Sunday, 30 October 2022

மெய்ஞானப் புலம்பல்

     

   மெய்ஞானப் புலம்பல்


ஆங்கார இருளகற்றி
ஆணவத்தின் பிறப்பகற்றி
ஓங்கார நாதங்கள்
உரைத்திருப்ப தெக்காலம்?
.....     ....‌.    .....     .....     .....

மாயாப் பிறப்பறுத்து
மன்னன் திருவடிகள்
சேய்தாய் அணைத்தாற்போல்
சேர்த்தணைப்ப தெக்காலம்?

சேய்தாய் அணைத்தாற்போல்
சேர்த்தணைத்து மகிழ்வதற்கு
பேய்போல் மனக்குரங்கை
பெயர்த்தொழிப்ப தெக்காலம்?

பேய்போல் மனக்குரங்கை
பெயர்த்தொழித்து கொல்வதற்கு
தாய்போல் தாரத்தை 
தரம்பிரிப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....
பாழும் பூவுலகில்
பாவியென ஆகாமல்
சூழும் மயக்கங்கள்
தூரநிற்ப தெக்காலம்?

சூழும் மயக்கங்கள்
தொடர்ந்துவந்து சுற்றாமல்
நாளும் உன்பாதம்
நான்தொழுவ தெக்காலம்?

நாளும் உன்பாதம்
நான்தொழுது அழுதாலும்
வீழும் நாள்வருமுன்
வினையறுப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

நீங்கா துனைனினைத்து
நின்னருளைப் பெறுவதற்கு
ஏங்கா துள்ளமதை
எதிர்கொள்வ தெக்காலம்?

ஏங்கா துள்ளமதை
எதிர்கொண்டு செல்வதற்கு
தூங்கா நிலைமறந்து
துயரறுப்ப தெக்காலம்?

தூங்கா நிலைமறந்து
துயரறுத்து வாழ்வதற்கு
தீங்கா செயல்மறந்து
செயல்படுவ தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

முக்களையின் பொருளறிந்து
முகக்களையின் அருளறிந்து
தெற்கலையின் நாயகனை
சேர்ந்தடைவ தெக்காலம்?

தெற்கலையின் நாயகனை
சேர்ந்தடைந்து பணிவதற்கு
இக்கலையில் நானடைந்த
இடரறுப்ப தெக்காலம்?

இக்கலையில் நானடைந்த
இடரறுத்து சாய்ப்பதற்கு
பொய்க்கலையை வேரறுத்து
புகலடைவ தெக்காலம்?
.....    .....    .....    .....    .....

பெண்ணென்று பாராமல்
பேதைமனம் துள்ளாமல்
புண்ணென்று புறவாழ்வை
புரிந்துகொள்வ தெக்காலம்?

புண்ணென்று புறவாழ்வை
புரிந்துகொண்டு வாழ்வதற்கு
விண்ணென்று எனக்கென்று
வினையறுப்ப தெக்காலம்?

விண்ணென்று எனக்கென்று
வினையறுத்து தீர்வதற்கு
கண்ணென்று உனையெண்ணி
களிபுரிவ தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

சொல்லாத சொற்களெல்லாம்
சொல்லுவதை விட்டுவிட்டு
பொல்லாத மனக்குரங்கை
பொய்த்திருப்ப தெக்காலம்?

பொல்லாத மனக்குரங்கை
பொய்த்திருக்க வைத்துவிட்டு
கல்லாத நூல்கற்று
கண்சொரிவ தெக்காலம்?

கல்லாத நூல்கற்று
கசிந்துருகி யெங்குமிணை
இல்லாத திருவடிகள்
எண்ணுவது மெக்காலம்?
.....     .....     .....     .....     .....     

பட்டுவிடும் பாண்டமிதை
பார்த்துநிதம் பாவித்து
கெட்டுவிடும் முன்னுன்னை
கிட்டுவது மெக்காலம்?

கெட்டுவிடும் முன்னுன்னை
கிட்டியே மகிழ்வதற்கு
சுட்டுவிடும் எண்ணங்கள்
சுட்டிருப்ப தெக்காலம்?

சுட்டுவிடும் எண்ணங்கள்
சுட்டிருக்கச் செய்வதற்கு
மொட்டுவிடும் ஆசைகளின்
மொட்டழிப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

உள்ளம் உருகிநின்று
உன்னினைவாய் ஆவதற்கு
கள்ளம் கருகிநிற்கும்
கருத்தறிவ தெக்காலம்?

கள்ளம் கருகிநிற்கும்
கருத்தறிந்து கொள்வதற்கு
பள்ளம் மேடென்று
பகுத்தறிவ தெக்காலம்?

பள்ளம் மேடென்று
பகுத்தறிந்து பார்ப்பதற்கு
தெள்ளத் தெளிவாக
சிந்திப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....     

பாவியவன் என்றழைத்து
பாரிலுள்ளோர் இகழாமல்
தாவியவன் தாள்பணிந்து
தவமுடிப்ப தெக்காலம்?

தாவியவன் தாள்பணிந்து 
தவமுடித்து ஓய்வதற்கு
மேவியசீர் மேதினியில்
மெய்யறிவ தெக்காலம்?

மேவியசீர் மேதினியில்
மெய்யறிவு கொள்வதற்கு
ஏவியதோர் வாழ்க்கையிதை
எடுத்தெறிவ தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

மலரிடத்தே ஊடுருவி
மலர்துறக்கும் காற்றேபோல்
மனத்திடையே ஊடுருவி
மனந்துறப்ப தெக்காலம்?

மனத்திடையே ஊடுருவி
மனந்துறக்கக் கற்றாலும்
மனையிடத்தே ஊடுருவி
மனைதுறப்ப தெக்காலம்?

மனையிடத்தே ஊடுருவி
மனைதுறக்க கற்றாலும்
சினையிடத்தே ஊடுருவும்
வினைதுறப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

பிறப்பும் இறப்புமற்ற
பெருவெளியில் பிறப்பதற்கு
இறக்கும் இப்பிறப்பின்
பிறப்பறுப்ப தெக்காலம்?

இறக்கும் இப்பிறப்பின்
பிறப்பறுக்கக் கற்றாலும்
திறக்கும் மணிக்கதவம்
திறந்திருப்ப தெக்காலம்?

திறக்கும் மணிக்கதவம்
திறந்து விரிந்தாலும்
சிறக்கும் சீர்வளங்கள்
துறந்திருப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

பற்றும் ஆசைகளைப்
பற்றுவதை விட்டுவிட்டு
முற்றும் முதல்வனையே
முன்னினைப்ப தெக்காலம்?

முற்றும் முதல்வனையே
முன்வைத்துப் பார்ப்பதற்கு
தொற்றும் துயரங்கள்
தூரவைப்ப தெக்காலம்?

தொற்றும் துயரங்கள்
தொடராத நிலையதற்கு
சுற்றும் மயக்கங்கள்
துறந்திருப்ப தெக்காலம்?
.....     ..‌‌‌‌‌...     .....     .....     .....

மண்ணுலகம் பொன்னுலகம்
மாதரென்ற நிலைமறந்து
விண்ணுலக நாயகனை
வியந்துநிற்ப தெக்காலம்?

விண்ணுலக நாயகனை
வேண்டிநிதம் வியந்திருக்க
புண்ணுலகம் புரிந்துகொண்டு
புள்பறப்ப தெக்காலம்?

புண்ணுலகம் புரிந்துகொண்டு
புள்பறக்கும் நாள்வருமுன்
தன்னுலகம் தான்மறக்கும்
தயைபெறுவ தெக்காலம்?
.....     .....     ..‌‌...     .....     .....

ஆடுகின்ற பட்டமொன்று
அறுந்துவிழக் கண்டபின்னும்
ஓடுகின்ற பாழ்மனது
ஒடுங்குவது மெக்காலம்?

ஓடுகின்ற பாழ்மனது
ஓடாமல் ஒடுங்கிநிற்க
கூடுகின்ற பேய்க்குணங்கள்
குறைந்தொழிவ தெக்காலம்?

கூடுகின்ற பேய்க்குணங்கள்
குறைந்தொழியக் கண்டாலும்
தேடுகின்ற நாயகனைத்
தெரிந்துகொள்வ தெக்காலம்?
.....     .....     .....     .....     .....

தன்னவன் தன்னில்
தான்மயக்கம் கொள்ளாமல்
தென்னவன் தன்னில்
சிந்தைவைப்ப தெக்காலம்?

தென்னவன் தன்னில்
தெவிட்டாத சிந்தைவைத்து
கண்ணவன் தன்னில்
களித்திருப்ப தெக்காலம்?

கண்ணவன் தன்னில்
களிநடனம் கொண்டுநிதம்
பண்ணவன் தன்னில் 
பணித்திருப்ப தெக்காலம்?
.....     .....     .....     .....     .‌‌‌‌‌....

பொருள்தேடி புண்பட்டு
பொய்யுலகில் வாழாமல்
இருள்தேடும் தீவினைகள்
இனிமறப்ப தெக்காலம்?

இருள்தேடும் தீவினைகள்
இனியென்றும் மறந்திருக்க
அருள்தேடி அன்புற்று
அகமகிழ்வ தெக்காலம்?

அருள்தேடி அன்புற்று
அகமகிழ்ந்து என்றும்திரு
வருள்தேடி வழிபட்டு
வயப்படுவ தெக்காலம்?
.....     .....     .....     .....     ...‌..

No comments:

Post a Comment