மழலையின் கீதை .. பாகம் 5
பொருளடக்கம்
55. ஞானம் எனும் நெருப்பு
56. ஞானத்திற்கான பாதை
57. நீரில்லாத ஆறு
58. சச்சிதானந்தம்
59. இருள்சேர் இருவினைகள்
60. தன்முனைப்பு
61. வளர்ச்சியும், மலர்ச்சியும்
62. யான், எனது
63. நான் யார்?
64. இந்த நானும், அந்த நானும்
65. பந்தம்
66. நாமும், நமக்கான பாதையும்
67. மார்க்கமும், யோகமும்
68. பக்தி மார்க்கம்
69. கர்ம மார்க்கம்
70. தியான மார்க்கம்
71. ஞான மார்க்கம்
72. ஞான மார்க்கம் – பாதை 1
73. ஞான மார்க்கம் – பாதை 2
74. ஞான மார்க்கம் – பாதை 3
75. ஞான மார்க்கம் – பாதை 4
76. விழிப்புணர்வு
77. பலூனும் புல்லாங்குழலும்
78. நன்றியுரை
.................................................................
பாகம் V … ஞானம்
55. ஞானம் எனும் நெருப்பு
“ஞானம் என்ற நெருப்பு சகல
கர்மங்களையும் எரித்துவிடும்” என்று சொல்கிறார் கிருஷ்ணன். இதனைக் கொஞ்சம் விரிவாகப்
பார்க்க வேண்டும்.
‘கர்மங்கள்’ என்று சொல்லும் பொழுது வெறுமனே செயல்கள் மட்டுமல்ல,
மனதிலிருந்து எழக்கூடிய எண்ணங்களையும்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஞானம் என்ற நெருப்பு செயல், எண்ணம் மட்டுமின்றி, நம்மிடம் உள்ள
அஹங்காரத்தையும் முற்றிலுமாக அழித்துவிடும்.
எல்லாம் சரி; நாம் ‘ஞானத்தை’ நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை
எப்படித் தெரிந்து கொள்வது?
ஒரு பூந்தோட்டத்தை நெருங்கும் பொழுது மலர்களின் வாசத்தை உணர்வது போல,
அருவிக்கரையை நெருங்கும் பொழுது அருவி
விழுவதின் சத்தத்தைக் கேட்பது போல, சில அறிகுறிகளைக் கொண்டு நாம் ஞானத்தின்
பாதையில் முன்னேறுவதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒருசில அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்: -
பற்றின்மை
நாணுடைமை (humility)
உள்ளார்ந்த அமைதி
உடைமைத்தனமின்மை
தனிமையை விரும்புதல்
எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை
எதிர்கொள்ளும் எதனையும் இறைவனின் பிரசாதமாக
ஏற்றுகொள்ளுதல்
இணக்கமாகவும், இளக்கமாகவும் நடந்து கொள்ளுதல்
‘கர்த்தா’ என்ற நிலையிலிருந்து விடுபடுதல்
விருப்பு-வெறுப்பு போன்ற இருமைகளில் இருந்து விடுதலை
இந்த அறிகுறிகளில் சிலவற்றையாவது நாம் பெற்றிருப்பதாக உணர்ந்தால்,
நாம் ஞானத்தின் பாதையில் முன்னேறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஞானம் அடைவதற்கான பாதை ஒன்றா
அல்லது பல பாதைகள் உண்டா?
பல பாதைகள் என்றால், நமக்கான பாதை எது? அதை எப்படித்
தெரிந்து கொள்வது?
பாதை மட்டும் தெரிந்தால் போதுமா? அதில் எப்படி பயணம் செய்வது என்று
தெரிய வேண்டாமா?
முதலில் தெரிய வேண்டியது நாம் யார்? நமக்கான பாதை எது? என்பதுதான்.
அதனைத் தெரிந்துகொண்ட பின்னர்தான் பயணம் செய்வதைப் பற்றி முயற்சி செய்ய வேண்டும்.
56. ஞானத்திற்கான பாதை
ஞானம் பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும், பொதுவாக மக்கள்
பயன்படுத்துவது நான்கு வழிகளைத்தான். அவை - -
1
ஞான மார்க்கம்
கர்ம மார்க்கம்
பக்தி மார்க்கம்
தியான மார்க்கம்
.
இந்த நான்கு மார்க்கங்களில் நமக்கு உரிய மார்க்கம் எது என அறிந்து கொள்வது மிகவும்
முக்கியம்.
அதற்கு நாம் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். நாம் யார்
என்பதை அறிந்து கொண்டால்தான் நமக்கான பாதை எது என்பது புலப்படும்.
நாம் யார் என்பதையும், நமக்கான பாதை எது என்பதையும் அறிந்து
கொண்டபின், நமக்கான பாதையில் எப்படி பயணம் செய்ய வேண்டும் என்றும் புரிந்து
கொள்ளவேண்டும்.
பலரும் ஞானம் பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால் தமக்கான பாதை எது
என்று தெரியாமலும், தெரிந்தாலும் சரியான வகையில் பயணம் செய்கிறோமா என்பது
புரியாததாலும், தமது குறிக்கோளை அடைய முடியாமல் தவித்து, முடிவில் கடவுளையே குறை
சொல்லும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.
57. நீரில்லாத ஆறு
நதியில் தண்ணீர் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, அதனை ஆறு என்று
சொல்கிறோம். ஆற்றில் தண்ணீர் இல்லையென்றால், அந்த நேரத்தில் தண்ணீர்
ஓடிக்கொண்டிருந்த இடத்தை பார்த்தால், அந்த இடத்தை என்ன பெயர் சொல்லி அழைப்போம்? ஆற்றுப்படுகை
என்றுதானே.
அந்த ஆற்றின் கரைகள் இரண்டும் நீக்கப்பட்டுவிட்டால், அப்பொழுது அதனை
என்னவென்று சொல்வோம். அதுவும் பூமியின் ஒரு பகுதிதானே.
ஆற்றின் கரைகள் இல்லாதிருந்தால் (அதுவும் பூமியின் மேல்தான்
இருக்கிறது), அப்பொழுது அந்த இடத்திற்கு ஆறு என்ற பெயர் இருக்குமா?
ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஒரு பகுதிதான். ஆற்றுக்கு கரை இருப்பது
போல, ஜீவாத்மாவைச் சுற்றி ஒரு மாயத்திரை இருப்பதால் அதனைத் தனியாக பிரித்துப்
பார்க்கிறோம்.
அந்த மாயத்திரையை இல்லாமல் செய்வது நமது கையில் இல்லை. ஆனால் அது
இல்லாமல் போகவேண்டுமென்றால், அதன்மேல் எந்தவித அழுக்குகளும் இல்லாமல்
செய்யவேண்டியது நமது கடமை. அதை நாம்தான் செய்ய வேண்டும். மற்றவர்கள் யாரும் நமக்கு
உதவி செய்ய முடியாது; அவர்களால் நமக்கு வழி மட்டுமே காட்ட முடியும்.
58. சச்சிதானந்தம்
‘சத்’, ‘சித்’, ‘ஆனந்தம்’ என்ற மூன்று வார்த்தைகளின் கூட்டு
வார்த்தையே ‘சச்சிதானந்தம்’ என்பது.
‘சத்’ என்பது எப்போதும் உள்ளது என்பதைக் குறிக்கிறது. அதற்கு கடந்த
காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் கிடையாது.
‘சித்’ என்பது பரமாத்மாவின் ஒரு பகுதியான ஜீவாத்மாவைக் குறிக்கிறது.
பரமாத்மாவின் ஒரு பகுதி மாயத்திரையால்
சூழப்பட்டு நமது உடலுக்குள் இருந்து கொண்டு நமது இயக்கத்திற்கு சக்தி
கொடுக்கிறது என்றால், அதுவே ‘சித்’ என்று அழைக்கப்படுகிறது.
‘சித்’ மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள மாயத்திரை இரண்டையும்
சேர்த்து ‘சித்தம்’ என்றும் சொல்வதுண்டு.
‘ஆனந்தம்’ என்பது ‘சித்’
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது
என்பதைக் குறிக்கிறது.
‘சித்’ எப்பொழுதும் ஆனந்தமாகவே இருக்கிறது என்றால், நம்மால் ஏன் அதை உணர முடிவதில்லை?
கண்ணாடியில் முகம் சரியாகத் தெரியவில்லை என்றால், கண்ணாடி அழுக்காக
இருக்கிறது என்கிறோம்.
உண்மையில் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா அல்லது கண்ணாடியில் அழுக்கு
இருக்கிறதா?
அடுத்த கேள்வி: கண்ணாடியில் அழுக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடியின்
மேல் அழுக்கு இருக்கிறதா?
அடுத்த கேள்வி: கண்ணாடியின் மேல் அழுக்கு இருக்கிறதா அல்லது
கண்ணாடியின் மேல் அழுக்கு படர்ந்திருக்கிறதா?
ஆக, கண்ணாடியில் நமது முகம் தெரியவில்லை என்றால், அதற்கு காரணமாக
இருப்பது கண்ணாடியா அல்லது அதன்மேல் படர்ந்துள்ள அழுக்கா?
கண்ணாடியின் மேல் முதலில் தூசிதான் படிகிறது. அதுவே பின்னர் அழுக்காக
மாறுகிறது. உரிய சமயத்தில் அதை துடைக்காவிட்டால் அதுவே அட்டாகவும் மாறி விடுகிறது.
கண்ணாடியின் மேல் படிந்த தூசி (அழுக்கு, அட்டு) போன்று, நமது
சித்தத்தில் உள்ள மாயத்திரையின் மேல் படர்ந்துள்ள தூசியின் காரணமாகத்தான் நம்மால்
உள்ளிருந்து வரும் ஒளியை (ஆனந்தத்தை) உணர முடிவதில்லை.
59. இருள்சேர் இருவினைகள்
புதிதாக ஓர் அணையைக் கட்டி விவசாயத்திற்காக ஓரு நீர்வழிப் பாதையை
ஏற்படுத்தும் போது என்ன நடக்கிறது?
பரந்து, விரிந்த நிலப்பகுதியில் ஒரு சிறு பகுதியை நீர்வழிப்
பாதையாக்க முடிவு செய்தால் அந்த
குறிப்பிட்ட பகுதியில் நிலத்தை வெட்டி, இருபுறமும் கரைகளை அமைக்கின்றனர். அதன்பின்
அந்த இடத்தை ஆற்றுப்படுகை என்றும், தண்ணீர் ஓடினால் ஆறு என்றும் அழைக்கிறோம்.
நீக்கமற எங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மாவின் ஒரு பகுதி,
மாயத்திரைக்குள் கட்டுப்பட்டு மனித உடலுக்குள் இருக்கும்பொழுது ஜீவாத்மா (சித்தம்)
என்றும், மாயத்திரையின் மீது பதிவுகள் ஏற்படும் பொழுது ஆழ்மனம் என்றும்
அழைக்கிறோம்.
இந்த ஆழ்மனப் பதிவுகள்தான் ஆன்ம ஒளியை உணர முடியாமல் அதனை மறைத்து விடுவதோடு, மனிதனின் மறுபிறவிக்கும் காரணமாக அமைகின்றன.
தீவினைகள் காரணமாக ஏற்படும் பதிவுகள் மட்டுமல்ல, நல்வினைகள் காரணமாக
ஏற்படும் பதிவுகளும் (கண்ணாடியின் மேல் படர்ந்த தூசியைப் போன்று) நமது ஆழ்மனதில் பரவும் இருளுக்கு
காரணமாக இருக்கின்றன.
அதனால்தான் திருவள்ளுவர் தனது குறளில் -
“இருள்சேர் இருவினையும் சேரா – இறைவன்
பொருள்சேர்
புகழ்புரிந்தார் மாட்டு” - - என்கிறார்.
60. தன்முனைப்பு
மனிதனின் ஆழ்மனப் பதிவுகளை “வாசனா” என்று சொல்கிறோம். அந்த வாசனாவின்
தன்மையைப் பொறுத்து, ஒரு மனிதனின் அஹங்காரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அஹங்காரம் என்றால் திமிர் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், இங்கு
அஹங்காரம் என்பது ஒரு மனிதனின் தன்முனைப்பை மட்டுமே குறிக்கிறது.
எங்கு தன்முனைப்பு இருக்கிறதோ, அங்கு ஆசை கண்டிப்பாக வெளிப்படும்.
அந்த ஆசையின் அளவும், தன்முனைப்பின் தீவிரத்தைப் பொறுத்து இருக்கும்.
எங்கு ஆசை இருக்கிறதோ, அங்கு அதனைத் தொடர்ந்து பயமும், கோபமும் வருவது
தவிர்க்க முடியாது.
ஆசை இருந்தால், ஆசைப்பட்ட பொருள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம்;
கிடைக்காவிட்டால் கிடைக்கவில்லையே என்ற
கோபம்.
ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ
அது தன்னைவிட்டு போய்விடுமோ என்ற பயம்; போய்விட்டாலோ
அதனால் ஏற்படும் கோபம்.
இவை அனைத்தும் ஒன்றை ஒன்று
தொடர்ந்து வரக்கூடியவை.
வரைபடத்தைப் பாருங்கள் - -
பயம், கோபம் போன்றவை எதிர்மறை உணர்ச்சிகள். இவையெல்லாம்
இருக்கக்கூடாது என்றால், அஹங்காரத்தை விட்டால்தான் முடியும். ஆனால். தன்முனைப்பு
இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு வளர்ச்சி என்பதும்
இருக்கமுடியாது. இதற்கு வழிதான் என்ன?
61. வளர்ச்சியும், மலர்ச்சியும்
அஹங்காரம் (தன்முனைப்பு) ஒரு மனிதனுக்குத் தேவையா என்று கேட்டால்
பதில் சொல்வது கடினம். ஏனெனில் - -
“அஹங்காரம் இல்லாமல் வளர முடியாது;
அஹங்காரம் இருந்தால் மலர முடியாது”.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், தன்முனைப்பு
மிகவும் அவசியம்; தன்முனைப்பு இல்லையென்றால் அவனால் முனைப்புடன் செயலில் இறங்க
முடியாது. முனைப்பு இல்லாத செயல் நாம் ஆசைப்படும் விளைவை கொடுக்காது.
தன்முனைப்பு ஆசையைத் தூண்டக்கூடியது; அதே நேரம் தன்முனைப்பு உள்ள
மனிதனிடம் அமைதியை எதிர்பார்க்க முடியாது. அமைதி இல்லாத மனதில் அகமலர்ச்சி மலர
முடியாது.
ஒரு மனிதனின் ஆழ்மனதில் உள்ள வாசனா பதிவுகள் அனைத்தும்
அழிந்துவிடும்பொழுது மட்டுமே, அந்த மனிதன் தனது சித்தத்தின் உள்ளே இருக்கும்
ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
மலர்ச்சி என்று சொல்லும்போது, நாம் வாசனாவில் உள்ள பதிவுகளின்
நீக்கத்தையே மனதில் கொள்ளவேண்டும்.
அமைதி தரும் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதன்
மட்டுமே ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடமுடியும். மற்றவர்கள் முயற்சி
செய்தாலும், அதில் வெற்றி பெறுவது கடினம்.
62. யான், எனது
“யான்எனது
என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்”. – - திருவள்ளுவர்
தன்முனைப்பு, செருக்கு (திமிர் என்றும் சொல்லலாம்) இரண்டிற்கும் இடையே
என்ன வித்தியாசம்?
ஒரு மனிதன் தன்முனைப்புடன் செயலில் இறங்கும்பொழுது, அதன் விளைவாக
பொன், பொருள் என்று சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். அவனது வாழ்க்கைத் தரம் உயர
ஆரம்பிக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்கமுடிந்ததன் காரணமாக அவனுக்கு தன்னை நினைத்தே
ஒரு பெருமிதம் வந்து விடுகிறது. அது தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அதன்கூடவே,
அவனையும் அறியாமல் ஒரு விதமான செருக்கும் வந்து விடுகிறது.
‘நான்’ மற்றும் ‘என்னுடைய’
என்னும் இந்த உணர்வுகளே மனிதனின் அமைதி குலைவதற்கு காரணமாகின்றன.
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மனிதன் பாடுபடுவதில் தவறு இல்லை;
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதனால் ஏற்படும் சுகத்தை அனுபவிப்பதிலும் தவறு இல்லை.
ஆனால் ‘என்னுடைய’ என்ற உடைமைத்தனத்திலிருந்து அவன் விடுதலை ஆகாத வரை அவனால்
அமைதியும், அதனால் வரும் ஆனந்தத்தையும் உணர முடியாது.
‘நான்’, ‘எனது’ என்ற
இந்த இரண்டு கட்டுகளிலிருந்தும் விடுபடுவது, ஞானம் அடைய விரும்பும் மனிதனுக்கு
மிகவும் அவசியம்.
63. நான் யார்?
ஞானம் பெறுவது எப்படி என்று பகவான் ரமண மகரிஷியிடம் கேட்டால்,
அதெல்லாம் தேவையில்லை; தனியாக அமர்ந்து ‘நான் யார்’ என்று உன்னையே கேட்டுக்கொண்டு,
விடையையும் தேடு என்று சொல்வார்.
பெரும்பாலும் ‘நாம் யார்’ என்று தெரியாமலே, நமது வாழ்நாளைக்
கழித்துவிடுகிறோம். இதில் உள்ள மறைந்திருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள சில
விளக்கங்களைப் பார்ப்போமா?
இது என்னுடைய வீடு என்று சொல்லும்பொழுது, வீடு உடைமைப் பொருளாகவும்,
நான் அதன் உரிமையாளனாகவும் இருக்கிறேன். வேறு வகையில் சொன்னால் வீடு
பார்க்கப்படும் பொருளாகவும், நான் பார்ப்பவனாகவும் இருக்கிறேன். இது என்னுடைய
உடம்பு என்றால், அதன் உரிமையாளன் யார்? அதனைப் பார்ப்பவன் யார்?
ஒரு வீடு கட்டும்பொழுது, கல், மணல், சிமெண்ட், இரும்புக் கம்பி,
மரம் இப்படி பல பொருட்களை உபயோகித்து,
முடிவில் அவை சுவராகவும், தளமாகவும், கூரையாகவும், கதவு, ஜன்னலாகவும் மாறி விடுகின்றன. ஆனால், இவற்றில் எது அந்த
வீட்டின் உரிமையாளனாக குடியிருக்கிறது? இவற்றிற்கு சம்பந்தம் இல்லாத யாரோ
ஒருவர்தானே, அந்த வீட்டில் குடியிருக்கமுடியும்?
இந்த உடம்பும் தோல், சதை, எலும்பு, இரத்தம் போன்று பல
பொருட்களால் உருவாக்கப்பட்டதென்றால், இவற்றில் எது இந்த உடலில் வசிக்க
முடியும்? வேறு ஏதோ ஒன்றுதானே இந்த உடலில் வசிக்க முடியும்?
‘நான் யார்’ என்ற கேள்விக்கான
பதில் இங்குதான் ஆரம்பமாகிறது.
64. இந்த நானும், அந்த நானும்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ‘நான்’கள் உள்ளன.
ஒன்று உண்மையான நான்; மற்றொன்று ‘நான்’ என்று நினைக்கின்ற நான் உண்மையில் நானில்லை என்பதை அறியாத நான்.
உண்மையை அறியாத நானிடம், உண்மையான நானைக் கண்டுபிடிக்க ‘நான் யார்’ என்ற விசாரத்தில் (சிந்தனையில்)
இறங்கு என்கிறார் பகவான் இரமண மகரிஷி.
ஆனால், வசதியைத் தேடி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும்
மனிதனால் முடிகிற காரியமா இது.
அந்த உண்மையான ‘நானை’ கண்டுபிடிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்,
இப்பொழுது நாம் எந்த வர்ணப் பிரிவில் இருக்கிறோம்; நமக்கான பாதை எது என்பதை அறிய
வேண்டும்.
அவற்றை அறிவதற்கு முன்னால், அந்த முயற்சியில் ஈடுபட முடியாத அளவிற்கு
நம்மைத் தடுக்கும் காரணி எது என்பதைத்
தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் காரணியை
அறிந்துகொண்டபின், அதனை நீக்கத்
தயாராக இருக்கிறோமா என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக
இல்லையென்றால், நமது முயற்சி எந்தவித பலனையும் தராது.
65. பந்தம்
‘சொந்தபந்தம்’ மற்றும் ‘பந்தபாசம்’ என்ற வார்த்தைகளைக்
கேள்விப்பட்டிருக்கிறோம். ‘சொந்தபாசம்’ என்ற வார்த்தையை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா?
மனிதன் தனக்குப் பிறந்த குழந்தையிடம் அன்பு வைப்பதோடு அதனுடன் பற்றும்
கொண்டுவிடுகிறான். அதன்பின் அவனுக்கு அந்த குழந்தையின் மீது இருப்பது அன்பு அல்ல,
ஆசை.
அதே மனிதன் தனது வீட்டிற்கு காவலாக (தேவையென எண்ணி) ஒரு நாயை
வளர்க்கிறான். எங்கிருந்தோ வாங்கியது. இருந்தாலும் நாளாக, நாளாக அவனுக்கு அதன்மேல்
பற்று வந்துவிடுகிறது. அதன்பின் அவனுக்கு அந்த நாயிடம் இருப்பது ஆசையாக
மாறிவிடுகிறது.
இந்தப் பற்றுதான், முதலில் ஆசையாகவும் பின்னர் அதுவே உயிருள்ள ஜீவனாக
இருந்தால் பாசமாகவும், பொருளாக இருந்தால்
பேராசையாகவும், பெண்ணாக இருந்தால்
காமமாகவும் மாறி விடுகிறது.
இதனைத்தான் பந்தம் என்று சொல்கிறார்கள் (இதனையே கட்டு என்றும், தளை
என்றும் சொல்வதுண்டு).
ஞான மார்க்கத்தின் வெற்றியே, இந்த பந்தத்திலிருந்து விடுபடுவதில்தான்
இருக்கிறது.
வரைபடத்தைப் பாருங்கள் - -
ஆக, மனிதனிடம் உள்ள பந்தத்திற்கு மூலகாரணமாக இருப்பது இந்த பற்றுதான்.
ஞானமார்க்கத்திற்குத் தடையாக இருப்பதும் இந்த பற்றுதான்.
“...பாசவினைகள்
பற்றது நீங்கி” - - கந்தசஷ்டி கவசம்.
“... அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு” - - திருக்குறள்
“ஆசைவலைப்
பாசத் தகப்பட்டு மாயாமல்....” – பத்திரகிரியார்
66. நாமும், நமக்கான பாதையும்
ஞானம் பெறுவதற்கு நான்கு முக்கிய வழிகள் உள்ளன என்று ஏற்கனவே
பார்த்தோம்.
இவற்றில் ஒரு வழி நமக்குரிய பாதையாக இருக்கவேண்டும். அது நமது
வர்ணப்பிரிவிற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும். வேறு பாதைகளைப் பயன்படுத்த
விரும்பினால், அது நடைமுறை வாழ்க்கைக்கு உதவி செய்வதாக இருக்கவேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு மருத்துவரை எடுத்துக்கொள்வோம். தனக்கு வருமானம்
குறைந்தாலும் பரவாயில்லை; ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க
வேண்டும் என்று செயல்படுகிறார். பொதுநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அவரை
ஒரு க்ஷத்திரியன் என்றுதான் அழைக்கவேண்டும். ஆனால், மத நம்பிக்கை உள்ளவராக
இருந்து, மாதத்தில் பத்து நாட்கள், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தால் அவரது
க்ஷத்ரிய தர்மம் என்னாவது? அவர் கடைப்பிடிக்கும் பக்தி மார்க்கம், அவரது க்ஷத்ரிய
தர்மத்திற்கு உதவியாக இருக்கவேண்டாமா?
நமது வர்ணப்பிரிவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற பாதையில் பயணத்தை
தொடங்குகிறோம் என்றாலும், அந்தப் பாதையின் அடிப்படை விதியினைத்
தெரிந்துகொள்ளவேண்டும். அவை - -
“அறிந்து வருவது
ஞான மார்க்கம்
அறியாமல் வருவது
பக்தி மார்க்கம்
அடிபட்டு வருவது
கர்ம மார்க்கம்
கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்”
67. மார்க்கமும், யோகமும்
ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்றும் சொல்வார்கள்; ஞான யோகம், கர்ம
யோகம் என்றும் சொல்வார்கள். ஏன் இந்த வித்தியாசம்?
மார்க்கம் என்பது நாம் பயணம் செய்யும் பாதையைக் குறிக்கிறது; பாதையின்
முடிவில் எல்லைக்கோட்டை அடைந்தால், மார்க்கம் யோகத்தில் முடிகிறது என்றும் சொல்லலாம். யோகம் என்ற
வார்த்தைக்கு இணைதல் (இறைவனோடு, பிரம்மத்தோடு) என்றும் சொல்வதுண்டு.
மார்க்கம் என்பது சரியான பாதையாக இருந்து, நாமும் சரியான முறையில்
நமது பயணத்தைத் தொடர்ந்தால், நாம் யோகத்தின் வழியில் இருக்கிறோம் என்றும்
எடுத்துக்கொள்ளலாம்.
நான் பக்தி மார்க்கத்தை ஒழுங்காக கடைப்பிடிக்கிறேன். நாள் தவறாமல்
கோவிலுக்கு சென்று வருகிறேன். தவறாமல் விரதங்கள், அனுஸ்டானங்கள் எல்லாவற்றையும்
கடைப்பிடிக்கிறேன். அப்படியானால் நான் பக்தி யோகத்தில்தானே இருக்கிறேன் என்று
சொல்லலாம். ஆனால் இதுவே பக்தி யோகத்தில் இருக்கிறேன் என்று சொல்வதற்கு போதுமானதாகுமா?
ஒவ்வொரு மார்க்கத்திற்கும் வேறுவேறு நெறிமுறைகள் இருக்கின்றன;
அவற்றில் சில கடைப்பிடிக்க மிகவும் எளிதானவைதான். இருந்தாலும் அவற்றை சரியாகக்
கடைப்பிடிக்காதவரையில் மார்க்கம் யோகமாக இருக்க முடியாது.
ஒவ்வொரு மார்க்கமாக பார்ப்போம்.
68. பக்தி மார்க்கம்
இருக்கும் எல்லா மார்க்கங்களிலும் மிகவும் எளிதானது பக்தி
மார்க்கம்தான். பெருவாரியான மக்கள் கடைப்பிடிக்கும் மார்க்கமும் இதுவே.
ஆனாலும், பக்தி மார்க்கத்தில் ஈடுபடும் மக்களில் பெரும்பாலோர் மனதில்
அமைதி இல்லாமல் உழன்று வருவதற்கு என்ன காரணம்? பக்தி மார்க்கத்தில் முழுமையான
ஈடுபாடு இருந்தும், அவர்களால் பற்று என்னும் தளையிலிருந்து ஏன் விடுபடமுடியவில்லை?
“பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”. - - திருவள்ளுவர்
பற்றின் காரணமாக வரும்
ஆசாபாசங்களை விடுவதற்கு, கடவுளின் திருவடியைப்
பற்றி பக்தி செய்யவேண்டும் என்கிறார்கள்.
மீண்டும் ஒருமுறை திருக்குறளைப் பாருங்கள். அதில் “பற்று விடற்கு” என்றுதான் வருகிறது; “பற்றை விடற்கு” என்று வரவில்லை. அதாவது பற்றை நாம்
துறக்க முடியாது; ஆனால் கடவுளின் திருவடியைப் பற்றினால், பற்று நம்மை விட்டுவிடும்
என்று புரிந்துகொள்ள வேண்டும்.
அதே நேரம், திருமூலர் சொல்வது வேறாக இருக்கிறது. அவர் சொல்வது -
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை
அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை
விடவிட ஆனந்த மாமே”.
பற்றின் காரணமாக வரும் ஆசாபாசங்களிலிருந்து விடுபடுவதற்கு, இறைவனின்
திருவடியைப் பற்றினால், அதுவும் ஆசையாக மாறிவிடுமே என்கிறார் திருமூலர். ஆசை
இல்லாத மனதில்தான் அமைதியும் அதனைத் தொடர்ந்து ஆனந்தமும் கிடைக்கும் என்கிறார்.
இந்தப் புதிருக்கான விடையை, ரிஷி பதஞ்சலி தருகிறார். அதற்கு அவர்
தரும் மந்திரம் “ஈஷ்வர ப்ரணிதானாத்”. அதாவது
கடவுளிடம் சரணடைவதன் மூலம் என்கிறார்.
நினைத்துப் பாருங்கள், நாம் கடவுளிடம் எதை எதையோ வேண்டுகிறோம்; ஆனால்
கடவுளிடம் சரணடைகிறோமா?
சரணடைவது என்றால் என்ன? அவர் எதைத் தந்தாலும் அதனை அவரிடம் இருந்து
வரும் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தர வேண்டும் என்று மட்டும்
வேண்டினால், அதுவே உண்மையான சரணாகதி
ஆகும்.
சரணாகதி ஒன்றே பக்தி மார்க்கம் முழுமை அடைய உதவும்.
69. கர்ம மார்க்கம்
க்ஷத்ரியன், அதாவது பொது நலனில் அக்கறை உள்ள மனிதன் மட்டுமே
கர்ம
மார்க்கத்தில் (பலனை எதிர்பார்க்காமல்) ஈடுபடமுடியும்.
பொது நலனில் அக்கறை உள்ள மனிதன் சமூகத்தில் செயல்படும் பொழுது,
அவனுக்கு பலவிதமான சோதனைகள் வர வாய்ப்புண்டு. அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு
வழிகாட்டியின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்” - - திருவள்ளுவர்
செயல், அந்த
செயல் புறவுலகில் ஏற்படுத்தும் விளைவு, அதனால் ஏற்படும் பின்விளைவு இவற்றின் காரணமாக அவன் வெளியில் ஓடும் மனதை உள்முகமாகத் திருப்பி, அகத்தாய்வில்
ஈடுபட வேண்டிவரும். விளைவு, பின்விளைவு, மனதை உள்முகமாகத் திருப்புதல்,
அகத்தாய்வு போன்ற காரியங்கள் ஒரு தொடர்
சங்கிலியாக வந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் அவனுக்குக் கண்டிப்பாக ஒரு
நல்ல வழிகாட்டியின் உதவி தேவைப்படும்.
“உற்றநோய்
நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப்
பேணிக் கொளல்” என்கிறார் திருவள்ளுவர்.
70. தியான மார்க்கம்
“கஷ்டப்பட்டு வருவது தியான மார்க்கம்” என்று முன்னர் சொல்லியிருந்தோம். அது எதனால் என்று பார்க்கவேண்டும்.
நம்மைச் சுற்றி பல இடங்களில் ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியான வகுப்புகள் நடைபெறுவதை பார்க்கிறோம். ஆனாலும் நம்மால்
உள்ளிருக்கும் மையத்தை ஏன் நெருங்கக்கூட முடியவில்லை?
ஆசனம், பிராணாயாமம் இரண்டுமே நமது உடலுக்கும், மனதிற்கும் நல்ல
பலன்களைக் கொடுக்கும். ஆனால் ஆழ்மனதில் உள்ள பதிவுகளைக் களைவதில் அவை எந்த
விதத்திலும் உதவப்போவதில்லை.
தியானத்தைப் பொறுத்தவரை அதனை
ஒரு பயிற்சியாக செய்யமுடியாது; எந்தவித முயற்சியும் இன்றி ஏகாந்தமாக இருப்பதே
தியானம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், தியான வகுப்புகள் என்று சொல்வதிலும்
ஓர் அர்த்தம் இருக்கிறது.
“அம்மா, பசிக்கிறது” என்று பையன் சொன்னால், “கொஞ்சம் பொறு, இட்லி
அவித்துத் தருகிறேன்” என்று அம்மா சொல்கிறாள். உண்மையில் அம்மா இட்லி அவிக்கிறாளா,
அல்லது இட்லிக்காக மாவை அவிக்கிறாளா? மாவுதான் அவிக்கிறாள்; இருந்தாலும் முடிவில்
அந்த மாவு இட்லி ஆகும் என்ற எண்ணத்திலேயே “இட்லி அவித்துத் தருகிறேன்” என்று
கூறுகிறார். இது நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
இதைப்போன்று, தியான நிலையை அடைவதற்கான ஒரு பயிற்சியை தருவதைத்தான்
‘தியான வகுப்புகள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் பயிற்சியை
‘தாரணை’ என்று அழைத்தால் அதுவே சரியாக இருக்கும்.
இந்த மூன்று பயிற்சிகளும் ‘தியான’ நிலையை அடைவதற்கு முழுமையாக உதவ
முடியாததற்கு என்ன காரணம்?
தியான மார்க்கத்தில் முழுமை அடைவதற்கு, ரிஷி பதஞ்சலி எட்டு படிநிலைகளை
அமைத்திருக்கிறார். அவை, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை,
தியானம், சமாதி என எட்டு படிநிலைகள்.
இவை ஒவ்வொன்றாக கடக்கப்படவேண்டியவை. சத்துவ குணம் நிறைந்த மனிதன் மட்டுமே நேரடியாக ‘தாரணை’ நிலைக்குப் போகமுடியும்.
ஏனெனில்
‘பிரத்யாஹாரம்’ என்பது அவனுக்கு இயல்பான ஒன்று.
ஆசனத்தையும், பிராணாயாமத்தையும் பயிற்சி செய்கிறவர்கள் தியான நிலை
வரைக்கும் போக எண்ணினால், அவர்கள் நிச்சயம்
யமம், நியமம் இரண்டையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும்.
யமம், நியமம்
என்றால் என்ன என்பதை ஒரு குறள் அழகாக குறிப்பிடுகிறது.
“செய்தக்க
அல்ல செயக்கெடும் – செய்தக்க
செய்யாமை
யானும் கெடும்”. - -
திருவள்ளுவர்
இந்த இரண்டு கட்டளைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அந்த
மனிதனால் தியான நிலையை அடைவது மிகவும் கடினம். அவனது பாதை, இலக்கை சென்று அடைய
உதவாது.
எட்டு படிநிலைகளில் ஒன்றான
‘பிரத்யாஹாரம்’ என்பது, வெளியில் ஓடும் மனதை அகத்தாய்வுக்காக உள்முகமாக
திருப்புவதையே குறிக்கிறது.
முதல் இரண்டு கட்டளைகளான ‘யமம் மற்றும் நியமம்’
ஆகியவற்றை கடைப்பிடிக்க முடியாத மனிதனால், ‘பிரத்யாஹாரத்தை’ மேற்கொள்ள முடியாது.
71. ஞான மார்க்கம்
அறிந்து வருவது ஞான மார்க்கம். ஆனால், அறிவு
பூர்வமாக ஞானம் அடைவதற்கு பல படிகள் தாண்டவேண்டி உள்ளது.
தெரிதல், அறிதல், புரிதல், தெளிதல், தெள்ளத் தெளிதல், உணர்தல் எனப்
பல நிலைகளைத் தாண்டவேண்டி உள்ளது.
தெரிந்து கொள்வது என்பது எல்லோராலும் முடிவதுதான்.
ஆனால் தெரிந்த விஷயங்களைப்
பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கு, வெறும் அறிவு மட்டும் போதாது.
விஷயங்களைப் பற்றிய உண்மைகளை பகுத்து அறிய தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கான விவேகம் இல்லையென்றால் நாம் அறிவது சரியாக இருக்காது. விவேகம் உள்ள
மனிதனும், உணர்ச்சி வசப்படுகிறவனாக இருந்தால், அவனது விவேகம் சரியான முறையில்
செயல்பட முடியாது.
அறிந்துகொண்ட உண்மைகளை நடைமுறைப் படுத்தும் பொழுதுதான், அதனால்
ஏற்படும் அனுபவங்களின் மூலமாக நமக்கு முறையான புரிதல் ஏற்படும்.
தெரிந்துகொண்ட விஷயங்களைப் புரிந்துகொண்டபின், மேலும் மேலும் கிடைக்கும் அனுபவங்களின் மூலம் நமக்கு ஒரு
தெளிவு பிறக்கும்.
தெளிந்தால் மட்டும் போதாது; தெள்ளத் தெளிய வேண்டும் என்கிறார்
திருமூலர். தெள்ளத் தெளிந்தால் மட்டுமே ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை தெரியவரும்
என்கிறார்.
“.....தெள்ளத் தெளிந்தாற்கு சீவன் சிவலிங்கம்” - - திருமூலர்.
அதாவது, ஜீவாத்மாவைப் பற்றிய உண்மை விளங்கும் என்கிறார். இதுவே
உணர்தல் எனப்படுகிறது.
ஜீவாத்மாவைப் பற்றிய உண்மைகளை அறிவையும், விவேகமான
சிந்தனையைக்கொண்டும் புரிந்து தெளிய முடியும். ஆனால், ஆழ்மனதில் உள்ள
பதிவுகள் (நல்வினைப் பதிவுகளாக
இருந்தாலும், தீவினைப் பதிவுகளாக இருந்தாலும்) இருக்கும்வரை ஞானம் பெறுவது என்பது
முடியாத காரியம்.
ஆழ்மனதில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கினால் மட்டுமே, ஞானம் கைகூடும். அதுவரை
ஞானத்தைப் பற்றிய உணர்வு மட்டுமே இருக்கும்.
ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்க, நாம் என்னன்ன செய்யவேண்டும் என்று
கீதை நெடுகிலும் நிறைய குறிப்புகள் உள்ளன.
இருந்தாலும் நாம் எந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்ந்தால் அந்த இலக்கை
அடையலாம், முடிவான இலக்கு எப்போது, எப்படி அடையப்படும் என்று ரிஷி பதஞ்சலி விரிவாக
எடுத்துரைக்கிறார்.
அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
72. ஞான மார்க்கம் – பாதை 1
ஞான மார்க்கத்தில் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது, ஆழ்மனதில்
உள்ள பதிவுகளே. ஆனால், ஆழ்மனதில் உள்ள பதிவுகளுக்குக் காரணமாக இருப்பது நமது
உணர்வு மனமே. எனவே, சுத்திகரிப்பு வேலையை முதலில் உணர்வு மனதிலிருந்தே
தொடங்கவேண்டும் என்கிறார் ரிஷி பதஞ்சலி.
உணர்வு மனதில் உள்ளவை வெறும் கடந்த கால எண்ணங்கள் மட்டுமே. அவை
நமக்கு ஏற்படும் அனுபவங்களால் மட்டும்
பெறப்பட்டவை அல்ல. நம்மை சுற்றி இருப்பவர்களால்
– நமது பெற்றோர் முதற்கொண்டு நண்பர்கள் வரை – நமக்குள் திணித்து
வைத்தவைகளும் சேர்ந்தே இருக்கும். அத்துடன், அவற்றில் பலவும் நமது உணர்ச்சிகளைத்
தூண்டுபவையாகவே இருக்கும்.
மனதில் உணர்ச்சிகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் உணர்வு மனதுடன்
ஒன்றிவிடுகிறோம். அதன்பின், உணர்வு மனம் நமக்கு எஜமானனாக
மாறிவிடுகிறது. அதனால்தான், நாம் எதிர்கொள்ளும் தாக்கங்களுக்கு உடனுக்குடன்,
சற்றும் சிந்திக்காமல், மனமே எதிர்விளைவை
உண்டுபண்ணுகிறது
ஒரு மனிதன் அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், உணர்ச்சிவசப் படுகிறவனாக
இருந்தால், அவனது மனம் புத்தியை கலந்து கொள்ளாமல்
தன்னிச்சையாக முடிவு எடுத்து, தானே ஒரு பின்விளைவை
ஏற்படுத்தி விடுகிறது.
எனவே, முதலில் உணர்வு மனதில் கடந்த காலத்தில் பதிவாகியுள்ள
எண்ணங்களில் உள்ள அசுத்தங்களை நீக்க நாம் “சவிதர்க்க சமாதியை” கடைப்பிடிக்கவேண்டும்
என்கிறார்.
“சவிதர்க்க” என்பதை பிரித்து, ‘தர்க்க’, ‘விதர்க்க’ மற்றும்
‘சவிதர்க்க’ என ஒவ்வொன்றாக அவற்றின்
பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதில், ‘தர்க்க’ என்பது விவாதத்தைக் குறிக்கிறது. விவாதம் என்பது பல
நேரங்களில் பலருடன் பல்வேறு காரனங்களுக்காக ஏற்படுகிறது. ஆனால், அது ‘விதர்க்கமாக’
இருக்கவேண்டும் என்கிறார்.
தர்க்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று ‘குதர்க்கம்’; மற்றொன்று ‘விதர்க்கம்’.
மக்கள் ‘தான்’ என்ற உணர்வோடும், உணர்ச்சி மிகுந்தும் விவாதத்தில் கலந்து கொண்டால், பெரும்பாலும் அது
‘குதர்க்கத்தில்’ தான் முடியும். அத்தகைய விவாதத்தில் ஒரு நியாயமான முடிவுக்கு வருவது மிக கடினம்.
‘விதர்க்கம்’ என்று சொல்லும்பொழுது,
விவாதத்தில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் ஒரு ஒத்திசைவு இருக்கும். அவர்கள்
விவாதத்தின் கருப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு தீர்மானமான
முடிவுக்கு வரவேண்டும் என்பதில், எல்லோருக்குமிடையே ஒரு உடன்பாட்டுத்தன்மை
இருக்கும்.
விதர்க்கத்தில் கருப்பொருள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால்,
‘சவிதர்க்கம்’ என்று வரும்பொழுது, அதிலிருந்து தனது குணத்தின் பண்புகளை எப்படி
உயர்த்திக் கொள்வது என்பது மட்டுமே ஒரு மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும்.
ஆக, சவிதர்க்கத்திற்கு உதவியாக இருப்பது நண்பர்களாக இருக்கலாம்;
சத்சங்கமாக இருக்கலாம்; ஏன், ஒரு புத்தகமாக கூட இருக்கலாம். ஆனால் நோக்கம் என்பது ஒன்றே ஒன்றுதான்; தனது குணத்தின்
பண்புகளை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதுதான் அது.
‘சவிதர்க்க சமாதி’ பாதை என்றால், அது போய்ச்சேரும் இடத்தை ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார். அந்த இடத்தை
அடைந்துவிட்டோம் என்பதை அறிந்துகொள்வதற்கு சில குறிப்புகளை தெரிந்துகொள்வோம்- -
1.
உணர்வு மனதிலிருந்து அஹங்காரம் குறையத்
தொடங்கும்.
வெளியில் ஓடி புறவுலகில் இருக்கும் ஆரவாரம், பரபரப்பு இவற்றை இரசிப்பதிலிருந்து உணர்வு மனம் விலக ஆரம்பிக்கும்.
உணர்ச்சிகளை அடக்கிவைப்பதற்கு பதிலாக, உணர்ச்சிகள் அடங்க ஆரம்பிக்கும்.
உணர்ச்சிகள் அடங்குவதன் காரணமாக, உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவெடுக்காமல்
புத்தியைக் கலந்து செயல்பட ஆரம்பிக்கும்.
உணர்ச்சியின் காரணமாக வரும் எதிர்விளைவுகள் குறைய ஆரம்பிக்கும்.
நான் என்பது மனமல்ல என்ற உண்மை புரிய ஆரம்பிக்கிறது; அதன் காரணமாக மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறோம்.
விவேகம் மிகுந்து காணப்படுவதால் பற்றற்ற தன்மை (வைராக்கியம்) வளர ஆரம்பிக்கும்.
உணர்வு மனதில் உள்ள அசுத்த எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய பதிவுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.
ஜீவாத்மாவைப் பற்றிய உணர்வே இல்லாதிருந்த மனிதன், ஆன்மாவைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறான் .
பகுத்தறியும் தன்மையில் தெளிவான பார்வை கிடைக்கும்.
வரைபடத்தைப் பாருங்கள்:-
வரை படத்தில் உள்ள ‘சவிதர்க்க சமாதி’ என்பது ஞானமார்க்கத்தில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பாதையைக் குறிக்கிறது.
அந்தப் பாதையில் மனிதன் முறையாகப் பயணம் செய்தால், அவன் சென்று அடையும் இடம் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ என்கிறார்.
யதார்த்த உலகில் வாழும் மனிதனுக்கு ‘சவிதர்க்க சமாதியில்’ ஈடுபட நேரம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். சவிதர்க்க சமாதியில் ஈடுபட நேரம் இருந்தாலும், அதில் ஈடுபடும் மனிதனுக்கு புத்தி மற்றும் பகுத்தறியும் தன்மை முழுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.
மற்றவர்களுக்கு ஞானம் பற்றிய மெய்ப்பொருளை அடையவேண்டும் என்கின்ற ஆர்வம் தீவிரமாக இருந்தால், தகுந்த சான்றோரை நாடித் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பல நேரங்களில் நாம் யாரை நாடிச் செல்கிறோமோ, அவருக்கு அதற்குரிய தகுதி இல்லாதிருக்கலாம். ஆனால், அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல், நமக்கு நிறையப் பாடம் எடுப்பார்கள்.
‘குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவீழு மாறே” - - திருமூலர்
சம்பிரஞ்ஞாத சமாதி நிலையை அடைந்த மனிதனுக்கு நிறையவே குழப்பங்கள் வரும். ஏனெனில், அவனது உணர்வு, உணர்வுமனதிலிருந்து நகர ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் ஆன்மாவைப் பற்றிய முழுமையான தெளிவு இல்லாததால் அவனுக்குப் பல இடத்திலிருந்தும் நெருக்கடிகள் வரும். தனது பயணத்தின் அடுத்தடுத்த பாதைகளை அவன் தைரியமாக தொடரவேண்டும். இல்லையேல் நிலைகுலைந்து போகும் வாய்ப்பு உண்டு.
தன்மீதும், தனது முயற்சிகளின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு
பயணத்தைத் தொடரவேண்டும்.
“தானே தனக்குப் பகைவனும் நட்டானும்;
தானே தனக்கு மறுமையும் இம்மையும்;
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்;
தானே தனக்கு தலைவனும் ஆமே” - - திருமூலர்
இதற்கு, அறத்தின் இயல்பை அறிந்து சிறந்த அறிவுடையவரது உறவைத் தேடி தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்”. - - திருவள்ளுவர்
73. ஞான மார்க்கம் – பாதை 2
மனிதன் ‘சம்பிரஞ்ஞாத சமாதி’ நிலையை அடையும்பொழுது, அவனது மனம் புத்தியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்ள
ஆரம்பிக்கிறது. அத்துடன் அவனது அஹங்காரம் குறையக்
குறைய, அவன் புறவுலகின் யதார்த்த நிலைகளைப் புரிந்துகொண்டு அதனுடன்
இசைவாகவும், இணக்கமாகவும் நடந்துகொள்ள
ஆரம்பிக்கிறான்.
ஒவ்வொரு நிகழ்வுகளையும் பகுத்தறிவின் துணையுடன் தர்க்கம் செய்வதிலிருந்து விலக ஆரம்பித்துவிடுகிறான். எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்வதை விட்டுவிடுவதால், அவனது மனதில் உணர்ச்சிகள் பொங்கிப் பெருகுவது நின்றுவிடுகிறது. மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் குறைய ஆரம்பிக்கிறது.
சவிதர்க்க சமாதியின் காரணமாக, அவனுக்குள் வாழ்வியல் உண்மைகளைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக சவிதர்க்க சமாதியிலிருந்து விடுபட்டு, ‘நிர்விதர்க்க சமாதியில்’ நுழைந்துவிடுகிறான்.
‘நிர்விதர்க்க சமாதியில்’ தர்க்கம் நின்றுவிடுகிறது. அகத்தாய்வில் கவனம் செலுத்துகிறான். ஆனாலும், அந்த அகத்தாய்வு அவன் மனதில் சேகரித்து வைத்திருக்கும் எண்ணங்களின் அடிப்படையிலேயே இருக்கும். அந்த எண்ணங்களோ பல பேரிடம் இருந்து வாங்கியவைகள்; அவற்றில் அவர்களது சொந்தக் கருத்துகளும் இடம் பெற்றிருக்கும்.
கடன்வாங்கிய எண்ணங்களாக இருந்தாலும், புறவுலகில் செயல்படுவது
குறைந்து, அகத்தாய்வில் நாட்டம் அதிகமாவதால்
நாளடைவில் அவனது மனம், அவனையும் அறியாமலே புத்தியின் கட்டுப்பாட்டுக்குள்
வந்துவிடுகிறது. மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால், அதனை
‘ஒருங்கிணைந்த மனம்’ என்றும் சொல்லலாம்.
சுத்தமான எண்ணங்களால் அவனது மனம் நிரம்பி இருந்தாலும், புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அதனால் தன்னிச்சையாக இயங்க முடியாது. அது பதிவுகள் இருந்தும் இல்லாதது போல ஆகிவிடுகிறது. மனம் புத்தியுடன் தன்னை இணைத்து கொள்ளும் நிலையில் அது ‘அசம்பிரஞ்ஞாத சமாதி’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவனது மனம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு குழப்பம்
அடைகிறது. மனதில் ஏற்படும் குழப்பங்களையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ள அவன்
கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் அவனால் அடுத்த
பாதைக்குள் நுழைய முடியும்.
74. ஞான மார்க்கம் – பாதை 3
‘அசம்பிரஞ்ஞாத சமாதி’ அடைந்த மனிதனின் மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. அவனது உணர்வு மனதில் சுத்தமான எண்ணங்கள் மட்டுமே இருக்கும் என்றாலும், ஒருவகையில் அவை அசுத்தமான எண்ணங்களே. ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை மற்றவர்களிடமிருந்து இரவலாகப் பெற்றவை.
‘அசம்பிரஞ்ஞாத சமாதி’ நிலையை அடைந்த மனிதனுக்கு ஒரு தவிர்க்க முடியாத குழப்பம் வரும். அதுவரை அவனது உணர்வு மனம் தன்னிச்சையாக முடிவு எடுத்தது. அத்துடன் அது எடுக்கும் முடிவுகளில் பெரும்பாலானவை ஆழ்மனதால் தூபம் போடப்பட்டதாக இருக்கும்.
இப்பொழுதோ அது புத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஆழ்மனதில் இருந்து வரும் ஆலோசனைகளை அதனால் நிறைவேற்ற முடியாது; ஏனெனில் புத்தியிலிருந்து வரும் ஆலோசனைகள் வேறுவிதமாக இருக்கும்.
ஒரு இரண்டும்கெட்டான் நிலையில் இருக்கின்ற காரணத்தால், மனதில் குழப்பங்கள் உருவாகும். மேலும், அவனது மனமும் செயல்படும் (active) நிலையிலிருந்து செயல்பட விரும்பாத தன்மைக்கு (un-active) மாறிக்கொண்டிருக்கும்.
செயல்பட விரும்பாத தன்மையில், மனம் அமைதியாக இருக்கும்பொழுது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மனிதன் ‘சவிசார சமாதி’ என்னும் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கவேண்டும்.
‘விசாரம்’ என்பது சிந்தனையைக் குறிக்கிறது. இந்த சிந்தனை ஆராய்ச்சி செய்யும் பாவனையுடன் இருக்கவேண்டும். மேலும் இந்த சிந்தனையில் எந்த விதமான உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
உணர்வு மனம் முன்னால் செய்த சிந்தனைகளுக்கும், இப்பொழுது நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனைகளுக்கும் வித்தியாசம் உண்டு.
முன்பு நாம் உணர்வு மனதில் சேகரித்து வைத்திருந்த எண்ணங்களின் அடிப்படையில் நமது சிந்தனை இருந்தது. அந்த எண்ணங்கள் நம்முடையதாகவும் இருக்கலாம்; பிறரிடமிருந்து வாங்கியவையாகவும் இருக்கலாம்.
இப்பொழுது செய்யப்படும் சிந்தனையோ நமக்குள்ளேயே வாழ்வியல் புதிர்களுக்கு விடை தேடும் விதமாக இருக்கும். உணர்வு மனதில் இருந்த சலனங்கள் பெருமளவில் குறைந்திருப்பதால், நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறது.
நம்மால் தெளிவான முடிவிற்கு வரமுடியாத போது, சான்றோரிடமோ அல்லது சத் சங்கங்களில் கலந்தோ தெளிவு பெற முடிகிறது.
விசாரத்தில் நமது சிந்தனைக்குத் தேவையான கருப்பொருள் புறவுலகில் இருந்து மட்டுமல்ல, ஆழ்மனதில் இருந்தும் பெறப்படுகிறது.
விசாரத்தில் தெளிவு கூடக் கூட, அதுவே ‘சவிசாரமாக’ மாறிவிடுகிறது. அதாவது ஆழ்மனதில் உள்ள அசுத்தமான பதிவுகளும் ஒவ்வொன்றாக வெளியேறிவிடுகிறது. சுத்தமான பதிவுகள் மட்டுமே அதில் உள்ளன.
‘சவிசார சமாதி’ எனும் பாதையில் பயணம் செய்தால், பாதையின் முடிவில்
அவன் அடையும் இடம் ‘சபீஜ சமாதி’.
‘சபீஜ சமாதி’ நிலையை அடைந்த மனிதனிடம் அஹங்காரம் (தன்முனைப்பு)
பெருமளவில் குறைந்துவிடுகிறது. “தான்” என்கிற உணர்வு மறைந்து “தன்னைப்” பற்றிய
நினைவு மட்டும் இருக்கிறது.
75. ஞான மார்க்கம் – பாதை 4
‘சபீஜ சமாதி’ நிலையில் மனிதனுக்கு இன்னமும் சிந்தனை புறவுலகப் பொருட்கள், அவற்றால் ஆழ்மனதில் ஏற்படும் அனுபவங்கள் இவற்றை நோக்கியே இருக்கும். மெய்ப்பொருள் பற்றிய உண்மையை அறிந்திருந்தாலும், அவனால் சிந்தனையிலிருந்து விடுபட முடிவதில்லை.
‘நிர்விசார சமாதியின்’ பாதையில் அவன் பயணத்தை ஆரம்பித்தவுடன், சிந்தனை இல்லாமல் பொருட்களைப் பார்க்கக் கற்றுக் கொள்கிறான். புலன்களின் உதவியின்றி அறிந்துகொள்ளும் திறனில் அவன் மேன்மை அடைகிறான்.
வாழ்க்கையில் அவன் செயல் புரிந்தாலும், செயல் புரியாவிட்டாலும் அனைத்தையும் சாட்சி பாவத்துடன் பார்க்க ஆரம்பிக்கிறான்.
சாட்சி பாவத்திற்கு வந்தவுடன், அவனுக்கு தியான நிலை இயல்பாகவே கைகூடிவரும். மனதில் எந்த எண்ணமும் இல்லாமல், அவனால் தியானத்தில் இருக்கமுடிகிறது.
“எண்ணமில்லாத நிலையே உண்மையான தியானம்”
எண்ணம் பற்றிய எண்ணமும் இல்லாத நிலையில், அவன் ‘நிர்பீஜ சமாதி’ என்ற இலக்கை வந்தடைகிறான்.
பேரண்டத்துடன் அவனுக்கு ஓர் ஒத்திசைவு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு பேருண்மையும் அவனுக்குப் புரிகிறது. அது - - -
“இது இல்லாத போது, அது இருக்கிறது”
வரைபடத்தைப் பாருங்கள்:-
‘நிர்பீஜ சமாதி’ நிலையை அடைந்தவுடன், உள்ளிருந்து வரும் இறையருளை உணரத்தொடங்குகிறான்.
76. விழிப்புணர்வு
நாம் பார்ப்பது எதுவாக இருந்தாலும், அது பொருளாக இருக்கும்; அல்லது பொருளில் இருந்து வந்ததாக இருக்கும்,
‘இருட்டு’ என்பது பொருளா அல்லது பொருளிலிருந்து வந்ததா? இரண்டுமே இல்லை.
மாலை நேரம் வந்ததும் கிழக்கிலிருந்து மேற்காக இருட்டு பரவுகிறது. ஆனால் நமது வீட்டில், விளக்கு எரிந்துகொண்டிருந்தால், அந்த இருட்டு நமது வீட்டிற்குள் வருவதில்லை. நமது வீட்டை கடந்து சென்றாலும்கூட, அதனால் நம் வீட்டிற்குள் நுழைய முடிவதில்லை.
நாம் ‘இருட்டு’ என்று நடைமுறை பழக்கத்தில் சொல்வதாக இருந்தாலும், உண்மையில் அது வெளிச்சத்தின் இல்லாமையே.
ஒரு மனிதன் ஞான நிலை அடையும்பொழுது, அதனை ‘விழிப்புணர்வு’ (வித்யா) என்று சொல்வார்கள்.
விழிப்புணர்வு இல்லாதபோது, அதனை விழிப்புணர்வின்மை (அவித்யா) என்று சொல்வார்கள்.
நாம் உபயோகிக்கும் பல பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் நாம் அவற்றை ஏன் உபயோகிக்கிறோம்? உடல்நலத்திற்கு கேடு என்ற உண்மை தெரிந்தும், அவற்றை உபயோகிப்பதைத்தான் விழிப்புணர்வின்மை என்கிறோம்.
“எல்லாம் அவன் செயல்” என்று நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொண்டால், அது விழிப்புணர்வுதான். நாம் விரும்பாத ஒன்று நடக்கும்பொழுது, நாம் வருந்துகிறோமே; அதற்கு என்ன பெயர்?
77. பலூனும், புல்லாங்குழலும்
ஞானம் பெறுவது முதல்படி என்றால், விழிப்புணர்வு ஞானத்தின் பாதையில் கடைசிப்படி என்று சொல்லலாம்.
விழிப்புணர்வு பற்றி அறிந்துகொண்டவர்கள், உண்மையிலேயே விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார்களா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
பலூன், புல்லாங்குழல் இரண்டுமே காற்றில் இயங்குவதுதான். ஆனாலும், அவற்றிற்கிடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
பலூனில் காற்று அடைக்கப்பட்டால், அது தன் விருப்பம்போல் பறக்க ஆரம்பித்துவிடும். ஒரு நூலில் அதை இணைத்தாலும், அந்த நூலையும் சேர்த்து இழுத்துக்கொண்டு பறக்கும்.
புல்லாங்குழலும் காற்றில் இயங்குவதுதான். இருந்தாலும் அது தன்னிச்சையாக வாசிப்பதில்லை. அதற்கு, அதனை எடுத்து வாசிப்பதற்கு, வேறு ஒருவர் வேண்டும்.
நாம் பலூனாக இருக்கிறோமா அல்லது புல்லாங்குழாக இருக்கிறோமோ? புல்லாங்குழலாக இருக்கிறோம் என்றால், நாம் நம்மை அவன் கையில் ஒப்படைத்துவிடவேண்டும். நாம் கருவி, அவன் இசைப்பவன் என்றாகிவிடவேண்டும்.
நம்மை இசைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவனது விருப்பம். கருவியே வேண்டாம் என்று நினைத்தாலும், அதுவும் அவனது விருப்பமே. பலூனாக இருக்கும் நாம், எப்பொழுது புல்லாங்குழலாக மாறுகிறோமோ, அன்றுதான் விழிப்புணர்வு என்றால் என்னவென்றும், அதனால் வரும் ஆனந்தத்தையும் புரிந்துகொள்வோம்.
78
நன்றியுரை
இதுவரை இதனுடன் பயணித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இந்திய வேதங்கள் ஒரு மாபெரும் பாற்கடல். வேதவியாசர் அருளிய பகவத்கீதையோ ஒரு அமுதக் கலசம்.
அதில் இவன் பருகியது ஒரு துளி மட்டுமே. அதுவே இவன் திகட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. அதனைச் சுவைக்கக் கற்றுத் தந்தவர் ‘ஸ்வாமி சின்மயானந்தா’ அவர்களே.
எந்த மழலையும் தான் புதிதாக கற்றுக் கொண்டதை மற்றவர்களிடம் சொல்லிக்காட்டத் துடிக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது, அதற்கே உரிய கூச்சத்துடன், தனக்குத் தெரிந்ததை சொல்லிக்காட்டும். அந்த மழழையின் கூற்றில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், நாம் அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவோம்.
இவனது குழந்தைத்தனமான கூற்றிலும் பல குறைகள் இருக்கலாம்; இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள். ஏனெனில்,
இது ஒரு “மழலையின் கீதை”
நன்றியுடன்,
பித்தன்