்மாவின் உள்ளொளி' சித்தத்திற்கு வெளியே பெருக்கெடுத்து நம்மைப் பரவசப்படுத்த விடாமல் தடுப்பது எது?


    

நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பலவிதமான அனுபவங்களையும் உள்வாங்கிக் கொள்ளும் பொழுது, அவை நமது சித்தத்தின் மீது பதிந்து விடுகின்றன. அவைகளை 'வினைப் பயன்கள்' என்றும் சொல்வார்கள்.


சித்தத்தின் மீது பதிவுகள் ஏற்படும் பொழுது, அதனை ஆழ்மனம் (sub-conscious mind) என்று கூறுகிறோம். அதை உணர்வற்ற மனம் (unconscious mind) என்றும் சொல்வதுண்டு.


அவை நல்வினைப் பயன்களாகவும் இருக்கலாம்; தீவினைப் பயன்களாகவும் இருக்கலாம். இந்த இருவினைப் பதிவுகளின் எண்ணிக்கை கூடக்கூட, நமது மனதில் எழும் 'அஹங்காரம்' அதிக அழுத்தம் பெற்று விடுகிறது.

அதன் காரணமாக சித்தத்தின் உள்ளிருந்து வரக்கூடிய ஒளியை நம்மால் உணர முடிவதில்லை.


அதனால்தான் வள்ளுவரும்  "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" எனக் கூறுகிறார்.

  


ஆழ்மனப் பதிவுகளின் செயல்பாடு, மேகக் கூட்டத்தின் செயல்பாட்டைப் போன்றதுதான்.


மேகங்கள் ஒன்றுகூடி சூரியனை மறைத்தால் சூரியன் கண்ணுக்குத் தெரியாது; ஆனால், மேகங்கள் இல்லாத போது சூரியனின் வெளிச்சத்தைக் காண முடியும். மேகக் கூட்டத்தின் வீச்சும், அடர்த்தியும் அதிகமாக இருந்தால், சூரியன் இருப்பதையே நம்மால் உணர முடியாது.


அதேபோல், ஆழ்மனப் பதிவுகள் அதிகமாக, அதிகமாக நம்மால் சித்தத்தின் உள்ளொளியை நம்புவதுகூட கடினமாகி விடும்.


ஆழ்மனப் பதிவுகள் அதிகமாகும் பொழுது நமது "நான்" என்கிற எண்ணமும் வலுப்பெற்று விடும். கூடவே "என்னுடைய" என்பதில் உள்ள எண்ணிக்கையும், அவற்றின்பால் உள்ள பற்றும் (attachment) அதிகரித்து விடும். நம்மிடம் உள்ளொளி பற்றிய எந்த எண்ணமும் இருக்காது.


ஆன்மாவில் ததும்பும் உள்ளொளியை உணர வேண்டுமானால், "நான்" மற்றும் "என்னுடைய" என்ற இரண்டும் நம்மை விட்டு விலக வேண்டும்.


    


ஆழ்மனதில் உள்ள பதிவுகளின் காரணமாக உருவாகும் "நான்" என்ற அஹங்காரம், அதைத் தொடர்ந்து ஏற்படும் "என்னுடைய" என்ற பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக களைவதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் நல்ல பலன்களைக் காண முடியும்.


"நான்" மற்றும் "என்னுடைய" என்கின்ற இரண்டும் நீங்கும் பொழுது, ஆன்மாவை உணர்ந்து கொள்வது எப்படி நடைபெறும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.


ஆன்மாவை .. இறை சக்தியை மூன்று விதமாக உணர முடியும் என்பது எனது கருத்து. இது சான்றோர்கள் மற்றும் ஞானியர்களின் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கலாம். ஒரு சாதாரண மனிதனாக எனது கருத்தைச் சொல்கிறேன்.




எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை மூன்று வழிகளில் அறிந்து கொள்ளலாம் என்கிறார் ரிஷி பதஞ்சலி. அவை ..

1. பிரத்தியட்சம்:- நேரடி அறிவு. புலன்களின் உதவியின்றி நேரடியாக அறிந்து கொள்வது.

2. அனுமானம்:- ஊக அறிவு. ஊகித்து அறிந்து கொள்வது.

3. ஆகமம்:- சான்றோர் வாய்மொழி மூலம் அறிந்து கொள்வது.


ஆன்மாவைப் பற்றியும் ஆன்ம ஒளி பற்றியும் சித்தர்களும், ஞானிகளும் நிறைய சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் மற்றும் ஞானிகளின் பாடல்களை சான்றோர்கள் விளக்கிச் சொல்வதைத் கேட்டு ஆன்மாவைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்ள விரும்பினால், அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டால் மட்டுமே நம்மால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். அதற்கான வழி என்ன என்று பார்ப்போம்.


அதற்கான முயற்சியில் வெற்றி பெரும் பொழுது, 'உள்ளார்ந்த மன அமைதி' (inner-peace) மற்றும் 'நிரந்தரமான ஆனந்தம்' (eternal bliss) ஆகிய இரண்டையும் ஊக அறிவால் உணர்ந்து கொள்ளலாம்.


இந்த இரண்டு உணர்வுகளும் ஏற்படும் இடம் ஆழ்மனம்தான். அங்கு முதலில் வருவது 'உள்ளார்ந்த மன அமைதி' என்றால் இறுதியில் வருவது 'நிரந்தரமான ஆனந்தம்'. இவை இரண்டிற்கும் இடையே வேறு சில நிகழ்வுகளும் நடக்கலாம். நாம் அதைப்பற்றி ஆராயப் போவதில்லை.


மூன்றாவதாக வருவது 'ஆன்ம ஒளி'. அது புலன்களின் உதவியின்றி நேரடியாக அறியக்கூடிய ஒன்று. 


ஒரு மனிதனின் குண்டலினி சக்தி சகசிரதளத்தை அடைகிற பொழுது, கூடவே இறையருளும் இருந்தால், அந்தக் காட்சி காணக் கிடைக்கும்.


நாம் சாதாரண மனிதர்கள். எனவே முதலில் சொல்லப்பட்ட இரண்டு விஷயங்களைப் (புரிதல் மற்றும் புரிதலினால் வரும் ஊகம்) பற்றி சிறிது சிந்திப்போம்.


 


காலையில் பொழுது விடிந்தவுடன் வீட்டிற்குள் வெளிச்சம் பரவுவதைத் பார்க்கிறோம். சூரியன் அடிவானத்தில் இருந்து வெளியே வந்துவிட்டது; அதனின்று புறப்பட்ட ஒளி வீட்டிற்குள் வெளிச்சத்தைக் தருகிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.


மேகக் கூட்டங்கள் சூரியனை மறைத்திருந்தாலோ, வீட்டின் ஐன்னல் கதவுகள் சாத்தியிருந்தாலோ வீட்டிற்குள் வெளிச்சம் வராது என்பதும் நமக்குத் தெரியும்.


சூரியன், மேகக் கூட்டங்கள், ஜன்னல் எல்லாமே பொருட்கள். எல்லாமே நம்மால் காணக்கூடியவை. எனவே வீட்டிற்குள் வெளிச்சம் வருவதற்கான காரணம் நம்மால் புரியக் கூடியதுதான்.


ஆனால், ஆன்மா என்பது பொருளல்ல; எனவே அதிலிருந்து பரவும் சூட்சும ஒளியை உணரத்தான் முடியும்.


ஆன்மா ஒளியை தரிசிக்கும் நிகழ்வு நமது 'குண்டலினி' சக்தி 'சகசிரதளத்தை' அடையும் பொழுது நிகழக் கூடிய ஒன்று. அது இறையருள் இருந்தால் மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வு.


நம்மைப் பொறுத்தவரை முதலில் சொன்ன இரண்டும் 

.. உள்ளார்ந்த அமைதி (inner- peace), நிரந்தரமான ஆனந்தம் (eternal bliss) .. நமக்கு கைகூடினால் நமது வாழ்க்கை நல்ல முறையில் முற்றுப் பெற்றது என்பதை உணர்ந்து கொள்வோம். 

    


ஆன்மாவின் ஒளியை உணர்வதற்கு ஒவ்வொரு மார்க்கத்திலும் நாம் என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம். 


முதலில் 'தியான மார்க்கம்'.

தியான மார்க்கத்தை எட்டு அங்கங்களாகப் பிரித்துள்ளார்கள்.


இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம் ஆகியவற்றை ஒரு பகுதியாகவும், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை மற்றொரு பகுதியாகவும் பிரித்துள்ளார்கள்.


ப்ரத்யாஹாரம் என்பது இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பாலம் போன்றது.


தியானப் பயிற்சியில் ஈடுபடும் அனைவரும் 'மன அமைதி' பெறுகிறார்களா என்றால் அது சந்தேகம்தான். மன அமைதியே இல்லாதபோது 'நிரந்தரமான ஆனந்தத்தை' எப்போது உணர்வார்கள்?


இந்த இடர்பாடு பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் என எல்லாவற்றிலும் உண்டு. அவற்றின் காரணத்தை சிறிது ஆராய்வோம்.


இந்த இடர்பாடு ஏற்படுவதற்கான காரணம் எதுவென்று தெரிந்தால், அதைத் தீர்ப்பதற்கான விடையையும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?


இயமம், நியமம் இரண்டிலும் வாழ்வியல் அற நெறிகளை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சொன்ன பதஞ்சலி முனிவர், அடுத்து ஆசனம், பிரணாயாமம் பற்றி எடுத்துரைக்கிறார்.


இந்த நான்கு அங்கங்களின் பயிற்சிகளும் உணர்வு மனதின் வெளியே புறவுலகில் நடைபெறக்கூடியவை.


இந்த நான்கு அங்கங்களையும் முறையாகப் பின்பற்றினால் உணர்வு மனம் அமைதியாகி விடும். அத்துடன் உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவு எடுக்காமல் புத்தியைக் கலந்தாலோசித்து செயல்படும் பக்குவத்தையும் அடைந்துவிடும்.


இதுவே போதுமானது என்ற மனநிலைக்கு மனிதன் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இது போதாது என்கிறார் ரிஷி பதஞ்சலி. மனிதன் அகவுலகில் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன என வலியுறுத்துகிறார்.


அதற்காக 'ப்ரத்யாஹாரம்' என்ற அங்கத்தைப் பற்றிச் சொல்லி, மனிதனை அகவுலகில் பிரவேசிக்கத் தூண்டுகிறார்.


இந்த இடத்தில் ஒரு முக்கியமான சூத்திரத்தைக் குறிப்பிடுகிறார். 

"தத்: க்ஷியதே ப்ரகாசாவரணம்"(பின்பு ஒளியைத் தடுத்துள்ள மறைப்பை அகற்றுவது வருகிறது)


இந்த சூத்திரத்தில் 'அகவுலகில்' எதற்காகப் பிரவேசிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைச் சொல்லுகிறார். 


தியானத்தில் ஈடுபடுபவர்கள் அவர் சொல்லும் காரணத்தின் முழு ஆழத்தையும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.


இந்த சூத்திரத்தில் உள்ள மூன்று வார்த்தைகளைக் கொஞ்சம் ஆராய வேண்டும். அவை .."ஒளி, மறைப்பு, அகற்றுவது".


'ஒளி' என்பது ஆன்மாவின் ஒளியைக் குறிக்கிறது. "ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி" எனப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.


'மறைப்பு' .. உள்ளே இருக்கும் ஒளி சித்தத்தின் ஊடுருவி வெளியே வரும் பொழுது, நமக்கு நிரந்தரமான ஆனந்தம் கிட்டும்; ஆனால், அந்த ஒளியை வெளியே வரவிடாமல் தடுக்கும் 'மறைப்பு' எது? சித்தத்தின் மேல் படர்ந்திருக்கும் 'ஆழ்மனப் பதிவுகள்தான்' உள்ளொளியை வெளியே வரவிடாமல் தடுக்கின்றன.


'அகற்றுவது' .. தியானம் செய்வதின் முக்கிய நோக்கமே ஆழ்மனதில் படிந்துள்ளப் பதிவுகளை நீக்குவதுதான்.


சூரியன் தனது ஒளிக் கதிர்களை எல்லாத் திசைகளிலும் பரப்புகிறது. நாம் வீட்டிலுள்ள ஜன்னல்களை மூடி வைத்துவிட்டு, என் வீட்டிற்குள் வெளிச்சம் வரவில்லை என்றால் அதை சரியென்று சொல்ல முடியுமா? ஜன்னல்களைத் திறக்காதது நம் தவறுதானே!? ஜன்னல்களைத் திறந்தாலேப் போதும்; சூரிய ஒளியை "உள்ளே வா" என்று அழைக்க வேண்டியதில்லை.


ஆன்மா ஒளியும் 'மின்காந்த அலைகள்' போன்று சித்தத்தில் உள்ள மாயத்திரையை ஊடுருவி நமது உடல் முழுவதும் பரவி நமக்கு 'எல்லையற்றப் பரவசத்தை' ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால், அதற்குத் தடையாக இருப்பது நமது சித்தத்தின் மேல் படிந்துள்ள ஆழ்மனப் பதிவுகளே. நம்மால் ஏற்படுத்தப்பட்ட ஆழ்மனப் பதிவுகளே, நமக்குள் இருக்கும் உள்ளொளியை உணர விடாமல் தடுக்கும் மறைப்பாகச் செயல்படுகின்றன.


இந்த மறைப்பை நீக்குவதற்காக நாம் செய்யும் பயிற்சியே 'தியானம்' எனப்படும்.


ஆழ்மனப் பதிவுகள் என்று எதைச் சொல்கிறோம்? நாம் செய்யும் 'தியானம்' சித்தத்தில் படர்ந்துள்ள மறைப்பை அகற்றுகிறதா? இல்லையெனில் அதற்கானக் காரணங்கள் என்ன?


 

ஒரு மனிதன் பிறக்கும் போது அவனது முற்பிறவி முடியும் தருவாயில் எஞ்சியிருந்த ஆழ்மனப் பதிவுகளுடனேயேப் பிறக்கிறான் எனச் சமய நூல்கள் சொல்கின்றன.


இந்தப் பிறவியில் ஆசையின் காரணமாக அவன் செயல்படும்போது, அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மேலும் மேலும் ஆசைகளைத் தூண்டி விடுகின்றன. உணர்வு மனதில் உள்ள ஆசைகள் தீவிரமடையும்போது, அவை ஆழ்மனதில் புதிய பதிவுகளை ஏற்படுத்துகின்றன.


ஆழ்மனப் பதிவுகள் பெரும்பாலும் பாசம், பேராசை மற்றும் காமம் சம்பந்தப் பட்டதாகவே இருக்கும்.


இத்துடன் கூடவே, அவனது எதிர்பார்ப்பிற்கு மாறாக சம்பவங்கள் நடக்கும்போது ஆழ்மனதில் கோபம், வெறுப்பு, விரக்தி, பழியுணர்ச்சி போன்ற பல எதிர்மறை உணர்வுகளும் பதிவாகும்.


இந்த ஆழ்மனப் பதிவுகளைத்தான் 'ஆணவ மலம்' என்றும், வடமொழியில் 'வாசனா' என்றும் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்துதான் ஒரு மனிதனின் 'அஹங்காரம்' உருவெடுக்கிறது.


கூடிநிற்கும் மேகக் கூட்டங்கள் சூரியனின் ஒளியை மறைத்து நிற்பது போல், ஆழ்மனப் பதிவுகள் ஆன்மாவின் உள்ளொளியை நாம் உணர முடியாமல் ஒரு 'மறைப்பை' ஏற்படுத்தி விடுகின்றன.


நாம் 'தியானம்' செய்வதின் நோக்கம், ஆழ்மனப் பதிவுகள் ஏற்படுத்தும் 'மறைப்பை' அகற்றுவதாக இருக்க வேண்டும். 


   


நமக்கு தியானம் செய்வதற்கு பல விதமான நோக்கங்கள் இருக்கலாம். எந்த நோக்கமாக இருந்தாலும், ஆழ்மனப் பதிவுகள் குறையவில்லை என்றால் தியானம் செய்வதன் பயனை நாம் முழுமையாக அடையவில்லை என்பதுதான் உண்மை.


தாரணை, தியானம், சமாதி என்ற மூன்றினுள், 'சமாதி' கைகூடுவது நமது கையில் இல்லை; அது இறையருளைப் பொறுத்தது.


தியானம் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று என்றால், அதற்காக நாம் செய்யும் முயற்சிகளைத் தாரணை என்று சொல்லலாம்.


தாரணையில் நாம் நமது சிந்தனையை ஒரே ஓர் பொருளின் மீது நிலை நிறுத்த முயற்சிக்கிறோம். அதில் தேர்ச்சி பெற்றபின் அந்த ஒரு பொருளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவதைத் தியானம் என்று சொல்கிறோம். 


ஆனால், குறிப்பிட்டப் பொருளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் மனம் எங்கோ ஓடிவிடுகிறதே! அதற்கானக் காரணம் என்ன?


   


நமது முன்னோர்கள் மனதை நுண்ணுடல் என்று சொல்கிறார்கள். உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல் படுவதால் உடலை பருவுடல் என்றும், மனதை நுண்ணுடல் என்றும் சொல்கிறார்கள்.


ஆனால், மனம் உண்மையில் இரண்டு இடங்களில் செயல்படுகிறது.


மனம் உடலோடு இணைந்து புறவுலகில் செயல்படும் பொழுது, அதனை உணர்வு மனம் (conscious mind) என்று அழைக்கிறோம். அதே மனம் அகவுலகில் சித்தத்தின் மேல் பாசம், பேராசை எனப் பல வகைகளில் பரவி நிற்கும்போது அதனை உணர்வற்ற மனம்/ஆழ்மனம் (unconscious mind/ sub-conscious mind) என அழைக்கிறோம்.


மனதிற்கு அகம், புறம் என இரண்டு பகுதிகள் உண்டா என சந்தேகம் வரலாம். திருக்குறள் 786-ஐப் பாருங்கள். ..

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" என்கிறார் வள்ளுவர்.

நெஞ்சம் என்றால் மனம். 'நெஞ்சத்து அகம்' என்று அவர் சொல்வதால், 'நெஞ்சத்து புறம்' என ஒன்று இருக்கும்தானே!?

   



ஒரே பொருளின் மீது கவனத்தைக் குவிப்பதை "தாரணை" என்று சொல்கிறார்கள். அதன் நோக்கம் மற்றவற்றின் மீது நமக்கிருக்கும் ஈர்ப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.


"தாரணை" மூலம் நமது முயற்சியில் வெற்றியடைந்ததும், நாம் "தியானப் பயிற்சி" செய்ய ஆரம்பிக்கிறோம். ஆனால், பலருக்கு அதில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போய் விடுகிறது என்பதும் உண்மைதானே!? அதற்கான காரணம் என்ன?


தியானம் அகவுலகில் நடைபெறுகிறது; ஆனால், நாம் கவனம் செலுத்தும் பொருள் புறவுலகில் இருக்கிறது என்ற நிலை இருந்தால் தியானம் தோல்வியில்தான் முடியும்.


தியானப் பயிற்சி வெற்றியடைய வேண்டுமென்றால் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன ..

1. நாம் தியானிக்கும் பொருள் புறவுலகில் இருந்தாலும், அதை அகவுலகில் மட்டும் காண வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மனம் குறிப்பிட்டப் பொருள் சார்ந்த புறவுலகிற்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. நாம் அகவுலகில் இருக்கும் உருவமற்ற ஒன்றில் கவனத்தைக் குவித்தது "தியானம்" செய்யலாம். ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம், அனாகதச் சக்கரம் என இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தி தியானம் செய்யலாம்.

ஆக்ஞா சக்கரம் புருவ மத்தியில் உள்ளது. ஆனால் நாம் அதனை உடலுக்கு வெளியே இருப்பதாக நினைக்கக் கூடாது. புருவ மத்தியின் உட்புறம் கவனத்தை செலுத்த வேண்டும். இந்த வழி நல்ல பலனைத் தரும்.


தியானம் நன்கு செயல்பட்டால், உள்ளொளி யின் பெருக்கத்தை உணர முடியும். அது என்னவென்று பின்னர் பார்ப்போம்.

      


தியானம் முறையாகச் செய்வது எப்படி என்று பார்த்தோம். இப்போது, ஞான மார்க்கத்தில் நமது பயிற்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பார்ப்போம்.


ஞான மார்க்கத்தில் வெற்றி அடைய, அதற்குத் தீவிரமான மற்றும் முழுமையான முயற்சி இருக்க வேண்டும்.

அத்துடன் சுயமாக ஆராய்ந்து பார்க்கும் தெளிவும் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவித முன்முடிவிற்கும் இடம் கொடுக்கக்கூடாது.


"கற்க கசடற.." என வள்ளுவர் கூறுகிறார். முதலில் எதனைக் கற்க வேண்டுமோ அதனை 'ஐயம் திரிபு அற' கற்க வேண்டும். கற்றலில் எந்தவித சந்தேகமும் இருக்கக்கூடாது. ஒரு உதாரணம் பார்த்து விடுவோம்.


 "அந்தணர் என்போர் அறவோர்.." என வள்ளுவர் குறிப்பிடுகிறார். உடனே 'அந்தணர் மட்டுமே அறவழியில் நடப்பவர்கள்' எனப் பொருள் கொள்ளக்கூடாது. 'அறவழியில் நடப்பவர்கள் அனைவரும் அந்தணர்களே' எனப் பொருள் கொள்ள வேண்டும்.


 


நாம் கேட்டது, படித்தது எதுவாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள மெய்ப்பொருளை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகப் படிக்கக் கூடாது. ஒரு உதாரணம் ..

"சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும் .." -- சிறப்பு என்று சொன்ன வள்ளுவர், செல்வம் என்று சொல்லாமல் 'செல்வமும்' என்று ஏன் சொன்னார்?


அறவழியில் நடந்தால் சிறப்பு உன்னைத் தேடி வரும் என்கிறார் வள்ளுவர். நாம் 'அப்படியானால் செல்வம் வராதா' எனக் கேட்டால் செல்வமும் வரும் என்கிறார். இதன் பொருள் என்ன ? செல்வத்தை விட 'சிறப்பே' சிறந்தது என வலியுறுத்துகிறார் வள்ளுவர். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் 'அறவழியில் நடந்தால் சிறப்பும் வரும், செல்வமும் வரும்' என நினைத்தால் அது தவறல்லவா?


இதையெல்லாம் சரியாகக் கடைப்பிடித்தபின், நாம் கவனம் செலுத்த வேண்டியது 'அகத்தாய்வு' (சுய பரிசோதனை).

    


அகத்தாய்வில் முக்கிய பங்கு வகிப்பது 'சுய-பரிசோதனை' (introspection).

சுய-பரிசோதனையில் நாம் எதிலெல்லாம் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறோம் எனக் கண்டு பிடிக்க வேண்டும்       (Detection).


நமக்கு மாலை வேளைகளில் கடைத்தெருவில் ஒரு மணி நேரம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பழக்கம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அது நமது ஆன்மிகப் பயணத்திற்கு எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை எனத் தெரிந்ததும் அந்தப் பழக்கத்தை விட்டுவிடத் தயங்கக் கூடாது (negation).


அந்தப் பழக்கத்தை விட்டு விடுவதோடு நமது கடமை முடிந்து விடாது; நாம் அந்த நேரத்தை நமது ஆன்மிக

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.(Substitution).

   


ஞானத்தைத் தேடும் பயணத்தில் நாம் மூன்று நிலைகளில் மாறி, மாறி பயணம் செய்ய வேண்டும்.


அவற்றை 'கேட்டல், சிந்தித்தல் மற்றும் தெளிதல்' எனச் சொல்வார்கள். இதனை வடமொழியில் "Sravana, Manana and Nididhyasana" என்று சொல்வார்கள்.


சைவத்தில் சரியை, கிரியை, யோகம் என மூன்று வழிகளில் நாம் செயல்பட வேண்டும் என்பார்கள். ஞான வேட்கையைப் பொறுத்தவரை 'கேட்டல்' என்பதை ஞானத்தில் சரியை

என்றும், 'சிந்தித்தல்' என்பதை ஞானத்தில் கிரியை என்றும், 'தெளிதல்' என்பதை ஞானத்தில் யோகம் என்றும் சொல்வார்கள்.


'கேட்டல்' என்று சொல்லும் பொழுது, அதில் 'பார்த்தல்' மற்றும் 'படித்தல்' என்பனவும் அடங்கும்.


ஆக, நாம் பல வழிகளில் ஞானம் பற்றிய நெறிமுறைகளை அறிந்திருப்போம். அறிந்தபின் அவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.


அதில் சந்தேகம் எழுந்தால், தக்க சான்றோரைப் பார்த்து உரிய விளக்கங்களைக் கேட்டுப் பெறவேண்டும்.


அதன்பின் நாம் அறிந்து கொண்ட உண்மைகளை எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை 'தெளிதல்' என்று சொல்கிறார்கள்.


திருமூலர் இன்னும் ஒரு படி மேலே போய் 'தெள்ளத் தெளிதல்' வேண்டும் என்பார்.

 


ஞானம் என்றால் என்ன என்று முதல் முறையாகத் தெரிந்ததும், நாம் கற்றவற்றை மீண்டும் மீண்டும் அசைபோட வேண்டும். அந்த சமயங்களில் நமக்கு நிறைய சந்தேகங்கள் வரலாம்.


அவற்றைப் பற்றி ஆழமாக சிந்தித்து, நமக்குள்ளேயே விடையைத் தேட வேண்டும். இந்தப் பழக்கம் நமக்கு நல்ல பலனைத் தரும். 


நமக்குள்ளேயே விடையைத் தேடுவதால் மனம் புறவுலகில் சஞ்சரிப்பது குறையும். ஆழ்மனதில் இருந்து நமது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் தேவையற்றப் பதிவுகள் நலிவடையத் துவங்கும்.


நமது சந்தேகங்களுக்கு உடனே விடை கிடைக்காவிட்டால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். வேறொரு நாள் விடை தானாகத் தோன்றும்.


நமக்குள்ளேயே சிந்தித்து விடை தேடுவதை, ரிஷி பதஞ்சலி 'சவிசாரம்' எனக் கூறுகிறார்.


'சுயமாக சிந்திக்கும்' பழக்கம் இருந்தால் மட்டுமே, உள்ளத்தில் ஞானம் பற்றிய 'தெளிவு' பிறக்கும்.


       


ஞான மார்க்கத்தில் பயணம் செய்வது எனத் தீர்மானித்து விட்டால், நாம் மேற்கொண்டிருக்கும் கருத்துதான் சரியென எண்ணக்கூடாது.


நாம் வைத்திருக்கும் கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்து இருப்பது தெரிந்தால், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதனைப் புறந்தள்ளக் கூடாது.


ஆராய்ந்து பார்த்தபின் அந்தக் கருத்து சரியெனத் தோன்றினால், அதனை ஏற்றுக் கொள்ளத் தயங்கக் கூடாது.


பிறரது கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் நமக்குப் பிடிக்கவில்லை என்றால், நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்; ஆனால், அவற்றை பொய் என்று சொல்லக்கூடாது.


எந்தவிதக் கருத்தாக இருந்தாலும், அது தவறெனத் தோன்றினால் மாறுபட்ட கோணங்களில் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.


ஞான மார்க்கத்தில் பயணிக்கும்போது, எல்லைக் கோட்டை எப்போது அடைவோம் என்ற எண்ணம் வரவே கூடாது. அது நமது முயற்சியில் தளர்வை உண்டாக்கி விடும்.




'கர்ம மார்க்கம்' என்றால் என்ன? 'பலனை எதிர்பார்க்காமல், நமது கடமைகளை நிறைவேற்றுவதுதான் கர்ம மார்க்கம்' என பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.


இதில் மூன்று கருத்துக்கள் உள்ளடங்கி உள்ளன:-

1. கர்மாவைச் செய், அதனால் ஏற்படப் போகும் விளைவு (result) இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்காதே எனப் பொருள் கொள்ளலாம்.

2. கர்மாவைச் செய், அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என எதிர்பார்க்காதே எனவும் பொருள் கொள்ளலாம்.

3. கர்மாவைச் செய் என்பது நிகழ்காலத்தைக் குறிக்கிறது; எதிர்பார்க்காதே என்பது எதிர் காலத்தைக் குறிக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என சிந்திக்க ஆரம்பித்தால், மனம் பலவற்றையும் நினைக்கக் கூடும். அதனால் நாம் செய்ய வேண்டிய வேலையில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாது. அதனால்தான் கடமையில் மட்டும் கவனம் செலுத்து என்கிறார்.                                                 (Be present, in the 'present').


பலர் 'கர்ம மார்க்கம்' என்பது, பொது வாழ்க்கையில் ஈடு படுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்கிறார்கள்.

பொது வாழ்க்கையில் இருந்து விலகி, இல்லற வாழ்வில் இருப்பவர்களும் 'கர்ம மார்க்கத்தை' கடைப்பிடிக்க முடியும் என்று நான் நினைப்பதுண்டு.

குடும்பத்தில் எந்த செயல் செய்தாலும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்தால், அதுவும் கர்ம மார்க்கம்தான்.

யாருக்காவது உதவி செய்கிறோம். அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து நன்றியையோ, விசுவாசத்தையோ எதிர்பார்க்காமல் இருந்தால் அது கர்ம மார்க்கத்தான்.

அவ்வளவு ஏன்? பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம்; நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்றால் நமக்கு பெருமைதானே என்றெல்லாம் நினைக்காமல், எங்களுக்குப் பிறந்த பிள்ளைகள், முடிந்த அளவிற்குப் படிக்க வைக்க வேண்டியது எங்களின் கடமை என்ற அளவோடு நிறுத்திக் கொண்டால், அதுவும் கர்ம மார்க்கந்தான்.


திருநாவுக்கரசர் தேவாரத்தில் இவ்வாறு பாடுகிறார் ..

".. தன் கடன் அடியேனையும் தாங்குதல்  

என் கடன் பணி செய்து கிடப்பதே".

(உனது கடன் என்னைப் பார்த்துக் கொள்வது; என் கடன் எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அதுதான் அடியவர்களின் வேலை)

 

எந்தப் பணி செய்தாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய முடிந்தால், நாமும் "கர்ம மார்க்கத்தில்" இருக்கிறோம் என எடுத்துக் கொள்ளலாம்.


'பக்தி மார்க்கம்' கடைப்பிடிக்க மிகவும் எளிதானது. ஆனால், இறைவனிடம் 'சரணாகதி' அடையும் பக்குவம் இருந்தால் மட்டுமே அது பலன் தரும்.

 'சரணாகதி' எப்படி இருக்க வேண்டும்? மாணிக்கவாசகர் சொல்கிறார் ...

"வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!

.... .... .... .... ....

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?"


நமக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்துவிட்டு அதற்கானப் பலன்களை இறைவனது பொறுப்பில் விட்டு விட்டால், அதுவே 'சரணாகதி' எனக் கொள்ளலாம்.


இந்த மார்க்கங்கள் தவிர, மனம் பக்குவம் அடைவதற்கு அதாவது மனம் அமைதியை அடைவதற்கு வேறு பல வழிகளும் உள்ளன. நமக்குப் பொருத்தமான வழியைக் கண்டுபிடித்து, அதை முறையாகக் கடைப்பிடித்தாலும் மனதை பக்குவம் அடையச் செய்யலாம்.

    


ஆன்மாவைப் நேரில் பார்க்க முடியாது; ஏனெனில் அதற்கென்று உருவம் எதுவும் கிடையாது. அது ஒளியால் நிரம்பப் பெற்றது. அதை தரிசனம் செய்த மகான்கள் பலருண்டு.


நாம் சாதாரண மனிதர்கள்; நாம் அதை உணர்வது எப்படி என்பதைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்வோம்.


உணர்வது என்றால் ஐம்புலன் கருவிகளின் துணைகொண்டு உணர்வது என எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஊகத்தின் மூலம் அறிந்து கொள்வது.


முதலாவதாக நமக்கு அதைப் பற்றிய புரிதல் வேண்டும். பின் உண்மைத் தன்மையை எளிதாக ஊகித்து அறிந்து கொள்ளலாம்.


ஓஷோ சொன்ன முல்லாவின் கதை.. நண்பர் ஒருவர் முல்லாவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்பொழுது முல்லா அவரது பையனுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். நண்பரை வரவேற்ற முல்லா 'பையனுடன் பேசிக்கொண்டிருங்கள், தேநீர் போட்டு கொண்டு வருகிறேன்' என்றார். நண்பர் 'இவனுடைய அம்மா இல்லையா' எனக் கேட்டதற்கு 'அவள் சமையலில் மும்முரமாக இருக்கிறாள்; நானே தேநீர் போட்டு கொண்டு வருகிறேன்' என்றார்.


அவர் சமையலறைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில், சமையலறையில் ஏதோ கீழே விழுந்தது நொறுங்கிய சத்தம் கேட்டது. நண்பர் பதறிப் போனார்.


முல்லாவின் மகன் 'ஒன்றுமில்லை, அம்மா எதையோ கைதவறிக் கீழே போட்டுவிட்டாள்' என்றான்.


நண்பருக்கு ஒரே ஆச்சரியம். 'எப்படி அம்மா என்று சொல்கிறாய்' என நண்பர் கேட்க, 'அப்பா கீழே போட்டிருந்தால், இந்நேரம் அம்மா அப்பாவை திட்டியிருப்பாளே' என சர்வ சாதாரணமாகக் கூறினான்.


அவனுக்கு இதைப்போல பல சம்பவங்களைப் பார்த்ததால் ஒரு புரிதல் இருந்தது; அதனால் எளிதாக உண்மைத் தன்மையை உணர முடிந்தது.

முல்லாவின் பையனைப் பொறுத்தவரை புரிந்து கொள்வதற்கான அனுபவங்களும், ஊகிப்பதற்கான நிகழ்வும் புறவுலகில் நடந்தன.


ஆனால், நமக்கோ புரிதல், ஊகம் எல்லாமே அகவுலகம் சார்ந்தவை. எனவே புரிதல் பற்றிய விபரங்களை சான்றோர் சொல்வதைத் கேட்டு அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதில் பிரச்சினை என்னவென்றால் சான்றோர் சொல்வதை நாம் தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு.


ஒரு சீடன் தன் குருவிடம் 'எனக்கு எப்போது மன அமைதி கிடைக்கும்' எனக் கேட்டான். குரு அவனிடம் 'நான்' இருக்கும் வரை உனக்கு மன அமைதி கிடைக்காது' என்றார். சீடன் 'குருவே, நீங்கள் இருப்பதற்கும் எனது மன அமைதிக்கும் என்ன சம்பந்தம்' எனக் கேட்க, குருவோ சிரித்துக் கொண்டே 'உன்னிடத்தில் "நான்" என்ற அஹங்காரம் இருக்கும்வரை மன அமைதி கிட்டாது' என்றார்.


பத்திரகிரியார் இவ்வாறு பாடுகிறார்: ".. மாண்டு விடும் முன்னே 'நான்' மாண்டிருப்ப தெக்காலம்?".


இனி உணர்தல் எப்படி நடைபெறுகிறது என்று பார்ப்போம்.


    


'அஹங்காரம்' என்ற வார்த்தை ஒரு மனிதனின் தன்முனைப்பைக் குறிப்பது. அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.


முதலாவதாக 'தன்முனைப்பு' இருப்பதையே அறியாத நிலை (Non-recogonition of ego). இந்த நிலை மனிதர்கள் சுயமாக சிந்தித்துப் செயல்பட மாட்டார்கள். யாராவது உசுப்பி விட்டால் ஆவேசமாகச் செயலில் இறங்குவார்கள். தவறான மனிதர்களின் கைப்பாவையாக மாறும்போது, இவர்களால் சமூகத்திற்கு கெடுதல்தான் நடக்கும்.


இரண்டாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு உத்வேகத்துடன் இருக்கும் (inflated ego). அதன் காரணமாக செயல் புரிவதில் தீவிரமான ஆர்வம் காட்டுவார்கள். செயல் புரிந்து எதிர்பார்த்த விளைவும் கிடைத்துவிட்டால், தன்முனைப்பு நிறைந்த மனிதன், கர்வம் கொண்ட மனிதனாக மாறிவிடும் ஆபத்தும் உண்டு.


மூன்றாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு குறைந்து காணப்படும் (sublimated ego). எனவே இவர்களிடம் செயலூக்கம் எதுவும் இருக்காது.


நான்காவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு எதுவும் இருக்காது. இவர்களின் குண்டலினி சக்தி சகசிரதளத்தின் வாசலில் இறையருளை நாடி நிற்கும். இந்த நிலை மனிதர்களுக்கே உள்ளொளியைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


முன்னர் சொன்ன நான்கு மார்க்கங்கள் வழியாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியாகவோ முறையாக, முழுமூச்சுடன் பயிற்சி செய்து வந்தால் சில வாழ்வியல் உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.


'முழுமூச்சுடன்' என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? வடமொழியில் இதனை "முமுக்ஷு" (mumukshu) என்று சொல்வார்கள்.


இதைப் பற்றி விளக்கம் கேட்டபோது, ராமகிருஷ்ண பரமஹம்சர் இவ்வாறு விளக்குகிறார் --"உன் தலையைப் பிடித்துக் தண்ணீருக்குள் அமுக்கினால், தண்ணீருக்குள் இருந்து வெளியே வர எப்படிப் போராடுவாய்? அதைப் போன்றதுதான் 'முமுக்ஷு' என்பதும்".


முயற்சி, முறையானப் பயிற்சி மற்றும் வாழ்வியல் உண்மைகளை அறிய வேண்டும் என்ற தவிப்பு அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றால் வெற்றி நிச்சயம்.

(To know the 'Truth', be true to know)

    

'தன்முனைப்பு' இருப்பதையே அறிந்து கொள்ள முடியாத முதல் நிலை மனிதர்களால், வாழ்வியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள இயலாது.


வாழ்வியல் உண்மைகளை, முயற்சி செய்தால் புரியக் கூடியவர்கள்  இரண்டாவது வகை மனிதர்களே!


மூன்றாவது வகை மனிதர்களிடம் தன்முனைப்பு குறைந்து காணப்படும். எனவே அவர்களுககு வாழ்வியல் உண்மைகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.


நாலாவது வகை மனிதர்கள் தன்முனைப்பிலிருந்து முழுமையாக விடுபட்டவர்கள். அவர்கள் வாழ்வியல் உண்மைகள் அனைத்தையும் அறிந்து, வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் போன்ற இரட்டைகளைக் கடந்தவர்கள். 


ஆக, வாழ்வியல் உண்மைகளை அறிய வேண்டியவர்கள் தன்முனைப்பு நிரம்பப் பெற்ற இரண்டாவது வகை மனிதர்கள் மட்டுமே!


தன்முனைப்பு நிரம்பப் பெற்ற மனிதர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


ஒரு பிரிவினர் பொதுநலத்தில் நாட்டமுள்ளவர்கள். பிறருக்காகத் தன்னை வருத்திக் கொள்ளவும் தயங்காதவர்கள். பொது வாழ்க்கையில் நிறைய இன்னல்களைச் சந்திப்பவர்கள். அதன் காரணமாக சுய சிந்தனையில் ஈடுபடும் எண்ணம் அடிக்கடித் தோன்றும். அதுவே அவர்களுக்கு வாழ்வியல் உண்மைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.


மற்றுமொரு பிரிவினர் 'தான் உண்டு, தன் குடும்பம் உண்டு' என வாழ்பவர்கள் (Self-centred). யாருக்கும் தீங்கிழைக்க விரும்ப மாட்டார்கள். தங்களது உழைப்பை மட்டும் நம்பி வாழ்பவர்கள். "போதும்" (contentment) என்ற நிலை வரும்போது அகத்தாய்வில் ஈடுபட்டால் வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொள்வார்கள்.


மூன்றாவது பிரிவு மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள் (Selfish). இவர்களிடம் ஆசை அதிகமிருக்கும். அதன் காரணமாக தவறான வழிகளிலும் பணம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொள்ள நேரமும் இருக்காது; அதைப் பற்றிய ஆர்வமும் இருக்காது.


இனி நாம் அறிந்து கொள்ளவிருக்கும் வாழ்வியல் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.


     


அகத்தாய்வில் ஈடுபடும் மனிதனுக்கு 'பகுத்து, ஆராய்ந்து' அறியும் தகுதி இருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் தகுதியுடைய சான்றோரைத் தன்னுடைய வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

(தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை)

 .. குறள் 444.


அகத்தாய்வில் ஈடுபடும்போது பல வாழ்வியல் உண்மைகள் நமக்குத் தெரியவரும்.

அவை - -

1. எதை எதையோ அறிந்து கொண்ட நான், "நான் யார்" என்று அறியாமலேயே வாழ்ந்து வருகிறேனே! 'எவ்வளவு பெரிய முட்டாள் நான்' என்று நினைக்கத் தோன்றும்.

(Knowledge is to know one's own ignorance ..Dr. Radhakrishnan)

2. யோசித்துப் பார்த்தால், இறைசக்திக்கு முன்னால் 'தான்' ஒன்றுமே இல்லையெனத் தோன்றும்.(I am nothing before the almighty)

3. 'நான்' என்பது இந்த உடல் அல்ல என்பது புரியும்.(I am not the body)

4. என்னுள் இருக்கும் ஆன்மாவே உண்மையான "நான்" என்பது புரியவரும்.

(I am not the body with a soul;I am the soul in a body)

5.  நான் கர்த்தா (Doer) அல்ல; "அவனால்" இயக்கப் படும் கருவி (Tool) மட்டுமே என உணர்ந்து கொள்வோம்.

(என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை

- இனித்தெய்வமே

உன் செயலே என்று உணரப் பெற்றேன்) .. பட்டினத்தார்.


 


வாழ்க்கையில் "அகத்தாய்வு" எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். "உள்ளொளி" நமக்குள் பரவி பரவசத்தை ஏற்படுத்துவதை நாம் உணர்வதற்கு இதுவே ஆரம்பப் புள்ளி.


அகத்தாய்வில் நாம் சுயபரிசோதனை செய்கிறோம்; ஆனால், எந்தவித தெளிவான முடிவிற்கும் வரமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை.


அகத்தாய்வு செய்வது முதலில் கடினமாகத் தோன்றினாலும், தொடர்ந்து செய்து வந்தால் அது பழக்கமாகி விடும். அதன்பின் நாம் சும்மா இருக்கும் வேளைகளிலும் நம்மை அறியாமலே அகத்தாய்வில் ஈடுபடுவதைக் காணலாம்.


அகத்தாய்வில் நாம் அகவுலகில் இருப்பதால், அந்த நேரத்தில் புறவுலகில் சஞ்சரிப்பது நின்று விடுகிறது.




"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்                                மலையினும் மாணப்  பெரிது"

.. குறள் 124.

இந்தக் குறள் "இல்லறவியலில்" வருகிறது.



அகத்தாய்வில் ஈடுபடும் நேரங்களில் நாம் "நிலையில் திரியாது".. அதாவது புலன்வழியே புறவுலகிற்குச் செல்லாது .. அகவுலகில் நின்று விடுகிறோம். இது தொடர்ந்தாலே, மனம் புலன்களின் பிணைப்பிலிருந்து விடுபட்டு உள்ளுக்குள் ஒடுங்கி, அடங்க ஆரம்பித்துவிடும். மனம் அடங்க, அடங்க நாமும் 

பற்றிலிருந்து விடுபட்டு விடுவோம்.

நம்மை அறியாமலே நடக்கும் நிகழ்வு இது.

(தினந்தோறும் எல்லாரையும், எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறோம்; நம்மைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே!?)


    


ஞான மார்க்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியது 'அகத்தாய்வு' என்றால், கர்ம மார்க்கத்தில் 'பலனை எதிர்பாராது செயல் படுதல்', பக்தி மார்க்கத்தில் 'சரணாகதி', மற்றும் தியான மார்க்கத்தில் 'ஒருமுக கவனம்'; இவற்றில்

தீவிரமாக ஈடுபடும்போது நமக்குள் நிறைய மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.



"எண்ணி எண்ணி எண்ணமற" .. இதன் அர்த்தம் என்ன?

அகத்தாய்வில் 'சுயசிந்தனை' முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சுயசிந்தனையில் நாம் அறிந்து கொண்ட வாழ்வியல் உண்மைகளைத் திரும்பத்திரும்ப அசைபோட வேண்டும். அதன் காரணமாக நமது தன்முனைப்பின் தீவிரம் குறையத் தொடங்கும். அதன்பின் செயல் புரிவதில் உள்ள ஊக்கமும் குறைந்து விடும். 


தன்முனைப்பின் தீவிரம் குறையக் குறைய, நம்மிடம் உள்ள தேவையற்ற எண்ணங்களும் ஆழ்மனதிலிருந்து மறைந்து விடும்.


       


ஆராய்ந்து பகுத்து அறிவதை 'விவேகம்' என்றும், பற்றற்ற தன்மையை 'வைராக்யம்' என்றும் வடமொழியில் கூறுவார்கள்.


விவேகம் மற்றும் வைராக்யம் இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்பு உண்டு.


விவேகத்தின் துணை கொண்டு சுயசிந்தனையில் முன்னேற்றம் காணும்போது, நமக்குள் பற்றற்ற தன்மை வளரும். பற்றற்ற தன்மை கூடக்கூட விவேகமும் கூர்மை அடையும்.


பற்றற்ற நிலையில் உறவுகளிடம் இருந்த பாசம் நீங்கி, அன்பு மட்டுமே இருக்கும்.


பொருட்களைப் பொறுத்த வரை,  அவை நமக்குச் சொந்தமானதாக இருக்கலாம்; ஆனால், அந்தப் பொருட்களின் மீது இருந்த "உடைமைத்தன்மை" என்ற உணர்வு நீங்கிவிடும்.


பாசமும், உடைமைத் தன்மையும் நீங்கிய நிலையில், "உள்ளொளி" சித்தத்தின் வெளியே பரவத் தொடங்கும். இதன் காரணமாக நமது மனோபாவத்திலும், செயலிலும் பல மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.


     


"வாழ்வை நினைந்தபின்

தாழ்வை நினைப்பது 

வாழ்வுக்கு நேராமோ -

நன்னெஞ்சே

தாழ்வு பிறர்க்கு எண்ண

தான் இழிவான் என்ற

சாத்திரம் கேளாயோ -

நன்னெஞ்சே"

.. பாரதியார்


நாம் நமது பயிற்சிகளில் வெற்றிகண்டால், நமது ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்ச்சிகள் கரைந்து போய்விடும்.


உறவுகளிடம் இருந்த பாசத்திலிருந்து விடுபடுவோம்; உறவுகள் மட்டும் நினைவலைகளாகத் தங்கியிருக்கும்.


நமக்குச் சொந்தமான பொருட்களின் மேலிருந்த உடைமைத்தன்மையும் மறைந்து போய்விடும்.


ஆழ்மனதில் காமம் மட்டும் மிஞ்சியிருக்கும். காமம் என்றால் ஆண்-பெண் உறவைக் குறிப்பது எனப் பொருள் கொள்ளக்கூடாது. அது 'இச்சை' .. அதாவது நாம் விரும்புகின்ற ஒன்றை, நம்மிடம் இல்லாத ஒன்றை அடைய முடியவில்லையே என்ற கவலை; நாம் செய்ய விரும்பியதை செய்ய முடியவில்லையே என்ற கவலை. பொதுவாக இந்த காம உணர்வுதான் கடைசியாக வெளியேற வேண்டிய ஒன்றாக இருக்கும்.


இருந்தாலும் சித்தத்தை மறைத்திருந்தப் பெரும்பாலான அழுக்குகள் மறைந்து விட்ட காரணங்களினால், "உள்ளொளி" நம்முள் பரவி நம்மிடம் பல மாற்றங்களை ஏற்படுத்துவதை நம்மால் உணர முடியும்.


நமக்கு யாராவது தீங்கு இழைத்தால், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்காவிட்டாலும் மனதில் ஒரு வெறுப்புணர்வு தங்கியிருக்கும். 

இப்போதோ அது மறைந்து, தேவை ஏற்பட்டால் நமக்குத் தீங்கு இழைத்தவனுக்குக் கூட உதவி செய்யத் தயங்க மாட்டோம்.

"இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்                                   என்ன பயத்ததோ சால்பு"

.. குறள் 987


  


பொதுவாக எல்லா மனிதர்களிடமும் 'சத்துவ குணம்', 'இரஜோ குணம்' மற்றும் 'தமோ குணம்' மூன்றும் கலந்தே இருக்கும்.


'இரஜோ குணம்' அதிக விகிதத்தில் இருந்தால், அந்த மனிதனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) தீவிரமாக இருக்கும். தன்முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் அடைந்தால், அவன் அதை நினைத்து பெருமையும் கொள்வான். சிறிது கவனக் குறைவு இருந்தாலும், அதுவே அவனை கர்வம் மிக்க மனிதனாக மாற்றிவிடும் அபாயமும் உண்டு.


கர்வம் கொண்ட மனிதன், பின்னர் பிறர் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பானா என்பது சந்தேகமே.


அர்ஜுனன் கிருஷ்ணனிடம் "பாபம் என்று தெரிந்தும் மனிதன் ஏன் தவறான செயல்களில் ஈடுபடுகிறான்" என வினவுகிறான். அதற்கு கிருஷ்ணன் "ஆசைதான்" என்கிறார். ஆசைக்குக் காரணம் இரஜோ குணத்தின் காரணமாக உத்வேகம் பெறும் அஹங்காரம் எனவும் கூறுகிறார்.


அதே மனிதன் வாழ்வியல் உண்மைகளை அறிந்து கொண்டபின், அவனது

"உள்ளொளி" சித்தத்தின் வெளியேப் பரவத் தொடங்குகிறது. இரஜோ குணத்தின் விகிதம் குறைந்து, சத்துவ குணத்தின் விகிதம் அதிகரித்து விடும்.


செயல் புரிவதில் தீவிரமாக இருந்தவன் (Active) செயல் புரிவதில் ஆர்வம் இல்லாதவனாக (un-active) மாறிவிடுவான்.


தன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்தவன் மனதளவில் ஒடுங்கி விடுகிறான். பெருமை அடைவதில் கூச்சம், தன்னை முன்னிலைப் படுத்துவதில் நாணம் போன்றவை அவனில் தோன்ற ஆரம்பித்து விடும்.


இத்தகைய நாணம் சான்றோர்க்கு அணிகலன் என்கிறார் வள்ளுவர் ...

"அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை"

.. குறள் 1014


அவனது நடவடிக்கைகளில் 'பணிவு' (humility) காணப்படும். எல்லாத் தகுதியும் இருந்தும், "நாயினும் கடையேன்" என்று மாணிக்கவாசகர் சொன்னது இந்தப் பணிவின் காரணமாகத்தான்.


              

ஒரு அன்பர் 'ஒடுங்குதல்' பற்றி சில சந்தேகங்களைக் கேட்டார். 


புறவுலகிலிருந்து கவனத்தை அகவுலகிற்குத் திருப்புவதைத்தான் 'ஒடுங்குதல்' என்கிறோம். இதனை வடமொழியில்

'பிரத்தியாஹாரம்' என்பார்கள். 'ஒடுங்குதல்' என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரி நிகழ்வதில்லை.


சிலர் இயல்பாகவே 'ஒடுங்குதல்' மனப்பான்மையுடன் பிறப்பார்கள். (உதாரணம் .. திரு. J. Krishnamurti; சுருக்கமாக J.K. என்பார்கள்)


சிலர் விரும்பி இளம் வயதிலேயே 'ஒடுங்குதலை' முன்னெடுப்பார்கள். (உதாரணம் .. பகவான் ரமண மஹரிஷி))


சிலர் பக்தி மார்க்கத்தில் இருந்து பின் 'ஒடுங்குதல்' நிலைக்கு வந்து விடுகிறார்கள். (உதாரணம் .. வள்ளலார்)


சிலரைப் பொறுத்தவரை அவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியான சம்பவம், அவர்களின் மனதை ஒடுங்கச் செய்து விடுகிறது. (உதாரணம் .. பட்டினத்தார்)


நாமோ சாதாரண மனிதர்கள். நமக்குள்ளும் ..

ஞான மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு 'ஒடுங்குதல்' இயல்பான ஒன்றாக இருக்கும்.


கர்ம மார்க்கத்தில் உள்ள மனிதர்களுக்கு ஏற்படும் அனுபவங்களே, அவர்களை 'ஒடுங்குதல்' நிலைக்குத் தள்ளிவிடும்.


தியான மார்க்கத்தில் இறங்குகிறவர்கள் 'ஒடுங்குதலை' வலிய ஏற்றுக் கொள்ள வேண்டும்.


மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் 'மனம் ஒடுங்குவதால்' ஏற்படும் நன்மைகளைப் புரிந்து கொண்டு அதில் ஈடுபாடு காட்டினால் தான் உண்டு.


ஒரு மனிதன் ஆன்மிகத்தில் 'விழிப்புணர்வு' பெற வேண்டுமானால், 'ஒடுங்குதல்தான்' ஆரம்ப புள்ளி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  


ஒரு மனிதன் அகத்தாய்வின் போது 'சுயசிந்தனையில்' ஈடுபடுவதற்கு, தனிமையில் இருப்பது மிகவும் அவசியம்.


புறவுலகில் சுயசிந்தனையில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களை/மற்றவற்றை சார்ந்தே இருக்கவேண்டி வரும். அகவுலகிலோ தனிமையில் இருப்பது கட்டாயம். இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


தனிமையில் இருப்பது (aloneness); தனியாக இருப்பது (loneliness) .. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.


தனியாக இருப்பதாக உணர்பவன் எதையாவதை நினைத்து வருத்தத்தில் இருப்பான் அல்லது புலம்பிக் கொண்டிருப்பான். ஆனால், தனிமை என்பது நாம் விரும்பி ஏற்பது. தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ள தெரியாதவனால் சுயசிந்தனையில் ஈடுபட முடியாது.

(Be independent while being inter-dependent in order to become indifferent)

அகவுலகில் நுழைய விரும்புகிறவன் குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும் சுயசிந்தனை செய்வதற்காகத் தன்னைத் தனிமைப் படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.


ஆரம்பத்தில் 'தனிமைப் படுத்துவது' என்பது ஒரு கஷ்டமான செயலாக இருக்கக் கூடும். தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அது பழக்கத்திற்கு வந்துவிட்டால் பின் அது நமது இயல்பாக மாறிவிடும். அதன்பின் ஆரவாரமான செயல்கள், கூட்டங்கள் போன்றவற்றில் இருந்து நாம் விலக ஆரம்பித்து விடுவோம்.


சுயசிந்தனையில் வெற்றி பெற்று ஆழ்மனப் பதிவுகள் நலிவடைந்தால், நமது எந்தச் செயலும் நம்மை பாதிக்காது; ஏனெனில் நாம் பயனை எதிர்பார்த்து செயலில் இறங்குவதில்லை.

"Indifferent to the fruits of action, ever content and utterly independent, he is inactive even while engaged in activity"

.. The Bhagavad Gita (4.20)


  


நாம் அறிந்து கொள்ளும் வாழ்வியல் உண்மைகள் நம்மிடம் சுய கட்டுப்பாட்டை உண்டுபண்ணும். தவிர, "போதும்" (contentment) என்ற மன நிலைக்கும் வந்து விடுவோம். 


உணர்வு மனம் அமைதியாகி புத்தியுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும். அதன்பின் நாம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையிலும் எதிர்வினை (re-action) காட்ட மாட்டோம். தேவைப்பட்டால் மட்டும் பதில் வினை (response) ஆற்றுவோம்.


ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்வுகள் மறைந்து விடும். உறவுகளிடம் இருந்த பாசமும், பொருட்களின் மேல் இருந்த உடைமைத் தன்மையும் நீங்கி விட, அவை வெறும் நினைவலைகளாகத் தங்கி விடும். மிஞ்சி இருப்பது "இச்சை" மட்டும் தான்.


ஆனால், உணர்வு மனம் அடங்கி விட்ட காரணத்தால், ஆழ்மனதில் உள்ள இச்சைகள் உணர்வு மனதில் எந்தவித கிளர்ச்சியையும் உண்டு பண்ணுவதில்லை.


உள்ளத்தில் சமநிலை வந்து விடும். வெறுப்பு உணர்வு என்று எதுவும் நம்மிடம் இருக்காது. தாயுமானவர் சொன்னது போல்

"எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே 

அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" என்று நினைக்க ஆரம்பித்து விடுவோம்.


எல்லா சூழ்நிலைகளிலும், சலனங்கள் ஏதுமின்றி மனம் அமைதியாகவே இருக்கும். 

வாழ்க்கையில் உண்மையான வெற்றி என்பது இதுவே.

"Success in life is measured by the tranquility of the mind"

.. Swami Chinmayananda.


     


'தனிமையில் இருப்பது, சுயசிந்தனையில் ஈடுபடுவது, சுயபரிசோதனை செய்வது' ..

அமைதி கண்ட மனம், உள்ளிருந்து பெருகும் ஆனந்தத்தை உணர வேண்டுமென்றால், இந்த மூன்றையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.


சுயசிந்தனையைத் தொடர்ந்து செய்துவர, 'மெய்ப்பொருளை' அறிவதில் நமது திறமை மேலும் மேலும் வலுப்பெறும். 


ஒரு உதாரணம் ..

"ஆமை வரும் ஆட்கண்டு ஐந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை உருக்கொண்டு ஒடுங்குவது மெக்காலம்?"

.. பத்திரகிரியார்.

ஆமையைப் போன்று நாமும் ஐந்து பொறிகளையும் அடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பொருள் கூறுகிறார்கள்.


("ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்.." என்ற குறளுக்கும் இந்த விதமாகத்தான் பொருள் கூறுகிறார்கள்)


இந்தப் பாடலில் வரும் "ஊமை உருக்கொண்டு" என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.


"ஊமை" என்றவுடன் பேச மட்டும் கூடாது என நினைத்தால் அது தவறு; இங்கு எல்லாப் பொறிகளையும் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றும், "ஒடுங்குவது" என்றால் எந்தப் பொறிவழியேயும் வெளியே போகாதே என்று பொருள் கொள்ள வேண்டும்.


அது மட்டும்தானா? மனம் எதை எதையோ நினைத்து வெளியே ஓடி விடுகிறதே; அப்படி இருந்தால் மனம் எப்படி ஒடுங்கும்?


  


நாம் பொறிகளின் வழியே நமது சக்தியைச் செலவு செய்வதாக எண்ணுகிறோம். உண்மையில் அதிகமான சக்தியை 'மனம்' மூலமே வீணாக்குகிறோம்.


ஆழ்மனம் எப்போதும் ஏதாவது கிளர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடியது. இருந்தாலும் ஆழ்மனதிலிருந்தப் பதிவுகள் நலிவடைந்து விட்ட காரணத்தினால் அவற்றால் நமது சக்தியை வீணாக்க முடியாது.


ஆனாலும், மனம் மூன்று வழிகளில் நமது சக்தியை இழக்கச் செய்யும். அவை ..

"Regrets of the past, anxiety for the future and excitement in the present"

.. Swami Chinmayananda.

கடந்த காலத்தில் நடந்து விட்ட செயல்களை எண்ணி வருந்துவது, எதிர் காலத்தில் என்ன நடக்குமோ என எண்ணி அச்சப் படுவது, நிகழ் காலத்தில் பரபரப்பாக செயல்படுவது.


இந்த மூன்றில் எது நம்மிடம் இருந்தாலும், நம்மிடம் இன்னும் 'அஹங்காரம்' இருக்கிறது என்றுதான் அர்த்தம்.


நமது அகவுலகில் தொடர்ந்து பயணம் செய்தால்தான், 'அஹங்காரம்' என்ற நிலையிலிருந்து 'அஸ்மிதா' என்ற நிலைக்கும், அதிலிருந்து 'அஸி' என்ற நிலைக்கும் செல்ல முடியும்.


'அஸி' என்று சொன்னவுடன் 'தத்வமஸி' என்ற வார்த்தை நினைவிற்கு வருகிறதா!?


    


தன்முனைப்பின் தீவிரம் குறையக் குறைய நமது பண்பு நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சில பதிவுகளில் பார்த்தோம். மற்றவற்றை நீங்களே அனுபவித்து உணர்ந்து கொள்ளுங்கள்.


அதைப் பற்றியே தொடர்ந்து பதிவிட்டால், நாம் இலக்கைத் தவற விட்டு விடுவோம்.


தன்முனைப்பு (அஹங்காரம்) முற்றிலும் நீங்கி விட்டதை எப்படி அறிந்து கொள்வது?


முதலாவதாக 'என்னுடைய' என்ற எண்ணம் எழக்கூடாது.

'என்னுடைய' என்ற எண்ணம் எழுந்தாலே, உள்ளே 'நான்' எனும் அஹங்காரம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.


'எனக்கு ஒரு மகன் இருந்தால், என்னுடைய மகன் என்றுதானே சொல்ல முடியும்?' என நீங்கள் கேட்கலாம்.


'என்னுடைய' என்ற வார்த்தை இரண்டு விதமான பொருளைக் கொடுக்க முடியும்; ஒன்று 'உறவைக் குறிப்பது' (relationship). மற்றொன்று 'பற்றைக் குறிப்பது' (attachment). 'என்னுடைய'

என்று சொல்லும்போது, அங்கு 'உறவு' இருக்கலாம்; 'பற்று' இருக்கக் கூடாது.


"தேக அபிமானம், லோக அபிமானம், சாஸ்திர அபிமானம்' ஆகிய மூன்றையும் விட்டு விடச் சொல்கிறார் சங்கரர்.


"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்' என்கிறார் திருமூலர்.


இரண்டாவதாக வருவது 'இச்சைகளின்' நீக்கம்.


   


தனிப்பட்ட முறையில் விருப்பங்கள் என்று எதுவும் இல்லை என்று ஆனபின், 'என்னுடைய' எனும் மமகாரமும், இச்சைகளை, அதாவது நிறைவேறாத ஆசைகளைப் பற்றிய எண்ணமும் எப்பொழுது நம்மைவிட்டு நீங்குகிறதோ, அப்போது நாம் அஹங்காரமற்ற மனிதர்களாக மாறி விடுவோம். 


"எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்து விட்டு மமகாரம் இல்லாதவனாக, அஹங்காரமற்றவனாக, சிறிதளவு ஆசையும் (இச்சையும்) இல்லாதவனாக ஸஞ்சரிக்கிறானோ, அவனே அமைதியை (சாந்தியை) அடைகிறான்".

.. பகவத் கீதை (2.71)


ஆனால் நாம் அஹங்காரம் அற்றவர்களாக மாறிவிட்டோம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?


இதை இரண்டு விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

 

எதையும் நினைத்து வருந்தாமல் (Regretting nothing), எதையும் எதிர்பார்க்காமல் (expecting nothing), வருவது எதுவாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் எதிர்கொள்வது (accepting everything) போன்ற மனநிலை நம்மிடம் இருந்தால், நம்மிடம் அஹங்காரம் இல்லை என எடுத்துக் கொள்ளலாம். இது ஊகத்தை அடிப்படையாகக் கொண்டது.


மற்றொன்று ரிஷி பதஞ்சலி கூறுவது.


      


அஹங்காரம் உள்ள மனிதனிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அவை புறவுலகைச் சார்ந்ததாகவும் இருக்கும்; அகவுலகைச் சார்ந்ததாகவும் இருக்கும்.


முதலில் வருவது "சவிதர்க்க சமாதி" என்கிறார் ரிஷி பதஞ்சலி. இது 'புறவுலகில்' நடப்பது. சமாதி என்றால் 'புத்தி சமநிலையில்' இருப்பதைக் குறிக்கிறது. அதாவது புத்தி சமநிலையில், எந்தவிதமான உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காத நிலையில் இருக்கும் போது, 'சவிதர்க்கம்' நடைபெற வேண்டும் என்கிறார்.


'தர்க்கம்' என்றால், விவாதம் என்று அர்த்தம். 'விதர்க்கம்' என்றால், ஒருவருக்கொருவர் இணக்கமான சூழ்நிலையில் நடைபெறும் விவாதம் என்று அர்த்தம். 'சவிதர்க்கம்' என்றால், இணக்கமான சூழ்நிலையில் தன்னுடைய பண்புகள் மேலும் மேன்மை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெறும் விவாதம் என்று அர்த்தம்.


பொதுவாக இதுபோன்ற விவாதங்களில் வாழ்வியல் தத்துவங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களும், அவர்களது கேள்விகளுக்குத் தகுந்த விடையளிக்கக் கூடிய சான்றோரும் இருப்பதுண்டு.


இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை அடைந்தால், அதனை 'நிர்விதர்க்க சமாதி' என்று அழைக்கிறார்.


தேவையான விளக்கங்களைத் கேட்டுத் தெளிந்தபின், அந்த மனிதன் அடுத்த நிலைக்கு செல்கிறான். அது "சவிசார சமாதி".


  


"சவிசாரம்" என்பது 'அகவுலகில்' நடப்பது; அதாவது சுயசிந்தனையில் ஈடுபடும் மனிதன் தனக்குள்ளேயேக் கேள்விகளைக் கேட்டு, அவற்றிற்கான விடைகளையும் கண்டு பிடிக்கிறான். அவனுள் இருந்த இச்சைகளும் நீங்கி விடுகின்றன.


அதன்பின் ஒரு உண்மையை, ஏற்கனவே புரிந்திருந்த உண்மையை, மனப்பூர்வமாக உணர்ந்து கொள்கிறான். அது ..


"நான்" என்று

நான் நினைத்தது

"நான்" இல்லையென்று

நான் அறிந்தது

"நான்" என்ற

அகந்தை அழிந்தது.


இப்பொழுது 'அஹங்காரம்' அவனைவிடடு முழுமையாக நீங்கி விடுகிறது. அவன் "சபீஜ சமாதி" என்ற நிலையை அடைகிறான்.


"சபீஜ சமாதி" என்றால் 'விதைகளுடன் கூடிய சமாதி' என்று ரிஷி பதஞ்சலி கூறுகிறார். ஆனாலும், அவன் தனது பயணத்தை இன்னும் தொடர வேண்டும் என்கிறார் அவர்.


அஹங்காரம் நீங்கிய பின், மனிதன் 'மன அமைதி'  (peace of mind) என்றால் என்னவென்று உணர்ந்து கொள்கிறான். இருந்தாலும், அவன் தனது பயணத்தை தொடரவில்லை என்றால் மீண்டும் 'அஹங்காரம்' அவனைத் தொற்றிக் கொள்ளும் என எச்சரிக்கிறார்.

   


இந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வரலாம்.


ஆழ்மனதில் இருந்த எதிர்மறை உணர்ச்சிகளும், இச்சைகளும் நீங்கி விட்டன.

நம்மைச் சார்ந்த உறவுகளும், பொருட்களும் எந்தவித கிளர்ச்சிகளையும் உண்டு பண்ண முடியாத அளவிற்கு வெறும் நினைவலைகளாகத் தங்கி விட்டன. பின் எதற்காக ரிஷி பதஞ்சலி எச்சரிக்கை மணி அடிக்கிறார்?


எந்தவொரு மனிதனது ஆழ்மனதிலும் நிறையப் பதிவுகள் காணப்படும். இந்தப் பதிவுகளைத்தான் ரிஷி பதஞ்சலி 'விதைகள்' என்கிறார்.  


"விதைகளுடன் கூடிய" என்று ஏன் சொல்லுகிறார்? நாம்தான் எல்லா விதைகளையும் நீக்கி விட்டோமே அல்லது வலுவிழக்கச் செய்து விட்டோமே என நினைக்கலாம். 


ஆனால், கண்ணுக்குத் தெரியாத, அறிவிற்கும் புலப்படாதப் பதிவுகள் இன்னும் நிறைய விதைகள் இருக்கலாம் என்கிறார்.


கர்ணனுக்கு தனது தாய் யார் என்றே தெரியாது; தனது தாய் என்று தெரியாமலே, அவன் குந்தி தேவியிடம் "ராஜ மாதா" என மரியாதையுடன் நடந்து கொள்கிறான். தன் கண் முன்னாலேயே இருப்பவள், என்றாவது ஒருநாள் பெரிய விதையாக மாறி .. நான்தான் உன்னுடைய "அம்மா" என்ற உண்மையைக் கூறி .. தன்னுடைய ஆழ்மனதில் ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கப் போகிறாள் என்பதை அவன் அறிந்திருந்தானா?


  


"நான்" எனும் அஹங்காரத்தைத் துறந்து விட்ட மனிதன், 'அஸ்மிதா' என்ற நிலைக்கு வந்து விடுகிறான்.


'அஸ்மிதா' என்ற நிலையில் அவனிடம் "நான்" எனும் அஹங்காரம் இல்லை என்றாலும், 'தன்னைப் பற்றிய உணர்வு' மட்டும் மிஞ்சியிருக்கும்.


'அஸ்மிதா' நிலையில் அவன் அழிக்க வேண்டியது, அவனால் கண்டுகொள்ள முடியாத ஆழ்மனப் பதிவுகளைத்தான். 


ஆழ்மனப் பதிவுகளைப் பனிப்பாறையோடு (iceberg) ஒப்பிடலாம். தன்னால் கண்டுகொள்ளப்பட்டப் பதிவுகளை நீக்கி விட்டான்; அல்லது வலுவிழக்கச் செய்து விட்டான்.


புலன்களுக்குப் புலப்படாத பதிவுகளை மட்டும் நீக்க வேண்டும். அதற்கு ஒரே வழி 'தியானம்' மட்டும்தான்.


முறையாகத் தியானத்தை பயிற்சி செய்து வந்தால், ஆழ் மனதில் இருந்த அனைத்து பதிவுகளும் மடிந்து விடுகின்றன.


ஆன்மாவை சுழ்ந்திருக்கும் மாயத்திரையை "ஆனந்த உறை    (bliss sheath) என்பார்கள். திரையின் மேல் பரவியிருந்த அனைத்து பதிவுகளும் நீங்கிய பின், சித்தத்தின் உள்ளிருந்து பெருகும் ஒளி அவனைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும்.

அதன்பின் அவனுக்கு இந்தப் பூவுலகில் வேண்டுவது என்று எதுவுமே கிடையாது.


இதைத்தான் "மனமிறக்க ஞானி பிறக்கிறான்" எனச் சொல்கிறார்கள்.


வேதாந்தத்தின் நோக்கமும் இதுவே. திருமூலர் அருளியப் பாடலைப் பாருங்கள்:-


"வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்

வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்

வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்த இடம்

வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே."

.. திருமந்திரம் 229


இதுவரை தியானத்தை ஒரு பயிற்சியாக செய்து வந்தோம். 'அஸ்மிதா' நிலைக்கு வந்தபின், தியானம் நமது இயல்பாக மாறிவிட வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதன் பின்னணியில் தியானம் தொடர்ந்து தன்னிச்சையாக நடைபெற வேண்டும். நாம் தியானம் செய்கிறோம் என்ற உணர்வு கூட நம்மிடம் இருக்கக்கூடாது.

(Meditation-less meditation is the real meditation .. Swami Chinmayananda)


அவன் தனது தியானத்தைத் தொடர்ந்து செய்து வர 'அஸ்மிதா' என்ற நிலையிலிருந்து 'அஸி' என்ற நிலைக்குச் சென்று விடுவான்.


இருந்தாலும் ஒரே சிலரே 'அஸி' நிலைக்கு செல்ல முடியும். 



நம்மால் 'அஸ்மிதா' என்ற நிலையை அடைவதே மிகக் கடினம். இருந்தாலும், ஒரு மனிதன் 'அஸி' நிலையை அடைந்தால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.


"தத்வமஸி" என்ற மஹா வாக்கியத்தை கேள்விப் பட்டிருப்போம். (ஐயப்பன் கோவில் நுழைவு வாசலில் தத்வமஸி என எழுதப் பட்டிருக்கும்). நான்கு மஹா வாக்கியங்களில் அதுவும் ஒன்று.


"தத்+தவம்+அஸி" .. 

'நீ அதுவாக இருக்கிறாய்' எனப் பொருள் படும்.


தொடர்ந்து தியானம் செய்துவர, இறையருள் இருந்தால் 'அஸி' நிலையை அடையலாம்.


இந்தப் பாடலைப் பாருங்கள்:-

"தன்னில் தானறியா

 தனியாக இருந்தானாம்

 தன்னில் தானறியத்

 தான்மட்டும் இருந்தானாம்"


பாடலின் பொருள் :-

"தன்னில் (இருந்தானாம்)" .. எனக்குள்ளே இருக்கின்றான்.

"தானறியா (இருந்தானாம்)" .. நான் அறிய முடியாதவாறு, தரிசிக்க முடியாதவாறு மறைவாக இருக்கின்றான்.

"தனியாக இருந்தானாம்"..தனியாக, ஒரு ஒளியாக இருக்கின்றான்; நான் இயங்குவதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றான்; ஆனாலும், அவன் என்னுடைய எந்த செயலிலும் பங்கு கொள்வதில்லை; வெறுமனே சாட்சியாக இருக்கின்றான்.


"தன்னில்" .. எனக்குள்ளே "தானறிய" .. நான் அவனது ஒளியைத் தரிசித்தபோது "தான்மட்டும் இருந்தானாம்" ..

அவனது ஒளியைத் தரிசித்த பின், அவன் மட்டும் இருக்கின்றான். நான் அங்கு இல்லை; ஏன்?


இறை ஒளியைத் தரிசித்த மனிதன் 'தன்னைப்' பற்றிய உணர்வையும் மறந்து ஒரு "சித்தனாகி" விடுகிறான்; அல்லது பட்டினத்தார், வள்ளலார் போன்று "அவனில் அல்லது அவனது ஜோதியில்" இரண்டறக் கலந்து விடுகிறான்.


இந்த நிலைதான் 'அஸி' எனப்படும்.


             




Tuesday, 25 August 2026

அன்பு



                அன்பு


அன்பை அறியாத, அன்பை வெளிப்படுத்தாத உயிரினமே இருக்காது.

ஆனாலும், "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவர் கூடவே "அஃதிலார் .." என்று எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்.

முரண்பாடாகத் தோன்றினாலும், இதுவே யதார்த்தம்.

அன்பு, அதன் விரிவு, அவற்றின் பரிமாணம் போன்றவற்றை புரிந்துகொள்வதில்  சிக்கல்கள் இருப்பதை சிலரிடம் காண்கிறேன்.

நான் 'அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது, உணர்ந்து கொண்டது' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எனது எண்ணங்களை பதிவிடுகிறேன்.

எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கவில்லை.

இருந்தாலும் ஒரு சிலருக்காவது இவை பயன்படலாமே என்ற நப்பாசைதான்.



மேலே தொடர்வதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருக்கவேண்டி உள்ளது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல வேதனைகளுக்கான காரணம் இதில்தான் அடங்கி இருக்கிறது.

தாயன்பிற்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது என்பார்கள். தாயிடம் அன்பு இல்லையென்பது அல்ல; நாம் சாதாரணமாக ‘தாயன்பு’ என்று சொல்லும்போது, அதில் அன்புடன் பாசமும் கலந்திருக்கும் அல்லவா?

சற்று சிந்தித்துப் பாருங்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டுவது அன்பா அல்லது பாசமா?

இரண்டும் ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இரண்டிற்குமிடையே நிறைய இடைவெளி உள்ளது.

(அன்பு பொதுவானது; பாசம் வாசம் செய்யுமிடம் ஆழ்மனம். இதுபற்றி பின்னர் பார்ப்போம்)




'அன்பே சிவம்' என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்; ஆனால், 'பாசம்' என்று வரும்பொழுது அவர்களது அறிவுரை அதற்கு எதிராக இருக்கிறது.

"பாசவினைகள் பற்றது நீங்கி.." என்கிறது 'கந்தசஷ்டி கவசம்'.

"ஆசைவலைப் பாசத் தகப்பட்டு மாயாமல்..." என்கிறார் பத்திரகிரியார்.



தங்கள் பிள்ளைகளிடம் பாசத்தை காட்டும் பெற்றோர்கள், எந்த இடத்தில் அதிலிருந்து பின்வாங்கி 'இனி நாம் அன்பை மட்டுமே காட்டவேண்டும்' எனக் கற்றுக்கொள்வதே இல்லை; இதுவே வயதான காலத்தில் அவர்கள் படும் துன்பத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது.



அன்பு அதன் இயல்பில் இனிமையானது; தூய்மையானது; பரிசுத்தமானது; களங்கமற்றது.

அதனால்தான் பிறந்த குழந்தையால் கள்ளமில்லாமல் சிரிக்கமுடிகிறது.



அன்பு அதன் இயல்புப்படி ஒரு மூலப்பொருளைப் போன்றது.

அன்பு, பற்றுடன் கலக்கும்போது முதலில் 'ஆசையாக' மனத்தில் உருவெடுக்கிறது. பின்னர் அது 'பாசம், பேராசை, காமம்' என மாறி ஆழ்மனம் வரை சென்று விடுகிறது. அதன்பின் அன்பு தூய்மையாக இருப்பதில்லை.



குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும், 'class-ல first rank வாங்கவேண்டும்' என்பது போன்ற ஆசைகளை ஊட்டி விடுகிறோம்.

விளைவு; அந்தக் குழந்தையிடமிருந்த பரிசுத்தமான அன்பு காணாமல் போய்விடுகிறது. அதன் களங்கமற்ற தன்மையும் மறைந்துவிடுகிறது.



"மீண்டும் குழந்தையாக மாறாதவரையில் ..." என்கிறார் ஏசுபிரான். அதன் அர்த்தம் என்ன? 

மீண்டும் குழந்தைக்கே உரிய மனநிலை வந்தால் மட்டுமே, அந்த மனிதனிடம் தூய்மையான அன்பை எதிர்பார்க்க முடியும் என்பதுதான்.(இது என்னுடைய புரிதல்)



எந்தவொரு மனிதனும் 'அன்பின்' துணைகொண்டு இரு வேறு திசைகளில் பயணம் செய்ய முடியும்.

ஒரு பயணம்  அகவுலகம் சார்ந்தது; மற்றொன்று புறவுலகம் சார்ந்தது.

அகவுலகப் பயணம் பற்றறுக்க உதவும்; புறவுலகப் பயணம் ஏற்கனவே உள்ள பற்றை மேலும் வலுப்பெறச் செய்யும்.

அகவுலகப் பயணம் நம்மை தூய அன்பில் தக்க வைக்கும். புறவுலகப் பயணம் நம்மை தூய அன்பிலிருந்து வெகு தூரம் இழுத்துச்சென்றுவிடும்.



சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் அக உலகப் பயணம் செய்யத் தகுதியானவர்கள். 

ஏனெனில் அவர்கள் இயல்பாகவே தனித்திருக்க விரும்புவார்கள். அத்துடன் 'அகத்தாய்வு' செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

வாழைத்தாரில் உள்ள காய்கள் பருத்துவரும்போது, அதன் சீப்பின்மேல் படர்ந்திருந்த தோல் கழன்று கீழே விழுவதுபோல், அகத்தாய்வில் தீவிரம் கூடக்கூட, பற்றின் காரணமாக ஆழ்மனத்தில் இடம்பெற்ற தேவையில்லாத பதிவுகள் ஒவ்வொன்றாக நீங்கிவிடும்.

"As the man progresses in his "inward expansion", the lower tendencies in him automatically drop off."                                 ..  Swami Chinmayanandha 

பற்றறுத்த மனம், தூய அன்பாக  மாறிவிடும். அதன்பின் அவர்களிடமிருந்து வெளிப்படுவது கருணையாக இருக்கும்.


அத்தகைய மனிதர்களிடம் கீழ்க்கண்ட பாவனைகள் இருக்கும். 

1. அவர்களிடம் அஹங்காரம் இருக்காது.

2. எந்த இடத்திலும் தம்மை முன்னிலை படுத்த முயற்சிக்க மாட்டார்கள்.

3. எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் பொறுமையுடன் கையாள்வார்கள்.

4. தம்மை 'கர்த்தா' என நினைக்க மாட்டார்கள்; மாறாக தம்மை இறைவனின் 'கருவி'யாகவே எண்ணுவார்கள்.

5. வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் என எதுவுமே அவர்களை பாதிக்காது.

(இவை ஒரு சில உதாரணங்களே)


இறையருள் பெற்ற இவர்கள் கருணையை மழையெனப் பொழிவார்கள். அவர்கள் தேடிச்சென்றது இறையருளை நாடித்தான். ஆனால், நமது கண்களுக்கு அவர்களிடமிருந்து வெளிப்படும் கருணை மட்டுமே தெரியும்.



பொருளைத் தேடி ஓடுகின்ற பலருள், சிலருக்கு மட்டுமே அதிர்ச்சி வைத்தியம் மூலம், புறவுலகை விட்டு அகவுலகிற்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கிறது. பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரிநாதர் போன்றோர் இதற்கு உதாரணமாக இருப்பவர்கள்.



மற்றவர்கள்  -- அதாவது 'இரஜோகுணவாதிகள்' மற்றும் 'தமோகுணவாதிகள்'  -- அவர்கள் பெறும் அனுபவங்களின் அடிப்படையிலேயே தேவையான மாற்றங்களை செய்யவேண்டி உள்ளது.



இரஜோ குணவாதிகளிடம் தன்முனைப்பு அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள்.

இவர்களில் சிலர் மட்டுமே பொதுநலத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் சமூக சேவையில் ஈடுபட்டு பலவித இன்னல்களுக்கும் ஆளாவார்கள்.

புறவுலகில் செயல்புரிதல், அகத்தாய்வு, சுயசிந்தனை - - இம்மூன்றும் இவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கும். மனத்தில் நிம்மதியின்றி ஒருவிதமான தவிப்பில் இருப்பார்கள்.

நல்லதொரு வழிகாட்டியின் துணை கிடைத்தால், தன்முனைப்பு குறைந்து அகவுலகில் பிரவேசித்து விடுவார்கள். 


இவர்களைத்தவிர வேறு சில மனிதர்களும் அகவுலக வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பெறுவார்கள். அவர்கள் புறவுலகில் பணிபுரிந்தாலும், புறவுலக நாட்டமின்றி வாழ்ந்து வருவார்கள். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.



இனி சிக்கல்கள் நிறைந்த புறவுலகப் பயணம் பற்றி பார்ப்போம்.

அதற்கு முன் இரண்டு பயணங்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

"அகவுலகில் இறைவனைத் தேடுகிறோம்; புறவுலகில் இறைவனை வேண்டுகிறோம்."

இறைவனை வேண்டும்பொழுது, அருளைக் கேட்டால் அது அகவுலகப் பயணம் ஆகிவிடும்; பொருளைக் கேட்டால் அது புறவுலகப் பயணமாகிவிடும்.

அருளைத் தேடும் பயணமும், பொருளைத் தேடும் பயணமும் ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செல்பவை. இரண்டு பாதையிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியாது.

"இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு" என்கிறார் வள்ளுவர். 

(எனது புரிதலில்: செல்வத்தை வேண்டினால் புறவுலகை நோக்கிய பயணம்; ஞானத்தைத் தேடினால் அகவுலகை நோக்கிய பயணம்.)


அருள், பொருள் என்ற இரண்டு பாதைகளில் எதை முதன்மையாகத் தேடுகிறோம் என்பதுதான் நாம் செல்லும் திசையை நிர்ணயிக்கிறது 

மனிதன் தனக்குள்ளே பயணித்தால், இறைவனை உணரலாம். (தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் .. திருமூலர்).

தனக்கு வெளியே பயணித்தால் செல்வத்தை சேர்க்கலாம்.



நாம் ஆலயங்களுக்கு செல்கிறோம். அங்கு ஆண்டவனைத் தேடுகிறோமா அல்லது ஆண்டவனிடம் வேண்டுகிறோமா? சற்று சிந்தித்து பாருங்கள். பல உண்மைகள் புரியும்.

ஆண்டவனிடம் வேண்டுவதில் தவறில்லை; வேண்டிப் பெற்றதை அனுபவிப்பதிலும் தவறில்லை. 

ஆனால், அப்படி அனுபவிக்கும் பொழுது நமது அஹங்காரம் வளராமல் இருக்க, நாம் ஆண்டவனை மறவாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அது எப்படி முடியும் என்று நினைக்கலாம்.



ஒரு ரயிலில் பயணம் செய்கிறோம். நாம் ரயிலை ஓட்டுவதில்லை. இருந்தாலும் நாம் ரயிலில் பயணம் செய்வதை உணர்கிறோம் அல்லவா?

அதைப்போல வாழ்க்கை நெடுகிலும் ஆழ்மனம் இறைவன் புகழை பாடிக் கொண்டே இருக்கவேண்டும்; நாமும் எந்த வேலையில் இருந்தாலும், அதைப் பற்றிய உணர்வோடு இருக்க வேண்டும்.

"ஆடும் பணியென்று அலைந்து திரிந்தாலும் -இறைவன் புகழ்    பாடும் பணியொன்றில் பயணிப்ப தெக்காலம்?"

வாழ்க்கை நெடுகிலும் நமது ஆழ்மனம் இறைவன் புகழை பாடிக் கொண்டிருக்க, நாமும் நாள் முழுவதும் அதைப் பற்றிய உணர்வோடு இருக்க முடிந்தால், அகவுலகப் பாதையில் பயணம் செய்யாமலே அதன் பயனை அடைந்து விடலாம். 

எளிதாகத் தோன்றினாலும் நம்மால் இதை நடைமுறைப்படுத்த முடிவதில்லை.

காரணம் ஆழ்மனத்தில் ஏற்கனவே நிறைய கழிவுகள் உள்ளன. அவற்றை 'வாசனா பதிவுகள்' என்றும், 'ஆணவமலம்' என்றும் சொல்கிறார்கள்.



முல்லா தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அதை பார்த்த நண்பர் "என்ன தேடுகிறீர்கள்" என்றார்.

"வீட்டில் ஊசியைத் தொலைத்து விட்டேன்; அதைத்தான் தேடுகிறேன்" என்றார் முல்லா.

அதை வீட்டில் அல்லவா தேடவேண்டும் என்று கேட்டதற்கு "இங்குதானே வெளிச்சமாக இருக்கிறது" என்று முல்லா பதில் சொன்னார்.

வேடிக்கையாகத் தோன்றினாலும், முல்லா நம்மை பார்த்து பரிகாசம் செய்கிறார்.

உள்ளுக்குள்ளே கடவுளை வைத்துக்கொண்டு, நாம் வெளியே கடவுளைத் தேடுவது கண்டு ஏளனம் செய்கிறார்.



'அன்பே சிவம்' என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். 'அன்பும், சிவமும்' இரண்டல்ல என்கிறார் திருமூலர்.

நம்மிடம் இருப்பது அன்பென்றால், நம்மால் 'சிவத்தை' ஏன் உணர முடியவில்லை?

உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தால், நம்மிடமிருந்து 'கருணை' மழையெனப் பொங்க வேண்டாமா? ஏன் அது பொய்த்து விட்டது?



கங்கை நதி புறப்படும் இடத்தில் சுத்தமாகத்தான் இருக்கிறது. அதுதான் கடலிலும் கலக்கிறது. ஆனாலும், அதன் வழிநெடுகிலும் கழிவுகள் சேர்ந்து, அதை மாசுபடுத்தி விடுகிறது.

சுத்தமாக பயணத்தை தொடங்கிய கங்கைநதி பயணத்தின் முடிவில் அசுத்தமான ஒன்றாக மாறி விடுகிறது.



அதேபோல் நமது வாழ்க்கைப் பயணத்திலும், பலவகையான அசுத்தங்கள் புனிதமான 'அன்பை' மூடி மறைத்து விடுகிறது.

தசரதனின் அன்பை, பாசம் மூடியது; கைகேயியின் அன்பை, பேராசை மூடியது; இராவணின் அன்பை, காமம் மூடியது; சகுனியின் அன்பை, கோபம் மூடியது. நம்முடைய அன்பை, எது மூடியிருக்கிறது?



அன்பு தூய்மையானது; பரந்து விரியக்கூடியது; எல்லைகளற்றது. இருந்தாலும் "தூய அன்பு" என்றும் சொல்கிறார்களே! 

அப்படியானால் 'அன்பு' என்பதற்கும், 'தூய அன்பு' என்பதற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?



ஒரு மனிதன் தன் உறவுகளுடன் அன்பாக நடந்துகொள்கிறான். ஆனால், சக மனிதர்களிடம் வெறுப்பை, கோபத்தை காட்டுகிறான்.

அவனை எப்படி அன்பான மனிதன் என்று சொல்லமுடியும்?

இது "பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா! மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!" என்று கவிஞர் எழுதிய பாடலை அல்லவா நினைவு படுத்துகிறது.



எதிர்மறை உணர்வுகள் ஏதுமின்றி, எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிந்தால் அதுவே "தூய அன்பாகும்".

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்று தாயுமானவர் பாடுவது "தூய அன்பின்" அடையாளம்.

எல்லா மனிதர்களிடமும் 'அன்பு' இருக்கிறது; அது 'தூய அன்பாக' மாறுவதற்கு எது தடையாக இருக்கிறது?



மனிதன் ஒரு பொருளை - - அது உயிருள்ள பொருளாக இருந்தாலும் அல்லது உயிரற்ற ஜடப்பொருளாக இருந்தாலும் - - தொடர்ந்து நினைக்கும் பொழுது, அந்த நினைவு பற்றாக (attachment) மாறிவிடுகிறது.

பற்றிய ஒன்று பற்றாகமாறி, அது அந்த மனிதனைப் பற்றி அவனது மனத்தில் ஆசையாக உருவெடுக்கிறது.

இந்த ஆசை என்பது அவனது உணர்வு மனத்தில் பதிவது. ஒருவேளை அந்த ஆசை நிறைவேறாவிட்டால்கூட, அவன் காலப்போக்கில் அதை மறந்துவிடலாம்.

ஆனால், அந்த ஆசை தொடர்ந்து வளருமேயானால், அது ஆழ்மனம்வரை சென்றுவிடுகிறது.

அங்கு அது பாசமாகவோ, பேராசையாகவோ அல்லது காமமாகவோ வேர்கொண்டு விடுகிறது.



மனிதனுக்கு வரும் பலவித பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த ஆழ்மனப் பதிவுகளே.

இத்தகைய பதிவுகளை அகற்றும் வித்தையைக் கற்றுக்கொண்டு விட்டால், மனம் அமைதியாகும்; உள்ளத்திலிருந்து தூய்மையான அன்பு வெளிப்படும்.

மதத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று ஆழ்மனப் பதிவுகளைக் களைவது எப்படி என்று வழிகாட்டுவதற்காகத்தான்.



ஒரு திரைப்பட பாடலில், பிச்சை எடுத்து வாழும் பெண் இவ்வாறு பாடுகிறாள் - -                                "ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா - இது                ஈசனுக்கு ஓய்வுநேர விளையாட்டம்மா".

அவள் புலம்புவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், நம்மில் பலரும் புலம்புகிறோமே! அது ஏன்?

நம்மிடம் அறிவு இருக்கிறது; சிந்திக்கும் திறனும் இருக்கிறது. இருந்தும் சிந்திக்க மறுக்கிறோமே! அது ஏன்?



"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்"   --  என்கிறார் வள்ளுவர்.

இதற்கான காரணங்கள் பல - -

* தவறான முன்முடிவுகள்                         

* அவநம்பிக்கை

* காரணங்களை ஆராய தன்னால் முடியாது என்ற எண்ணம்

* எல்லாம் தலைவிதி என்று நினைப்பது

இதுபோன்ற பல காரணங்களினால், நாம் அன்பை மீட்டெடுக்கும் முயற்சியை விட்டு விடுகிறோம்.



"நான் அன்பான மனிதன்தானே; ஏன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்" என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால், விடைதான் கிடைப்பதில்லை.

இதற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணர் "மூன்றே" வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார். கீதையில் உள்ள அற்புதமான சுலோகங்களில், இதுவும் ஒன்று. 



கீதையில் அர்ஜுனன் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறான் - -"கிருஷ்ணா, மனிதன் விருப்பமில்லாமல் இருந்தாலும், எது அவனை பாபம் செய்யத் தூண்டுகிறது?".

கிருஷ்ணன் பதில் சொல்லுகிறார் - "இரஜோ குணத்தின் காரணமாக மனத்தில் எழும் காமமும், குரோதமுமே இதற்கு காரணம். இவையே உனது பரம வைரி என அறிந்துகொள்".

.. பகவத்கீதை -- அத்தியாயம் 3/36,37 



'இரஜோ குணம், காமம் மற்றும் குரோதம்' மூன்றும் நமக்கு பரிச்சயமான வார்த்தைகள்தான். ஆனால் மேலோட்டமாக படித்துவிட்டு போய்விடுகிறோம். அதனால், நாம் படும் அனைத்து வேதனைகளுக்கும் காரணமாக இருப்பது இவைதான் என்பதைப் புரிந்துகொள்ள மறந்து விடுகிறோம். ஆழமாக பார்க்க வேண்டிய விஷயம் இது.


'காமம், குரோதம் மற்றும் இரஜோ குணம்' ஆகிய மூன்றை மட்டும், பாபம் செய்வதற்கான காரணிகள் என்று கிருஷ்ணன் ஏன் குறிப்பிட்டார் என்பது புரியவேண்டுமானால், அவர் சொல்லும் கூற்றின் ஆழத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.



'இரஜோ குணத்தின் காரணமாக வரும் காம, குரோதம்' என்று கிருஷ்ணன் சொல்கிறார். அப்படியானால் சத்துவ குணம் உள்ளவர்களும், தமோ குணம் உள்ளவர்களும் பாபம் செய்ய மாட்டார்களா என்று  நினைக்கலாம்.

மூன்று குணங்களையும் சார்ந்தவர்களின் பண்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று தெரிந்தால்தான், கிருஷ்ணன் ஏன் 'இரஜோ' குணத்தை மட்டும் குறிப்பிட்டார் என்பது புரியும்.



நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதலாவது உண்மை, மனிதனால் பாபம் செய்ய முடியாது என்பதுதான். பாபம் என்பது செயலல்ல; செயலின் விளைவாக நமக்குள் ஏற்படும் பின்விளைவு.

ஆக, செயல் புரிந்தால் மட்டுமே பாபம் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

செயல்புரிவதற்கு 'தன்முனைப்பு' (அஹங்காரம்) மிகவும் அவசியம்.

ஒரு மனிதனின் தன்முனைப்பிற்கு அடித்தளமாக இருப்பது, அந்த மனிதனின் ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள். இதனையே 'வாசனா' என்றும் சொல்கிறார்கள். 



சத்துவ குணம் நிறைந்த மனிதன், தனது ஆழ்மனத்தில் உள்ள பதிவுகளை நீக்கி விடுகிறான்; அல்லது பெருமளவு குறைத்து விடுகிறான். எனவே அவனிடம் தன்முனைப்பு இருப்பதில்லை. அவன் இறைவனின் கருவியாக மாறிவிடுகிறான். அதன்பின் அவன் எதைச் செய்தாலும், தன் மூலமாக "அவன்" செயல்புரிகிறான் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறான். அதனால் அவனுக்கு பாபம் செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.


"தமோ குணத்தைப்" பொறுத்தவரை நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது.

பட்டியலின மக்கள் அனைவரும் 'தமோ குணம்' உள்ளவர்கள் என பலரும் நினைக்கின்றனர். அது மாபெரும் தவறு.

யார் மந்த புத்தியுடனும், சோம்பல் மிகுந்தும் காணப்படுகிறார்களோ, அவர்களை மட்டுமே 'தமோ குண வாதிகள்' என அழைக்கலாம்.

அப்படிப்பட்டவர்களிடம் தன்முனைப்பு செயலற்ற  நிலையில் இருக்கும்; அதைக்கூட  அவர்கள் உணரமாட்டார்கள். யாராவது அவர்களை தூண்டிவிட்டால் மட்டுமே அவர்களால் செயல்பட முடியும். 

மற்றவர்கள் சொன்னதை செய்தோம் என்பதால் அவர்களுக்கு தாம் செய்வது பாபம் என்றுகூடத் தோன்றாது.



இப்போது 'காம - குரோத' என்ற வார்த்தைகளைப் பற்றி பார்ப்போம்.

கிருஷ்ணன் 'காம' என்று சொல்லும்போது, 'அதீத ஆசை' (lust) என்ற அர்த்தத்தில் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  




'குரோதம்' என்றால் கோபம் என்று அர்த்தம். அதீத ஆசை இருந்தால் கோபம் வருவது இயற்கை என்பதால்தான், இரஜோ குணம் நிரம்பப் பெற்ற மனிதனுக்கு காமம், கோபம் இரண்டும் வரும் என்கிறார்.


மனிதனிடம் அன்பு மட்டும் இருந்தால், கோபம் வர வாய்ப்பில்லை; ஆனால், அன்பு ஆசையாக, அதுவும் அதீத ஆசையாக மாறிவிட்டால் கோபம் வருவதை தவிர்க்க இயலாது என்கிறார்.

காரணம் -- ஆசைப்பட்ட பொருள் கிடைக்காதோ என்ற பயம், கிடைக்காவிட்டால் கோபம்.

ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ, அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம், போய்விட்டாலோ கோபம்.



ஆழ்மனத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டால், அன்பு தூய்மையான அன்பாக மாறும்; நாமும் இறையருளை உணரத் தொடங்கலாம்.

"இருள்சேர் இருவினையும் சேரா.." என்று வள்ளுவர் சொல்லும்போது இந்தப் பதிவுகளின் நீக்கத்தையே குறிப்பிடுகிறார்.


மதம் இந்தப் பதிவுகளை நீக்குவதற்கு பல வழிமுறைகளைக் கற்றுத்தருகிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:-


*தன்னடக்கம்*

இதை பணிவு, நாணம், கூச்சம், தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளுதல் எனப் பலவாறாகக் கூறலாம்.

சுருக்கமாக சொன்னால் 'தன்னை முன்னிலைப் படுத்தாமல் ஒதுங்கி இருப்பது' எனச் சொல்லலாம்.

இதில் என்ன கஷ்டம் என நினைக்கத் தோன்றும். உண்மையில் பக்குவம் அடையாத மனிதனால், பக்குவம் அடைய விரும்பாத மனிதனால் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.

தந்தை வயதான காலத்தில் குடும்ப பொறுப்பை மகனிடம் கொடுத்துவிடுகிறார். ஆனால், அவரால் ஒதுங்கி இருக்க முடிகிறதா? வழிகாட்டியாக மாறவேண்டியவர், தொடர்ந்து எஜமானனாக இருக்க விரும்புவது ஏன்?


எனக்குத் தெரிந்த ஒரு அதிகாரி பணி ஓய்வு பெற்றபின், கோயிலுக்கு சென்றவரால் நிம்மதியாக கடவுளை வணங்க முடியவில்லை. காரணம் அலுவலகத்தில் முன்னர் மரியாதை செய்தவர்கள், தன்னை கோயிலில் கண்டுகொள்ளவே இல்லை என்ற கவலைதான்.

தவறு யாருடையது? பணி ஓய்வு பெற்ற பின்பும், பதவியை சுமந்து கொண்டிருப்பது தேவைதானா?

"நேதி நேதி" என்ற வார்த்தை 'பிரஹதாரண்ய உபநிஷத்தில்' வருகிறது. அதாவது நான் "இதுவல்ல, இதுவல்ல" என ஒவ்வொன்றாக ஒதுக்கித் தள்ளுவது.

எதையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ, அதன் காரணமாக வரும் எந்தத் துக்கமும் நம்மை தாக்குவதில்லை என்கிறார் வள்ளுவர் - -                              "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்".

இந்தப் பண்பினைக் கடைப்பிடிக்க எந்த பயிற்சியும் தேவையில்லை; அறிவுபூர்வமான புரிதலே போதுமானது.


*பாசாங்கு செய்யாமை*

 நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று சொல்வதுண்டு. பொய்யொழுக்கம்?

கீதையில் பகவான் 'மித்யாசாரம்' என்று கூறுகிறார். 'ஆசாரம்' என்றால் ஒழுக்கம்; 'மித்யா' என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக் கொள்ளுதல். அது ஒழுக்கமின்மை அல்ல; பொய்யொழுக்கம். 

ஒரு அறிவிலி தன்னை அறிவாளி எனக் காட்டிக் கொள்வதைப் போன்றது.

இதனைத்தான் 'பாசாங்கு' என்று சொல்வார்கள்.

இவர்கள் 'உள்ளொன்று வைத்து புறமொன்று' பேசுபவர்களாக இருப்பார்கள்.

ஆணவமலம் நீங்க வேண்டுமென்றால், இந்தப் போலித்தனம் இருக்கக்கூடாது.

"தன்னெஞ்சறிவது பொய்யற்க.." என்கிறார் வள்ளுவர்.


*அஹிம்சை*

அஹிம்சை என்றால் யாரையும் துன்புறுத்தாமல் இருத்தல் என நினைக்கிறோம்.

மனத்தால்கூட யாரையும் துன்புறுத்த  நினைக்கக்கூடாது. அதுதான் அஹிம்சையின் அடையாளம்.

துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏன் வருகிறது? நாம் கோபம் கொள்வதால்தானே வருகிறது.

ஏதோவொரு சம்பவம் நம்மை காயப்படுத்தும் பொழுது, அதன் காரணமாக நமது ஆழ்மனதில் ஒரு பதிவு நிகழ்ந்து, அந்த நிகழ்வு கோபத்தை தூண்டுகிறது. அந்தப் பதிவு நிகழாமல் பார்த்துக் கொண்டால், நமக்கு கோபமும் வராது; அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

இதற்கு ஒரேவழி நாம் விரும்பாத சம்பவங்கள் நடந்தால், அவற்றை உதாசீனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

எதிரியைவிட மோசமான எதிரி, எதிரி நம்மை உதாசீனம் செய்வதுதான்.

"Enemy's worst enemy is the ignorance of the enemy's enemy".

இதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நமக்கு கோபம் வரும் வாய்ப்பு குறைந்துவிடும். 

அதனால்தான் புத்தரும் "உதாசீனனாக" இரு என்கிறார்.


*உடைமைத்தன்மையின்மை*     

நாம் வீடு, கார் என பலவற்றை சொந்தமாக வைத்திருப்போம். ஆனாலும், நமக்கு 'அவற்றின் சொந்தக்காரர்' என்ற உணர்வு இல்லாதிருக்க வேண்டும். இதைத்தான் 'உடைமைத்தன்மையின்மை' என்று சொல்கிறார்கள்.

அவை என்னுடைய உடைமைப் பொருள்கள் என்ற எண்ணம் இருக்குமானால், அவற்றை பற்றிய எண்ணங்களை ஆழ்மனத்திலிருந்து நீக்குவது கடினம்.

அவற்றை அனுபவிப்பதில் தவறில்லை; ஆனால், 'உடைமைத்தன்மை' என்ற உணர்வு மட்டும் இருக்கக்கூடாது.

(Possess things; but don't have the possessor feeling)

'அஷ்டவக்ர கீதையில்' மஹராஜா ஜனகர் இவ்வாறு கூறுகிறார் - -

"Me nasti kinchan athava me sarvam"

"ஜனகர் என்ற முறையில் பார்த்தால் எதுவுமே என்னுடையது இல்லை; என்னுள் உறையும் இறைவனாகப் பார்த்தால் எல்லாமே என்னுடையதுதான்".

உள்ளிருக்கும் இறைத்தன்மையை உணர வேண்டுமானால், நாம் 'உடைமைத்தன்மை'யிலிருந்து வெளியேறியாக வேண்டும்.


(உடைமைத்தன்மையின்மை பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உறவுகளுக்கும் பொருந்தும்தானே என்று ஒருவர் கேட்டிருந்தார்.

உண்மைதான். உடைமைத்தன்மையின்மை குறித்து பொருளுக்கு சொன்ன கருத்துக்கள் அனைத்தும், உறவுகளுக்கும் பொருந்தும்.

ஆனால், பொருள் - உறவு இரண்டிற்கும் இடையே ஒருசில முக்கிய வித்தியாசங்கள் உண்டு.

ஆழ்மனத்தில் பொருளைப் பற்றிய உணர்வு பேராசையாகவும், உறவைப் பற்றிய உணர்வு பாசமாகவும் பதிவாகிறது.

மற்றும் பற்று (attachment) என்று வரும்போது பொருளைவிட பாசம்தான் முன்னிலை வகிக்கும்.

பொருள் தன் கையை விட்டு சென்று விட்டால், சில காலம் கழித்து அதன் நினைவு ஆழ்மனத்தில் இருந்து அகன்று விடும்.

ஆனால், உறவு தன்னைவிட்டு அகன்றாலும் (உ.ம். பெண்ணின் திருமணம்), பாசம் எளிதில்  ஆழ்மனத்திலிருந்து நீங்குவதில்லை.

ஆகவே பாசம் சம்பந்தப்பட்டப் பதிவுகளை ஆழ்மனத்திலிருந்து நீக்குவது மிகவும் கடினம்.)


*கூட்டத்திலிருந்து தனிமைக்கு*

கூட்டமாக இருப்பது சத்துவ குண மனிதர்களுக்கு ஒத்து வராத ஒன்று. அவர்கள் பெரும்பாலும் தனிமையையே விரும்புவார்கள்.

தனிமையில் இருப்பது சுய பரிசோதனைக்கும், சுய விசாரணைக்கும் ஏற்றது. 

இரஜோ குணம் நிறைந்த மனிதர்களுக்கு, குறிப்பாக சுயநலம் உள்ளவர்களுக்கு தனிமை என்பது கசப்பான விஷயம்.

யாருமே தன்னுடன் இல்லாமல் தனியாக இருப்பது வேறு; தனிமை என்பது வேறு.

ஆழ்மனப்பதிவுகளை நீக்குவதற்கு அகத்தாய்வு மிகவும் முக்கியம். அது தனிமையில் இருந்தால்தான் முடியும்.

எனவே ஒவ்வொருவரும் சிறிது நேரமாவது 'தனிமையில்' இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.


*சுயத்தை அறிதல்*

பழைய பாடல் ஒன்றில் பாடல் வரி இப்படி இருக்கும் - -                       "நானே நானா, யாரோதானா..."

நீ எதுவுமே செய்யவேண்டாம்; 'நான் யார்' என்று உன்னையே கேட்டுப்பார் என்கிறார் இரமண மஹரிஷி.

இதைச் செய்வதற்கு நமக்கு தெளிந்த அறிவு வேண்டும். அதை மூன்று வழிகளில் பெறலாம்.

1. *நேரடி அறிவு*. அதாவது புலன்களின் உதவியின்றி அறிந்து கொள்வது.

புலன்களின் உதவியின்றி அறிந்து கொள்வது என்றால் என்ன?

எனது நண்பனிடம் பரமாத்மா, ஜீவாத்மா பற்றி விளக்குவதற்கு 'ஆற்று நீர், குடத்து நீர்' உதாரணத்தைக் குறிப்பிட்டேன். அதாவது குடத்து நீரை ஆற்றில் கொட்டி விட்டால் குடத்து நீர் தனது தனித்தன்மையை இழந்து விடுவது போல, ஜீவாத்மாவும் அதனை மூடியிருக்கும் திரை விலகிவிட்டால் அது பரமாத்மாவோடு ஒன்றாகக் கலந்துவிடும் என்றேன்.

அவனுக்கு அது புரிந்தது; என்றாலும் குதர்க்கமாக ஒரு கேள்வியை எழுப்பினான். "குடத்து நீரை கரையில் கொட்டினால், ஆற்று நீரோடு கலக்காதே" என்றான். அவன் ஏற்றுக் கொள்ளும்படியாக வேறு எதைச் சொல்லலாம் என சிந்தித்தேன். 

பதில் தெரியாதபோது 'விசார' நிலைக்கு சென்றுவிடுவேன். உடனே பதில் கிடைக்கவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் பதில் தோன்றும். பதில் யார் மூலம் வந்தது என்று தெரியாது. நிச்சயமாக அது விவேகமாக சிந்தித்து அறிந்த பதிலாக இருக்காது. அப்படித் தோன்றிய பதில் -- 

"அறை முழுவதும் காற்றால் நிரம்பி உள்ளது. அறையில் காற்றடைக்கப்பட்ட பலூன் பறந்து கொண்டிருக்கிறது. திடீரென பலூன் வெடித்து விட்டால், பலூனுக்குள் இருந்த காற்று வெளிக்காற்றோடு இரண்டறக் கலந்து விடும்.

இதுதான் புலன்களின் உதவியின்றி பெறப்படும் 'நேரடி அறிவு."

இந்த உதாரணத்தை நண்பன் முழுமனத்தோடு ஏற்றுக் கொண்டான்.


2. *ஊக அறிவு*  - இதற்கு விவேகம் தேவைப்படுகிறது.

'இது என் வீடு' என்று சொல்லும்போது, வீடு வேறு நான் வேறு என்றாகிறது.

'இது என் உடல்' என்று சொல்லும்போது, நான் உடலுக்கு வேறானவன் என்பது புரிகிறதல்லவா? இது ஊகத்தில் அறிவது.

3. *சான்றோர் வாய்மொழி கேட்டல்* விவேகமாக சிந்திக்க முடியாதவர்கள் இதனைக் கடைப்பிடிக்கலாம்.

'வாய்மொழி' என்று சொல்லும்போது, அது அவர்கள் வாய்மொழி மூலமாக வந்த நூல்களாகவும் இருக்கலாம்.

இதில் ஒரு பிரச்சனையும் உள்ளது. தவறான மனிதர்களை நாம் சான்றோராகத் தேர்வு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


*பார்வையாளனாக இருப்பது*

நமக்கு தினந்தோறும் செய்யக்கூடிய கடமைகள் உண்டு. அத்துடன் நாம் ஏற்றுக்கொண்ட மற்றும் ஒப்புக்கொண்ட கடமைகளும் உண்டு.

அவற்றை செயல்படுத்தும் பொழுது நமக்கு பிடிக்காத இடைஞ்சல்கள் வரலாம். அதேபோல் மற்ற சமயங்களிலும் நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கலாம்.

அதுபோன்ற சமயங்களில் பதிலளிக்க (respond) வேண்டியிருந்தால், நாம் பதில் அளிக்கவேண்டும்.

இல்லையெனில், எந்தவித எதிர்வினையும் (react) செய்யாமல் வெறுமனே ஒரு பார்வையாளனாக இருந்துவிட வேண்டும்.

இது எளிதானதாகத் தோன்றினாலும் கடைப்பிடிக்கக் கஷ்டமாக இருக்கும்.

ஏனெனில், எதிர்வினையாற்றி பழக்கப்பட்டிருந்த மனத்தை 'சும்மா வேடிக்கை பார்' என்று சொன்னால் அது கேட்காது. நாம்தான் கொஞ்சம் விழிப்பாக இருந்து அதை நாம் விரும்பியபடி செயல்பட வைக்க வேண்டும்.

இது சரியாக நடந்தால், நடைபெறும் சம்பவம் நம் மனதில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் ஆழ்மனப் பதிவுகளில் மேலும் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப் படும்.


*வேடிக்கைபார் .. தொடராதே*

நாம் விரும்பாத சம்பவங்கள் நடக்கும் போது, 'பார்வையாளனாக' இருப்பது எப்படி என்று பார்த்தோம்.

பல சமயங்களில் சம்பவங்கள் நடக்காவிட்டாலும், நாம் பார்வையாளனாக இருக்க நேரிடும்.

உணர்வு மனதிற்கு நான்கு வாசல்கள் உண்டு. (ஒரு கற்பனை தான்).

மனம் ஒரு வாசல் வழியாக புலன்களின் துணையோடு புறவுலகை தொடர்பு கொள்கிறது.

ஒரு வாசல் வழியாக அது புத்தியோடு தொடர்பு கொள்கிறது.

மற்றொரு வாசல், அது தான் பெறும் அனுபவங்களை பதிவு செய்யும் அறையோடு தொடர்பு கொள்கிறது.

இன்னொரு வாசல், ஆழ்மனம் உணர்வு மனத்தோடு தொடர்பு கொள்வதற்கு. (உணர்வு மனத்தால் ஆழ்மனத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது).


ஆழ்மனத்தில் உள்ள பதிவுகளின் தன்மைக்கு ஏற்ப, அது உணர்வு மனத்தை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கும்.

உணர்வு மனம் வேறு வேலைகளில் மூழ்கியிருந்தால், அந்தத் தூண்டுதல்களைக் கவனிக்காது. 

வேறு வேலைகள் இல்லாதபோது, உணர்வுமனம் ஆழ்மனத்திலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப கனவுகள் காண ஆரம்பித்துவிடும். 

அது புதிய வீடு கட்டுவதாக, எதிரியை பழிவாங்குவதாக, விடுமுறையில் எப்படியாவது ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதாக -- இப்படி பலவிதமான கனவுகளாக இருக்கலாம்.

அதுபோன்ற சமயங்களில் புத்தியின் துணைகொண்டு ஆராய்ந்து பார்த்து, அவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்றால் நாம் விலகி நின்று மனத்தின் கனவுகளை மூன்றாவது மனிதன்போல வேடிக்கை பார்க்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாம் மனத்துடன் சேர்ந்து பயணம் செய்யக்கூடாது.

அப்படி செய்தால் உணர்வு மனம் நம்மை தவறான வழியில் நடக்கவைத்துவிடும்.

மனம் காணும் கனவுகளை நாம் ஆதரிக்கவில்லை என்பது தெரிந்தால் மனம் அடங்க ஆரம்பித்து விடும்.

ஆழ்மனத்திற்கும் தான் தூண்டுவதால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததும், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி விடும்.


*எளிமையாக இரு*

'எளிமையாக இரு' என்றால் ஏழையாக இரு என்று அர்த்தமில்லை. 

எளிமை என்றால் தேவையில்லாத செலவினங்களைக் குறைப்பது மற்றும் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்ப்பது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். . இதன்மூலம் நமது அஹங்காரம் வலுப்பெறுவதைத் தவிர்த்துவிடலாம்.


*மௌனமாக இரு *

"Be silent, by silencing the action;              Be silent, by silencing the thought;            Be silent, by silencing the mind;                      Be silent, without knowing the silence".

தினசரி வாழ்வில் நாம் சும்மா இருக்க வேண்டிய நேரங்களும் வரும். 

அந்த மாதிரி நேரங்களில் நாம் தேவையற்ற செயல்களில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

அதே மாதிரி தேவையற்ற எண்ணங்கள் எழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  

இது இரண்டும் ஒழுங்காக நடைபெற வேண்டுமென்றால், அது போன்ற சமயங்களில் மனம் மௌனமாக இருந்தால்தான் முடியும் . 

அதன்பின் நாம் மௌனமாக இருப்பது தெரியாமலே மௌனமாக இருக்க வேண்டும். 



எவ்வளவுதான் முயன்றாலும் மனத்தால் மௌனமாக இருக்க முடியாது. ஆழ்மனப் பதிவுகள் உணர்வு மனத்தை சும்மா இருக்க விடாது. 

தேவையற்றதை மனம் சிந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால், மனத்தை வேறு திசையில் திருப்ப வேண்டும். என்ன செய்யலாம்? 

சின்ன சின்ன பயிற்சிகள் மூலம், நாம் மனதை பக்குவப்படுத்த முயற்சி செய்யலாம்.

உதாரணத்திற்காக இரண்டு பயிற்சிகளைப் பற்றி குறிப்பிடுகிறேன். ஒன்று சாதனத்தை பயன்படுத்தி செய்வது; மற்றொன்று சாதனத்தின் உதவியின்றி செய்வது. 

இது மாதிரி, உங்களுக்கு எது சாத்தியமோ, அதன்படி நீங்கள் பயிற்சி செய்யலாம்.

சும்மா இருக்கும் நேரங்களில் செய்யலாம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தை அதற்காக ஒதுக்கினால் நல்லது.

இந்தப் பயிற்சிகள் பெரியோர்கள் சொன்னதுதான். உங்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.


("Mind will succumb to the thing to which it is repeatedly diverted"

மனதால் ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்கமுடியாது. அது ஒன்றிலிருந்து மற்றொன்று எனத் தாவிக்கொண்டே யிருக்கும். அதனால்தான் "மனம் ஒரு குரங்கு" என்கிறார்கள்.

அதே நேரம், அதை திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை மாத்திரம் நினைக்க வைத்தால், அது அதற்கு பழக்கமான ஒன்றாக மாறிவிடும்.)



*சாதனத்துடன் கூடிய பயிற்சி*

உங்களுக்கு சவுகரியமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  

எல்லா நாட்களிலும் ஒரே நேரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய அகல் விளக்கை ஏற்றுங்கள். சின்ன விளக்காக இருந்தால் நல்லது.

விளக்கு உங்கள் கண்ணுக்கு நேராக அல்லது சிறிது குறைவான உயரத்தில் இருக்க வேண்டும்.

எரியும் தீபத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடம் உற்றுப் பாருங்கள். கவனம் வேறு எங்கும் செல்லக் கூடாது.

பிறகு கண்களை மூடிக்கொண்டு (அழுத்தமாக அல்ல; லேசாக) அந்த தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் தொடர்ந்து பாருங்கள்.

திடீரென்று மனம் வேறு எங்கோ செல்வதை உணர்வீர்கள்.

 அப்போது கண்களைத் திறந்து பயிற்சியை முதலிலிருந்து ஆரம்பியுங்கள்.

இது பழக்கத்திற்கு வந்த பிறகு, சும்மா இருக்கும் நேரங்களில் கண்களை மூடிக்கொண்டு தீபத்தின் ஒளியை மனக்கண்ணால் காண முயற்சி செய்யுங்கள்.


*சாதனங்களின் உதவியின்றி செய்யும் பயிற்சி*

பல காரணங்களால் சிலரால் குறிப்பிட்ட நேரங்களிலோ அல்லது ஏதேனும் சாதனங்களின் உதவிகொண்டோ பயிற்சியை செய்வது முடியாததாக இருக்கலாம்.

அத்தகைய மனிதர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

சும்மா இருக்கும் நேரங்களில் (வீட்டிலா, வெளியிலா என்பது பிரச்சினையே அல்ல) தனது மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். 

மூச்சு பயிற்சி ஏதும் செய்யக்கூடாது. வெறுமனே மூச்சு எப்படி வந்து செல்கிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.

(கீழே வருவது என் அனுபவம்)

மூச்சோடு கலந்து உங்களுக்குப் பிடித்த மந்திரத்தை, மௌனமாக நாக்கும் அசையாமல், சொல்லுங்கள்.

உதாரணமாக உங்களுக்குப் பிடித்த மந்திரம் "ஓம் நமசிவாய" என்றால், மூச்சை உள்ளே இழுக்கும்போது "ஓம்" என்றும், மூச்சை வெளியே விடும்போது "நமசிவாய" என்றும் உச்சரியுங்கள்.

இந்த பயிற்சிக்கு பலன் மிக அதிகம். ஏனெனில், இந்த மந்திரம் நாளடைவில் உணர்வு மனத்திற்கும், ஆழ்மனத்திற்கும் இடையே ஒரு தடுப்பு சுவர்போலச் செயல்படத் தொடங்கும்.

அதன்பின் ஆழ்மனப் பதிவுகள் உணர்வு மனத்தை உசுப்பேத்துவது குறையும்.

அவரவர் விருப்பப்படி பிற மந்திரங்களையும் (சிறிது மாற்றி) உபயோகிக்கலாம். உதாரணமாக  ---

ஓம் சரவணாய

நமோ நாராயண

ஓ ஜீசஸ்

இதை தொடர்ந்து கடைப்பிடித்தால், இது பழக்கத்திற்கு வந்துவிடும்.



இதுபோன்ற பயிற்சிகள் மனதில் குறிப்பிட்ட பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மனம் சும்மா இருக்கும் வேளைகளில் அங்குமிங்கும் அலைபாய்வது குறையும்.

 

               


                முடிவுரை 


குழந்தை பிறக்கும் போது, அன்பு அதன் இயல்பாக இருக்கும். ஆனாலும், முற்பிறவியின் முடிவில் இருந்த ஆழ்மனப் பதிவுகள் 'பிராரப்த கர்மா' என்ற பெயரில் தொடர்ந்து வருவதால், அன்பு 'தூய அன்பாக' இல்லாமல் மாசுடன் கூடிய அன்பாக இருக்கும்.


மனிதன் தனது சக்தியை புறவுலகில் செலுத்தும்போது, மாசுடன் கூடிய அன்பு பாசமாக, பேராசையாக, காமமாக (அதீத ஆசை) உருவெடுத்து அவனை நிலைகுலையச் செய்துவிடுகிறது.

அதே சக்தி அகவுலகில் நுழைந்தால், அன்போடு கலந்திருந்த மாசு நீங்கி தூய அன்பாக மாறி அவனை கருணை நிரம்பிய மனிதனாக மாற்றி விடுகிறது.

மனிதனிடமிருந்த அன்பு தூய அன்பாக மாறும் பொழுது, அந்த மனிதன் விழிப்புணர்வின் ஆரம்ப நிலையை அடைகிறான்.

அவனிடம் இருந்த விழிப்புணர்வு முழுமை அடையும் பொழுது, அவனது உள்ளம் கருணையால் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.

அவன் மக்களால் மதிக்கப்படும் மகானாக அடையாளம் காணப்படுவான்.

சித்தத்தின் மீது படர்ந்திருந்த பதிவுகள் நீங்கிய காரணத்தால், அவனது ஆழ்மனம் (உணர்வற்ற மனம்) சித்தத்தில் இருந்து நீங்கி விடுகிறது. 

('இறந்தார்க்கும்' என்று வள்ளுவர் சொல்வது இவர்களைக் குறித்துத்தான் என நான் எண்ணுகிறேன்)

சித்தத்திலிருந்த மறைப்பு (ஆழ்மனம்) விலகியதால், இறையருள் அவனை சூழ்ந்துகொள்கிறது.

அவனும் உள்ளிருந்து (bliss sheath) பெருகும் ஆனந்தத்தை உணர்ந்து கொள்கிறான். 

"சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடுகிறார் தாயுமானவர்.

"மனமிறக்க ஞானி பிறக்கிறான்" என்று சொல்வதும் இதனால்தான்.  


ஆழ்மனப் பதிவுகள் நீங்கிய நிலையில், அவனது உணர்வு மனம், தூய அன்பின் காரணமாக கருணையால் நிரம்பி வழிகிறது.


"கருணை பொங்கும் உள்ளம் - அது கடவுள் வாழும் இல்லம்"                           --கவிஞர் கண்ணதாசன்.







‌        

Sunday, 16 August 2026

கருணை பொங்கும் உள்ளம்

   கருணை பொங்கும் உள்ளம்


'பாவ மன்னிப்பு' படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் ...

"கருணை பொங்கும் உள்ளம் - அது
கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்."

மிக சாதாரணமாக தோன்றும் வரிகள். ஆனால், ஆழமான பொருள் நிறைந்த வரிகள்.

இதில் முதல் இரண்டு வரிகளுக்கான விளக்கத்தை தொடரின் முடிவில் தருகிறேன். கடைசி இரண்டு வரிகளை மட்டும் கொஞ்சம் ஆராய்வோம்.

மூன்றாவது வரியில்
"கருணை மறந்தே வாழ்கின்றார்" என்று சொல்கிறார். 'மறந்தே' என்ற வார்த்தைக்கு எந்த மாதிரி பொருள் கொள்வது?





தந்தை தன் குடும்பத்தாருடன் வெளியே கிளம்புகிறார். வீட்டைப் பூட்டிவிட்டு, காருக்கு அருகில் வந்தபின்தான் 'கார் சாவியை' எடுத்துவர மறந்து விட்டது நினைவிற்கு வருகிறது.

'மறந்து விட்டது' என்றால் காருக்கு சாவி இருக்கிறது; ஆனால், வீட்டிலிருந்து அதை எடுத்துவர மறந்து விட்டார் என பொருள் கொள்ளலாம்.





"கருணை மறந்தே வாழ்கின்றார்" என்ற வரியில் உள்ள "மறந்தே" என்ற வார்த்தையை எப்படி புரிந்து கொள்வது? 

கருணை என்பது ஒரு பொருளாக இருந்தால், எங்கேயோ மறந்து வைத்து விட்டார் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், அது பொருள் அல்லவே!?





கருணை என்பது நமது மனதிலிருந்து வெளிப்படும் ஒரு உணர்வு.

'மறந்தே' என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? கருணை என்ற ஒன்று உள்ளது; முறையாக பயிற்சி செய்தால் எந்த மனிதனும் அதை அடைய முடியும்.

கருணை பொங்கும் உள்ளமே மனித வாழ்க்கையின் உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும்.

ஆனால், இந்தப் புரிதல்கூட இல்லாமல் வாழும் மனிதன், அடிப்படை உண்மையை மறந்துவிட்டு வேறு எதற்காகவோ கடவுளைத் தேடி அலைகின்றானே என எண்ணி வருந்துகிறார் கவிஞர்.





உண்மையான பக்தன் என்றால் அவன் மனதில் கருணை பொங்கி வழிய வேண்டும். இறைவனிடம் 'சரணாகதி' அடைந்தால் மட்டுமே, உள்ளத்தில் கருணை பொங்கும். ஆனால், நம்மிடம் 'சரணாகதி' பாவனை இல்லையே!? நாம் வேறு பல வேண்டுதல்களை அல்லவா கடவுள் முன் வைக்கிறோம்.

அதற்கு காரணமாக இருப்பது, நமது ஆழ்மனதில் இருக்கும் 'பதிவுகள்தானே'!?





'ஆழ்மனம்' சம்பந்தமாக சில கேள்விகள் முன்வைக்கப் படுகினறன. அவை ...

1. ஆழ்மனத்தில் (sub-concious mind) பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன? 

2. அது எவ்வாறு அகங்காரமாக மாறுகிறது?.  

3. சூப்பர் கான்சியஸ் மைண்ட் என்று ஒன்று உள்ளதே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?

4. ஆழ்மனப் பதிவுகளை எப்படி நீக்குவது?




ஆழ்மனம் என்பது அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் ஒரு பகுதிதான். இருப்பினும், மனிதன் எதிர்கொள்ளும் எல்லாவித துன்பங்களுக்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஆழ்மனம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்வோம்.




மனம் என்றால் என்ன?

நமக்கு மூளை என்றால் எது என்று தெரியும். புத்தி என்றாலும் எதுவென்று தெரியும்; மூளையின் ஒரு பகுதிதான் புத்தியாக செயல்படுகிறது என்பதும் தெரியும். ஆனால், மனம் என்றால் என்னவென்று கேட்டால், ஒரே மாதிரியான பதில் கிடைப்பதில்லை.

Mind is the impression of the past experiences .. Swami Chinmayananda
மனம் என்பது புறவுலகில் நாம் சந்திக்கும் அனுபவங்கள் சங்கமிக்கும் இடம். அது மூளையில்தான் நடைபெறுகிறது.

ஆக, மூளையின் ஒரு பகுதி புத்தியாகவும், மற்றொரு பகுதி மனமாகவும் இயங்குகின்றன. மனமும் 'உணர்வு மனம்', 'உணர்வற்ற மனம்' என இரணடு பிரிவுகளாக இயங்குகிறது. உணர்வற்ற மனதைத்தான் நாம் ஆழ்மனம்
(Subconscious-mind) என்று சொல்கிறோம்.

உணர்வு மனதில் ஏற்படும் பதிவுகள் நீடித்து நிற்பதில்லை; ஆனால், ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை.





முதலாவது கேள்வி:-
ஆழ்மனத்தில் பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன? 

ஆழ்மனதில் பதிவுகள் எந்தெந்த வழிகளில் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

புறவுலகில் இருந்து வரும் தாக்கங்களை உணர்வு மனம் ஐம்புலன்களின் உதவியுடன் எதிர்கொள்கிறது. அதனால் ஏற்படும் அனுபவத்தை அது ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். 

மனம் எதிர்கொள்ளும் தாக்கம்    வலிமையானதாக இருந்தால், அது ஆழ்மனம் வரை சென்றுவிடும். அந்தத் தாக்கத்தை ஆழ்மனம் விரும்பி ஏற்றுக்கொண்டால், அங்கு ஒரு பதிவு நிகழ்ந்து விடும். 

உதாரணம்:-  சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்பட பாடலைக் கேட்டேன். அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. குறிப்பிட்ட பாடலை இரண்டொரு தடவைதான் கேட்டிருப்பேன். இருந்தாலும் அந்தப் பாடல் என்னை மிகவும் ஈர்த்ததால் முழு பாடலும் என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அந்தப் பாடலில் இருந்து ஒரு சரணம் ...
".. ஏழடுக்கு மாளிகையில்
இருக்கிற பேர்வழிகள்
எத்தனையோ தப்புத்தண்டா
பண்ணுவாங்க
ஏழை எளியவங்க
இல்லாத காரணத்தால்
ஏதோ சிறு தவறு
பண்ணுவாங்க

இது தெரியும்
அது தெரியாது .."

ஆழ்மனதில் பதிவுகள் நிகழ்வதற்கு இது ஒரு வழி. 





வீட்டில் குழந்தை பிறந்தால், அதன் தாய் அதனிடம் அன்பை பொழிகிறாள். அன்பை வெளிப்படுத்துவதுடன் அந்தக் குழந்தையின் மீது பற்றும் வைக்கிறாள். (it is only a mental attachment and not any physical attachment). விளைவு .. அன்பாக இருந்த ஒன்று ஆசையாகவும், அதனைத் தொடர்ந்து பாசமாகவும்  மாறி, ஆழ்மனதில் பதிவாகி விடுகிறது.

நாம் எந்த ஒன்றின் மீது பற்று வைத்தாலும், அது தொடரும்போது 
(அது நம்மிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்),  முதலில் அது ஆசையாகவும், பின்னர் அது பாசமாகவோ, பேராசையாகவோ ஆழ்மனம் வரை சென்று விடுகிறது.





பிரச்சனை என்னவென்றால், எந்த ஒன்றின் மீது ஆசை வைத்தாலும், அதன் பின்னணியில் பயமும், கோபமும் இருக்கும். 

ஆசைப் பட்ட ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்கா விட்டால் கோபம் -- அந்த ஒன்று கிடைத்து விட்டாலோ, அது தன்னை விட்டு போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ அதற்கு யார் காரணமோ அவர் மீது கோபம். 

ஆழ்மனப் பதிவு என்று வந்துவிட்டால் இது ஒரு தவிர்க்க இயலாத சுழற்சியாகிவிடுகிறது.





பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்தை மனப்பாடம் செய்கிறார்கள். அதன் நோக்கம் என்ன?

குறிப்பிட்ட பாடத்தை திரும்பத் திரும்ப படிக்கும் போது, அந்தப் பாடத்தை பற்றிய நினைவு ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. அதன்பின் அதனை எளிதாக நினைவு படுத்திக் கொள்ளலாம்.

கடவுளை வணங்கும் போது நமக்கு பிடித்த பாடல்களை பாடுகிறோம். தொடர்ந்து பாடி வந்தால் அந்தப் பாடல்கள் நமது ஆழ்மனதில் பதிவாகி விடுகின்றன. பின்னர் அவற்றை நினைவில் கொள்வது எளிதாகி விடுகிறது.

திருக்குறள் பாடல்களை படித்து நினைவில் கொள்ள விரும்புகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதல் நாள் முதலாவது குறளை பத்து தடவை படிக்க வேண்டும். மறுநாள் முதலாவது குறளை ஒருதடவை படித்து விட்டு, அடுத்த குறளை பத்து தடவை படிக்க வேண்டும். அடுத்த நாள் முதல் இரண்டு குறள்களையும் ஒருதடவை படித்துவிட்டு அடுத்த குறளை பத்து தடவை படிக்க வேண்டும். இந்த முறையைக் கடைப்பிடித்தால், நாம் படித்த பாடல்கள் அனைத்தும் எளிதாக ஆழ்மனம் வரை சென்று விடும்.

 



குடிப்பழக்கம் இல்லாத ஒருவன் எப்படி குடிகாரனாக மாறுகிறான்?

நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக குடிக்கப் பழகியவன், தொடர்ந்து குடித்து வந்தால் அது பழக்கமாக மாறி ஆழ்மனதில் ஒரு பதிவை ஏற்படுத்தி விடுகிறது. பின்னர் 'குடிப்பது' என்பது தன்னிச்சையாக நடைபெறும் செயலாகி விடுகிறது.

Pizza, புரோட்டா, ஐஸ்கிரீம், அதிக உப்பு கலந்த தின்பண்டங்கள், குடிப்பழக்கம், பீடி, சிகரெட் போன்றவை உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும், அவற்றை ஏன் அடிக்கடி உபயோகிக்கிறோம்?

அதற்கு காரணமாக இருப்பது அவற்றைப் பற்றிய பதிவுகள் ஆழ்மனதில் இருப்பதால்தான். நமக்கு அது தெரிவதில்லை; ஆனால், அந்தப் பதிவுகள்தான் அவற்றை மீண்டும் மீண்டும் உபயோகிக்க நம்மை தூண்டுகின்றன.

   



நல்ல அனுபவங்களாக இருந்தாலும், கெட்ட அனுபவங்களாக இருந்தாலும் உணர்ச்சி பொங்க அவற்றை எதிர் கொள்ளும்போது, அவை நமது ஆழ்மனதில் புதிய பதிவுகளை ஏற்படுத்தி விடும்.

மனிதனுக்கு ஏற்படும் இனவெறி, சாதிவெறி, மதவெறி போன்றவைகளுக்கு காரணமாக இருப்பது அவனுள் தோன்றும் உணர்ச்சி பெருக்கம் தான்.





பல நேரங்களில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் உணர்வு மனதோடு தங்கிவிடும். ஆனாலும், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட அனுபவம் ஆழ்மனம் வரை சென்று விடும்.

நமது மனம் புண்படும்படி ஒருவர் பேசி விடுகிறார். அது நமது உணர்வு மனதில் ஒரு பதிவை நிகழ்த்துகிறது. பின்னர் நாம் அதையே நினைத்துக் கொண்டிருந்தால், அந்தப் பதிவு ஆழ்மனம் வரை சென்று விடும்.

    



அடுத்தது, கற்பனையில் செய்யப்படும் பதிவுகள். 

இதில் பல வகையான பதிவுகள், அந்தந்த மனிதனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடைபெறும்.

இல்லாததை நினைத்து ஏங்குவது, அடைய முடியாத ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவது, தேவையில்லாமல் கவலைப் படுவது போன்று விதவிதமான பதிவுகள் ஆழ்மனதில் இடம் பெறும்.

'மனப்பிராந்தி' என்று பலர் சொல்வதுண்டு. அது பெரும்பாலும் தேவையற்ற பயத்தை குறிப்பதாகவே இருக்கும். இதுவும் கற்பனையின் காரணமாக ஏற்படும் பதிவுதான்.

இவை அனைத்தும் ஆரம்பத்தில் ஒரு எண்ணமாக மட்டுமே தோன்றும். அதையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால், அந்த எண்ணங்கள் ஆழ்மனம் வரை சென்று விடும்.

ஆழ்மனதில் பதிவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதற்கு இந்த விளக்கங்கள் போதும் என எண்ணுகிறேன்.





இனி, இந்தப் பதிவுகள் காரணமாக என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்:

1. "மனமே உனது உற்ற நண்பன்; அதுவே உனது முக்கிய எதிரியும் கூட" என்று கிருஷ்ணன் கூறுகிறார். அவர் மனம் என்று பொதுவாகக் கூறினாலும், நண்பனாகவோ, எதிரியாகவோ இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது "ஆழ்மனப் பதிவுகள்தான்".

2. மனிதனுக்குள் ஏற்படும் inner-suffocation, depression போன்றவைகளுக்கும் இவையே காரணம்.

3. மனிதன் பல நேரங்களில் தன்னிலை மறந்து தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்தால், அவற்றின் பின்னணியில் இருப்பதுவும் ஆழ்மனப் பதிவுகளே.

4. இரவு நேரத்தில் மனிதனை தூங்கவிடாமல் அல்லல் படுத்துவதும் இந்தப் பதிவுகளே.

5. "பெற்றது பொய்யுடல்
முன்செய் வினைப்பயன்..."
மனிதன் இறக்கும் போது ஆழ்மனதில் பதிவுகள் இருந்தால், அவனுக்கு மறுபிறவி உண்டு என சில சமயங்கள் சொல்கின்றன. அதனால்தான் வள்ளுவர் "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" எனக் கூறுகிறார்.

6. மனிதனின் உள்ளத்தில் 'கருணை' பெருக்கெடுக்கத் தடையாக இருப்பதும், இந்த ஆழ்மனப் பதிவுகளே.





கருணை, இரக்கம் .. இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

இரக்கம் என்பது உணர்ச்சியில் பிறப்பது. கொடிய மனம் படைத்த மனிதனிடம் கூட இரக்கம் பிறப்பதைக் காணலாம். பேரிடர் காலங்களில் பலரும் இரக்கம் காட்டுவதைக் காண முடியும். பல சமயம், தனி மனிதர்களும், தேவைப்படின், பிறரிடம் இரக்கம் காட்டுவதுண்டு.

கருணை என்பது உணர்வில் கலந்தது. அது குறிப்பிட்ட மனிதர்களிடம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்‌. ஆனால், அதை அவர்கள் வெளியே பறைசாற்றுவதில்லை. நாமாக அதை உணர்ந்தால் தான் உண்டு.

எல்லா மனிதர்களிடமும் இரக்கம் இருப்பதைப் போன்று, கருணையும் இருக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.





இரண்டாவது கேள்வி:-
அது  (ஆழ்மனப் பதிவுகள்) எவ்வாறு அகங்காரமாக மாறுகிறது?.  

ஆழ்மனப் பதிவுகளை "பீஜம்"
என்கிறார் ரிஷி பதஞ்சலி. பீஜம் என்றால் உயிர்ப்புடன் கூடிய விதைகள் என்று பொருள்.

ஆழ்மனப் பதிவுகள் அகங்காரமாக மாறுவதில்லை. ஆழ்மனப் பதிவுகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, மனிதனினிடம் தன்முனைப்பு (அகங்காரம்) செயல்படத் துவங்குகிறது.

ரஜோ குணம் மிகுந்த மனிதனிடம், தன்முனைப்பின் வேகம் மிகுந்து காணப்படும்.

அவன் சத்துவ குணத்தில் பிரவேசித்தால், அகங்காரம் நலிவடையத் தொடங்கி விடும்.

   



மூன்றாவது கேள்வி:-
சூப்பர் கான்சியஸ் மைண்ட் என்று ஒன்று உள்ளதே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான்காவது கேள்வி:- ஆழ்மனது பதிவை (பதிவுகளை) எப்படி நீக்குவது?

நான்காவது கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு, மூன்றாவது கேள்விக்கு வருவோம்.

ஆழ்மனப் பதிவுகளை நம்மால் நீக்க முடியாது என்பதுதான் உண்மை. அவைகளாக நீங்கினால் தான் உண்டு.

".. பாச வினைகள் பற்றது நீங்கி"
... 'பற்றது நீக்கி' என்று
பாடவில்லை.

".. அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" ... 'பற்றை விடற்கு' என வள்ளுவர் பாடவில்லை.

"ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில் ஒன்றிநிற்ப தெக்காலம்?"
.. பத்திரகிரியார்.





ஆசை வலைபின்னி பாசத்தில் நம்மை தள்ளி விடுகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்க வேண்டும் என்கிறார்; அதாவது இறை சிந்தனையில் இரு என்கிறார்.

ரிஷி பதஞ்சலி "ஈஸ்வர ப்ரணிதானத்"; இறைவனிடம் சரணடைவது
என்கிறார்.

முழு நேரமும் இறை சிந்தனையில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தால், ஆழ்மனதில் இருந்த தேவையற்றப் பதிவுகள் ஒவ்வொன்றாக நம்மைவிட்டு நீங்கிவிடும்; பாச உணர்வும் மறைந்து விடும்.  

மனம் இறை சிந்தனையால் நிரம்பியிருந்தால், உள்ளத்திலிருந்து பாசம் விலகிவிடும்; தூய்மையான அன்பு மட்டுமே அங்கு குடிகொள்ளும்.





'சூப்பர் கான்சியஸ் மைண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?' என ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.

இந்தத் தொடருக்கும்,  'சூப்பர் கான்சியஸ் மைன்ட்'-கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற சந்தேகம் வரலாம். நிச்சயமாக சம்பந்தம் உண்டு.

கான்சியஸ் மைன்ட்  (conscious mind) -- உணர்வு மனம்;
சப்-கான்சியஸ் மைன்ட் (Sub-conscious mind) .. ஆழ்மனம். இதை உணர்வற்ற மனம் (unconscious mind) என்றும் சொல்வார்கள்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு மனங்களும் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டவை. ஆனால், 
 'சூப்பர் கான்சியஸ் மைண்ட்' 
(Super-conscious mind) 
விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாத ஒன்று. இது உணர்வு மனம் மற்றும் உணர்வற்ற மனம் இரண்டும் கடந்த நிலை!! இதை எப்படி புரிந்து கொள்வது?





".. மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்று பாடுகிறார் தாயுமானவர்.

"..மனமிறக்க.." என்றால், மனம் இல்லாமல் போய் விடும் என்று அர்த்தமல்ல; மனம் இருக்கும், ஆனால் மனதை ஆழ்மனப் பதிவுகள் மூலம் ஆட்டிவைத்த "நான்" என்ற அகங்காரம், "எனது" என்ற மமகாரம் இரண்டும் நலிந்து அவற்றின் 'தன்முனைப்பு' வெகுவாகக் குறைந்து விடும்.

அதன் பின்னர், அந்த மனிதனின் இயக்கம் இரண்டு வழிகளில் மாறிவிடும்:-
1. ஆழ்மனதின் உந்துதல் இல்லாமல், ஐம்புலன்கள் தரும் கருத்துக்களுக்கு இடம் அளிக்காமல், மனிதனால் புறவுலகத் தாக்கங்களை நேரடியாக எதிர் கொள்ள முடிகிறது. புறவுலகத் தாக்கங்களை நேரடியாக எதிர்கொள்ளும் பொழுது, அவற்றின் பின்னணியில் இருக்கும் 'காரணிகளையும்' அவனால் புரிந்து கொள்ள முடிகிறது.

2. அவனது இயக்கத்தில் பெரிய மாறுதல்கள் இருந்தாலும், அதன் பின்னணியில் இருப்பது "சித்தத்தின் உள்ளிருந்து பெருக்கெடுத்து அவனை முற்றிலும் சூழ்ந்து கொள்ளும் உள்ளொளிதான்".

இந்த நிலையில் அந்த மனிதனை இயக்குவது "சூப்பர் கான்சியஸ் மைண்ட்" (super-conscious mind) என்று சொல்லலாம். இது எனது தனிப்பட்ட கருத்து.





பொதுவாக நாம் எல்லோரும் நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். (இது ஒரு கற்பனைதான்)

'நான்' என்று சொல்லும் போது, அது வெறும் புள்ளிதான். ஆனால், கூடவே 'எனது' என்ற ஒன்று வந்துவிட்டால் .. அது உயிருள்ளதாக இருந்தாலும், உயிரற்றதாக இருந்தாலும்.. அங்கு ஒரு வட்டம் உருவாகி விடும். வெகு விரைவில் 40, 50 'எனது' ஒன்றுகூடி வட்டத்தைப் பெரிதாக்கி விடும். 'எனது' என்பதன் எண்ணிக்கை கூடக்கூட, மனிதனின் அகங்காரம் மேலும் மேலும் வலுவடைந்து விடும்.





அகங்காரம் உள்ள மனிதனிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அகங்காரம் புறவுலகம் சார்ந்தது; கருணை அகவுலகம் சார்ந்தது.

மனிதனிடம் கருணை பிறக்க வேண்டுமென்றால், அவனது அகங்காரம் நலிவடைய வேண்டும். அதற்கு, பற்றின் காரணமாக வட்டத்தில் இருக்கும் 'எனதின்' (my) எண்ணிக்கை குறைந்து, முடிவில் வட்டம் காணாமல் போக வேண்டும்; அல்லது 'எனது' என்ற பற்று நம்மை விட்டு நீங்க வேண்டும்.





அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு சிலரே 'வட்டத்தில்' மாட்டிக் கொள்ளாமல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். ரமண மகரிஷி, ஆதி சங்கரர் போன்றவர்கள் சிறு வயதிலேயே புறவுலக வாழ்க்கையைத் துறந்து  வெளியேறியவர்கள்.





இன்னும் சிலர் வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த அதிர்ச்சி காரணமாக வட்டத்தை துறந்து வெளியேறி விடுகின்றனர் ...
பட்டினத்தாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு "காதறுந்த ஊசி";
பத்திரகிரியாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு "கழுமரம்";
அருணகிரிநாதருக்கு
அதிர்ச்சியைக் கொடுத்தது அவரது "சகோதரி".





புத்தரைப் போன்றவர்கள் தங்களைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை தேடி வட்டத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.





அப்படியானால், வட்டத்தில் சிக்கித் தவிக்கும் இல்லற வாசிகள் உள்ளத்தில் கருணை மலர வாய்ப்பே இல்லையா?

  



ஆழ்வார்கள், நாயன்மார்கள் எனப் பலர் நம்மால் வணங்கத்தக்கவர்களாக உள்ளனர். அவர்களில் இல்லறவாசிகளும் அடங்குவர். அந்த அளவிற்கு அவர்கள் உயர்ந்து நிற்க காரணம் என்ன?

நம்மிடம் இல்லாத ஒரு சிறப்பு அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அது எது?

நம்மிடம் இருக்கும் ஒன்று அவர்களிடத்தில் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான காரணம். அது நம்மை ஆட்டிப் படைக்கும் "அகங்காரம்".





ஜனக மகாராஜா ஒரு நாட்டையே ஆட்சி செய்தார். இருந்தும் அவரால் அகங்காரத்தை விட்டு பற்றற்ற வாழ்க்கை வாழ முடிந்தது. 

அவரோடு ஒப்பிட்டால், நம்முடைய 'எனதின்' (my) எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் நம்மால் பற்றின்றி வாழ முடியவில்லை. பற்றின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?





ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் அனைவரும் இறைவனிடம் சரணடைந்தவர்கள். இறைவனிடம் சரணடைந்து விட்டால், அதன்பின் அந்த மனிதனிடம் அகங்காரம் இருப்பதில்லை. பல்வேறு காரணங்களால் நம்மால் சரணடைய முடியவில்லை என்றால், அடுத்து என்ன செய்யலாம்?





தினந்தோறும் சில மணித் துளிகள் ஒதுக்கி அகத்தாய்வு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். முறையாக செய்து வந்தால் சில வாழ்வியல் உண்மைகள் புரியும்; எனது (my) என்று எதையெல்லாம் நினைக்கிறோமோ, அவற்றின் மீது கொண்ட பற்றும் குறைந்துவிடும்.

நாளடைவில் நமது எண்ண ஓட்டம் "ஆக்ஞா" சக்கரத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிடும். அது இறைவனின் இருப்பிடம் அல்லவா? அதன்பின் "கருணை" உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்ளும்.

அதனால்தான் கவிஞரும்
"கருணை பொங்கும் உள்ளம் - அது
கடவுள் வாழும் இல்லம்" என்கிறார்.

                       (முற்றும்)