Monday, 26 February 2018

மழலையின் கீதை .. பாகம் 5

மழலையின் கீதை  ..  பாகம் 5  


                                         பொருளடக்கம்
 
55. ஞானம் எனும் நெருப்பு

56. ஞானத்திற்கான பாதை

57. நீரில்லாத ஆறு

58. சச்சிதானந்தம்

59. இருள்சேர் இருவினைகள்

60. தன்முனைப்பு

61. வளர்ச்சியும், மலர்ச்சியும்

62. யான், எனது

63. நான் யார்?

64. இந்த நானும், அந்த நானும்

65. பந்தம்

66. நாமும், நமக்கான பாதையும்

67. மார்க்கமும், யோகமும்

68. பக்தி மார்க்கம்

69. கர்ம மார்க்கம்

70. தியான மார்க்கம்

71. ஞான மார்க்கம்

72. ஞான மார்க்கம் – பாதை 1

73. ஞான மார்க்கம் – பாதை 2

74. ஞான மார்க்கம் – பாதை 3

75. ஞான மார்க்கம் – பாதை 4

76. விழிப்புணர்வு

77. பலூனும் புல்லாங்குழலும்

78. நன்றியுரை
                 .................................................................




பாகம் V  …  ஞானம்


55. ஞானம் எனும் நெருப்பு 

“ஞானம் என்ற நெருப்பு  சகல கர்மங்களையும் எரித்துவிடும்” என்று சொல்கிறார் கிருஷ்ணன். இதனைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும்.

‘கர்மங்கள்’ என்று சொல்லும் பொழுது வெறுமனே செயல்கள் மட்டுமல்ல, மனதிலிருந்து எழக்கூடிய  எண்ணங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஞானம் என்ற நெருப்பு செயல், எண்ணம் மட்டுமின்றி, நம்மிடம் உள்ள அஹங்காரத்தையும் முற்றிலுமாக அழித்துவிடும்.

எல்லாம் சரி; நாம் ‘ஞானத்தை’ நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

ஒரு பூந்தோட்டத்தை நெருங்கும் பொழுது மலர்களின் வாசத்தை உணர்வது போல, அருவிக்கரையை நெருங்கும் பொழுது அருவி  விழுவதின் சத்தத்தைக் கேட்பது போல, சில அறிகுறிகளைக் கொண்டு நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒருசில அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்: -
     
     பற்றின்மை

     நாணுடைமை (humility)

     உள்ளார்ந்த அமைதி
     
     உடைமைத்தனமின்மை

     தனிமையை  விரும்புதல்

     எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை

     எதிர்கொள்ளும் எதனையும் இறைவனின் பிரசாதமாக
                    ஏற்றுகொள்ளுதல்
   
  இணக்கமாகவும், இளக்கமாகவும் நடந்து கொள்ளுதல்    
              
     ‘கர்த்தா’ என்ற நிலையிலிருந்து விடுபடுதல்
             
     விருப்பு-வெறுப்பு போன்ற இருமைகளில் இருந்து விடுதலை

இந்த அறிகுறிகளில் சிலவற்றையாவது நாம் பெற்றிருப்பதாக உணர்ந்தால், நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஞானம் அடைவதற்கான  பாதை ஒன்றா அல்லது பல பாதைகள் உண்டா? 

பல பாதைகள் என்றால், நமக்கான பாதை எது? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பாதை மட்டும் தெரிந்தால் போதுமா? அதில் எப்படி பயணம் செய்வது என்று தெரிய வேண்டாமா?

முதலில் தெரிய வேண்டியது நாம் யார்? நமக்கான பாதை எது? என்பதுதான். அதனைத் தெரிந்துகொண்ட பின்னர்தான் பயணம் செய்வதைப் பற்றி முயற்சி செய்ய வேண்டும்.



56. ஞானத்திற்கான பாதை

ஞானம் பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும், பொதுவாக மக்கள் பயன்படுத்துவது நான்கு வழிகளைத்தான். அவை - -
1
   ஞான     மார்க்கம்

   கர்ம        மார்க்கம்

   பக்தி       மார்க்கம்

   தியான மார்க்கம்

.     
இந்த நான்கு மார்க்கங்களில் நமக்கு உரிய மார்க்கம் எது என  அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

அதற்கு நாம் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். நாம் யார் என்பதை அறிந்து கொண்டால்தான் நமக்கான பாதை எது என்பது புலப்படும்.

நாம் யார் என்பதையும், நமக்கான பாதை எது என்பதையும் அறிந்து கொண்டபின், நமக்கான பாதையில் எப்படி பயணம் செய்ய வேண்டும் என்றும் புரிந்து கொள்ளவேண்டும்.

பலரும் ஞானம் பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால் தமக்கான பாதை எது என்று தெரியாமலும், தெரிந்தாலும் சரியான வகையில் பயணம் செய்கிறோமா என்பது புரியாததாலும், தமது குறிக்கோளை அடைய முடியாமல் தவித்து, முடிவில் கடவுளையே குறை சொல்லும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.



57. நீரில்லாத ஆறு

நதியில் தண்ணீர் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அதனை ஆறு என்று சொல்கிறோம். ஆற்றில் தண்ணீர் இல்லையென்றால், அந்த நேரத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த இடத்தை பார்த்தால், அந்த இடத்தை என்ன பெயர் சொல்லி அழைப்போம்? ஆற்றுப்படுகை என்றுதானே.

அந்த ஆற்றின் கரைகள் இரண்டும் நீக்கப்பட்டுவிட்டால், அப்பொழுது அதனை என்னவென்று சொல்வோம். அதுவும் பூமியின் ஒரு பகுதிதானே.

ஆற்றின் கரைகள் இல்லாதிருந்தால் (அதுவும் பூமியின் மேல்தான் இருக்கிறது), அப்பொழுது அந்த இடத்திற்கு ஆறு என்ற பெயர் இருக்குமா?

ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஒரு பகுதிதான். ஆற்றுக்கு கரை இருப்பது போல, ஜீவாத்மாவைச் சுற்றி ஒரு மாயத்திரை இருப்பதால் அதனைத் தனியாக பிரித்துப் பார்க்கிறோம்.

அந்த மாயத்திரையை இல்லாமல் செய்வது நமது கையில் இல்லை. ஆனால் அது இல்லாமல் போகவேண்டுமென்றால், அதன்மேல் எந்தவித அழுக்குகளும் இல்லாமல் செய்யவேண்டியது நமது கடமை. அதை நாம்தான் செய்ய வேண்டும். மற்றவர்கள் யாரும் நமக்கு உதவி செய்ய முடியாது; அவர்களால் நமக்கு வழி மட்டுமே காட்ட முடியும்.

 

58. சச்சிதானந்தம்

‘சத்’, ‘சித்’, ‘ஆனந்தம்’ என்ற மூன்று வார்த்தைகளின் கூட்டு வார்த்தையே ‘சச்சிதானந்தம்’ என்பது.

‘சத்’ என்பது எப்போதும் உள்ளது என்பதைக் குறிக்கிறது. அதற்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் கிடையாது.

‘சித்’ என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியான ஜீவாத்மாவைக் குறிக்கிறது. பரமாத்மாவின் ஒரு பகுதி மாயத்திரையால்   சூழப்பட்டு நமது உடலுக்குள் இருந்து கொண்டு நமது இயக்கத்திற்கு சக்தி கொடுக்கிறது என்றால், அதுவே ‘சித்’ என்று அழைக்கப்படுகிறது.

‘சித்’ மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள மாயத்திரை இரண்டையும் சேர்த்து ‘சித்தம்’ என்றும்  சொல்வதுண்டு.

‘ஆனந்தம்’ என்பது  ‘சித்’ எப்பொழுதும்  ஆனந்தமாகவே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

‘சித்’ எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது என்றால், நம்மால்  ஏன் அதை உணர முடிவதில்லை?

கண்ணாடியில் முகம் சரியாகத் தெரியவில்லை என்றால், கண்ணாடி அழுக்காக இருக்கிறது என்கிறோம்.

உண்மையில் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா அல்லது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா?

அடுத்த கேள்வி: கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா?

அடுத்த கேள்வி: கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின் மேல் அழுக்கு படர்ந்திருக்கிறதா?

ஆக, கண்ணாடியில் நமது முகம் தெரியவில்லை என்றால், அதற்கு காரணமாக இருப்பது கண்ணாடியா அல்லது அதன்மேல் படர்ந்துள்ள அழுக்கா?

கண்ணாடியின் மேல் முதலில் தூசிதான் படிகிறது. அதுவே பின்னர் அழுக்காக மாறுகிறது. உரிய சமயத்தில் அதை துடைக்காவிட்டால் அதுவே அட்டாகவும்  மாறி விடுகிறது.

கண்ணாடியின் மேல் படிந்த தூசி (அழுக்கு, அட்டு) போன்று, நமது சித்தத்தில் உள்ள மாயத்திரையின் மேல் படர்ந்துள்ள தூசியின் காரணமாகத்தான் நம்மால் உள்ளிருந்து வரும் ஒளியை (ஆனந்தத்தை) உணர முடிவதில்லை.



59. இருள்சேர் இருவினைகள்


புதிதாக ஓர் அணையைக் கட்டி விவசாயத்திற்காக ஓரு நீர்வழிப் பாதையை ஏற்படுத்தும் போது என்ன நடக்கிறது?

பரந்து, விரிந்த நிலப்பகுதியில் ஒரு சிறு பகுதியை நீர்வழிப் பாதையாக்க  முடிவு செய்தால் அந்த குறிப்பிட்ட பகுதியில் நிலத்தை வெட்டி, இருபுறமும் கரைகளை அமைக்கின்றனர். அதன்பின் அந்த இடத்தை ஆற்றுப்படுகை என்றும், தண்ணீர் ஓடினால் ஆறு என்றும் அழைக்கிறோம்.

நீக்கமற எங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மாவின் ஒரு பகுதி, மாயத்திரைக்குள் கட்டுப்பட்டு மனித உடலுக்குள் இருக்கும்பொழுது ஜீவாத்மா (சித்தம்) என்றும், மாயத்திரையின் மீது பதிவுகள் ஏற்படும் பொழுது ஆழ்மனம் என்றும் அழைக்கிறோம்.

இந்த ஆழ்மனப் பதிவுகள்தான் ஆன்ம ஒளியை உணர முடியாமல் அதனை  மறைத்து விடுவதோடு, மனிதனின்  மறுபிறவிக்கும்  காரணமாக அமைகின்றன.

தீவினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகள் மட்டுமல்ல, நல்வினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகளும் (கண்ணாடியின் மேல் படர்ந்த தூசியைப் போன்று) நமது ஆழ்மனதில் பரவும் இருளுக்கு காரணமாக இருக்கின்றன.

அதனால்தான் திருவள்ளுவர் தனது குறளில் -

“இருள்சேர் இருவினையும் சேரா – இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”            - - என்கிறார்.



60. தன்முனைப்பு

மனிதனின் ஆழ்மனப் பதிவுகளை “வாசனா” என்று சொல்கிறோம். அந்த வாசனாவின் தன்மையைப் பொறுத்து, ஒரு மனிதனின் அஹங்காரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அஹங்காரம் என்றால் திமிர் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், இங்கு அஹங்காரம் என்பது ஒரு மனிதனின் தன்முனைப்பை மட்டுமே குறிக்கிறது.

எங்கு தன்முனைப்பு இருக்கிறதோ, அங்கு ஆசை கண்டிப்பாக வெளிப்படும். அந்த ஆசையின் அளவும், தன்முனைப்பின் தீவிரத்தைப் பொறுத்து இருக்கும்.

எங்கு ஆசை இருக்கிறதோ, அங்கு அதனைத் தொடர்ந்து பயமும், கோபமும் வருவது தவிர்க்க முடியாது.

ஆசை இருந்தால், ஆசைப்பட்ட பொருள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம்; கிடைக்காவிட்டால் கிடைக்கவில்லையே என்ற  கோபம்.

ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ  அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ அதனால்  ஏற்படும்  கோபம்.

இவை அனைத்தும் ஒன்றை ஒன்று தொடர்ந்து வரக்கூடியவை.

வரைபடத்தைப் பாருங்கள் - -


                        


பயம், கோபம் போன்றவை எதிர்மறை உணர்ச்சிகள். இவையெல்லாம் இருக்கக்கூடாது என்றால், அஹங்காரத்தை விட்டால்தான் முடியும். ஆனால். தன்முனைப்பு இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு வளர்ச்சி என்பதும்  இருக்கமுடியாது. இதற்கு வழிதான் என்ன?



61. வளர்ச்சியும், மலர்ச்சியும்

அஹங்காரம் (தன்முனைப்பு) ஒரு மனிதனுக்குத் தேவையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். ஏனெனில் - -

“அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது;

 அஹங்காரம் இருந்தால்  மலர முடியாது”.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், தன்முனைப்பு மிகவும் அவசியம்; தன்முனைப்பு இல்லையென்றால் அவனால் முனைப்புடன் செயலில் இறங்க முடியாது. முனைப்பு இல்லாத செயல் நாம் ஆசைப்படும் விளைவை கொடுக்காது.

தன்முனைப்பு ஆசையைத் தூண்டக்கூடியது; அதே நேரம் தன்முனைப்பு உள்ள மனிதனிடம் அமைதியை எதிர்பார்க்க முடியாது. அமைதி இல்லாத மனதில் அகமலர்ச்சி மலர முடியாது.

ஒரு மனிதனின் ஆழ்மனதில் உள்ள வாசனா பதிவுகள் அனைத்தும் அழிந்துவிடும்பொழுது மட்டுமே, அந்த மனிதன் தனது சித்தத்தின் உள்ளே இருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

மலர்ச்சி என்று சொல்லும்போது, நாம் வாசனாவில் உள்ள பதிவுகளின் நீக்கத்தையே மனதில் கொள்ளவேண்டும்.

அமைதி தரும் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதன் மட்டுமே ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடமுடியும். மற்றவர்கள் முயற்சி செய்தாலும், அதில் வெற்றி பெறுவது கடினம்.


62. யான், எனது

“யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்  வானோர்க்கு               உயர்ந்த உலகம் புகும்”. – - திருவள்ளுவர் 

தன்முனைப்பு, செருக்கு (திமிர் என்றும் சொல்லலாம்) இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

ஒரு மனிதன் தன்முனைப்புடன் செயலில் இறங்கும்பொழுது, அதன் விளைவாக பொன், பொருள் என்று சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். அவனது வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பிக்கிறது.

தான் நினைத்ததை சாதிக்கமுடிந்ததன் காரணமாக அவனுக்கு தன்னை நினைத்தே ஒரு பெருமிதம் வந்து விடுகிறது. அது தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அதன்கூடவே, அவனையும் அறியாமல் ஒரு விதமான செருக்கும் வந்து விடுகிறது.

‘நான்’ மற்றும்  ‘என்னுடைய’ என்னும் இந்த உணர்வுகளே மனிதனின் அமைதி குலைவதற்கு காரணமாகின்றன.

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மனிதன் பாடுபடுவதில் தவறு இல்லை; வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதனால் ஏற்படும் சுகத்தை அனுபவிப்பதிலும் தவறு இல்லை. 

ஆனால் ‘என்னுடைய’ என்ற உடைமைத்தனத்திலிருந்து அவன் விடுதலை ஆகாத வரை அவனால் அமைதியும், அதனால் வரும் ஆனந்தத்தையும் உணர முடியாது.

‘நான்’, ‘எனது’ என்ற இந்த இரண்டு கட்டுகளிலிருந்தும் விடுபடுவது, ஞானம் அடைய விரும்பும் மனிதனுக்கு மிகவும் அவசியம்.



63. நான் யார்?

ஞானம் பெறுவது எப்படி என்று பகவான் ரமண மகரிஷியிடம் கேட்டால், அதெல்லாம் தேவையில்லை; தனியாக அமர்ந்து ‘நான் யார்’ என்று உன்னையே கேட்டுக்கொண்டு, விடையையும் தேடு   என்று சொல்வார். 

பெரும்பாலும் ‘நாம் யார்’ என்று தெரியாமலே, நமது வாழ்நாளைக் கழித்துவிடுகிறோம். இதில் உள்ள மறைந்திருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள சில விளக்கங்களைப் பார்ப்போமா?

இது என்னுடைய வீடு என்று சொல்லும்பொழுது, வீடு உடைமைப் பொருளாகவும், நான் அதன் உரிமையாளனாகவும் இருக்கிறேன். வேறு வகையில் சொன்னால் வீடு பார்க்கப்படும் பொருளாகவும், நான் பார்ப்பவனாகவும் இருக்கிறேன். இது என்னுடைய உடம்பு என்றால், அதன் உரிமையாளன் யார்? அதனைப் பார்ப்பவன் யார்?

ஒரு வீடு கட்டும்பொழுது, கல், மணல், சிமெண்ட், இரும்புக் கம்பி, மரம்  இப்படி பல பொருட்களை உபயோகித்து, முடிவில் அவை சுவராகவும், தளமாகவும், கூரையாகவும், கதவு, ஜன்னலாகவும்  மாறி விடுகின்றன. ஆனால், இவற்றில் எது அந்த வீட்டின் உரிமையாளனாக குடியிருக்கிறது? இவற்றிற்கு சம்பந்தம் இல்லாத யாரோ ஒருவர்தானே, அந்த வீட்டில் குடியிருக்கமுடியும்?

இந்த உடம்பும் தோல், சதை, எலும்பு, இரத்தம்  போன்று பல  பொருட்களால் உருவாக்கப்பட்டதென்றால், இவற்றில் எது இந்த உடலில் வசிக்க முடியும்? வேறு ஏதோ ஒன்றுதானே இந்த உடலில் வசிக்க முடியும்?

‘நான் யார்’ என்ற கேள்விக்கான  பதில் இங்குதான் ஆரம்பமாகிறது.


64. இந்த நானும், அந்த நானும்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ‘நான்’கள் உள்ளன.

ஒன்று உண்மையான நான்; மற்றொன்று ‘நான்’ என்று நினைக்கின்ற நான் உண்மையில் நானில்லை என்பதை  அறியாத நான்.

உண்மையை அறியாத நானிடம், உண்மையான நானைக் கண்டுபிடிக்க  ‘நான் யார்’ என்ற விசாரத்தில் (சிந்தனையில்) இறங்கு என்கிறார் பகவான் இரமண மகரிஷி.

ஆனால், வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதனால் முடிகிற காரியமா இது.

அந்த உண்மையான ‘நானை’ கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், இப்பொழுது நாம் எந்த வர்ணப் பிரிவில் இருக்கிறோம்; நமக்கான பாதை எது என்பதை அறிய வேண்டும்.

அவற்றை அறிவதற்கு முன்னால், அந்த முயற்சியில் ஈடுபட முடியாத அளவிற்கு நம்மைத் தடுக்கும் காரணி எது  என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் காரணியை  அறிந்துகொண்டபின், அதனை  நீக்கத் தயாராக இருக்கிறோமா என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக இல்லையென்றால், நமது முயற்சி எந்தவித பலனையும் தராது.


65. பந்தம்

‘சொந்தபந்தம்’ மற்றும் ‘பந்தபாசம்’ என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘சொந்தபாசம்’ என்ற வார்த்தையை  எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

மனிதன் தனக்குப் பிறந்த குழந்தையிடம் அன்பு வைப்பதோடு அதனுடன் பற்றும் கொண்டுவிடுகிறான். அதன்பின் அவனுக்கு அந்த குழந்தையின் மீது இருப்பது அன்பு அல்ல, ஆசை.

அதே மனிதன் தனது வீட்டிற்கு காவலாக (தேவையென எண்ணி) ஒரு நாயை வளர்க்கிறான். எங்கிருந்தோ வாங்கியது. இருந்தாலும் நாளாக, நாளாக அவனுக்கு அதன்மேல் பற்று வந்துவிடுகிறது. அதன்பின் அவனுக்கு அந்த நாயிடம் இருப்பது ஆசையாக மாறிவிடுகிறது.

இந்தப் பற்றுதான், முதலில் ஆசையாகவும் பின்னர் அதுவே உயிருள்ள ஜீவனாக இருந்தால் பாசமாகவும், பொருளாக இருந்தால்   பேராசையாகவும், பெண்ணாக இருந்தால்  காமமாகவும்  மாறி விடுகிறது.
இதனைத்தான் பந்தம் என்று சொல்கிறார்கள் (இதனையே கட்டு என்றும், தளை என்றும் சொல்வதுண்டு).

ஞான மார்க்கத்தின் வெற்றியே, இந்த பந்தத்திலிருந்து விடுபடுவதில்தான் இருக்கிறது.


வரைபடத்தைப் பாருங்கள் - -


ஆக, மனிதனிடம் உள்ள பந்தத்திற்கு மூலகாரணமாக இருப்பது இந்த பற்றுதான். ஞானமார்க்கத்திற்குத் தடையாக இருப்பதும் இந்த பற்றுதான்.
  
   “...பாசவினைகள் பற்றது நீங்கி”          - -    கந்தசஷ்டி கவசம்.

   “... அப்பற்றை பற்றுக பற்று விடற்கு”    - -    திருக்குறள்

   “ஆசைவலைப்  பாசத் தகப்பட்டு மாயாமல்....” – பத்திரகிரியார்




66. நாமும், நமக்கான பாதையும்

ஞானம் பெறுவதற்கு நான்கு முக்கிய வழிகள் உள்ளன என்று ஏற்கனவே பார்த்தோம்.

இவற்றில் ஒரு வழி நமக்குரிய பாதையாக இருக்கவேண்டும். அது நமது வர்ணப்பிரிவிற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும். வேறு பாதைகளைப் பயன்படுத்த விரும்பினால், அது நடைமுறை வாழ்க்கைக்கு உதவி செய்வதாக இருக்கவேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு மருத்துவரை எடுத்துக்கொள்வோம். தனக்கு வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை; ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்படுகிறார். பொதுநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அவரை ஒரு க்ஷத்திரியன் என்றுதான் அழைக்கவேண்டும். ஆனால், மத நம்பிக்கை உள்ளவராக இருந்து, மாதத்தில் பத்து நாட்கள், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தால் அவரது க்ஷத்ரிய தர்மம் என்னாவது? அவர் கடைப்பிடிக்கும் பக்தி மார்க்கம், அவரது க்ஷத்ரிய தர்மத்திற்கு உதவியாக இருக்கவேண்டாமா?

நமது வர்ணப்பிரிவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற பாதையில் பயணத்தை தொடங்குகிறோம் என்றாலும், அந்தப் பாதையின் அடிப்படை விதியினைத் தெரிந்துகொள்ளவேண்டும். அவை - -

“அறிந்து வருவது     ஞான மார்க்கம்

அறியாமல் வருவது  பக்தி மார்க்கம்

அடிபட்டு வருவது    கர்ம மார்க்கம்

கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்”



67. மார்க்கமும், யோகமும்

ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்றும் சொல்வார்கள்; ஞான யோகம், கர்ம யோகம் என்றும் சொல்வார்கள். ஏன் இந்த வித்தியாசம்?

மார்க்கம் என்பது நாம் பயணம் செய்யும் பாதையைக் குறிக்கிறது; பாதையின் முடிவில் எல்லைக்கோட்டை அடைந்தால்,  மார்க்கம் யோகத்தில் முடிகிறது என்றும் சொல்லலாம். யோகம் என்ற வார்த்தைக்கு இணைதல் (இறைவனோடு, பிரம்மத்தோடு) என்றும் சொல்வதுண்டு.

மார்க்கம் என்பது சரியான பாதையாக இருந்து, நாமும் சரியான முறையில் நமது பயணத்தைத் தொடர்ந்தால், நாம் யோகத்தின் வழியில் இருக்கிறோம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

நான் பக்தி மார்க்கத்தை ஒழுங்காக கடைப்பிடிக்கிறேன். நாள் தவறாமல் கோவிலுக்கு சென்று வருகிறேன். தவறாமல் விரதங்கள், அனுஸ்டானங்கள் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறேன். அப்படியானால் நான் பக்தி யோகத்தில்தானே இருக்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் இதுவே பக்தி யோகத்தில் இருக்கிறேன் என்று சொல்வதற்கு போதுமானதாகுமா?

ஒவ்வொரு மார்க்கத்திற்கும் வேறுவேறு நெறிமுறைகள் இருக்கின்றன; அவற்றில் சில கடைப்பிடிக்க மிகவும் எளிதானவைதான். இருந்தாலும் அவற்றை சரியாகக்  கடைப்பிடிக்காதவரையில் மார்க்கம் யோகமாக இருக்க முடியாது.

ஒவ்வொரு மார்க்கமாக பார்ப்போம்.



68. பக்தி மார்க்கம்

இருக்கும் எல்லா மார்க்கங்களிலும் மிகவும் எளிதானது பக்தி மார்க்கம்தான். பெருவாரியான மக்கள் கடைப்பிடிக்கும் மார்க்கமும் இதுவே.

ஆனாலும், பக்தி மார்க்கத்தில் ஈடுபடும் மக்களில் பெரும்பாலோர் மனதில் அமைதி இல்லாமல் உழன்று வருவதற்கு என்ன காரணம்? பக்தி மார்க்கத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தும், அவர்களால் பற்று என்னும் தளையிலிருந்து ஏன்  விடுபடமுடியவில்லை?

“பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”.                - -    திருவள்ளுவர்

பற்றின் காரணமாக   வரும் ஆசாபாசங்களை விடுவதற்கு, கடவுளின் திருவடியைப்  பற்றி பக்தி செய்யவேண்டும் என்கிறார்கள்.

மீண்டும் ஒருமுறை திருக்குறளைப் பாருங்கள். அதில் “பற்று விடற்கு” என்றுதான் வருகிறது; “பற்றை விடற்கு” என்று வரவில்லை. அதாவது பற்றை நாம் துறக்க முடியாது; ஆனால் கடவுளின் திருவடியைப் பற்றினால், பற்று நம்மை விட்டுவிடும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அதே நேரம், திருமூலர் சொல்வது வேறாக இருக்கிறது. அவர் சொல்வது -

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

 ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
                  
                 ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
                 
                 ஆசை விடவிட ஆனந்த மாமே”.

பற்றின் காரணமாக வரும் ஆசாபாசங்களிலிருந்து விடுபடுவதற்கு, இறைவனின் திருவடியைப் பற்றினால், அதுவும் ஆசையாக மாறிவிடுமே என்கிறார் திருமூலர். ஆசை இல்லாத மனதில்தான் அமைதியும் அதனைத் தொடர்ந்து ஆனந்தமும் கிடைக்கும் என்கிறார்.

இந்தப் புதிருக்கான விடையை, ரிஷி பதஞ்சலி தருகிறார். அதற்கு அவர் தரும் மந்திரம் “ஈஷ்வர ப்ரணிதானாத்”. அதாவது கடவுளிடம் சரணடைவதன் மூலம் என்கிறார்.

நினைத்துப் பாருங்கள், நாம் கடவுளிடம் எதை எதையோ வேண்டுகிறோம்; ஆனால் கடவுளிடம் சரணடைகிறோமா?

சரணடைவது என்றால் என்ன? அவர் எதைத் தந்தாலும் அதனை அவரிடம் இருந்து வரும் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தர வேண்டும் என்று மட்டும் வேண்டினால், அதுவே உண்மையான  சரணாகதி ஆகும்.

சரணாகதி ஒன்றே பக்தி மார்க்கம் முழுமை அடைய உதவும்.





69. கர்ம மார்க்கம்

க்ஷத்ரியன், அதாவது பொது நலனில் அக்கறை உள்ள மனிதன் மட்டுமே 
கர்ம மார்க்கத்தில் (பலனை எதிர்பார்க்காமல்) ஈடுபடமுடியும்.

பொது நலனில் அக்கறை உள்ள மனிதன் சமூகத்தில் செயல்படும் பொழுது, அவனுக்கு பலவிதமான சோதனைகள் வர வாய்ப்புண்டு. அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு வழிகாட்டியின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”       - - திருவள்ளுவர்

செயல், அந்த செயல்  புறவுலகில் ஏற்படுத்தும்  விளைவு, அதனால் ஏற்படும்  பின்விளைவு இவற்றின் காரணமாக அவன்  வெளியில் ஓடும் மனதை உள்முகமாகத் திருப்பி, அகத்தாய்வில் ஈடுபட வேண்டிவரும். விளைவு, பின்விளைவு, மனதை உள்முகமாகத் திருப்புதல், அகத்தாய்வு  போன்ற காரியங்கள் ஒரு தொடர் சங்கிலியாக வந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் அவனுக்குக் கண்டிப்பாக ஒரு நல்ல வழிகாட்டியின் உதவி தேவைப்படும்.

“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்”  என்கிறார் திருவள்ளுவர்.



70. தியான மார்க்கம்

“கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்” என்று முன்னர் சொல்லியிருந்தோம். அது எதனால் என்று பார்க்கவேண்டும்.

நம்மைச் சுற்றி பல இடங்களில் ஆசனம், பிராணாயாமம்  மற்றும் தியான வகுப்புகள்  நடைபெறுவதை பார்க்கிறோம். ஆனாலும் நம்மால் உள்ளிருக்கும் மையத்தை ஏன் நெருங்கக்கூட முடியவில்லை?

ஆசனம், பிராணாயாமம் இரண்டுமே நமது உடலுக்கும், மனதிற்கும் நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் ஆழ்மனதில் உள்ள பதிவுகளைக் களைவதில் அவை எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.

தியானத்தைப் பொறுத்தவரை  அதனை ஒரு பயிற்சியாக செய்யமுடியாது; எந்தவித முயற்சியும் இன்றி ஏகாந்தமாக இருப்பதே தியானம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், தியான வகுப்புகள் என்று சொல்வதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது.

“அம்மா, பசிக்கிறது” என்று பையன் சொன்னால், “கொஞ்சம் பொறு, இட்லி அவித்துத் தருகிறேன்” என்று அம்மா சொல்கிறாள். உண்மையில் அம்மா இட்லி அவிக்கிறாளா, அல்லது இட்லிக்காக மாவை அவிக்கிறாளா? மாவுதான் அவிக்கிறாள்; இருந்தாலும் முடிவில் அந்த மாவு இட்லி ஆகும் என்ற எண்ணத்திலேயே “இட்லி அவித்துத் தருகிறேன்” என்று கூறுகிறார். இது நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதைப்போன்று, தியான நிலையை அடைவதற்கான ஒரு பயிற்சியை தருவதைத்தான் ‘தியான வகுப்புகள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் பயிற்சியை ‘தாரணை’ என்று அழைத்தால் அதுவே சரியாக இருக்கும்.

இந்த மூன்று பயிற்சிகளும் ‘தியான’ நிலையை அடைவதற்கு முழுமையாக உதவ முடியாததற்கு என்ன காரணம்?

தியான மார்க்கத்தில் முழுமை அடைவதற்கு, ரிஷி பதஞ்சலி எட்டு படிநிலைகளை அமைத்திருக்கிறார். அவை, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு படிநிலைகள்.

இவை ஒவ்வொன்றாக கடக்கப்படவேண்டியவை. சத்துவ குணம் நிறைந்த மனிதன்  மட்டுமே   நேரடியாக   ‘தாரணை’   நிலைக்குப் போகமுடியும். 
ஏனெனில்   ‘பிரத்யாஹாரம்’      என்பது அவனுக்கு இயல்பான ஒன்று.

ஆசனத்தையும், பிராணாயாமத்தையும் பயிற்சி செய்கிறவர்கள் தியான நிலை வரைக்கும் போக எண்ணினால், அவர்கள் நிச்சயம்  யமம், நியமம் இரண்டையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும். 

யமம், நியமம் என்றால் என்ன என்பதை ஒரு குறள் அழகாக குறிப்பிடுகிறது.

     “செய்தக்க அல்ல செயக்கெடும் – செய்தக்க
      செய்யாமை யானும் கெடும்”.            - - திருவள்ளுவர்

இந்த இரண்டு கட்டளைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அந்த மனிதனால் தியான நிலையை அடைவது மிகவும் கடினம். அவனது பாதை, இலக்கை சென்று அடைய உதவாது.

எட்டு படிநிலைகளில் ஒன்றான  ‘பிரத்யாஹாரம்’ என்பது, வெளியில் ஓடும் மனதை அகத்தாய்வுக்காக உள்முகமாக திருப்புவதையே குறிக்கிறது.

முதல் இரண்டு கட்டளைகளான ‘யமம் மற்றும் நியமம்’ ஆகியவற்றை கடைப்பிடிக்க முடியாத மனிதனால், ‘பிரத்யாஹாரத்தை’ மேற்கொள்ள  முடியாது.


71. ஞான மார்க்கம்

அறிந்து வருவது ஞான மார்க்கம். ஆனால், அறிவு பூர்வமாக ஞானம் அடைவதற்கு பல படிகள் தாண்டவேண்டி உள்ளது.

தெரிதல், அறிதல், புரிதல், தெளிதல், தெள்ளத் தெளிதல், உணர்தல் எனப் பல  நிலைகளைத் தாண்டவேண்டி உள்ளது.

தெரிந்து கொள்வது என்பது எல்லோராலும் முடிவதுதான்.

ஆனால் தெரிந்த விஷயங்களைப்  பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கு, வெறும் அறிவு மட்டும் போதாது.

விஷயங்களைப் பற்றிய உண்மைகளை பகுத்து அறிய தெரிந்திருக்க வேண்டும். அதற்கான விவேகம் இல்லையென்றால் நாம் அறிவது சரியாக இருக்காது. விவேகம் உள்ள மனிதனும், உணர்ச்சி வசப்படுகிறவனாக இருந்தால், அவனது விவேகம் சரியான முறையில் செயல்பட முடியாது.

அறிந்துகொண்ட உண்மைகளை நடைமுறைப் படுத்தும் பொழுதுதான், அதனால் ஏற்படும் அனுபவங்களின் மூலமாக நமக்கு முறையான புரிதல் ஏற்படும்.

தெரிந்துகொண்ட விஷயங்களைப் புரிந்துகொண்டபின், மேலும் மேலும்  கிடைக்கும் அனுபவங்களின் மூலம் நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

தெளிந்தால் மட்டும் போதாது; தெள்ளத் தெளிய வேண்டும் என்கிறார் திருமூலர். தெள்ளத் தெளிந்தால் மட்டுமே ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை தெரியவரும் என்கிறார்.

“.....தெள்ளத் தெளிந்தாற்கு சீவன் சிவலிங்கம்”           - -        திருமூலர்.

அதாவது, ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை விளங்கும் என்கிறார். இதுவே உணர்தல் எனப்படுகிறது.

ஜீவாத்மாவைப் பற்றிய உண்மைகளை அறிவையும், விவேகமான சிந்தனையைக்கொண்டும் புரிந்து தெளிய முடியும். ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகள்  (நல்வினைப் பதிவுகளாக இருந்தாலும், தீவினைப் பதிவுகளாக இருந்தாலும்) இருக்கும்வரை ஞானம் பெறுவது என்பது முடியாத காரியம்.

ஆழ்மனதில் உள்ள அனைத்து பதிவுகளையும்  நீக்கினால் மட்டுமே, ஞானம் கைகூடும். அதுவரை ஞானத்தைப் பற்றிய உணர்வு மட்டுமே இருக்கும்.

ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்க, நாம் என்னன்ன செய்யவேண்டும் என்று கீதை நெடுகிலும் நிறைய குறிப்புகள் உள்ளன.

இருந்தாலும் நாம் எந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்ந்தால் அந்த இலக்கை அடையலாம், முடிவான இலக்கு எப்போது, எப்படி அடையப்படும் என்று ரிஷி பதஞ்சலி விரிவாக எடுத்துரைக்கிறார்.

அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.



72. ஞான மார்க்கம் – பாதை 1

ஞான மார்க்கத்தில் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது, ஆழ்மனதில் உள்ள பதிவுகளே. ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகளுக்குக் காரணமாக இருப்பது நமது உணர்வு மனமே. எனவே, சுத்திகரிப்பு வேலையை முதலில் உணர்வு மனதிலிருந்தே தொடங்கவேண்டும் என்கிறார் ரிஷி பதஞ்சலி.

உணர்வு மனதில் உள்ளவை வெறும் கடந்த கால எண்ணங்கள் மட்டுமே. அவை நமக்கு  ஏற்படும் அனுபவங்களால் மட்டும் பெறப்பட்டவை அல்ல. நம்மை சுற்றி இருப்பவர்களால்  – நமது பெற்றோர் முதற்கொண்டு நண்பர்கள் வரை – நமக்குள் திணித்து வைத்தவைகளும் சேர்ந்தே இருக்கும். அத்துடன், அவற்றில் பலவும் நமது உணர்ச்சிகளைத் தூண்டுபவையாகவே இருக்கும்.

மனதில் உணர்ச்சிகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் உணர்வு மனதுடன் ஒன்றிவிடுகிறோம். அதன்பின், உணர்வு மனம் நமக்கு எஜமானனாக மாறிவிடுகிறது. அதனால்தான், நாம் எதிர்கொள்ளும் தாக்கங்களுக்கு உடனுக்குடன், சற்றும் சிந்திக்காமல், மனமே  எதிர்விளைவை உண்டுபண்ணுகிறது

ஒரு மனிதன் அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், உணர்ச்சிவசப் படுகிறவனாக இருந்தால், அவனது மனம் புத்தியை கலந்து கொள்ளாமல்  தன்னிச்சையாக   முடிவு எடுத்து, தானே ஒரு பின்விளைவை  ஏற்படுத்தி விடுகிறது.

எனவே, முதலில் உணர்வு மனதில் கடந்த காலத்தில் பதிவாகியுள்ள எண்ணங்களில் உள்ள  அசுத்தங்களை நீக்க  நாம் “சவிதர்க்க சமாதியை” கடைப்பிடிக்கவேண்டும் என்கிறார்.

“சவிதர்க்க” என்பதை பிரித்து, ‘தர்க்க’, ‘விதர்க்க’ மற்றும் ‘சவிதர்க்க’ என ஒவ்வொன்றாக அவற்றின்  பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதில், ‘தர்க்க’ என்பது விவாதத்தைக் குறிக்கிறது. விவாதம் என்பது பல நேரங்களில் பலருடன் பல்வேறு காரனங்களுக்காக ஏற்படுகிறது. ஆனால், அது ‘விதர்க்கமாக’ இருக்கவேண்டும் என்கிறார்.

தர்க்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று குதர்க்கம்; மற்றொன்று விதர்க்கம்.

மக்கள் ‘தான்’ என்ற உணர்வோடும், உணர்ச்சி மிகுந்தும்  விவாதத்தில் கலந்து கொண்டால், பெரும்பாலும் அது ‘குதர்க்கத்தில்’ தான் முடியும். அத்தகைய விவாதத்தில்  ஒரு நியாயமான முடிவுக்கு வருவது மிக கடினம்.

‘விதர்க்கம்’ என்று சொல்லும்பொழுது,  விவாதத்தில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் ஒரு ஒத்திசைவு இருக்கும். அவர்கள் விவாதத்தின் கருப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவேண்டும் என்பதில், எல்லோருக்குமிடையே ஒரு உடன்பாட்டுத்தன்மை இருக்கும்.

விதர்க்கத்தில் கருப்பொருள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால், ‘சவிதர்க்கம்’ என்று வரும்பொழுது, அதிலிருந்து தனது குணத்தின் பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பது மட்டுமே ஒரு மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும்.

ஆக, சவிதர்க்கத்திற்கு உதவியாக இருப்பது நண்பர்களாக இருக்கலாம்; சத்சங்கமாக இருக்கலாம்; ஏன், ஒரு புத்தகமாக கூட இருக்கலாம். ஆனால் நோக்கம்  என்பது ஒன்றே ஒன்றுதான்; தனது குணத்தின் பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதுதான் அது.

‘சவிதர்க்க சமாதி’ பாதை என்றால், அது போய்ச்சேரும் இடத்தை  ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார். அந்த இடத்தை அடைந்துவிட்டோம் என்பதை அறிந்துகொள்வதற்கு சில குறிப்புகளை தெரிந்துகொள்வோம்- -
1.     
     உணர்வு மனதிலிருந்து அஹங்காரம் குறையத் தொடங்கும்.

     வெளியில் ஓடி புறவுலகில் இருக்கும் ஆரவாரம், பரபரப்பு இவற்றை              இரசிப்பதிலிருந்து உணர்வு மனம் விலக ஆரம்பிக்கும். 

     உணர்ச்சிகளை அடக்கிவைப்பதற்கு பதிலாக, உணர்ச்சிகள் அடங்க                ஆரம்பிக்கும்.
   
     உணர்ச்சிகள் அடங்குவதன் காரணமாக, உணர்வு மனம்                         தன்னிச்சையாக முடிவெடுக்காமல் புத்தியைக் கலந்து                    செயல்பட ஆரம்பிக்கும்.

     உணர்ச்சியின் காரணமாக வரும் எதிர்விளைவுகள் குறைய                      ஆரம்பிக்கும்.

     நான் என்பது மனமல்ல என்ற உண்மை புரிய ஆரம்பிக்கிறது; அதன்              காரணமாக மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்.

    விவேகம் மிகுந்து காணப்படுவதால் பற்றற்ற தன்மை (வைராக்கியம்)              வளர ஆரம்பிக்கும்.

    உணர்வு மனதில் உள்ள அசுத்த எண்ணங்களை வெளிப்படுத்தக்                  கூடிய  பதிவுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.

  ஜீவாத்மாவைப் பற்றிய உணர்வே இல்லாதிருந்த மனிதன், ஆன்மாவைப்     பற்றி சிந்திக்கத் தொடங்குகிறான்           .

     பகுத்தறியும் தன்மையில் தெளிவான பார்வை கிடைக்கும்.

வரைபடத்தைப் பாருங்கள்:-

வரை படத்தில் உள்ள ‘சவிதர்க்க சமாதி’ என்பது ஞானமார்க்கத்தில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பாதையைக் குறிக்கிறது.

அந்தப் பாதையில் மனிதன் முறையாகப் பயணம் செய்தால், அவன் சென்று அடையும் இடம் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார்.

யதார்த்த உலகில் வாழும் மனிதனுக்கு ‘சவிதர்க்க சமாதியில்’ ஈடுபட நேரம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். சவிதர்க்க சமாதியில் ஈடுபட நேரம் இருந்தாலும், அதில் ஈடுபடும் மனிதனுக்கு புத்தி மற்றும் பகுத்தறியும் தன்மை முழுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

மற்றவர்களுக்கு ஞானம் பற்றிய மெய்ப்பொருளை அடையவேண்டும் என்கின்ற ஆர்வம் தீவிரமாக இருந்தால், தகுந்த சான்றோரை நாடித் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பல நேரங்களில் நாம் யாரை நாடிச் செல்கிறோமோ, அவருக்கு  அதற்குரிய தகுதி இல்லாதிருக்கலாம். ஆனால், அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல், நமக்கு நிறையப் பாடம் எடுப்பார்கள்.


‘குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவீழு மாறே”             - - திருமூலர்


சம்பிரஞ்ஞாத சமாதி நிலையை அடைந்த மனிதனுக்கு நிறையவே குழப்பங்கள் வரும். ஏனெனில், அவனது உணர்வு, உணர்வுமனதிலிருந்து நகர ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் ஆன்மாவைப் பற்றிய முழுமையான தெளிவு இல்லாததால் அவனுக்குப் பல இடத்திலிருந்தும் நெருக்கடிகள் வரும். தனது பயணத்தின்  அடுத்தடுத்த பாதைகளை அவன் தைரியமாக  தொடரவேண்டும். இல்லையேல் நிலைகுலைந்து போகும் வாய்ப்பு உண்டு.
தன்மீதும், தனது முயற்சிகளின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு பயணத்தைத் தொடரவேண்டும்.


“தானே தனக்குப் பகைவனும் நட்டானும்;

தானே தனக்கு மறுமையும் இம்மையும்;

தானே  தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்;

தானே தனக்கு தலைவனும் ஆமே”             - - திருமூலர்


இதற்கு, அறத்தின் இயல்பை அறிந்து சிறந்த அறிவுடையவரது உறவைத் தேடி தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.


“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்”.                - - திருவள்ளுவர்



 73. ஞான மார்க்கம் – பாதை 2

மனிதன் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ நிலையை அடையும்பொழுது, அவனது மனம்  புத்தியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்ள ஆரம்பிக்கிறது. அத்துடன் அவனது அஹங்காரம் குறையக்  குறைய, அவன் புறவுலகின் யதார்த்த நிலைகளைப் புரிந்துகொண்டு அதனுடன் இசைவாகவும், இணக்கமாகவும்  நடந்துகொள்ள ஆரம்பிக்கிறான்.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகுத்தறிவின்  துணையுடன் தர்க்கம் செய்வதிலிருந்து விலக ஆரம்பித்துவிடுகிறான்.  எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வதை விட்டுவிடுவதால், அவனது மனதில் உணர்ச்சிகள் பொங்கிப் பெருகுவது நின்றுவிடுகிறது. மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும்  குறைய ஆரம்பிக்கிறது.

சவிதர்க்க சமாதியின் காரணமாக, அவனுக்குள் வாழ்வியல் உண்மைகளைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக சவிதர்க்க சமாதியிலிருந்து விடுபட்டு, ‘நிர்விதர்க்க சமாதியில்’ நுழைந்துவிடுகிறான்.

‘நிர்விதர்க்க சமாதியில்’ தர்க்கம் நின்றுவிடுகிறது. அகத்தாய்வில் கவனம் செலுத்துகிறான். ஆனாலும், அந்த அகத்தாய்வு அவன் மனதில் சேகரித்து வைத்திருக்கும் எண்ணங்களின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த எண்ணங்களோ பல பேரிடம் இருந்து வாங்கியவைகள்; அவற்றில் அவர்களது சொந்தக் கருத்துகளும் இடம் பெற்றிருக்கும். 

கடன்வாங்கிய எண்ணங்களாக இருந்தாலும், புறவுலகில் செயல்படுவது குறைந்து, அகத்தாய்வில் நாட்டம் அதிகமாவதால்  நாளடைவில் அவனது மனம், அவனையும் அறியாமலே புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால், அதனை ‘ஒருங்கிணைந்த மனம்’ என்றும் சொல்லலாம்.

சுத்தமான எண்ணங்களால் அவனது மனம் நிரம்பி இருந்தாலும், புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அதனால் தன்னிச்சையாக இயங்க முடியாது. அது பதிவுகள் இருந்தும் இல்லாதது போல ஆகிவிடுகிறது. மனம் புத்தியுடன் தன்னை இணைத்து கொள்ளும் நிலையில் அது ‘அசம்பிரஞ்ஞாத சமாதி’ என்று அழைக்கப்படுகிறது.

வரைபடத்தைப் பாருங்கள்:-



இந்த நிலையில், அவனது மனம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு குழப்பம் அடைகிறது. மனதில் ஏற்படும் குழப்பங்களையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ள அவன் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் அவனால் அடுத்த பாதைக்குள் நுழைய முடியும்.



74. ஞான மார்க்கம் – பாதை 3

‘அசம்பிரஞ்ஞாத சமாதி’  அடைந்த மனிதனின் மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. அவனது உணர்வு மனதில் சுத்தமான எண்ணங்கள் மட்டுமே இருக்கும் என்றாலும், ஒருவகையில் அவை அசுத்தமான எண்ணங்களே. ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களிடமிருந்து இரவலாகப் பெற்றவை.

‘அசம்பிரஞ்ஞாத சமாதி’  நிலையை அடைந்த மனிதனுக்கு ஒரு தவிர்க்க முடியாத குழப்பம் வரும். அதுவரை அவனது உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவு எடுத்தது. அத்துடன் அது எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை  ஆழ்மனதால் தூபம் போடப்பட்டதாக இருக்கும்.

இப்பொழுதோ அது புத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஆழ்மனதில் இருந்து வரும் ஆலோசனைகளை அதனால் நிறைவேற்ற முடியாது; ஏனெனில் புத்தியிலிருந்து வரும் ஆலோசனைகள் வேறுவிதமாக இருக்கும்.

ஒரு இரண்டும்கெட்டான் நிலையில் இருக்கின்ற காரணத்தால், மனதில் குழப்பங்கள் உருவாகும். மேலும், அவனது மனமும் செயல்படும் (active) நிலையிலிருந்து செயல்பட விரும்பாத தன்மைக்கு (un-active) மாறிக்கொண்டிருக்கும்.

செயல்பட விரும்பாத தன்மையில், மனம் அமைதியாக இருக்கும்பொழுது, அந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்தி மனிதன் ‘சவிசார சமாதி’ என்னும் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கவேண்டும்.

‘விசாரம்’ என்பது சிந்தனையைக் குறிக்கிறது. இந்த சிந்தனை ஆராய்ச்சி செய்யும் பாவனையுடன் இருக்கவேண்டும். மேலும் இந்த சிந்தனையில் எந்த விதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.

உணர்வு மனம் முன்னால்  செய்த சிந்தனைகளுக்கும், இப்பொழுது நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனைகளுக்கும் வித்தியாசம் உண்டு.

முன்பு நாம் உணர்வு மனதில் சேகரித்து வைத்திருந்த எண்ணங்களின் அடிப்படையில் நமது சிந்தனை இருந்தது. அந்த எண்ணங்கள் நம்முடையதாகவும் இருக்கலாம்; பிறரிடமிருந்து வாங்கியவையாகவும் இருக்கலாம்.

இப்பொழுது செய்யப்படும் சிந்தனையோ  நமக்குள்ளேயே வாழ்வியல் புதிர்களுக்கு விடை தேடும் விதமாக இருக்கும். உணர்வு மனதில் இருந்த சலனங்கள் பெருமளவில் குறைந்திருப்பதால், நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறது.

நம்மால் தெளிவான முடிவிற்கு வரமுடியாத போது, சான்றோரிடமோ அல்லது சத் சங்கங்களில் கலந்தோ தெளிவு பெற முடிகிறது.

விசாரத்தில் நமது சிந்தனைக்குத் தேவையான கருப்பொருள் புறவுலகில் இருந்து மட்டுமல்ல, ஆழ்மனதில் இருந்தும்  பெறப்படுகிறது. 

விசாரத்தில் தெளிவு கூடக் கூட, அதுவே ‘சவிசாரமாக’ மாறிவிடுகிறது. அதாவது ஆழ்மனதில் உள்ள அசுத்தமான பதிவுகளும் ஒவ்வொன்றாக வெளியேறிவிடுகிறது. சுத்தமான பதிவுகள் மட்டுமே அதில் உள்ளன.

‘சவிசார சமாதி’ எனும் பாதையில் பயணம் செய்தால், பாதையின் முடிவில் அவன் அடையும் இடம் ‘சபீஜ சமாதி’.

வரைபடத்தைப் பாருங்கள்:-



‘சபீஜ சமாதி’ நிலையை அடைந்த மனிதனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு) பெருமளவில் குறைந்துவிடுகிறது. “தான்” என்கிற உணர்வு மறைந்து “தன்னைப்” பற்றிய நினைவு மட்டும் இருக்கிறது.



75. ஞான மார்க்கம் – பாதை 4

‘சபீஜ சமாதி’ நிலையில் மனிதனுக்கு இன்னமும் சிந்தனை புறவுலகப் பொருட்கள், அவற்றால் ஆழ்மனதில் ஏற்படும்  அனுபவங்கள் இவற்றை நோக்கியே இருக்கும். மெய்ப்பொருள் பற்றிய உண்மையை அறிந்திருந்தாலும், அவனால் சிந்தனையிலிருந்து விடுபட முடிவதில்லை.

‘நிர்விசார சமாதியின்’ பாதையில்  அவன் பயணத்தை ஆரம்பித்தவுடன், சிந்தனை இல்லாமல் பொருட்களைப் பார்க்கக் கற்றுக் கொள்கிறான். புலன்களின் உதவியின்றி அறிந்துகொள்ளும் திறனில் அவன்  மேன்மை அடைகிறான்.

வாழ்க்கையில் அவன் செயல் புரிந்தாலும், செயல் புரியாவிட்டாலும் அனைத்தையும் சாட்சி பாவத்துடன்   பார்க்க ஆரம்பிக்கிறான்.

சாட்சி பாவத்திற்கு வந்தவுடன், அவனுக்கு தியான நிலை இயல்பாகவே கைகூடிவரும். மனதில் எந்த எண்ணமும் இல்லாமல், அவனால் தியானத்தில் இருக்கமுடிகிறது.

“எண்ணமில்லாத நிலையே உண்மையான தியானம்”

எண்ணம் பற்றிய எண்ணமும் இல்லாத நிலையில், அவன்  ‘நிர்பீஜ சமாதி’ என்ற இலக்கை வந்தடைகிறான்.

பேரண்டத்துடன் அவனுக்கு ஓர் ஒத்திசைவு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு பேருண்மையும்  அவனுக்குப் புரிகிறது.   அது - - -

“இது இல்லாத போது, அது இருக்கிறது”                       

வரைபடத்தைப் பாருங்கள்:-




‘நிர்பீஜ சமாதி’ நிலையை அடைந்தவுடன், உள்ளிருந்து வரும் இறையருளை  உணரத்தொடங்குகிறான்.


76. விழிப்புணர்வு

நாம்  பார்ப்பது எதுவாக இருந்தாலும், அது பொருளாக இருக்கும்; அல்லது பொருளில் இருந்து வந்ததாக இருக்கும்,

‘இருட்டு’ என்பது பொருளா அல்லது பொருளிலிருந்து வந்ததா? இரண்டுமே இல்லை.

மாலை நேரம் வந்ததும் கிழக்கிலிருந்து மேற்காக இருட்டு பரவுகிறது. ஆனால் நமது வீட்டில், விளக்கு எரிந்துகொண்டிருந்தால், அந்த இருட்டு நமது வீட்டிற்குள் வருவதில்லை. நமது வீட்டை கடந்து சென்றாலும்கூட, அதனால் நம் வீட்டிற்குள் நுழைய முடிவதில்லை. 

நாம் ‘இருட்டு’ என்று நடைமுறை பழக்கத்தில் சொல்வதாக இருந்தாலும், உண்மையில் அது வெளிச்சத்தின் இல்லாமையே.

ஒரு மனிதன் ஞான நிலை அடையும்பொழுது, அதனை ‘விழிப்புணர்வு’ (வித்யா) என்று சொல்வார்கள்.

விழிப்புணர்வு இல்லாதபோது, அதனை விழிப்புணர்வின்மை (அவித்யா) என்று சொல்வார்கள்.

நாம் உபயோகிக்கும் பல பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் நாம் அவற்றை ஏன் உபயோகிக்கிறோம்? உடல்நலத்திற்கு கேடு என்ற உண்மை தெரிந்தும், அவற்றை உபயோகிப்பதைத்தான் விழிப்புணர்வின்மை என்கிறோம்.

“எல்லாம் அவன் செயல்” என்று நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொண்டால், அது விழிப்புணர்வுதான். நாம் விரும்பாத ஒன்று நடக்கும்பொழுது, நாம் வருந்துகிறோமே; அதற்கு என்ன பெயர்?


77. பலூனும், புல்லாங்குழலும்

ஞானம் பெறுவது முதல்படி என்றால், விழிப்புணர்வு ஞானத்தின் பாதையில் கடைசிப்படி என்று சொல்லலாம்.

விழிப்புணர்வு பற்றி அறிந்துகொண்டவர்கள், உண்மையிலேயே விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார்களா  என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

பலூன், புல்லாங்குழல் இரண்டுமே காற்றில் இயங்குவதுதான். ஆனாலும், அவற்றிற்கிடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

பலூனில் காற்று அடைக்கப்பட்டால், அது தன் விருப்பம்போல் பறக்க ஆரம்பித்துவிடும். ஒரு நூலில் அதை இணைத்தாலும், அந்த நூலையும் சேர்த்து இழுத்துக்கொண்டு பறக்கும்.

புல்லாங்குழலும்  காற்றில் இயங்குவதுதான். இருந்தாலும் அது தன்னிச்சையாக வாசிப்பதில்லை. அதற்கு, அதனை எடுத்து வாசிப்பதற்கு, வேறு ஒருவர் வேண்டும்.

நாம் பலூனாக இருக்கிறோமா அல்லது புல்லாங்குழாக இருக்கிறோமோ? புல்லாங்குழலாக இருக்கிறோம் என்றால், நாம் நம்மை அவன் கையில் ஒப்படைத்துவிடவேண்டும். நாம் கருவி, அவன் இசைப்பவன் என்றாகிவிடவேண்டும்.


நம்மை இசைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவனது விருப்பம். கருவியே வேண்டாம் என்று நினைத்தாலும், அதுவும் அவனது  விருப்பமே. பலூனாக இருக்கும் நாம், எப்பொழுது புல்லாங்குழலாக மாறுகிறோமோ, அன்றுதான் விழிப்புணர்வு என்றால் என்னவென்றும், அதனால் வரும் ஆனந்தத்தையும் புரிந்துகொள்வோம்.




78

நன்றியுரை

இதுவரை இதனுடன் பயணித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இந்திய வேதங்கள் ஒரு மாபெரும் பாற்கடல். வேதவியாசர் அருளிய பகவத்கீதையோ ஒரு அமுதக் கலசம்.

அதில் இவன் பருகியது ஒரு துளி மட்டுமே. அதுவே இவன் திகட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. அதனைச் சுவைக்கக் கற்றுத் தந்தவர் ‘ஸ்வாமி சின்மயானந்தா’ அவர்களே.

எந்த மழலையும் தான் புதிதாக கற்றுக் கொண்டதை மற்றவர்களிடம் சொல்லிக்காட்டத் துடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது, அதற்கே உரிய கூச்சத்துடன், தனக்குத் தெரிந்ததை சொல்லிக்காட்டும். அந்த மழழையின் கூற்றில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், நாம் அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவோம்.

இவனது குழந்தைத்தனமான கூற்றிலும் பல குறைகள் இருக்கலாம்; இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள். ஏனெனில்,
இது ஒரு மழலையின் கீதை”

                                           நன்றியுடன்,

                                             பித்தன்


மழலையின் கீதை .. பாகம் 4

மழலையின் கீதை  ..  பாகம் 4  


                                                               பொருளடக்கம் 


37. மனிதனின் அடுத்த நிலை          
          
                        38. உணர்ச்சியும், உணர்வும்

39. வாசனாவின் கறை

40. நோயும், மருந்தும்

41. வாழ்க்கை நெறியும், வாழ்க்கைத் தரமும்

42. நேற்று, இன்று, நாளை

43. கடமையும், பலனும்

44. வழித்தட மாற்றம்

45. கடலும், அலையும்

46. மனமும், சிலையும்

47. ஒப்பீடு

48. தவறெனத் தெரிந்தால்

49. துணை நலம்

50. சுயமேம்பாட்டிற்கான உத்திகள்

51. அந்தக்கரணங்கள்

52. அந்தக்கரணங்களின் செயல்பாடு (பொதுவான விதிமுறைகள்)

53. நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு

54. இன்பமும், அமைதியும்
......................................................................................................
                                                          


பாகம் iv ... சுய மேம்பாடு


37. மனிதனின் அடுத்த நிலை    

வர்ண தர்மங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட நாம், நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் வர்ணத்தைக் குறிப்பதற்கு அவனது “அந்தக்கரணங்களின்” செயல்பாடுகளே காரணமாக அமைகின்றன.

அவற்றின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்ட நாம், அவற்றை எப்படி மாற்றி அமைப்பது என்ற உண்மைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு மனிதன் எந்த வர்ணத்திலிருந்தாலும் “அந்தக்கரணங்களின்” செயல்பாடுகளை மாற்றி அமைக்கும் வித்தைகளைக் கற்றுக் கொண்டால் மட்டுமே, அவனால் வர்ணப் பிரிவில் உயரமுடியும்; அதற்கு தேவை மன உறுதியும், விடாமுயற்சியும் தான்.

அண்டங்கள் தோன்றி நெருப்பு கோளங்கள் குளிர்ந்தபின், கண்ணுக்கும், புலனுக்கும் தெரிந்தவை கல்லும், மண்ணும்தான். ஆனால் அவற்றிற்கு ஊடேயும் உயிர்நிலை இருந்தது என்றால் யார்தான் ஒப்புக்கொள்வார்கள்?

அடுத்த நிலையில் புல், பூண்டு, செடி, கொடி, மரம் என்று தாவரவியல் தோன்றி வளர்ந்த பொழுது, அவற்றிற்கு உயிர் இருந்தது என்பதோடு, சிறிது உணர்ச்சியும் இருந்தன என்பதை அறிந்து கொள்கிறோம்.

அடுத்து ஊர்வன, நடப்பன, பறப்பன என விலங்கியல் விரிவடைந்தபொழுது, அவற்றிற்கு  உணர்ச்சி மட்டுமல்ல, அறிவும் வேலை செய்வதை தெரிந்து கொள்கிறோம். எந்த நிலையிலும் அவற்றின் உணர்ச்சியே மேலோங்கி இருப்பதையும் புரிந்து கொள்கிறோம்.

பரிணாம வளர்ச்சியில் அடுத்து வந்த மனிதன் உணர்ச்சி, அறிவு இரண்டையும் பயன்படுத்தினாலும், சூத்திர வர்ணத்திலிருந்து மேலே வரவர அவனது உணர்ச்சிகள் அறிவுக்கு கட்டுப்பட்டு இருப்பதைப் பார்க்கிறோம்.

அறிவு வளர வளர உணர்ச்சி கட்டுக்குள் வந்து அடங்குவதைப் பார்க்கும்பொழுது, அடுத்த நிலையில் அறிவு மட்டுமே மேலோங்கி இருக்கும் நிலை வரலாம்  அல்லவா?

அது “அறிவை” அறிவால்  அறியும் நிலையாகும். அந்த நிலையில் திருமூலர் கூறுவது போல் “கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்காக” மாறிவிடும்.



38. உணர்ச்சியும், உணர்வும்

அறிவு மேலோங்கிய நிலையில் ஒரு மனிதனின் உணர்ச்சி எந்த அளவில் இருக்கும்? வரைபடத்தைப் பாருங்கள் –


மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் உணர்ச்சியாகவும், புத்தி மூலமாக  ஏற்படும் பதிவுகள் அறிவாகவும் உருவெடுக்கின்றன.

ஒரு மனிதன் சூத்திர வர்ணத்தில் இருக்கும்பொழுது அறிவு மிகமிகக் குறைவாகவும், உணர்ச்சி மிகுந்தும் காணப்படுகிறது. உணர்ச்சி பெட்டகமும், அறிவு பெட்டகமும் ஒன்றுகொன்று தொடர்பின்றி, இடையே உள்ள தடுப்புச் சுவர் கனமாக மாறிவிடுகிறது.

ஆனால் மனிதன் தன்  வர்ணப்பிரிவில் உயர்ந்து வரும்பொழுது, அவனது உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் உள்ள தடுப்புச் சுவர் மெலிந்து மெலிந்து முடிவில் முழுவதுமாய் கரைந்து போகிறது. இதன் விளைவாக  அவனது உணரச்சிகள் அறிவோடு இரண்டற கலந்து விடுகிறது. அறிவோடு கலந்து விட்ட மனதில் உணர்ச்சிகளுக்கு இடம் கிடையாது.

உணர்ச்சிகள் மனதின் அடித்தளத்திலிருந்து அறிவுக்கு கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் வெளிவரும். எனவே அவை நல்ல உணர்ச்சிகளாகவும் இருக்கலாம்; கெட்ட உணர்ச்சிகளாகவும் இருக்கலாம். ஆனால் மனம் (உணர்ச்சி) புத்தியோடு (அறிவு)  இரண்டறக்  கலந்தபின், அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. அவனிடமிருந்து உணர்வுகள் மட்டுமே வெளிப்படும்.

அறிவுக்கு அடங்காத மனம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; அறிவோடு கலந்த மனமோ உணர்வுகளை மட்டுமே வெளிபடுத்தும்.

உணர்ச்சிகளை  விட உணர்வுகள்  வெளிப்படுவதே நல்லது; ஏனெனில் உணர்வுகளில் கெட்ட உணர்வு என்று எதுவும் கிடையாது.



39. வாசனாவின் கறை

இறைவனைத் தேடி வெளியில் அலையும் மனிதனால், தனக்குள்ளேயே இருக்கும் ஆன்மாவை ஏன் தரிசிக்க முடியவில்லை? ஆன்மாவை மூடியிருக்கும் வாசனா என்னும் மாயத்திரையில் கறைகள் நிறைந்து. ஆன்மாவின் ஒளியைத் தரிசிக்க முடியாமல் செய்துவிடுகிறது.

உள்ளே காணமுடியாத ஒளியை,  வெளியில் தேடி அலையும் மனிதன் நிரந்தரமல்லாதவற்றை நிஜமென்று நம்பி   பொய்யான இன்பங்களில் மூழ்கி, வாழ்க்கையின் நோக்கத்தையே தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான். நிரந்தரமல்லாத நிஜத்தைத்தான் “மாயை” என்கிறது வேதம்.

கதவைத் திறந்தால்  வெளியே ஓடிச் செல்லும் குழந்தையைப் போல் வெளியே ஓடித்திரியும் மனதை உள்ளே பார்க்கச் செய்யவேண்டும். “வாசனா”வில் படிந்துள்ள கறைகளைக்   களைவதற்கு, மனதை முதலில் உள்முகமாகத் திருப்பவேண்டும். மற்ற முயற்சிகளெல்லாம் அதற்குப் பின்னர்தான்.

முயற்சி செய்தால் வர்ணப்பிரிவில் கொஞ்சம், கொஞ்சமாக உயரலாம்.

வர்ணப்பிரிவில் உயர்ந்த எல்லையை அடைந்தால், ஆன்மாவை அறிந்து கொள்ளலாம்.




 40. நோயும், மருந்தும்


"பிணிக்கு மருந்து பிறமன் –
 அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து”

மனிதனுக்கு வரும் எந்தவொரு நோய்க்கும், மருந்து பிறிதொரு இடத்தில் இருந்து வருகிறது. ஆனால், காதலியால் வரும் நோய்க்கு அவள்தான் மருந்து என்கிறார் வள்ளுவர்.

நோயும் அதுவே, மருந்தும் அதுவே என காதலியை வள்ளுவர் சொல்வது போல், வேறு ஏதாவது உண்டா என்றால் அது மனிதனின் மனம்தான்.

மனிதனை ஆட்டுவித்து அவனை சாத்தானாக மாற்றும்  அவனது மனம்தான், அவனை தெய்வநிலைக்கு உயர்த்தக்கூடிய சக்தியையும் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான வித்தைகளை மனிதன் அறிந்திருக்க வேண்டும்.

இருள் சூழ்ந்த மனதை, அருள் சுரக்கும் மனமாக மாற்றும் வித்தையை கற்றுத் தருவது ஆன்மிகம்.

எந்த, எந்த வித்தைகளை எல்லாமோ கற்றுக் கொள்ளவேண்டும் என்று துடிக்கின்ற நாம், சுய மேம்பாட்டிற்காக ஆன்மிகம் சொல்லும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவற்றை தெரிந்துகொள்ளுமுன், நமது வாழ்க்கை பாதையில் நமது பயணத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.



41. வாழ்க்கை நெறியும், வாழ்க்கைத் தரமும்

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவதில் வியப்பில்லை. அதன் நோக்கமே வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கத்தானே! ஆனால் வாழ்க்கைத் தரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மனிதன் வாழ்க்கை நெறிக்கும் கொடுக்க வேண்டாமா?

ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாழ்க்கைத்தரம், வாழ்க்கை நெறி இரண்டுமே முக்கியம் என்றாலும், இரண்டிற்குமிடையே சில வித்தியாசங்கள் உண்டு.

வாழ்க்கைத்தரம் மரத்தின் கிளை என்றால், வாழ்க்கை நெறி அதன் வேர்.  அது கட்டிடம் என்றால், இது அஸ்திவாரம்.

வாழ்க்கை நெறியை மறந்து, வாழ்க்கைத்தரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் அவனது வர்ணப் பிரிவில் கீழே இறங்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அதே சமயம் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதன் வர்ணப் பிரிவில் மேலே ஏறுகிறான். அதன் காரணமாக, அறிவிற்கெல்லாம் அறிவான பேரறிவைத் தெரிந்து கொள்ள அவனுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

வர்ணப்பிரிவில் மேலே வருவதற்கு, வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம்.


42. நேற்று, இன்று, நாளை


நாம் எப்படி இருந்தோம்?             -    அது கடந்த காலம்

நாம் எப்படி இருக்கிறோம்?           -    அது நிகழ்காலம்

நாம் எப்படி இருப்போம்?             -    அது எதிர்காலம்


நாம் எப்படி இருந்தோம் என்பது நடந்து முடிந்த கதை. அதை இப்பொழுது மாற்ற முடியாது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பதுவும் மாற்றமுடியாதது. ஏனெனில் நிகழ்காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான பதிவுகள் ஏற்கனவே நமக்குள் அரங்கேற்றிவிட்டன. இப்பொழுது மாற்ற முடியாது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து, எதிர்காலத்தில் இப்படித்தான் இருப்போம் என்று சொல்வதும் சரியல்ல. ஏனெனில் எதிர்காலத்தை நம்மால் மாற்ற முடியும். ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் நிகழ்காலத்தில்தான்  நடத்த வேண்டும்.

     “The present is the product of the past;
      The future is the modification of the past in the  present"                       
---   Swami Chinmayaanandhaa  

இறைவன் அருள் இன்றி எதுவும் நடக்க முடியாது என்றாலும், மனிதனின் முயற்சியும் மிகவும் முக்கியம். முயற்சி இல்லாமல் சுயமேம்பாடு இல்லை.


43. கடமையும், பலனும்

“கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்கிறது கீதை. இதனை நையாண்டி செய்பவர்களும் உண்டு. மாதம் பூராவும் வேலை பார்த்துவிட்டு, சம்பளத்தை எதிர்பாராதே என்றால் எப்படி என்பார்கள். கீதாச்சாரியன் உரைக்கு இப்படியா அர்த்தம் கொள்வது?

‘நீ உனக்குள்ள கடமையை செவ்வனே செய்து வா; பலனை எதிர்பார்த்து இருக்காதே; ஏனெனில் நீ எதிர்பார்க்கும் பலன் எப்பொழுது, எவ்விதம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது’ எனப் பெரியோர்கள் சொல்கிறார்கள்.

பலன் என்பதற்கு “லாபம்” என்று ஓர் அர்த்தம் இருப்பதோடு, “விளைவு” என்றும் ஓர் அர்த்தம் உண்டு. கடமையைச் செய்வது மட்டும்தான் நம் கையில் உள்ளது. ஏனெனில் அதன் விளைவு நாம் விரும்பியபடி, நாம் முடிவு செய்வதல்ல.

இன்னுமொரு விளக்கமும் உண்டு.

“செய்’ என்பது நிகழ்காலத்தில் நடப்பது; ‘எதிர்பாராதே’ என்பது எதிர்கால பலன்களுக்காக  காத்திருப்பது. மனிதன் நிகழ்கால நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால நிகழ்வுகளுக்காக கவலைப்பட்டால், அவனது வளர்ச்சி தடைப்படும் என்பதனால் தான், ‘எதிர்பாராதே’ என்கிறது கீதை.

 “Be present in the present”.


                 44. வழித்தட மாற்றம்

சாலையில் செல்லும் வாகனத்தை ஓட்டுபவருக்கும், தண்டவாளத்தில் செல்லும் இரயிலை ஓட்டுபவருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.

வாகன ஓட்டுனருக்கு வாகனத்தை சாலையின்  ஒரு புறத்திலிருந்து, மறுபுறத்திற்கும், ஒரு சாலையிலிருந்து வேறொரு சாலைக்கும் ஓட்டிச் செல்ல முடியும்.

ஆனால் இரயிலை ஒட்டுபவருக்கோ தடத்தை மாற்றும் அதிகாரம் இல்லை. அவரது கடமை  இரயிலை ஓட்டுவதோடு சரி; தடத்தை மாற்றும் பொறுப்பை வேறு ஒருவர் எடுத்துக் கொள்கிறார்.

ஆன்மிக வாழ்க்கையும் அதைப் போன்றதுதான். நமது குணத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் மட்டும் போதும். வர்ணப்பிரிவில் உயர்வது மிக இயல்பாக நம்மை அறியாமல் தானே நடைபெறும். அது எப்படி, எப்போது என்று ஏங்கித் தவிக்காத வரையில், நமது வாழ்க்கையில் குழப்பங்கள் இருக்காது.

இந்த உண்மையைத் தெரிந்துகொள்வது சுயமேம்பாட்டிற்கு மிகவும் நல்லது.



                45. கடலும், அலையும்

ஆழ்கடலில் படகு அமைதியாக நிற்கிறது. அதே படகு தரையை நெருங்கும் பொழுது அலைகள் அதிகம் இருப்பதால் தத்தளிக்கிறது.

மனிதனின்  நிலையும் அதுதான். சம்சார சாகரத்தில் சமுதாய அமைப்பு ஏற்படுத்தும் கொந்தளிப்புகள் கடற்கரையின் அருகில் உள்ள அலைகளைப் போன்று அதில் மாட்டிகொண்ட மனிதனைத் தத்தளிக்க வைக்கிறது. அதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.

ஆனால் தனது மனதை அவற்றிலிருந்து விலக்கி இறைவன்பால் செலுத்தினால், ஆட்டமில்லாத அமைதியான வாழ்க்கை அமையும். அப்படிச் செய்யமுடியுமா என்றால் முடியும் என்கிறார் பரமஹம்சர்.

எப்படி வீட்டுவேலையில் ஈடுபட்டிருக்கும் தாயின் மனம் எப்பொழுதும் தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையையே நினைத்துக் கொண்டிருக்கிறதோ, அதைப் போல எந்த வேளையில் ஈடுபட்டிருந்தாலும், நமது மனமும் எப்பொழுதும் இறைவனேயே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கிறார்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் கொண்டுள்ள உயரிய குறிக்கோளில் மனதை செலுத்தலாம்.

“Be in the ocean; not on the waves”.


              46. மனமும், சிலையும்

ஓவியன் திரைச்சீலையில் ஓவியம் வரைகிறான். சிற்பியோ கல்லில் சிலையினை வடிக்கிறான். இரண்டுமே கலையின் வடிவங்கள்தான். இரண்டுமே நாம் பார்த்து இரசிப்பவைதான். இருந்தாலும் இரண்டிற்குமிடையே முக்கியமான ஒரு வித்தியாசம் உண்டு.    

ஓவியன் திரைச்சீலையில் தனக்குப் பிடித்தமான உருவத்தைக் கொண்டுவர, தேவையான வர்ணங்களை அதில் வரைகிறான்.

சிற்பியோ கல்லில் தனக்குப் பிடித்தமான உருவத்தைக் கொண்டுவர, தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வெளியே தள்ளுகிறான்.

மனிதனின்  செயல்பாடுகள் ஓவியனைப் போன்று இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக ஒரு சிற்பியைப் போன்று இருக்க வேண்டும்.

மனிதன் தான் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறானோ அதுபோல் ஆகமுடியும். அப்படி ஆவதற்கு அவன் செய்ய வேண்டியதெல்லாம் அதற்கு தேவையில்லாத விஷயங்களைத் தன்னிலிருந்து  நீக்குவதுதான்.


                           47. ஒப்பீடு

சுயமேம்பாட்டில் ஈடுபடும் எந்த மனிதனும் தன்னை அடுத்தவனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. நமக்கு ஒப்பீடு செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும் அவற்றை தவிர்ப்பது நல்லது.

அதோடு மட்டுமல்ல, தன்னைத்தானே ஒப்பீடு செய்வது கூட – கடந்த காலத்தில் எப்படி இருந்தோம், இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்பது போன்ற ஒப்பீடுகளும் – தவிர்க்கப்பட வேண்டியவை.

எந்த மலரும் மற்றொரு மலரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. மரம், செடி, கொடி என்று இயற்கையின் எந்த அம்சத்தை எடுத்துக் கொண்டாலும், அது ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்வதில்லை என்பதைக் காணலாம். தனது வளர்ச்சியின் பல்வேறு நிலைகளையும் அது ஒப்பீடு செய்வதில்லை.

ஒப்பீடு செய்வதால் என்னவாகும்?

ஒப்பீடு செய்யும் பொழுது மனதில் பல்வேறு சந்தேகங்கள் வரும். அதன் காரணமாக மனதில்  சஞ்சலம், வெறுப்பு, கோபம், சுயபச்சதாபம் போன்று பல்வேறு குழப்பங்கள் தோன்றும்.

மனதில் குழப்பங்கள் ஏற்பட்டால், சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபடுவது மனிதனுக்குக் கடினமான காரியமாகிவிடும்.


           48. தவறெனத் தெரிந்தால்

நாம் தவறு செய்யும் பொழுது அதனை முதன்முதலில் சுட்டிக்காட்டுவது யாராக இருக்கும்? முதன்முதலில் சுட்டிக்காட்டுவது நமது மனமாகத்தான் இருக்கும்.

தவறு என்பது பல நேரங்களில் செயலாக மட்டுமின்றி, விளைவாகவும் இருக்கும்.

நாம் செய்தது தவறு என்று மற்றவர்கள் சொல்லி, நமது மனமும்  அதனை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தால், நாமும் அதனை  ஒப்புக்கொள்கிறோம். இல்லையெனில் நாம் அதனை எளிதில் ஒப்புக்கொள்வதில்லை.

தவறு என்று தெரிந்தவுடன், நமது புத்தியின் மூலம் அதனை உறுதி செய்யவேண்டும். பின்னர் தவறுக்குக் காரணமாக இருந்த செயலைத் திரும்பவும் செய்யாதிருக்க உறுதி பூண வேண்டும். அந்த உறுதியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

உறுதிபூண்டு, பின் அதனைக் கடைப்பிடிக்கத் தவறினால், தவறான செயல் திரும்பத் திரும்ப செய்யப்பட்டு, அதுவே பழக்கமாக மாறி, முடிவில் ஆழ்மனதில் குணமாக பதிவாகிவிடுகிறது.

அதன்பின் நாம் செய்யும், தவறுகளை நம்மால் உணரமுடியாதது மட்டுமல்ல, மற்றவர்கள் சுட்டிக்காட்டும் பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.


                      49. துணை நலம்

சுய மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபடும்பொழுது, பல நேரங்களில்  என்ன செய்வது என அறியாது தடுமாற நேரிடும். நாம் செல்லும் பாதை சரியானது தானா; அல்லது தவறான பாதையில் செல்கிறோமா என்பதே புரியாது.

அந்த நேரங்களில் நமக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருப்பது சான்றோர் இயற்றிய, காலத்தை வென்ற மறைநூல்களே. இருந்தாலும், பக்குவப்படாத மனமுடைய மனிதனால், சுட்டெரிக்கும் உண்மைகளைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் மறைநூல்களை சந்திக்கும் தைரியம் இருக்காது.

எனவேதான், மறைநூல்களில் புதைந்து கிடக்கும் உண்மைகளைத் தனக்குப் புரியுமாறு எடுத்துரைக்கும் பெரியோரைத் தேடிப் பார்த்து, தெளிந்து, தனக்குத் துணையாக கொள்ள வேண்டும்.

அப்படித் தேர்ந்து தெளிந்த பின், நமது கேள்விகளுக்கு அவர்கள் மூலமாக விடை தேடலாமே தவிர, அவர்களையே சோதிக்கும் நிலைக்கு நாம் போகக்கூடாது.

தக்க பெரியோரின் துணை கிடைத்துவிட்டால், அதுவே சுயமேம்பாட்டில் பாதி வெற்றிதான்.

                                                                                                                                                                                         
50. சுயமேம்பாட்டிற்கான உத்திகள்

மனம் தரும் நோய்க்கு மனமே மருந்து என்று பார்த்தோம். அதை மருந்தாக்குவது எப்படி என்று பார்க்கவேண்டாமா?

கீதை நெடுகிலும், சுயமேம்பாட்டிற்கான உத்திகள் பல இடங்களில் சொல்லபட்டிருக்கின்றன. அவை அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறிய வேண்டிய விஷயங்கள். சரியாகப் புரிந்து கொள்ளாதவரை, அவை புதிர்களாகவே இருக்கும்.

கீதை மனிதர்களை குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாக பிரிக்கிறது.

சத்துவ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் அடுப்பில் உள்ள புகையைப் போன்றது. ஊதினால் விலகிவிடும் தன்மையது. கறைகளைப் போக்குவது சுலபம் என்கிறது.

இரஜோ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் கண்ணாடியில் படிந்த தூசியைப் போன்றது. தண்ணீர் விட்டுக் கழுவி, துணியை வைத்து சுத்தமாகத் துடைக்க வேண்டும். கறைகளைப் போக்க  சிறிது முயற்சி தேவையென உணர்த்துகிறது.

தமோ குணம் உடையோரிடம் உள்ள களங்கம் சினையில் உள்ள கருவைப் போன்றது. கரு வளர, நல்ல போஷாக்கு கொடுத்து, நல்ல முறையில் கவனித்து வர வேண்டும். கறைகளைப்  போக்க கால அவகாசம் தேவையென்பதால், அசாத்திய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறது.

மனிதர்களை குணங்களின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கும் கீதை, குண-கர்மாவின் அடிப்படையில் நான்கு விதமாகப் பிரிக்கிறது.

சத்துவ குணம் மிகுந்த பிராமணன் விகிதாச்சாரமுறையில் அந்த வர்ணத்தில் கீழ்நிலையில் இருந்தாலும், சுயமேம்பாடு என்பது அவனுக்கு மிக இயல்பாக நடைபெறும்.

சத்துவகுண தாக்கமுள்ள இரஜோகுணவாதியான க்ஷத்திரியன் தர்மநெறிகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பவன்; இருந்தாலும் வாழ்வியல் தத்துவங்கள் அவனுக்குப் புரியாத புதிராகத்தான் இருக்கும். அவை அவனுக்குப் புரிபட வேண்டுமென்றால், சுயமேம்பாட்டு உத்திகளில் அவன் கவனம் செல்லுத்த வேண்டும்.

சத்துவகுண தாக்கத்தை நிராகரிக்கத் துணியும் இரஜோகுவாதியான வைஷ்யன், மண்ணுலக வாழ்க்கைக்கு  முக்கியத்துவம் கொடுப்பவன். தர்ம நெறிகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியற்ற அவன், சுயமேம்பாட்டைப் பற்றி எப்பொழுது கவலைப்படுவான்? பூவுலகம் ஒரு புண்ணுலகம்  என்ற உண்மை அவனுக்கு என்று புரிகிறதோ, அன்றுதான் சுயமேம்பாட்டில் ஆர்வம் ஆரம்பமாகும்.

தமோகுணவாதியான சூத்திரன் சுயமேம்பாடு என்றால் என்னவென்றே தெரியாதவன். ஒருவேளை தக்க பெரியோரின் அருள் கிடைத்து, அவரது தலைமையில் நம்பிக்கை வைத்து அவர் காட்டிய வழியில் தனது பயணத்தைத் தொடர்ந்தால், அவனது சுயமேம்பாடு அவனே அறியாமல் நடந்தேறலாம்.



51. அந்தக்கரணங்கள்

நன்கு யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய சாதனையாக இருந்தாலும், அது முதலில் தோன்றுவது மனதில்தான். (Great things are done first in mind). மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவாகவே ஆகிறான். அது எப்படி சாத்தியமாகிறது என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

வரைபடத்தைப் பாருங்கள் –--                              
              



நாம் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும், சுயமேம்பாட்டிற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், “அந்தக் கரணங்களின்” செயல்பாட்டினை நன்கு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

ஆன்மா:
     ஆன்மா என்பது மனிதனுக்கு உயிர் கொடுக்கும் இறைவனின் பிரதிநிதி. மனிதனின் எந்தச் செயலிலும் அது தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. எனவே, அதன் செயல்பாடு நமது கவனத்திற்கு தேவையில்லை.

தாக்கம்:
    மனிதனின் வாழ்நாள் முழுவதும் வெளியிலிருந்து பல்வேறு வகையான தாக்கங்கள் அவனை வந்து அடைந்து கொண்டேயிருக்கின்றன. அதே நேரத்தில் அவனுக்கு உள்ளேயும் பல்வேறு தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
     
அவன் உறங்கும் பொழுது, புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை அவன் அறிய முடியாது.  ஆனாலும், கனவுகளைத் தாண்டி ஆழ்ந்த நித்திரை ஏற்படாதவரை மனதளவில் தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

உடல்:  
        உடல் என்று சொல்லும்பொழுது, நாம் இங்கு குறிப்பிடுவது  ஐந்து புலன்களின் கருவிகளை மட்டுமே. வெளியிலிருந்து வரும் தாக்கங்களை ஐந்து புலன்களின் மூலமாக மனம் உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே, மனிதனால் அவற்றை உணர முடிகிறது. இல்லையென்றால், அந்தத் தாக்கங்கள் மனிதனை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
     
குறிப்பிட்ட பக்குவத்தைப் பெற்றுவிட்ட மனிதனுக்கோ, தாக்கங்கள் மனதை வந்து அடைந்தால் கூட, எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அது எப்படி என்று பின்னர் பார்ப்போம்.

மனம்:
      “அந்தக் கரணங்களின்” மிகவும் புதிரான பகுதி மனம் ஒன்றுதான். அது எப்படி செயல்படும் என்பது அதற்கே புரியாத ஒன்று.

வெளிவுலகிலிருந்து ஐந்து புலன்களின் கருவிகள்  மூலம்  வரும் தாக்கங்களை எதிர்கொள்வது புலன்களாக இருந்தாலும், அவற்றை உள்வாங்கிக் கொள்வது மனம் மட்டுமே. அந்த மனம் அதற்குத் தயாராக இல்லையென்றால் அவனது மனம், புத்தி இரண்டிலும்  எந்தப் பதிவும் ஏற்படுவதில்லை.

மீண்டும் வரைபடத்தைப் பாருங்கள். மனதை ஒட்டி  நிறைய கோடுகள்; தொடர்கோடுகள் மனிதன் அவனுக்குள் ஏற்படுத்தும்   பதிவுகளைக் குறிப்பது; இடைவெளி விட்டு செல்லும் கோடுகள், தான் பெரும் தாக்கத்திற்கு மனிதன் திரும்பச் செய்யும் தாக்கத்தைக் குறிப்பது.

புறவுலகிலிருந்து வரும் தாக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் மனம், அந்தத் தாக்கத்தை விரும்பினால், உணர்ச்சி பெட்டகத்தில் ஒரு பதிவினை ஏற்படுத்துகிறது. மனம் விரும்பும் பொழுது, இப்படி பல பதிவுகள் உணர்ச்சி பெட்டகத்தில் இடம் பெறுகின்றன. வெளி உலகிலிருந்து வரும் தாக்கங்களினால் மனம் பரபரப்பு அடையும் பொழுது, அந்த பதிவுகளே அவன் திருப்பித்தரும் தாக்கங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

புறவுலகிலிருந்து வரும் தாக்கத்தை உள்வாங்கி அதனைப் பரிசீலனை செய்யும் மனம், கூடவே அந்தத் தாக்கத்தைப் புத்திக்கும் அனுப்பிவைக்கிறது.

புத்தி:
   எந்தவொரு தாக்கமும் மனதை வந்தடைந்தால், மனம் பரபரப்பு அடையாத வரையில், அந்தத் தாக்கம் புத்தியையும் சென்று அடைகிறது. அந்தத் தாக்கம் தேவையென புத்தி நினைக்கும் பட்சத்தில், அறிவு பெட்டகத்தில் ஒரு பதிவு நிகழ்கிறது. அதுவே பின்னர் ஞானமாக உருவெடுக்கக் காரணமாகவும்  இருக்கிறது.

ஆழ்மனம்:  
      உணர்ச்சிப் பெட்டகத்தில் ஏற்படும் பதிவுகள், அதனை ஒட்டி அவனால் செய்யப்படும் காரியங்கள் நாளடைவில் பழக்கமாகி பின் அவனது  ஆழ்மனதில் பதிவாகி, அவனது “வாசனா”வாக (குணம்) மாறுகிறது. “வாசனா”வைப் பொறுத்தே ஒரு மனிதனின் சுபாவமும், மனோபாவமும் அமைகின்றன. .

ஆழ்மனதில் இருக்கும் குணமும், மனோபாவமும், ஒரு மனிதனுக்கு உள்ளிருந்தே தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் உள்ள பிரச்னை:

மனம் உணர்ச்சி வசப்படும் பொழுது, அவனது மனதிற்கும், புத்திக்கும்  உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது. அதனால், மனிதன் பரபரப்போடு  செயல்படும் பொழுது, அவனது அறிவு பயன்படாமல் போய்விடுகிறது.  

மனம் பரபரப்பு அடையாமல் இருந்தால், வெளியில் இருந்து வரும் தாக்கத்தை புத்திக்கு அனுப்பி, புத்தியின் கட்டளையைப் பெற்று, அதனைப் பொறுத்து வெளிவுலகில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உணர்ச்சி பெட்டகத்தில் உள்ள சுபாவம் விரைவில் மாறும் தன்மை உடையது; ஆனால், ஆழ்மனதில் பதிவான குணம் நீடித்து நிற்பது.

உணர்ச்சி பெட்டகத்திலிருந்து வரும் தாக்கமும், மனோபாவம் மூலமாக ஏற்படும்  தாக்கமும் ஒன்றுக்கொன்று மாறுபடும் பொழுது மனிதன் குழப்பம் அடைந்து விடுகிறான்.

குழப்பம் அடையும் நேரங்களில், மனிதன் புத்தி சொல்வதைக் கேட்டு நடந்தால், பிரச்னைகளைத்  தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், மனம் பரபரப்பு அடையும் பொழுது, மனம், புத்தி இரண்டிற்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறதே! அதற்கு என்ன செய்வது?           

மனிதனின் “வாசனா” பெட்டகம் நிர்மலமாக இருக்கும்பொழுது, அவன் குண, கர்மாவைக் கடந்த ஞானியாகி விடுகிறான். அவனால் ஆன்மாவின்  ஒளியை உணர முடிகிறது.

அது முடிகின்ற காரியமா என்றால் .நிச்சயம் முடிகின்ற காரியம்தான். மன உறுதியும் முயற்சியும் இருந்தால் எல்லோராலும் முடிகின்ற காரியம்தான்.



52. அந்தக்கரணங்களின் செயல்பாடு  -– பொதுவான விதிமுறைகள்

மனிதனின்  “அந்தக்கரணங்கள்” எப்படி செயல்படுகின்றன என்று பார்த்தோம்.

மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டுமெனில், அந்தக்கரணங்களின் செயல்பாட்டில் உள்ள  பொதுவான    விதிமுறைகளை அவன் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.  அவை – -


   ஒரு மனிதனின்  சுயமேம்பாட்டிற்கு, பிறர் வழிகாட்டலாமே தவிர, வேறு எந்த வகையிலும் உதவ முடியாது.

  மனிதனக்குள்ளும் அவனது மனம் ஒத்துழைக்காவிட்டால் எந்த மேம்பாடும் இருக்காது.
   
   புறவுலக தாக்கங்களை மனம் உள்வாங்கிக் கொள்ளாதவரை, அந்தத் தாக்கங்களினால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    மனம் மூலமாக உணர்ச்சி பெட்டகத்தில், “நான், எனது” என்று பற்று கொண்டு பதிவுகள் ஏற்படுவதால், சுபாவம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.

  புத்தியினால் ஏற்படும் பதிவுகள் பற்றற்றவை. அதனால், அந்தப் பதிவுகளினால் மனிதனுக்கு மனிதன் மாறுபாடு இருப்பதில்லை.

  மனம் பரபரப்பு  அடையும் பொழுது அவனது செயல்கள் யாவும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த நேரத்தில் அவனது புத்தியே அவனுக்கு உதவ முடியாது. அப்படியானால் மற்றவர்களின் புத்தியினால் எப்படி உதவமுடியும்?

  அறிவுக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும், அறிவுக்குக் கட்டுப்படாமல் நடந்தாலும், எந்தவொரு செயலும்  முதலில் அரங்கேறும் இடம் மனம்தான்.

   மனம் மூலமாக ஏற்படும் பதிவுகள் மேன்மையடைய, மேன்மையடைய அவனது வர்ணப்பிரிவும் மேன்மை அடைகிறது.

  வர்ணப்பிரிவில் கீழ்நிலையில் இருக்கும் போது, ஒரு மனிதனின் உணர்ச்சி பெட்டகத்திற்கும், அறிவு பெட்டகத்திற்கும் இடையில் உள்ள தடுப்புச் சுவர் மிகவும் கனமாக இருக்கிறது.

  அவன் வர்ணப்பிரிவில் மேலே செல்லச்செல்ல இடையில் உள்ள தடுப்புச் சுவர் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, முடிவில் காணாமல் போய்விடுகிறது.

   அந்த நிலையில், மனிதனின் உணர்ச்சி, அறிவுடன் இரண்டறக்  கலந்து விடுகிறது. அதன்பின், அவனிடம் இருப்பது உணர்ச்சிகள் அல்ல; உணர்வுகள் மட்டுமே.

  பற்றில்லாமல் செய்யும் காரியங்கள் புதிய பதிவினை ஏற்படுத்தாது. அத்துடன் “வாசனா”வில் ஏற்கனவே இருந்தப் பதிவுகளும் ஒவ்வொன்றாக அழிந்துவிடுகின்றன.

  பற்றை விட்டவனிடம் “நான், எனது” என்ற எண்ணம் மறைந்து போகிறது. “தன்னை” மறந்த மனிதன் ஞானியாகிறான். “மனம் இறக்க, ஞானி பிறக்கிறான்” என்பது இதனால்தான்.

  பற்றை விட்டவனை ‘வெப்பம், குளிர்; இன்பம், துன்பம்; வெற்றி, தோல்வி” என்று எதுவுமே பாதிப்பதில்லை. நல்வினை, தீவினை என்று எதுவுமே அவனுக்குக் கிடையாது.

     மனிதனின் வர்ணப்பிriவு நான்குதான் என்றாலும், ஒரே வர்ணத்திலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் குணத்திற்கும், மனோபாவத்திற்கும் ஏற்ப அவற்றின் விகிதாச்சாரம் மாறுபடும்.

  ஒரு மனிதனின் வர்ணம் அவனது குணம், மனோபாவம் இவற்றின் அடிப்படையிலேயே அமைகிறது. ஆனாலும், உணர்ச்சி பெட்டகத்தில் அன்றாடம் ஏற்படும் பதிவுகளைப் பொறுத்து மற்ற வர்ணங்களுக்குரிய தாக்கங்களும் ஏற்படலாம். அவை பழக்கத்துக்கு வந்து, “வாசனா” பெட்டகத்தில் பதிவாகாதவரை பிற வர்ணத்தாக்கங்கள் நிரந்தரமற்றவையே.

   மனிதனின் உயர்விற்கு மனம், புத்தி இரண்டுமே முக்கியம். என்றாலும், அவை இருக்குமிடம் உடலில் அல்லவா? எனவே மனிதன், சுய மேம்பாட்டிற்காண முயற்சியில் ஈடுபடுவதற்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம்.

  ஆன்மா உடலுக்குள்தான் இருக்கிறது; ஆனால் தனித்து இருக்கிறது. உடலில் உள்ள இயக்கத்திற்கு அது ஆதாரமாக இருந்தாலும், எதனுடனும் அதற்கு பந்தம் கிடையாது. மனிதனின் எந்த இயக்கமும் அதனைப் பாதிப்பதில்லை; அதுவும் மனிதனின் எந்த இயக்கத்தையும் பாதிக்காது




53. நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு

“நோக்கம், செயல், விளைவு, பின்விளைவு”    இவற்றை சுய மேம்பாட்டிற்கு எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்பதற்கு முன், இவை எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

நோக்கம்:
          நாம் எந்தக் காரியத்தை செய்தாலும், அதற்கு ஒரு காரணம் இருக்குமல்லவா? அதைத்தான் நோக்கம் (Motive) என்று சொல்கிறோம். நோக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காரியம் ஆற்றும் எண்ணம் மனிதனுக்குத் தோன்றுவதில்லை. அம்மாதிரி காரியம் ஆற்றும் எண்ணத்தை தோற்றுவிப்பதில் “உணர்ச்சி” பெட்டகத்திற்கும், “வாசனா”வின் காரணமாக எழும் மனோபாவத்திற்கும் பெரும்பங்கு உண்டு.

செயல்:
     செயலில் இரண்டு வகை உண்டு. ஒன்று பிறர் சொல்லி நாம் செய்வது, மற்றொன்று நமக்கு நாமே ஆணையிட்டுக்கொண்டு செய்வது. சுயமேம்பாட்டில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இரண்டாவதை மட்டுமே.

விளைவு:
     செயல் நிகழ்காலம் என்றால், நோக்கம் என்பது இறந்த காலம், விளைவு என்பது எதிர்காலம்.

    நோக்கம் என்பது நமக்குள் நாம் செய்யும் பதிவுகளின் சங்கமத்தின் காரணமாக வருவது. செயல் என்பது அவற்றின் எதிரொலி. இரண்டுமே நம் கையில் உள்ளது. ஆனால் நாம் செய்யும் செயல்களின் விளைவு எப்படி இருக்கும் என நம்மால்  உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், அது நாம் விரும்பிய படியும் இருக்கலாம்; வேறு வகையிலும் இருக்கலாம். ஒரே செயலுக்குப் பல வகையான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

பின்விளைவு:
    நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் அதற்கு ஒரு விளைவு இருக்கும். நாம் செய்யும் செயலால் ஏற்படும் விளைவின் காரணமாக வரும் பின்விளைவு நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதனை ஆராய வேண்டியது நமது கடமை.

நோக்கம், செயல், விளைவு மூன்றிலும் காலவித்தியாசம் இருப்பதால், விளைவு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே ஊகிக்கவும் முடியாது.
மூன்றிலும் முறையான இணக்கம் இருந்தால், நாம் எண்ணியபடியே எல்லாம் நடக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

விளைவு நம் எண்ணத்திற்கு மாறாக இருந்து, அதனால் ஏற்படும் பின்விளைவு நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால், நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  (ஒருவேளை  ‘பின்விளைவுஎந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால், அந்த மனிதன் சுயமேம்பாட்டை மறந்துவிட வேண்டியதுதான்).

நமது செயலால் வெளிப்படும் விளைவு தவறாக இருந்தால், அதற்குக் காரணம் நமது நோக்கமா அல்லது செயலா என்று பார்க்கவேண்டும்.

நோக்கம் சரியாக இருந்து, செயல் தவறாக இருந்தால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வாழ்க்கை என்பதே ‘அனுபவதாரா’தானே! தவறான செயலால் நேர்ந்த அனுபவத்தின் காரணமாக, அடுத்தமுறை சரியாகச் செயல்படலாம். தவறு வந்துவிடுமே என்று பயந்து செயல்படாமல் இருந்தால்,  சுயமேம்பாடு தடைப்பட்டு விடும்.

நோக்கமே தவறெனத் தெரிந்தால், அங்குதான் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். தவறான நோக்கம் உருவாகக் காரணமாக இருந்த பதிவின் ஆணிவேரைக் கண்டுபிடித்து, அதனை உடனடியாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் சுயமேம்பாடு   தடைப்படுவது மட்டுமல்ல, அதில் பின்னடைவும் ஏற்படும்.

சுயமேம்பட்டு உத்தியில், தவறான செயலை சரிசெய்வதை விட, தவறான நோக்கத்தை  சரிசெய்வது தான் பிரதானமாக இருக்கிறது.

நமது தவறைப் புரிந்து கொண்டபின், நாம் செய்யவேண்டியவை

அகத்தாய்வு:
     எப்பொழுது நம் செயலால் வரும் பின்விளைவு நமக்குள் ஒரு    தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அப்பொழுது நமக்குள்ளேயே ஆராயவேண்டும். நமக்குள் நாம் ஏற்படுத்தியிருந்த பதிவுகளை நன்கு ஆராயவேண்டும். மிகவும் நிதானமாக, பதட்டமில்லாமல் ஆராயவேண்டும். அந்த வேலையை மனம் தானே செய்யாமல் புத்திக்குக் கொடுத்துவிட வேண்டும்.

கண்டுபிடித்தல்
     புத்தி நிதானமாக  ஆராய்ச்சி (அகத்தாய்வு) செய்து எந்தப் பதிவில் தவறு நேர்ந்துள்ளது என்று கண்டுபிடிக்கவேண்டும். அந்தத் தவறான பதிவுக்குக் காரணமாக இருந்தது, புறவுலகப் பொருளா அல்லது அதனுடன் நாம் வைத்திருந்த தொடர்பா   என்பதனையும் கண்டுபிடிக்க வேண்டும்.

நிராகரிப்பு:
            புறவுலகப் பொருளோ அல்லது அத்துடன் ஆன நம்முடைய  தொடர்போ  எதுவானாலும் சரி, தவறான பதிவிற்குக் காரணமாக இருந்தது எதுவெனக் கண்டுபிடித்தவுடன், உடனே அதனை நிராகரித்து விட வேண்டும். ஒத்தி போட்டுவிட்டால், நிராகரிக்கும் எண்ணம் மறைந்து போகும் வாய்ப்பு உண்டு.

புதிய சேர்க்கை:
     நாம் நிராகரித்த ஒன்று எதுவாக இருந்தாலும் அதனை அனுபவிக்க அல்லது புதுப்பிக்க ஒரு நேரம் ஒதுக்கியிருப்போம். அந்த நேரத்தை, கண்டிப்பாக ஒரு பயனுள்ள அனுபவத்திற்காக ஒதுக்கவேண்டும். எந்தக் காரணத்தை  கொண்டும் மறக்கக்கூடாத விஷயம் இது.



54. இன்பமும், அமைதியும்

மனித வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துவிடவேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், உண்மையான இன்பம் எதில் இருக்கிறது?

ஐம்புலன்களின் உதவியுடன், புறவுலகப் பொருட்களோடு இன்பம் கொள்வது ஒருவகை. ஆனால், எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும், அதனுடன் நமக்குள்ள தொடர்பு கூடக் கூட, அதனை அனுபவிக்கும்  பொழுது ஏற்படும் இன்பத்தின் அளவு குறைந்துகொண்டே போகிறது. நாளடைவில் இன்பம் அளிப்பதற்குப் பதிலாக, அதுவே நமக்குப் பலவித சங்கடங்களையும் உண்டு பண்ணுகிறது.

இன்னொரு வகை இன்பம் உண்டு. மற்றவர்களுக்காக நாம் சில காரியங்களைச் செய்யும் பொழுது, அதனால் அவர்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து,  நாம் இன்பம் கொள்வது.

முதலில் சொன்ன இன்பம் சிறிது நேரமே நீடித்து நிற்பதோடு, மீண்டும், மீண்டும் இன்பம் துய்ப்பதற்கான காரியத்தில் ஈடுபடுத்தி, முடிவில் வேதனைக்கும் வழிவகுக்கும்.

இரண்டாவது வகை இன்பமோ, நம்மை பரவசத்தில் ஆழ்த்தி, நீண்ட காலம் நம் நினைவில் நிற்கும். ஆனாலும் இவ்வகை இன்பங்கள் நமக்குள் ஒருவகை இறுமாப்பை வளர்க்கவும் வாய்ப்புகள் உண்டு.

இவை இரண்டிலும் சேராத மூன்றாவது வகை இன்பம் ஒன்று உண்டு. அது நிலையான இன்பத்தைத் தருவதோடு, பூவுலக வாழ்க்கையையே சொர்க்கமாக மாற்றிவிடும். அது என்ன?

இன்பத்திற்கு எதிர்ப்பதமாக எதனைச் சொல்கிறோம்? துன்பம் என்றுதானே சொல்கிறோம். இதனையே ‘இன்பம் = துன்பம் இல்லை’ என்றும் சொல்லலாம் அல்லவா? துன்பம் இல்லாத நிலையில் மனம் எப்படி இருக்கும்? அமைதியாகத்தானே இருக்கும்? ஆக,

           இன்பம்                         =    துன்பம் இல்லை

           துன்பம் இல்லை               =    மன அமைதி

                      ஃ மன அமைதி     =    இன்பம்

எவ்வளவு எளிதாக இருக்கிறது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இது முடியுமா?

முடியும், ஒரே ஒரு பேருண்மையை உணர்ந்தால் - - அது   

ஆசை கொண்ட மனம்  -  அது
அவதிகளின் களம்;

அமைதி கண்ட மனம்  -  அது
ஆனந்தத்தின் வசம்.


அனுபவித்தால் மட்டுமே தெரியும் உண்மை இது. சொல்லப்போனால், சுயமேம்பாட்டின் உச்சக்கட்ட குறிக்கோளே இதுதான்.