"மனிதன் என்பவன்!?"
மனிதன் எதை நினைக்கிறானோ, அதாகவே மாறுகிறான்.
மனத்தின் உள்ளே உள்ள பதிவுகளின்படியே அவன் நினைக்கிறான்.
தனக்கு வெளியே உள்ளவற்றோடு தொடர்புகொள்ளும்பொழுது, அதனால் ஏற்படும் அனுபவங்கள் காரணமாக அவனுள் பதிவுகள் நிகழ்கின்றன.
ஆக, புறவுலகில் உள்ள பொருட்கள், அவற்றோடு நாம் தொடர்புகொள்ளும் விதம் இவற்றைப் பொறுத்து, மனிதனின் வாழ்க்கை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ மாறுகிறது.
சிந்தியுங்கள்.
.............................................
அறிவை அறிந்தபின்
அலைவதும் இல்லை
அறிவை அறிந்தபின்
அயர்வதும் இல்லை
அறிவை அறிந்தபின்
அழுவதும் இல்லை
அறிவை அறிந்தபின்
செழுமதி தானே
...................................................
அறியா அறிவினை
அறிந்தவர் அறியார்
அறியா அறிவினை
அறிந்தவர் அறிந்தால்
அறவழி நடக்கும்
அந்தணர் தாமே
..................................................
அவத்தை விடு, தவத்தை எடு
……………………………………….............
அகமே புறமானால், “அவனே” அகமாகும்
...................................................
அடைந்தால், இழந்து விடுவோம்
இழந்தால், அடைந்து விடுவோம்
...................................................
அறிந்திடல் அறிந்திட,
அறியாமை அழிந்திடும்;
அறியாமை அழிந்திட,
அறிந்திடல் அறிந்திடும்(?)
...................................................
அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது;
அஹங்காரம் இருந்தால், மலர முடியாது.
...................................................
அது ஒரு அகன்ற, பெரிய பாத்திரம். அதில் உள்ள தண்ணீர் குடிக்க முடியாத அளவிற்கு உப்பாக இருக்கிறது.
பாத்திரத்தில் விழும்படியாக நல்ல தண்ணீர் குழாயைத் திறந்துவிட்டால், அதில் உள்ள உப்பு கொஞ்சம், கொஞ்சமாக வெளியேறிவிடுகிறது.
மனிதனும் ஒரு பாத்திரம்தான். அவனது ஆழ்மனதில் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் சேர்ந்தே இருக்கின்றன. ஆனால், அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
நல்ல குணங்களை வளர்க்கும் பதிவுகளை மனதில் ஏற்படுத்திக் கொண்டிருந்தால், நாளடைவில் மனதில் உள்ள தேவையில்லாத பதிவுகள் வெளியேறிவிடும்.
..................................................
அடர்கொண்ட காட்டுக்குள்
அழுது புலம்பாமல்
சுடர்கொண்ட வீட்டுக்குள்
சுகம்காண்ப தெக்காலம்?
...............................................
அண்டத்தில் பிண்டத்தை
அணைத்திருந்த நிலைமாறி
பிண்டத்தில் அண்டத்தை
பிணைத்திருப்ப தெக்காலம்?
...................................................
அகந்தை அழியும் இடம்; ஆண்டவனை அறியும் இடம்.
..................................................
அறிவது அறிந்தார்
அறிந்திடா ஒன்றை
அறிவது அறியார்
அறிந்திருப்ப தெக்காலம்?
..................................................
அறிந்தோ, அறியாமலோ நாம் எப்பொழுதும் ஒரே சமயத்தில் இரண்டு காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் ஏற்கனவே விதைத்த விதைப்பின் பயனை, இப்பொழுது அறுவடை செய்கிறோம். எதிர்கால அறுவடைக்காக இப்பொழு
து விதைக்கவும் செய்கிறோம்.
அறுவடை நாம் ஆசைப்பட்ட மாதிரி இல்லையென்றால் புலம்பும் நாம், எதிர்கால அறுவடைக்காக இப்பொழுது விதைக்கும் விதைப்பைப் பற்றிக் கவலைப்படுகிறோமா?
................................................
அகந்தை குறைந்தால்
அன்பு மலரும்;
அகந்தை கூடினால் ஆசை வளரும்.
......................................
அத்தன் இருப்பிடத்தை
ஆராய்ந்து பார்த்துநிதம்
சித்தம் தெளிவிக்கும்
சீர்பெறுவ தெக்காலம்?
...............................................
அன்பு .. அனைவர்க்கும் பொதுவான ஒன்று.
மனிதன் ஆசை வசப்பட்டால்
அது காமமாக, பாசமாக மற்றும் பேராசையாக உருவெடுக்கிறது.
மனிதன் தேவைக்கு மட்டும் வாழும்போது, அது மனிதனின் உள்ளத்தில் கருணையாக ஊற்றெடுக்க ஆரம்பிக்கிறது.
........................................
அண்டத்து நாயகன்
பிண்டத்துள் இருக்கின்றான்
உள்ளிருக்கும் நாயகனை
உருக்கொள்ளத் தெரியாமல்
ஊரெல்லாம் சுற்றுகின்ற
உறவுகளைப் பாரேண்டி!?
............................................
அறிவியலும், ஆன்மிகமும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்கிறார்கள். அப்படியானால், ஆன்மிகத்தில் அறிவியல் கிடையாதா?
அறிவியலும், ஆன்மிகமும் என்பதற்குப் பதிலாக அரசியலும், ஆன்மிகமும் என்பதே சரியாக இருக்கும்.
அரசியல் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுகிறது என்றால், ஆன்மிகம் வாழ்க்கை நெறியை வளர்க்க உதவுகிறது.
அரசியலும், ஆன்மிகமும் இணை கோடுகளாக, ஆனால் இணையக்கூடாத கோடுகளாக இருக்கவேண்டும்.
...................................................
ஆன்மிக வாழ்க்கைக்கு அடிப்படையாக வேண்டுவது, வாழ்வில் வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம். அதற்கு அடையாளம் பரிதவிப்பு இல்லாத அமைதி.
..................................................
“ஆறுவது சினம்” என்று மூதாட்டி சொல்லியிருக்கிறார்.
“ஆறுவது சினம்” என்று சொன்னவர், “ஆற்றுவது சினம்” என்று ஏன் சொல்லவில்லை?
காப்பி சூடாக இருந்தால், நாம் அதனை ஆற்றியும் குடிக்கலாம்; அதுவாக ஆறிய பின்னும் குடிக்கலாம்.
ஆனால், “சினம்” அப்படிப்பட்டதல்ல. அதுவாகத்தான் ஆற வேண்டும்; நாம் நேரடியாக அதனை ஆற்ற (அடக்க) முயற்சிக்க கூடாது. அது ஆபத்தானதும்கூட.
‘சினம்’ அதுவாக ஆற என்ன செய்ய வேண்டும்?
வெளியில் செல்லும் மனதை நிறுத்திப்பிடித்து அகத்தாய்வில் ஈடுபடுத்தினால், சினம் ஆறுவதற்கான வழியைக் கண்டுபிடிக்கலாம்.
...................................................
ஆடுகின்ற பட்டமொன்று
ஆடாமல் அறுந்துவிழும்
ஓடுகின்ற தேர்க்காலும்
ஓடாமல் ஒடிந்துவிழும்
கடலோடும் நாவாயும்
கரையறியா மூழ்கிவிடும்
படர்ந்தோங்கும் பெருமரமும்
தடம்புரண்டு தரைவீழும்
வல்லான் வகுத்தவையும்
வகுத்தவைகள் வகுத்தவையும்
வையகத்தில் ஓர்நாளில்
வாழ்வுதனை முடித்துவிடும்
ஆண்டவன் படைப்பினிலே
அனைத்திற்கும் ஒர்மரணம்
ஆசைகொண்ட மனிதனுக்கோ
அன்றாடம் மரணம்தான்
அளவிறந்த ஆசைகளே
அவதிகளின் களமாகும்
அணையொன்று கட்டிவைத்தால்
அன்பில்உளம் வளமாகும்
..................................................
ஆடும் பணியென்று
அலைந்து திரிந்தாலும்
பாடும் பணியொன்றில்
பயணிப்ப தெக்காலம்?
...............................................
ஆசை கொண்ட மனிதனுக்கு, அன்பின் அர்த்தம் புரியாது.
.................................................
ஆடுகின்ற நாயகன்
அரங்கத்தில் இருக்கின்றான்
அரங்கமும் தெரியாமல்
ஆட்டமும் காணாமல்
அங்குமிங்கும் அலைகின்ற
அலங்கோலம் அறிந்திலையோ?
........................................
இல்லாத வறியோர்க்கு இல்லாது என்றிட்டால் இல்லை எனவொன்று இல்லை.
...................................................
“இருக்கின்ற வரையிலும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும்” என்று சொல்வதுண்டு. ஆனால், அவர்கள் சொல்லவந்தது “வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கவேண்டும்” என்பதைத்தான்.
எவனொருவன் இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி போன்ற எல்லா இருமைகளையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறானோ. அவன் மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறவன்.
..................................................
இனியதென்று இனியதென்று
என்றும் பாடு
எனது தேசம் இனியதென்று
என்றும் பாடு
சாதிமத பேதமென்றும்
சண்டைதனை மூட்டுவிக்கும்
சாதிமத பேதம்விட்டு
தேசம் மட்டும்
நினைவில் கொண்டு (இனியதென்று)
இனவெறியும் மொழிவெறியும்
இழிநிலையைத் தோற்றுவிக்கும்
இனவெறியும் மொழிவெறியும்
இனி மறந்து ஒன்றுபட்டு (இனியதென்று)
மணலையொத்த
மக்கள் கூட்டம்
மனம் குமுறும் வாழ்வு தரும்
மக்களுக்கோர் அணையெடுத்து
மகிழ்ச்சி வெள்ளம்
பொங்கக் கண்டு (இனியதென்று)
...................................................
'இது’ வெளியேறும் பொழுது, ‘அது’ வெளிப்படுகிறது.
...................................................
உள்ளம் தெளிவாகி
உணர்ச்சியெல்லாம் ஒளியாகி
கள்ளமிலாப் பெருவாழ்வில்
கனிந்திருப்ப தெக்காலம்?
.................................................
உச்சிக்கு கீழமர்ந்து
உறங்காமல் இருக்கின்றான்.
மச்சுவீடு பாதை செல்ல
குச்சியொன்று கையிலுண்டு
மச்சுவீடும் குச்சியும்
மறந்து போன பாவியடி?
..................................................
உடல் - -
அதிகமான பாரத்தை தாங்காது; கீழே இறக்கி வைத்துவிடும்.
மனம் - -
எவ்வளவு பாரத்தை ஏற்றினாலும் மறுக்காது; ஆனால், பாரத்தின் அளவு கூடினால் அது நம்மை பயித்தியமாக்கி விடும்.
............................................
ஊரெல்லாம் ஓடி
உலகெல்லாம் வலம்வந்து
பாடெல்லாம் பாடி
பரிதவிக்கும் மடநெஞ்சே
ஏடெல்லாம் தேடி
எங்கெங்கோ சென்றாயே
கூடெல்லாம்
குடியிருக்கும்
கொற்றவனைக் காணலியோ?
...................................................
ஊருக்கெல்லாம் காதலன்
உள்ளொளியாய் இருக்கின்றான்.
கவனத்தில் ஒருமைகண்டால்
காதலனைக் கண்டிடலாம்
கவனமட்டும் புவனத்தில்
கலந்திருப்ப தேனடியோ?
................................
என்னுள் "அவன்" இருக்க
"அவனுள்" நான் இருக்க
எதுவுமே தெரியாமல்
எங்கெங்கோ அலைகின்றேன்.
...........................................
எண்ணி, எண்ணி எண்ணமற
...................................................
எந்த அறிவு ஞானத்தில் முடிகிறதோ, அந்த அறிவே உண்மையான அறிவு.
.................................................
என்னைப்பற்றி - -
ஊருக்குத் தெரியாதது, என் உறவுக்குத் தெரியும்;
உறவுக்குத் தெரியாதது, என் மனைவிக்குத் தெரியும்;
மனைவிக்குத் தெரியாதது, எனக்குத் தெரியும்;
எனக்கும் தெரியாதது, எனக்குத் தெரியும்!?!***
***வாழ்க்கையின் விசித்திரம் இதில்தான் உள்ளது.
ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது;
அதற்கு உள்ளே, அதனையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கிறது
என்பதுவும் தெரியாது.
மொத்தத்தில், ‘நாம் யார்’ என்று தெரியாமலேயே வாழ்க்கையை முடித்து
விடுகிறோம்.
...................................................
எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லை என்றால், ஆன்மா அறியப்படவில்லை எனலாம்;
எதுவுமே இல்லையென்றாலும் எல்லாமும் இருக்கிறது என்றால், ஆன்மா அறியபட்டுவிட்டது என்று பொருள்.
...................................................
என்னுடையது என்று 'எதுவுமில்லை' என்று உணரும்பொழுது மனிதன் "விழிப்புணர்வு" பெறுகிறானே அல்லாது, அவன் விழிப்புணர்வு பெறுவதற்கு உதவக்கூடியது வேறு 'எதுவுமில்லை'.
.........................................🥰.......
ஏதுக்கு வாழ்வு
என்றெண்ணிப் பாராமல்
சூதுக்குள் வாழ்ந்தும்
சுகமொன்றும் காணாமல்
வாதுக்கு வந்தும்
வழியொன்றும் தேடாமல்
சாவுக்கு வந்து
சவமானார் சஞ்சலத்தில்
...................................................
ஏகன் அநேகன்; அனைத்திலும் ஏகன்.
...................................................
ஒதுங்காமல், ஒடுங்க முடியாது;
ஒடுங்காமல், அறிய முடியாது;
அறியாமல், தெளிய முடியாது;
தெளியாமல், உணர முடியாது;
உணராமல், மலர முடியாது.
...........................................
ஒரு மனிதன் தான் செய்யும் தவறுகளிலிருந்து மட்டுமல்ல, மற்றவர்கள் நமக்கு செய்யும் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
..........................................
ஒரு மனிதன் செய்யும் தவறு அவனது குடும்பத்தை பாதிக்கும் என்றால், அது கண்டிக்கப்பட வேண்டும்.
அந்த மனிதன் செய்யும் தவறு ஒரு குழுவையோ, ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு இனத்தையோ பாதிக்கும் என்றால், அதை கண்டிப்பதோடு நின்று விடாமல், அந்த மனிதனுக்கு அதற்கான தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
அத்தகைய தவறு நாட்டின் இறையாண்மையை பாதிப்படைய செய்யும் என்றால், அதற்கு தண்டனை மட்டும் போதுமா? அத்தகைய மனிதர்களை என்ன செய்வது? 'களைந்தெறிய வேண்டும்' என்கிறார் வள்ளுவர்.
"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" என்கிறார் வள்ளுவர்.
..............................................
கதைபல கேட்டோம்
கருத்தினை அறிந்தோம்
கடவுளை அடையும்
வழியெதைக் கண்டோம்?
...............................................
கள்ளப்புனல் கொண்டு
கதறித் திரியாமல்
உள்ளப்புனல் கண்டு
ஊர்ந்துசெல்வ தெக்காலம்?
...................................................
கடவுளுக்கும், இறைவனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதன் இல்லையென்றால், கடவுளும் இருக்கமாட்டார்;
மனிதன் இல்லாதபோதும், இறைவன் இருப்பார்!
ஏனெனில், கடவுள் ‘உருவம்’; இறைவன் ‘அருவம்’.
.................................................
கிடைத்தன கண்டு, களித்தது அன்று;
கிடந்தது கண்டு, களித்தது இன்று.
………………………………………….....
சரணடைவது என்றால் என்ன?
நமக்கு எது நேர்ந்தாலும் அதை "ஈஸ்வரனின் பிரசாதமாக" ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உண்மையாகவே சரணடைந்து விட்டால், "எல்லாம் அவன் செயல்" என்று ஒப்புக் கொள்வதாக அர்த்தம்.
"அவன் செயல்" என்று முடிவான பின், அழுவது சரியா?
சரணாகதி அடைந்து விட்டால், கடவுளிடம் நமது வேண்டுதல் எப்படி இருக்க வேண்டும்?
"இறைவா! நீ எது கொடுத்தாலும், நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை தாங்கமுடியாத வேதனையை நீ தருவாயானால், அதைத் தாங்கும் வல்லமையைக் கொடு." இதுதான் உங்கள் வேண்டுதலாக இருக்க வேண்டும்.
.......................................
சட்டம், நியாயம், தர்மம் இவற்றிற்கிடையே என்ன வித்தியாசம்?
ஒரு கல்லூரி ஆசிரியர் தனியாக மாணவர் பயிற்சிப் பள்ளி நடத்துகிறார். அவர் ஆசிரியராக வேலை பார்ப்பதால், அதனை தன் மனைவியின் பெயரில் நடுத்துகிறார்.
சட்டப்படி அந்தப்பள்ளி அவரது மனைவியின் பெயரில் நடப்பதால், அவர் குற்றவாளி அல்ல.
உண்மையில் அந்தப்பள்ளியை அவர்தான் நடத்துகிறார். ஆதலால் நியாயப்படி அவர் குற்றவாளி ஆகிறார்.
ஆனால், அந்த பயிற்சியை நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் தனது கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக செலவிட்டு வருகிறார். எனவே தர்மப்படி பார்த்தால், அவர் குற்றவாளி அல்ல.
……………………………………………………
சாதனை செய்வதைக் காட்டிலும் சிறப்பானது, செய்த சாதனையை மறந்து விடுவதுதான்.
...................................................
சித்தத்தில் உள்ள எண்ணங்கள், வானத்தில் உள்ள மேகங்கள் போன்றவை; ஆற்றில் ஓடும் நீரைப் போன்றதல்ல.
அவை மிதந்து செல்பவை; உரசிச் செல்பவை அல்ல.
...................................................
சிதறிய மேகம் சேர்ந்து திரண்டால்
மழையெனப் பெய்யாதோ?
ஒருதுளி எல்லாம் ஒன்றாய் சேர்ந்தால்
ஓடையும் ஆகாதோ?
ஓரிரண்டாக ஓடைகள் சேர்ந்தால்
நதியெனப் பாயாதோ?
உதிரிப் பூக்கள் ஒன்றாய் கோர்த்தால்
மாலையும் ஆகாதோ?
ஆன்றோர் சான்றோர் ஓரணி சேர்ந்தால்
மானிடம் வளராதோ?
................................................
சிரி -- சந்தோஷப்படாதே; அழு -- அவதிப்படாதே.
.................................................
சிற்றினம் சேர்ந்து
சிறுமையுடன் வாழாமல்
மற்றினம் தேர்ந்து
மனமகிழ்வ தெக்காலம்?
..........................................
சில மனிதர்களை "energy-suckers" என அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
அவர்களுடன் சில மணித்துளிகள் பேசினால் கூட, உங்களது சக்தி விரயமாவதை உணர முடியும்.
அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தால், நமக்குள் 'negative mentality' உருவெடுப்பதைக் காண முடியும்.
அப்படிப்பட்ட மனிதர்களை விட்டு விலகி இருப்பது நமக்கு நல்லது.
....................................
சுற்றம் மறந்தால், சுற்றம் துறக்கும்.
...................................................
சூரியத் தகடுகளை (solar panel) உபயோகித்து நிறைய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து வருகிறார்கள். அதற்காக ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப் படுத்துகிறார்கள்.
அதற்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலைகளின் மேலாக, ரயில் வழித் தடங்களில் மேலாக சூரியத் தகடுகளை அமைத்து மின் உற்பத்தி செய்தால் என்ன?
பராமரிப்பு பணியில் தொழிலாளிகள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், பேருந்து மற்றும் ரயிலின் வழித்தடங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
தவிர, பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும் வெயிலின் தாக்கம் தெரியாது.
...................................................
சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாறுவது ‘சட்டம்’;
எந்த சூழ்நிலையிலும் மாறாதது ‘தர்மம்’.
................................................
தன்னை அறிவாளி என்று நினைப்பவன் – முட்டாள்;
தன்னை முட்டாள் என்று உணர்ந்தவன் – அறிவாளி.
...................................................
தன்னலம் பெருக்கும் தற்குறி மனிதர்
சுயநலம் ஒன்றே
குறியெனக் கொள்வார்
சுயநலம் ஒன்றே
குறியெனக் கொண்டார்
பிறர்நலம் பேணும்
பேற்றினை அறியார்
பொன்னும் மணியும் பூண்டு மகிழ்ந்து
தன்னலம் பெருக்கும் தற்குறி மனிதர்
கொண்டது போதும் குறிப்பினை மறந்து
குலமணி உன்னை கூவித் திரிவார்
உன்னிடம் தேடி
ஊர்வலம் வருவோர் உள்ளம் தன்னில்
ஒளியினைப் பாய்ச்சி
தன்னலம் பெருக்கும் தற்குறி மறக்க
தயை புரிவாயோ
தனிப்பெரும் கண்ணா?
....................................................
தற்பொழுது ஆன்மிக அரசியல் என்றொரு சொற்றொடர் நாட்டில் புழங்கி வருகிறது. இதற்கு அர்த்தம் என்னவாக இருக்கமுடியும்?
ஆன்மிக அரசியலில் பிராமணன் (வழிகாட்டி), க்ஷத்திரியன் (பொதுநலவாதி) மற்றும் சூத்திரன் (சேவகன்) மூவரின் பங்கும் அவசியம் இருக்க வேண்டும்.
எந்த காரணத்தைக் கொண்டும் ஒரு வைஷ்யனுக்கு (சுயநலவாதி) அதில் எந்தவித பங்கும் இருக்கக் கூடாது. அவன் அரசியலுக்கு வெளியில் இருந்து தனது ஆதரவை மட்டும் தரவேண்டும்.
அவன் அரசியலில் நுழைந்தால், அந்த நாட்டின் முன்னேற்றம் பாழாகிவிடும்.
………………………………………........
தன்னை நம்பி தன் பிள்ளைகள் இல்லை எனத் தெரிந்ததும், ஒதுங்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதன்பின் இருக்க வேண்டியது "பற்றற்ற பற்று" (detached attachment) மட்டுமே.
..................................
தன்னில் தானறியா, தனியாக இருந்தானாம்;
தன்னில் தானறிய, தான் மட்டும் இருந்தானாம்.
...................................................
தான் அழிந்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிந்தும், மெழுகுவர்த்தி வெளிச்சம் தர மறுப்பதில்லை; அகல்விளக்கு தன்னை அழிக்காமல் வெளிச்சம் தர ஒத்துழைக்கிறது.
நாம் மெழுகுவர்த்தியாக இருக்க வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு அகல்விளக்காக இருக்கலாம் அல்லவா?
...................................................
தான் கடைப்பிடிக்கின்ற சுய தர்மம், பொதுவான தர்மத்தோடு ஒத்துப்போனால் மட்டுமே, அவன் பிராமணன் என்று அழைக்கத்தக்கவன்.
……………………...............................
திருவைத் தேடி
திருமறந்து போகாமல்
திருவைத் தேடி
திருமறப்ப தெக்காலம்?
.................................... ..............
தேவைக்கு ஆசைப்படு; ஆசைக்கு ஆசைப்படாதே
...................................................
பற்று அற, அற பற்று
…………………………………………..........
பக்தி உண்மையானது என்றால், அது பாசவலையை அறுக்கவேண்டும்.
......................................................
பண வெறியும், அற நெறியும்
ஒரே இடத்தில் இருக்க முடியுமா?
...................................................
பார்க்குமிட மெல்லாம்
பரமாத்மா என்றார்கள்
நீக்கமற உலகெங்கும்
நிறைந்திருக்கும் தூயவனை
நோக்குமிடம் தெரியாமல்
ஏங்கித் தவிப்பதுஏன்?
....................................................
பிறந்தன இறக்கும்
இறந்தன பிறக்கும்
காய்த்தன பழுக்கும்
பழுத்தன காய்க்கும்
நினைத்தன மறக்கும்
மறந்தன நினைக்கும்
சிரித்தன கதறும்
கதறின சிரிக்கும்
சுவைத்தன வெறுக்கும்
வெறுத்தன சுவைக்கும்
கொடுத்தன இரக்கும்
இரந்தன கொடுக்கும்
பற்றின விலகும்
விலகின பற்றும்
வென்றன தோற்கும்
தோற்றன வெல்லும்
உழைத்தன ஒதுங்கும்
ஒதிங்கின உழைக்கும்
ஓடின ஓடியும்
ஒடிந்தன ஓடும்
இருவேறு உலகம்
இயல்பென அறிந்தார்
இறைவன் ஒருவர்
என்பதும் அறிவார்.
______________________
பிறருக்கு அடிமையாக இருப்பது ... தமோ குணம்
தனக்கு அடிமையாக இருப்பது ... இரஜோ குணம்
இறைவனுக்கு அடிமையாக இருப்பது
... சத்துவ குணம்
..................................................
பித்தத்தில் நின்று
பிதற்றித் திரியாமல்
சித்தத்தில் நின்று
சிவமறிவ தெக்காலம்?
.............................................
புறத்தினில் நாடு
அகத்தினில் தேடு
சுற்றிடும் குதிரை
சுவற்றினில் ஏறும்
முற்றிய கனியும்
முகத்திடை வீழும்
தேடிய அமைதி
திரையினில் தோன்றும்
பிறப்பினை அறுக்கும்
சிறப்பினை அடையும்
..............................................
புள்ளி, கோடு இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்: கோடு என்பது புள்ளிகளின் தொடர்ச்சி; கையை எடுக்காமல் போடப்பட்ட தொடர்புள்ளிகள்.
பிறவிப் பெருங்கடலும் ஒரு கோடு போலத்தான். ஒவ்வொரு பிறவியும் புள்ளியினைப் போன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
எந்தப் பிறவியில் மனிதன் தனது “வாசனா” பெட்டகத்தை உடைக்கின்றானோ, அப்பொழுது அந்தப் பிறவிப் பெருங்கடலாகிய கோடும் முற்றுப்பெறுகிறது.
..................................................
பெற்றது பொய்யுடல்
முன்செய் வினைப்பயன்
உற்றது வெற்றிடம்
உலவிடும் பொருட்பயன்
கற்றது நன்னெறி
கனிந்திடும் நற்பயன்
மற்றது வருவதோ
மன்னவன் அருட்பயன்.
.................................................
பெண் அடிமை ஒழிக என்பதும், பெண் விடுதலை வாழ்க என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறா?
இரண்டும் ஒன்றல்ல. அப்படியானால் பெண் அடிமை ஒழிகின்ற இடத்தில் பெண் விடுதலை ஆரம்பமாகிறதா என்றால், அதுவும் இல்லை.
பெண் அடிமை ஒழிகின்ற இடத்திற்கும், பெண் விடுதலை ஆரம்பிக்கும் இடத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. அதனைத் தாங்கி பிடிப்பதுதான் "தாய்மை" எனப்படுவது.
"தாய்மை" என்பது அன்பு, பரிவு, அரவணைப்பு போன்ற நற்பண்புகளை உள்ளடக்கியது; வெறுமனே குழந்தைப் பேற்றை மட்டும் குறிப்பதல்ல.
எப்பொழுது இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளி குறைகிறதோ, அப்பொழுது அந்தப் பெண்ணிடமிருந்து "தாய்மை" நீங்கிவிடுகிறது.
ஒரு பெண்ணிடமிருந்து "தாய்மை" நீங்கிவிட்டால், அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள கலாச்சாரமும் சீரழியத் தொடங்கி விடுகிறது.
............................................
ஞான மார்க்கத்திற்கு மூலதனம் அறிவு; கர்ம மார்க்கத்திற்கு மூலதனம் தன்முனைப்பு; பக்தி மார்க்கத்திற்கு மூலதனம் அன்பு.
ஆனால், பக்தி மார்க்கத்தில் செல்லவேண்டிய அன்பு, பாசவலையில் மாட்டிக்கொள்வதால், அதில் முழுமை இல்லாமல் போய்விடுகிறது.
.............................................
ஞானம் என்று சொன்னதும் மக்களுக்கு ஒரு குழப்பம் வந்துவிடுகிறது.
ஞானம் முற்றும் துறந்த முனிவர்களுக்கே முடியும். குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நம்மால் இதை நடைமுறைப்படுத்த முடியாது எனப் பலரும் நினைக்கிறார்கள்.
இது ஒரு தவறான கருத்து. ஞானம் என்பது தன்முனைப்பின் (ego) அழிவு. பற்றுதல் ஏதுமற்ற நிலையில், எதையும் எதிர்பார்க்காத வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுகிறோம்.
அதன்பின் துக்கம் என்பதே கிடையாது; ஏனெனில் "நான் 'கர்த்தா' அல்ல, வெறும் 'கருவி' மட்டுமே" என உணர்ந்து கொள்கிறோம்.
............................................
நம்மிடம் உள்ள அஹங்காரம் நீர்க்குமிழி போன்றது.
அது ஆழ்மனதில் இருந்து வருகிறது; ஆழ்மனம் ஆற்றில் ஓடும் தண்ணீரைப் போன்றது.
ஆற்றுப்படுகை இல்லையெனில் ஆறு வழிநெடுகிலும் பாய்வதெப்படி? நதிக்கு ஆதாரம் ஆற்றுப்படுகை இருப்பதுபோல், ஆழ்மனதிற்கும், மனிதனின் மற்ற இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருப்பது உள் உறையும் இறைவன். அதனால்தான் "சித்தமிசை குடிகொண்ட இறைவா" என்கிறோம்.
"சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே" என்ற பாடல் நினைவிற்கு வருகிறதா?
ஆற்றுப்படுகை என்று அழைத்தாலும் அது பூமியின் ஒரு சிறு பகுதிதானே!
அதைப்போன்று சித்தத்தில் உள்ள "சிவம்", நாம் வழிபடும் சிவனின் (இறைவனின்) ஒரு பகுதியே!
இதைத்தான் "பூரணத்திலிருந்து பூரணம்" என்று சொல்கிறார்கள்.
...........................................
நம்மால் எல்லோரையும் நேசிக்கமுடியாமல் போகலாம்; ஆனால், எவரையும் வெறுக்காமல் இருக்கலாம் அல்லவா?
...................................................
நமது பிடிக்குள் எதுவும் இல்லையென்றால், நாம் கடவுளின் பிடிக்குள் வந்துவிடுவோம்.
.....................................
நாலைந்து வழியிருந்தும்
நாயகனைத் தேடி
நாடெல்லாம் சுற்றுகின்றேன்
நடுவீட்டில் எனக்காக நாயகனும் காத்திருக்க
நாடெல்லாம் தேடி
நாயாக அலைகின்றேன்.
............
நாம் வாழ்கிறோமா அல்லது சாகிறோமா?
இரண்டும் அல்ல; வாழ்வதற்காக செத்துக்கொண்டிருக்கிறோம்.
...............................................
நாயாய் பிறந்து
பேயாய் திரிந்தாலும்
தாயாய் இருந்து
தயைபுரிவ தெக்காலம்?
..................................................
நான்மறை நாயகன்
நமக்குள்ளே இருக்கின்றான்
நூலேணி கொண்டு
நுனிக்கொம்பு ஏறாமல்
நூல்மட்டும் நாடினால்
நலமுண்டோ சொல்லேண்டி?
...........................................
“நான்” என்று
“நான்” நினைத்தது
“நான்” இல்லையென்று
“நான்” அறிந்தது
“நான்” என்ற
அகந்தை அழிந்தது
.................................................
நித்தம் விளக்கெரிந்தும்
நினைவிலது இல்லையடி
சித்தம் கலங்கியதால்
சிந்தனையும் போனதடி
அத்தன் இருப்பிடத்தை
ஆராயத் தெரியாமல்
பெத்தமனம் பித்தாகப்
புலம்பித் தவிக்குதடி
......................................
நினைவின்றி செயலின்றி
நினைமட்டும் நினைக்கின்ற
நிலையெனக்கு அருள்வாயா?
..........................................
மலருக்குள் மலராத
மலரதனைக் காண்பதுபோல்
மறைநின்ற மாமணியை
மனம்காண்ப தெக்காலம்?
..............................................
மனதில் இருந்து வருவது இரக்கம்; மனம் இறந்தபின்(?) வருவது கருணை.
..................................................
மனிதனைத் திருத்த வந்த மதத்தை, மனிதன் திருத்த வேண்டும் என்கிறார்கள்.
மதத்தைத் திருத்த வேண்டிய அவசியமில்லை; மதத்தை சரியாகப் புரிந்து கொண்டாலே போதும்.
உண்மையில் திருத்த வேண்டியது, மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத மத வெறியர்களையும், மதத்தைத் தவறாக திரித்துக் கூறும் பகுத்தறிவாளர்களையும்தான்.
……………………………………..
மத வெறியென்று கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆன்மிக வெறியென்று கேள்விப் பட்டிருக்கிறோமா?
ஆன்மிகம் கலவாத மதம் நெறியை மட்டுமின்றி, வெறியையும் வளர்க்கும்; ஆனால், ஆன்மிகம் நெறியை மட்டுமே வளர்க்கும்.
……………………………................
மனதில் இச்சைகள் எழும்பொழுது, இச்சைகளின் பின்னே செல்லாமல் (மனதளவிலும்), அவற்றை வேடிக்கை பார்க்கத் தொடங்கினால் இச்சைகள் மனதிலிருந்து விலகிவிடும்.
..........................................
மாய வலைபின்னி
மயங்கித் திரியாமல்
தூய வலைபின்னி
துயர்துடைப்ப தெக்காலம்?
…………………………………….
மாய விளக்கில்
மயங்கித் திரியாமல்
தூய விளக்கில்
துலங்குவது மெக்காலம்?
...............................................
மிதிபட்ட மண்,
பானையாக வேண்டும்; சகதியாகவே இருக்ககூடாது
...................................................
'முன்முடிவின்' துணையின்றி
மூலத்தை தேடுங்கள்
மூலத்தை தேடுங்கால்
ஞானத்தின் ஒளி பிறக்கும்
ஞானத்தின் ஒளி பிறந்தால்
நேசத்தில் மனம் குவியும்
நேசத்தில் மனம் குவிந்தால்
பாசமெனும் பனி விலகும்
பாசமெனும் பனி விலக
பரம்பொருளின் அருள் சுரக்கும்.
........................................
மேகக் கூட்டங்கள் வானத்தில் மிதக்கின்றன. அதனால் வானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அவை மலையில் மோதினால், மலை உடனே அழஆரம்பித்து விடுகிறது.
நாம் சந்திக்கும் அனுபவங்களும் மேகக் கூட்டம் போன்றவைதான். அவைகள் மிதக்கட்டும்; ஆனால், அவைகளை மோத அனுமதிக்காதீர்கள்.
...........................................
விளக்கினை விளக்கி
விளக்க வல்லார்க்கும்
விளங்காத விளக்கை
விளங்கவைப்ப தெக்காலம்?
...................................................
விசயங்களைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது, புரிந்துகொள்ளும் திறமையைப் பொறுத்தது.
நாம் நமது புரிந்துகொள்ளும் திறமையை வளர்த்துகொள்ளும் பொழுது, நமது புரிந்துகொள்ளும் தன்மையில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.
(The level of understanding will depend upon the level of understanding)
........................................
வெற்றிடத்தில் ஓடி
வெந்துமனம் வாடாமல்
உற்றிடத்தை தேடி
உறங்குவது எக்காலம்?
..........................................
வெறுப்பு வந்தபின் விலகுவது யதார்த்தம்; விருப்பம் வெறுப்பாக மாறுவதற்குமுன் விலகுவது ஞானம்.
.................................................
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் ..." என்கிறார் திருவள்ளுவர்.
எல்லோராலும் 'வாழ்வாங்கு வாழ' முடியாது போகலாம்; ஆனால், பிறரை வதைக்காமல், வசை பாடாமல் வாழலாம் அல்லவா?
..... ..... ..... ..... .....
வித்துக்குள் வித்தாக
விளைக்கின்ற எம்பெருமான்
சித்துக்குள் சித்தாக
சிதையாமல் இருக்கின்றான்
………………………………...
வம்பளந்து நாளும்
வருந்திமனம் வாடாமல்
அம்பலத்து நாயகனின்
அடிபணிவ தெக்காலம்?
.........................................
வாழ்க்கைத்தரம் (standard of living) முக்கியம்; வாழ்க்கை நெறி (standard of life) அதைவிட முக்கியம் அல்லவா?
தம் பிள்ளைகளிடம் வாழ்க்கைத்தரத்தை முன்னிறுத்தும் பெற்றோர்கள், வாழ்க்கை நெறியை முன்னிறுத்தம் செய்கிறார்களா?!?
..........................................................
நாலைந்து வழியிருந்தும்
நாயகனும் எனக்காக நாடோறும் காத்திருந்தான்
நாயகனைத் தேடி
நாடெல்லாம் சுற்றுகின்றேன்
நடுவீட்டில் அவனிருக்க
நாயாக அலைகின்றேன்.
...............
நான்மறை நாயகன்
நமக்குள்ளே இருக்கின்றான்
நூலேணி கொண்டு
நுனிக்கொம்பு ஏறாமல்
நூல்மட்டும் நாடினால்
நலமுண்டோ சொல்லேண்டி?
...........
நித்தம் விளக்கெரிந்தும்
நினைவிலது இல்லையடி
சித்தம் கலங்கியதால்
சிந்தனையும் போனதடி
அத்தன் இருப்பிடத்தை
ஆராயத் தெரியாமல்
பெத்தமனம் பித்தாகப்
புலம்பித் தவிக்குதடி
............
உச்சிக்கு கீழமர்ந்து
உறங்காமல் இருக்கின்றான்.
மச்சுவீடு பாதை செல்ல
குச்சியொன்று கையிலுண்டு
மச்சுவீடும் குச்சியும்
மறந்து போன பாவியடி?
............
ஊருக்கெல்லாம் காதலன்
உள்ளொளியாய் இருக்கின்றான்.
கவனத்தில் ஒருமைகண்டால்
காதலனைக் கண்டிடலாம்
கவனமட்டும் புவனத்தில்
கலந்திருப்ப தேனடியோ?
...........
பார்க்குமிட மெல்லாம்
பரமாத்மா என்றார்கள்
நீக்கமற உலகெங்கும்
நிறைந்திருக்கும் தூயவனை
நோக்குமிடம் தெரியாமல்
ஏங்கித் தவிப்பதுஏன்?
.............
ஆடுகின்ற நாயகன்
அரங்கத்தில் இருக்கின்றான்
அரங்கமும் தெரியாமல்
ஆட்டமும் காணாமல்
அங்குமிங்கும் அலைகின்ற
அலங்கோலம் அறியாயோ?
..................
கேள்வி: மனசைப் பிடிக்க முடியலை. அதுதான் எல்லாத்தையும் கொண்டு வருது. அதோட படைப்புகளை அனுபவிக்க முடியுதே தவிர அதோட மூல ஸ்வபாவம் தெரியலை.
என்னுடைய ஸ்வபாவம் ஏன் இன்னும் அனுபவமாகலை? ஆனா இங்கேயே இப்பவே இருக்குங்கறீங்களே!
பதில்: பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
ஆன்மீகத்தில் 'அந்தராத்மா' என்றொரு சொற்றொடர் உண்டு. அது ஆன்மா சம்பந்தப்பட்டது என்பார்கள். ஆனால், ஆன்மாவிற்கு 'அந்தர்' (உள்ளே) என ஒன்று உண்டா என்ன?
'அந்தராத்மா' என்பது ஆழ்மனம் பதிவுகளைக் குறிக்கும் சொல்லாகும். காந்திஜி "நான் எனது அந்தராத்மா என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன்" என்று சொல்வதுண்டு. அதன் அர்த்தம் என்ன? ஆழ்மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன் என்று அர்த்தம்.
ஆழ்மனதிலும் இரண்டு விதமான பதிவுகள் உண்டு. Iceberg மாதிரி.. நம்மால் உணரக்கூடிய பதிவுகள் மற்றும் நம்மால் உணர முடியாத பதிவுகள். நம்மால் உணர முடியாத பதிவுகள் நமது மூல சுபாவத்தை குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஒரு உதாரணம் சொன்னால் இதைப் புரிந்து கொள்ளலாம். தவறான வழிகளில் பொருள் சேர்த்து வாழ்க்கையை அனுபவித்த ஒருவன், கடைசி காலத்தில் தான் செய்த தவறுகளுக்கு வருந்தி நல்லவனாக வாழ எண்ணுகிறான்; அதற்காக ஏங்குகிறான். ஆனால், அவன் விதி முடிந்து விடுகிறது.
அடுத்த பிறவியில் அவனது அந்தராத்மா நல்லவனாக வாழத் துடிக்கிறது; அவன் கொண்டுவந்த 'பிராரப்த கர்மா' அவனை தவறான வழியில் இட்டுச் செல்கிறது.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி:-
நீங்கள் விரும்பியவை எல்லாம் கிடைத்து, அவற்றை அனுபவித்து வாழ்ந்தாலும் நிலை கொள்ளாமல் தவிக்கிறீர்கள் என்றால், உங்கள் மூல சுபாவம் (அந்தராத்மா) வேறு ஒன்றிற்காக ஏங்குகிறது என்று அர்த்தம்.
..............
கேள்வி: எப்படி அஞ்ஞானத்தை போக்கிக்கறது ?
பதில்: அஞ்ஞானம் என்பது இல்லாத ஒன்று. அது இருட்டைப் போன்றது.
நாம் பார்ப்பது எதுவாக இருந்தாலும், அது ஒரு பொருளாக இருக்க வேண்டும் அல்லது ஒரு பொருளிலிருந்து வருவதாக இருக்க வேண்டும்.
(உதாரணம்.. விறகு, நெருப்பு)
அப்படியானால் இருட்டு என்பது என்ன? அது 'வெளிச்சத்தின் இல்லாமை'. அஞ்ஞானமும் அது போன்றதுதான்; 'ஞானத்தின் இல்லாமை'. அதனால்தான் அதனை
"அவித்யா" (வித்யாவின் இல்லாமை) என்று அழைக்கிறோம்.
மனிதன் ஞான நிலை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. நமக்கான வழியை நாம்தான் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும்.
...........
ச்ரத்தா – அகத்தின் தீபம்
தூய்மையின் தாமரைத் தாளில் எழும் நம்பிக்கையின் ஜ்வாலா —
மங்காத ஒளியாகச் ச்ரத்தா நிலைக்கிறது.
ஒவ்வொரு சாதகரும் தன் உள்ளத்தில் “ச்ரத்தா” எனும் தீபத்தை ஏற்ற வேண்டும்.
அது இல்லாமல் அறிவு தகவலாகவே நிற்கும்;
அது இருந்தால், மௌனம்கூட ஞானமாக மாறும்.
ச்ரத்தா என்பது ஒரு சொல்லல்ல; அது ஒரு நிலை.
அது ஒவ்வொரு உயர்ந்த முயற்சிக்கும் பின்னால் நிற்கும் அமைதியான ஆற்றல்.
நம்பிக்கை மனதை நிலைப்படுத்தும் போது,
பயிற்சி வாழ்வின் பழக்கமாகும் போது,
தடைகளைத் தாண்டும் பொறுமை உறுதியாகும் போது,
பேரிடர்களுக்கு முன் தளராத துணிவு எழும் போது,
சோதனைகளைக் கண்டு சிரிக்கும் சகிப்புத் தன்மை மலரும் போது —
அங்கே ச்ரத்தா ஒளிர்கிறது.
அது ஒரு நம்பிக்கை அல்ல; ஆன்மாவின் நிச்சயம், செயலில் வெளிப்படும் உறுதி.
அறிவு தூரத்தில் தெரிந்தாலும், பாதை நீண்டாலும், அதுவே சாதகரை தாங்குகிறது.
ச்ரத்தா என்பது ஆசையும் அனுபவமும் இணைக்கும் பாலம் —
கற்றதை வாழ்வாக்கும் மௌன சக்தி.
ச்ரத்தா நிலைத்திருக்குமிடத்தில் சந்தேகம் தங்காது;
சந்தேகம் நீங்கும் இடத்திலே, சத்தியம் தானாக வெளிப்படும்.
(ChatGPT-க்கு நன்றி)
No comments:
Post a Comment