உண்மை கசக்கும்
"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு" .. குறள் 190
***************************
"நோய்நாடி நோய் முதல் நாடி.." என்கிறார் வள்ளுவர்.
ஒரு நோய் வந்தால், அதற்கு மருந்து கொடுத்து நோயை குணப்படுத்துகிறோம். அது மட்டும் போதுமா?
அந்த நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்து அது மீண்டும் வராமல் தடுக்க வேண்டாமா?
ஒருமுறை RSS நண்பரிடம் பேசும்போது "பகுத்தறிவு என்ற பெயரில் 'சனாதன தர்மத்தையும், வர்ணாஸ்ரம தர்மத்தையும்' தவறாகச் சித்தரித்து பிரச்சாரம் செய்கிறார்களே? அதைத் தடுக்க வேண்டாமா?" என்றேன்.
அவர் கூறிய பதில் .. "நாங்கள் மதத்தில் தலையிடுவதில்லை". எனக்கு இந்தப் பதிலைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது.
சமீபத்தில் BJP கட்சியைச் சார்ந்த நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் BJP கட்சியின் சார்பாகப் போட்டியிட்டவர். அவரிடம் "சனாதன தர்மம் என்றால் என்ன? வர்ணாஸ்ரம தர்மம் என்றால் என்ன?" என்று கேட்டேன். அவர் தெரியாது எனக் கூறினார்.
"இந்துத்வா" கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என்று கூறுகிறோம்; ஆனால், சனாதன தர்மம் பற்றியும், வர்ணாஸ்ரம தர்மம் பற்றியும் எதுவும் தெரியாது என்றால் என்னவென்று சொல்வது?
BJP தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறது. ஆனால், பல வருடங்களாக RSS இங்கு இருப்பது உண்மைதானே!?
பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்துவரும் தவறான பிரச்சாரத்தை,
முறியடித்திருக்க வேண்டாமா?
"சனாதன தர்மம், வர்ணாஸ்ரம தர்மம்" இரண்டுமே இந்து மதத்தில் உள்ள வார்த்தைகள்தான். ஆனால், இந்த இரண்டு வார்த்தைகளும் கூறும் மெய்ப்பொருள் மதம் சம்பந்தப்பட்டதா அல்லது ஆன்மிகம் சம்பந்தப்பட்டதா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
இந்தியாவின் உயிர்நாடி "ஆன்மிகம்". ஆன்மிகம் இல்லாத இந்தியாவை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. இந்த உண்மையை உணராத எந்த அரசியல் கட்சியும் இங்கு வேரூன்றி வளர முடியாது.
எல்லா மத நூல்களிலும் ஆன்மிகக் கருத்துக்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் அவை மிக மிக அதிகமாக உள்ளன. காரணம் இங்கு பல சமயங்களும், பல மொழிகளும் உள்ளன; எனவே நம்மால் நிறைய ஆன்மிகக் கருத்துக்களை இங்கு காண முடியும்.
சமய நூல்களில் மட்டுமல்ல; அவற்றிற்கு அப்பாலும் ஆன்மிகக் கருத்துக்கள் நிறைய உள்ளன.
ஆன்மிகக் கருத்துக்கள் என்று எவற்றைச் சொல்ல முடியும்? எவையெல்லாம் மனிதனிடம் நல்ல சிந்தனைகளை வளர்க்கின்றனவோ, எவையெல்லாம் மனிதனின் பண்புகளைச் செம்மைப் படுத்த உதவுகின்றனவோ, அவையெல்லாம் ஆன்மிகக் கருத்துக்களே.
இவற்றைச் சொல்பவன் இறை நம்பிக்கை உள்ளவனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அவன் நாத்திகனாகவும் இருக்கலாம்.
பெரும்பாலான சமய நூல்களில் பக்தி, ஆன்மிகம் இரண்டும் கலந்திருப்பதால், நம்மால் பிரித்தறிய முடியவில்லை. நமக்கு எது தேவை என்பதும் தெரிவதில்லை.
ஆன்மிகம் பற்றித் தெளிவானப் புரிதல் உள்ளவனே, ஜனநாயக நாட்டில் சிறந்த அரசியல்வாதியாக செயல்பட முடியும். அதனால்தான் நமக்குத் தேவை "ஆன்மிக அரசியல்" என்கிறோம்.
அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் ஆன்மிகம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று சொல்ல முடியுமா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
இந்தத் தொடர் மதம் சம்பந்தப்பட்டது அல்ல; ஆன்மிகம் சம்பந்தப்பட்டதா என்றால், அதுவும் அல்ல. இது மனித நேயம் சம்பந்தப் பட்டது.
ஆன்மிகம் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம். அந்தத் தத்துவங்களை மத நம்பிக்கை உள்ளவன், மத நம்பிக்கை இல்லாதவன் என யார் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்.
அவற்றிற்கான விதிகள் ..
1. அவை மனித நேயத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
2. எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.
3. எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
4. எல்லா மதத்தினரும் கடைப்பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
சில விதிகள் மனிதனின் பண்பு (மனோபாவம்) எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பன.
(உ.ம்.) யாதும் ஊரே, யாவரும் கேளிர் .. கணியன் பூங்குன்றனார்.
சில விதிகள் மனிதனின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பன.
(உ.ம்.) It is better to wear out than to rust out .. Richard Cumberland.
(துருப்பிடித்துப் போவதை விட தேய்ந்து போவது மேல்)
(தொடரும்)
உண்மை கசக்கும்
இந்திய சமய நூல்கள் இறைவனை/இறைசக்தியை உணர நான்கு மார்க்கங்களை வலியுறுத்துகின்றன.
இவற்றில் கர்ம மார்க்கம் மற்றும் தியான மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள், பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் கவனம் செலுத்தாமல் கூட தங்கள் மார்க்கத்தைப் பின்பற்ற முடியும்.
பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களும், ஞான மார்க்கத்தில் ஈடுபடுபவர்களும் இறைவனை அல்லது இறைசக்தியை நினைக்காமல் இருக்க முடியாது. அதனால்தான் பக்தி எது, ஆன்மிகம் எது என்பதில் குழப்பங்கள் வந்து விடுகின்றன.
'பக்தி மலர்' என்பார்கள்; அதில் ஆன்மிகக் கருத்துக்கள் இடம் பெறும். 'ஆன்மிக மலரில்' பக்தி சம்பந்தமானப் பதிவுகள் இருக்கும்.
இவர்களில் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் இறைவனைப் போற்றிப் பாடுதல், இறை வழிபாடு, சமயம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றில் அக்கறை காட்டுவார்கள்.
ஞான மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள் அகத்தாய்வில் ஈடுபட்டு ஆன்மிகக் கருத்துக்களை உள்வாங்கி வாழ்வியல் நெறிகளைப் புரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.
சமய நூல்களில் உள்ள சில கருத்துக்கள்/பாடல்கள் பக்தியை வலியுறுத்தும், சில
வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும், சில நம்மை சிந்திக்கத் தூண்டும் என மூன்று விதமாகப் பிரித்தறியலாம்.
வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும் தத்துவங்களை ஆன்மிகம் என்ற பெயரில் அழைக்கிறோம்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றால், அது ஆன்மிகக் கருத்துதான். ஆனால், ஆன்மிக நெறிகளைக் கடைப்பிடிக்காத மனிதன் இதைச் சொல்லலாமா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
ஆன்மிகம் சொல்லும் வாழ்வியல் நெறிகளைத் தெரிந்து கொண்ட அனைவரையும் 'ஆன்மிகவாதிகள்' என்று சொல்ல முடியுமா?உண்மையான ஆன்மிகவாதி எப்படி நடந்து கொள்வான்?
அவனிடம் இருக்கும் சில முக்கிய பண்புகளைப் பார்ப்போம்:-
1. அவனது அஹங்காரம் நலிவடைந்து காணப்படும்.
2. அவன் உணர்ச்சி வசப்பட மாட்டான்.
3. மத உணர்வு இருக்கும்; ஆனால், மதவெறி இருக்காது.
4. மனிதநேயம் மிகுந்து காணப்படும்; எனவே அவனது செயல் கருணையுடன் கூடியதாக இருக்கும்.
5. அவனது வாழ்க்கை "அகழ்வாரைத் தாங்கும் நிலம்" போன்று இருக்கும்.
6. அவனுக்கு கடந்த காலம், எதிர் காலம் இரண்டும் கிடையாது; இருப்பது நிகழ் காலம் மட்டுமே.
7. தன்னை ஒரு 'கர்த்தா' என்று நினைத்தவன், இப்பொழுது தான் ஒரு 'கருவி' மட்டுமே என நினைப்பான்.
8. மனதில் எந்தவித சலனமும், சஞ்சலமும் இருக்காது.
இத்தகைய மனிதர்களை "குணமென்னும் குன்றேறி நின்றார்" என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
வாழ்வியல் நெறிகளைத் தெரிந்து கொண்ட மற்றவர்கள்!?
(தொடரும்)
உண்மை கசக்கும்
வாழ்வியல் நெறிகளைத் தெரிந்து கொண்ட மனிதன் சத்துவ குணம் கொண்டவனாக இருந்தால், அகத்தாய்வில் ஈடுபடுவான்.
வாழ்வியல் தத்துவங்களைப் புரிந்து கொள்வதில் ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்தாலும், தயக்கமின்றி தனது முயற்சியைக் கைவிட மாட்டான். முடிவில் வெற்றியும் பெறுவான்.
ஆனால், ரஜோ குணம் கொண்ட மனிதன் வாழ்வியல் தத்துவங்களைப் புரிந்து கொள்வதில் பல தடங்கல்களைச் சந்திக்க நேரிடும். அவற்றின் உண்மைத் தன்மைகளை அறியுமுன் நிறைய கசப்பான அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடும்.
வாழ்வியல் தத்துவங்களைத் தெரிந்து கொண்டவன், அவற்றின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அவனுக்கு இரண்டு விதமான 'அறிதல்' தேவைப்படும்.
முதலில் அவன் புத்தியின் துணைகொண்டு உண்மைகளை அறிந்து கொள்கிறான். பிறகு அவன் அவற்றை செயல்படுத்தி விளைவுகளை அனுபவிக்க வேண்டும். அனுபவங்களை எதிர்கொள்ளும் போது, உண்மையான அறிதல் உண்டாகும்.
எனவே, அவனைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பது "அறிந்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்து அறிய வேண்டிய" ஒன்று.
அந்தப் பாதையில் சோர்வடைந்து திரும்பிவிட்டால் அவனது வாழ்க்கை கேலிக்குறியதாக மாறிவிடும்.
இனி கசப்பான உண்மைகளைப் பார்ப்போம்.
(தொடரும்)
உண்மை கசக்கும்
நம்மை யாராவது ஏமாற்றினால், நீதி மன்றத்தை நாடி நியாயம் கேட்க முடியும்.
பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து நமது வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நம்மை ஏமாற்றினால், நம்மால் என்ன செய்ய முடியும்? அதற்காக அடுத்த தேர்தல் வரும்வரை புலம்பிக் கொண்டு இருக்க வேண்டுமா?
இந்த ஏமாற்று வேலை நடக்காமல், அதனைத் தவிர்க்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்க வேண்டாமா?
கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு, அவற்றைப் பின்பற்றினால் மிக எளிதாக இத்தகைய ஏமாற்று வேலையைத் தடுத்து விடலாம்.
விதிமுறைகள்:-
1. ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஆட்சியில் அமர்ந்து தான் செய்ய விரும்பும் திட்டங்களை இரண்டு பகுதிகளாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
2. பகுதி 1-ல் 'ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற இருக்கும் வாக்குறுதிகள்' இடம் பெற வேண்டும். அதில் எந்தவித நிபந்தனைகளும் இருக்கக்கூடாது.
(உ.ம்.) மத்திய அரசு ஒத்துழைத்தால், மாதந்தோறும் 25 கிலோ அரிசி எல்லாக் குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப் படும்.
இதில் 'மத்திய அரசு ஒத்துழைத்தால்' என்ற நிபந்தனை இடம்பெறக் கூடாது.
3. பகுதி 2-ல் எதிர்காலத்தில் செய்ய விரும்பும் திட்டங்கள் இடம்பெற வேண்டும்.
4. பகுதி 1-ஐ ஒரு பிரமாணப் பத்திரமாக எழுதி கட்சியின் தலைவர் கையொப்பமிட்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே, அந்த வாக்குறுதிகளைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் புதிய வாக்குறுதிகளை, தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பிரச்சாரம் செய்யக்கூடாது.
5. குறிப்பிட்ட கட்சி ஆட்சியில் அமர்ந்து 15 நாட்களுக்குள் பகுதி 1-ல் குறிப்பிடப் பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
6. வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் அந்த ஆட்சி கலைக்கப் படும்.
7. தேர்தலில் அந்தக் கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற அனைவரும் அவர்களது பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
8. குறிப்பிட்ட கட்சி அடுத்து வரும் பொது தேர்தலில் பங்கேற்க முடியாதபடி தடை செய்யப் படும்.
9. உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கியபின், அந்தந்தத் தொகுதிகளில் தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்திருந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுவார்கள்.
10. அதன்பின் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும்.
11. மேலே சொல்லப்பட்ட அனைத்து விதிகளும் புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிக்கும் பொருந்தும்.
இந்த விதிகளைத் தேர்தல் ஆணையம் அமுல்படுத்தினால் நன்றாக இருக்கும். இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என எண்ணுகிறேன். ஏனெனில், தேர்தலை நடத்தும் பொறுப்பு ஆணையத்திடம்தான் உள்ளது. அதனால் தேவையான விதிகளை அது அமைத்துக்
கொள்ளலாம்தானே!?
(தொடரும்)
உண்மை கசக்கும்
"இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட.."
.. பரிசுத்த வேதாகமம் -எஸ்தரின் சரித்திரம் -- அதிகாரம் 1.
நமது தேசத்தைதான் 'இந்து தேசம்' என வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கட்டும்.
நமது தேசத்தில் யாரையெல்லாம் "இந்துக்கள்" என அழைக்கலாம் என்பதிலேயே நிறைய குழப்பங்கள் உள்ளனவே!?
இந்தியாவில் தோன்றிய மதங்களைச் சார்ந்த அனைவரும் "இந்துக்களே" என்பது எனது கருத்து. இதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்களா என எனக்குத் தெரியாது.
ஆனால் ஆதீனம் உட்பட பலரும் "நாங்கள் சைவர்கள், எங்கள் சமயம் சைவம்", ஆனால் நாங்கள் இந்துக்கள் இல்லை எனக் கூறுகிறார்கள்.
ஒருபுறம் இது "இந்து தேசம்" எனப் பலரும் அறைகூவல் விடுகிறார்கள்; இன்னொரு புறம் யாரெல்லாம் "இந்துக்கள்" என்பதே அதிகார பூர்வமாக வரையறுக்கப்படாமல் இருக்கிறது.
இந்தக் குழப்பம் நீடித்தால், இந்துக்களிடம் ஒற்றுமை எங்கிருந்து வரும்?
இந்தப் பிரச்சினைக்கு யார் முடிவெடுக்க வேண்டும்? மதத் தலைவர்களா, அரசாங்கமா அல்லது இருவருமா?
இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயம் என எண்ணுகிறேன்.
(தொடரும்)
உண்மை கசக்கும்
வெளிநாட்டிலிருந்து வந்த முகமதியர்களும், ஆங்கிலேயர்களும் நம்மை பல காலம் ஆட்சி செய்தார்கள். அவர்களால் பல இன்னல்களையும் அனுபவித்தோம். பலரையும் மதம் மாற்றச் செய்தனர். அதற்காக அவர்கள் யாரையும் நாம் வெறுக்கவில்லை.
ஆனால், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் ஏன் வெறுக்கிறோம்? எதற்காக இந்த வன்மம்? இந்த வெறுப்பு JNU-வரை சென்று விட்டது.
நான் பிராமணன் அல்ல. சொல்லப்போனால் அவர்களால் சில பாதிப்புகளையும் சந்தித்திருக்கிறேன். அதன் காரணமாக ஒட்டுமொத்த பிராமணர்களையும் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்றால், என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் மட்டும்தான் தவறு செய்தார்களா? பிற சமூகத்தினர் தவறுகளே செய்ததில்லையா!?
பிராமணர்கள் மற்றவர்களுக்கு தீங்கிழைத்து எவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என்பது நமக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், நாட்டிலுள்ள அரசியல் கட்சி தலைவர்களில் பலர் எத்தனைதலைமுறைக்கு சொத்து சேர்த்தார்கள்/சேர்க்கிறார்கள் என்பது நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கேத் தெரியாதே!?
உண்மையில் நமக்கு அவர்கள்மீது அல்லவா வெறுப்பு வரவேண்டும்!?
சிந்தித்துப் பார்த்தால் அதற்கு வேறு ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றுகிறது. நமது நாட்டில் பலரும் பல காரணங்களால் இந்து மதத்தை அழிக்கத் துடிக்கின்றனர். பிராமண சமூகம்தான் அதற்குத் தடையாக உள்ளது என எண்ணுகிறார்களோ என்னவோ? அப்படி நினைத்தால் அதில் உண்மை இல்லாமல் இல்லை.
"நீங்கள் விலக்கிய கல்லே மூலைக் கல்லாயிற்று" என்று சொல்கிறது பைபிள்.
இந்து மதம் பல தளங்களுடன் கூடிய மிகப்பெரிய கட்டிடம். அதன் அஸ்திவாரம் மிகவும் ஆழமானது. அந்த அஸ்திவாரத்தின் "மூலைக்கல்லாக" இருப்பவர்களில் பிராமணர்களும் இடம் பெற்றுள்ளனர் என்றால் அது மிகையாகாது. நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அதிகமாகக் கட்டிக் காப்பது அவர்களே! அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளன.
"மூலைக்கல்லை" அகற்றி விட்டால், இந்து மதத்தை அழிப்பது சுலபம் என சிலர் நினைக்கலாம்; அந்த சிலருக்கு உதவினால் நமக்கு பல ஆதாயங்கள் கிடைக்கலாம் எனப் பலர் நினைக்கலாம்.
அதற்கு நாம் துணை போக வேண்டுமா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
ஒரு நண்பருக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல்:
"பிள்ளைகளை நினைத்தால் பயமாக இருக்கிறது"
"எதற்காகப் பயப்படுகிறீர்கள்?"
"நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது"
"அது அவர்கள் தவறா அல்லது நமது தவாறா?"
நண்பர் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
இந்த உரையாடல் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டன. இப்போது நிலைமை இன்னமும் மோசமாகி விட்டது.
சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்; அவர்களின் வாழ்க்கை நெறி வளர்வதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்?
நன்னெறிகளைப் பொறுத்தவரை பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பெற்றோர் சொல்வதைத் கேட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும்.
'ஆசை வசப்பட்டு' வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடக்கும் போட்டியில், நன்னெறி பற்றிய கவலை காணாமல் போய்விட்டது.
பள்ளிக்கூடங்களை எடுத்துக் கொண்டால், ஏதோ திட்டம் போட்டு செயல்படுவதைப் போன்று நன்னெறிகளைப் போதிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டார்கள்.
திரைப்படப்படங்களில் நன்னெறிகளை நினைவூட்டும் பாடல்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது அதுவும் நின்று போயிற்று.
இதற்கு தீர்வுதான் என்ன?
சமயத் தலைவர்கள் கிராமங்கள் தோறும் ஆரம்பப் பள்ளிகளை அமைக்க வேண்டும். அதில் அடிப்படைக் கல்வியைப் போதிக்க வேண்டும்.
தாய்மொழிக் கல்வி, கணக்கு, நன்னெறியை வளர்க்கும் பாடங்கள் ஆகிய இவை மூன்றையும் கற்றுக் கொடுத்தாலே போதும்.
வெறுமனே மடங்களின் சடங்கு, சம்பிரதாயங்களில் மட்டும் நேரத்தை செலவிடாமல், குழந்தைகள் மூலம் நாட்டின் கலாச்சார மேன்மையைத் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருசில இடங்களில் இத்தகையப் பள்ளிகள் உள்ளன. அவை எல்லாக் கிராமங்களிலும் தொடங்கப் பட வேண்டும். செய்வார்களா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"
.. குறள் 475
(மென்மையான மயிலின் தோகையே ஆயினும் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்)
ஒரு சில நாடுகளின் மக்கள்தொகை அடர்த்தி .. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு என்பது குறித்து ஒரு பட்டியல் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.
சீனா 146.00
நேபாளம் 200.72
சுவிட்சர்லாந்து 207.98
ஜெர்மனி. 232.80
பாகிஸ்த்தான் 276.00
வியட்நாம். 290.48
இலங்கை 332.31
ஜப்பான் 333.38
பிலிப்பைன்ஸ் 365.00
பெல்ஜியம் 375.73
இந்தியா 473.42
இஸ்ரேல் 421.00
நெதர்லாந்து 422.00
தென் கொரியா 516.72
இந்தோனேசியா 600.00
வங்காளதேசம் 1179.00
இதற்கான கணக்கீடு சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல; ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதும் அல்ல.
இருந்தாலும் இந்தப் பட்டியல் நமக்கு சில புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி 1920-ல் 473.42 எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இது இந்தியாவின் சராசரியாகும். பெரு நகரங்களை மட்டும் கணக்கிலெடுத்தால், இதன் அடர்த்தி மிக அதிகமாக இருக்கும்.
எந்த அளவுக்கு மக்கள்தொகை அடர்த்தி இருந்தால் நாட்டிற்கு நல்லது என வல்லுநர்கள் கூடி முடிவு செய்தால் நல்லது என நினைக்கிறேன்.
நகரங்களில் அதன் அடர்த்தி அதிகமாக இருந்தால், அதை குறைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அத்துடன் நமது நாட்டிற்குள் அனுமதியின்றி அகதிகளாக நுழைபவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது பற்றியும் அரசியல் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும். இல்லையெனில், ஐரோப்பிய நாடுகள் இப்போது சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்காலத்தில் நமது நாடும் சந்திக்க நேரிடலாம்.
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 1)
'தனி மனிதனில்' தொடங்கி, மனிதனது பார்வை விரிந்து கொண்டே போகிறது.
தனி மனிதன், குடும்பம், சமூகம், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம், உலகம் என விரிந்து கொண்டே போகிறது.
உலகம் முழுவதையும் "வாசுதேவக் குடும்பம்" எனக் கூறிக் கொள்கிறோம். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்றும் பெருமையுடன் கூவுகிறோம்.
ஆனால், உண்மை நிலவரம் என்ன?
"வாசுதேவக் குடும்பம்" என்பது எங்கிருந்து ஆரம்பமாகிறது?
தனிமனிதனிடமிருந்தா? அல்லது சமூகத்திலிருந்தா?
தனி மனிதனிடம் இருக்க வேண்டியது சமுதாய உணர்வு. "வாசுதேவக் குடும்பத்தின்" ஆரம்பப் புள்ளி "சமூகம்".
தனி மனிதன் குடும்பத்தை விட்டு வெளியே வந்து, 'சமூகத்தில்' காலை வைக்கும்போது 'சமுதாய உணர்வு' வேலை செய்கிறதா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 2)
கிறிஸ்தவ மதத்திலும், முஸ்லிம் மதத்திலும் உள்ள மக்களிடம் இருக்கும் சமுதாய உணர்வு இந்து மதத்தைச் சார்ந்த மக்களிடம் இருக்கிறதா எனக் கேட்டால், பதில் கிடைப்பது கடினமாக உள்ளது.
அதற்கான காரணத்தைத் தேடியபோது ஒரு விடை கிடைத்தது.
முஸ்லிம் மக்களிடம் மத ரீதியாக சில பிரிவுகள் உள்ளன. ஆனால், சாதி ரீதியாக எந்தப் பிரிவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மசூதிக்குள் நுழையும் அனைவரும் 'அல்லாவின் பிள்ளைகள்'; வேறு எந்த வித்தியாசமும் கிடையாது. அப்படியே இருந்தாலும், அவர்கள் கடைப்பிடிக்கும் சமத்துவத்தை அது பெரிதாகப் பாதிப்பதில்லை.
கிறிஸ்தவ மக்களிடம் சாதிப் பாகுபாடுகள் உள்ளன. இருப்பினும் அவைகள் அவர்கள் கடைப்பிடிக்கும் சமுதாய ஒற்றுமையைப் பெரிதாகப் பாதிப்பதில்லை.
ஆனால், இந்து மக்களிடம்
இந்த சமுதாய ஒற்றுமை இருக்கிறதா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 3)
எனது நண்பர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். அவரும் நானும் பலவற்றையும் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம். ஒரு சமயம் சமத்துவம் பற்றிப் பேசியதில்
சில விஷயங்களைப் புரிந்து கொண்டேன்.
அவர்கள் எல்லோரும் இந்து மதத்தில் இருந்து அங்கு சென்றவர்கள்தான். சாதி ரீதியானப் பிரிவினை அங்கு இருந்தாலும், தான் ஒரு கிறிஸ்து என்பதை அவர்கள் மறப்பதில்லை; தேவாலயம் அல்லது திருச்சபை எதுவாக இருந்தாலும், அவை வகுத்த சட்ட திட்டங்களைப் பொறுப்புடன் பின்பற்றுகிறார்கள்!?
ஆனால், இந்துக்கள்?
வீட்டிற்குள் இருந்த சாதி உணர்வு, வீதிக்கு வந்தவுடன் வெறியாக மாறுவது ஏன்?
சகோதரராய் உடனிருந்து சமத்துவங்கள் பேசியவர் சவமாகிப் போனவுடன், சாதிவெறி வருவது ஏன்?
அதன் காரணமாகத்தானே சாதிக்கு ஒன்றாகத் தனியிடங்கள் தோன்றின!?
இந்த வெறிதானே இங்கிருந்த மனிதர்களை மதம் மாறத் தூண்டியது?
இந்த இழிநிலையை எப்படி மாற்றுவது? அதற்கான வழி என்ன?
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் 4)
சமத்துவம் என்றால் என்ன? இந்த வார்த்தைக்குப் பலவிதமான விளக்கங்கள் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால் "பொதுவெளியில் அனைவரையும் சகோதர பாவத்துடன் நேசித்தல்" எனச் சொல்லலாம். குறைந்த பட்சம், நேசிக்க முடியாவிட்டாலும் மற்றவர்களை வெறுக்காமலாவது இருக்க வேண்டும் எனவும் பொருள் கொள்ளலாம்.
பக்தியோடு சமத்துவ உணர்வுகளையும் வளர்ப்பதற்காகத்தான் எல்லா இடங்களிலும் ஆலயங்களைக் கட்டிவைத்தார்கள்.
ஆனால் "தீண்டாமை", "சாதி உணர்வு" போன்ற பெருவியாதிகள் உருவாகி காலப்போக்கில் சமத்துவ உணர்வே காணாமல் போய்விட்டது.
"ஊர்கூடி தேர் இழுப்போம்" என்பது பழமொழி. இதுகூட மக்களிடம் "சமத்துவ" உணர்வை உண்டுபண்ணுவதற்கான ஏற்பாடுதான்.
தேர் அதுவாக நகர்வலம் வரமுடியாது. அதனால்தான் எல்லா மக்களும் சேர்ந்து வடம் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள். அப்போது "தீண்டாமை" என்ற உணர்வு தற்காலிகமாக மறைந்து போகிறது.
நம்மிடம் இன்னுமொரு 'தேர்' உள்ளது. இப்போது நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வருங்காலத்தில் அதை நகர்த்த முடியாத நிலை வரலாம். அதை நாம் அறிவோமா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 5)
"நகர்த்த முடியாத நிலை வரலாம்" என சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை எழுதும்போது எனக்கு பழைய
சம்பவம் நினைவிற்கு வந்தது. அந்த சம்பவம் 45 வருடங்களுக்கு முன்னர் நடந்தது.
அப்போது நாங்கள் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்குக் குடியிருந்தோம். கீழ்வீட்டில்
வீட்டின் உரிமையாளர் குடியிருந்தார்.
ஒருநாள் வீட்டின் உரிமையாளர் இறந்து விட்டார். அவரது உடலை நகர்த்தியவர்கள் (சுமந்து சென்றவர்கள்) ..
1. அவரது மகன்
2. அவரது சம்பந்தி
3. அவரது (ஒரே) நண்பர்
4. நான்
அப்போது நான் ஒரு ஆஸ்த்மா நோயாளியாக இருந்தேன். வேறுவழியின்றி கடவுள் மேல் பாரத்தை இறக்கி வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கிச் சென்றேன். மாற்றுவதற்கு வேறு யாரும் இல்லை.
அவர் அந்த இடத்தில் பல வருடங்களாக வசித்து வந்தவர். அவர் மோசமான மனிதராகவே இருக்கட்டும்; தூக்குவதற்குக் கூட ஆள் இல்லையென்றபோதும் அங்குள்ள யாரும் தோள் கொடுக்க முன்வரவில்லை. சமத்துவம் எங்கே போனது?
அவர் இந்துவாக இறக்காமல், ஒரு கிருஸ்தவராக அல்லது ஒரு முஸ்லீமாக இறந்திருந்தால், அங்கு சமத்துவம்தான் முன் நிற்கும்; அவர் மேலுள்ள வெறுப்பு முன் நிற்காது.
அவர்களால் கடைப்பிடிக்கப் படும் 'சமத்துவ மனப்பான்மை', இந்துக்களிடம் ஏன் இல்லை?
மக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுவான அமைப்பு எதுவும் இல்லாததுதான் இதற்கான காரணம் என எண்ணுகிறேன்.
இந்தநிலை நீடித்தால், சரக்குகளை இடமாற்றம் செய்ய 'packers and movers'-ஐத் தேடுவது போல், நகர முடியாதத் தேரை நகர்த்துவதற்கு 'packers and REmovers' என யாராவது இருக்கிறார்களா எனத் தேட வேண்டிய நிலை வரலாம்!?
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 6)
நமது நாட்டில் துறைசார்ந்த வல்லுநர்களுக்கு பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு துறையிலும் நிறைய வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து (ஜனநாயக நாட்டில்) வழி நடத்துவது 'அரசியல்வாதியின்' வேலை.
பிரதம மந்திரி முதற்கொண்டு 'வார்டு' கவுன்சிலர் வரை, ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் எல்லைக்கு உட்பட்ட மனிதர்களிடம் "சமத்துவ குணத்தை" வளர்க்க வேண்டியது முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
ஆனால், இங்குள்ள பல அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு வழியில் மக்களைப் பிரிப்பதிலேயே குறியாக உள்ளனர். இதனை எப்படித் தடுப்பது?
இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது இளைஞர்களால் மட்டுமே முடியும். தனி ஒரு இளைஞன் பாடுபட்டால் போதாது. அவனைச் சுற்றியுள்ள இளைஞர்கள் ஒன்றுகூட வேண்டும். "தனி மரம் தோப்பாகாது" என்பார்கள்; அது உண்மைதானே!
ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் ஒன்றுகூடினால், இது நடக்கக் கூடிய காரியம்தான். அவர்களுக்குத் தேவை 'அனுபவத்தால் முதிர்ந்த பெரியவர்களின் வழிகாட்டுதல்' மட்டுமே!?
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 7)
இளைஞர்கள் ஒன்றிணைந்தால் 'சமத்துவம்' வந்துவிடுமா என்ற சந்தேகம் வரலாம். இளைஞர்கள் ஒன்றாக இணைந்தால் பலவித அதிசயங்களை அவர்களால் நடத்திக் காட்ட முடியும்.
இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுகிறேன்.
மாணவர்களிடையே ஒரு பிரிவினை இருந்ததை உணர்ந்த நான், அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து "youth"
(Youngsters' Organised Union of Tuticorin Harbour) என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். அவர்களும் அதைச் சிறப்பாக நடத்தி வந்தார்கள்.
அந்த சமயத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் சார்பாக ஒரு சங்கத்தைப் புதிதாக ஆரம்பித்தார்கள். அதில் சேர அழைத்தபோது, ஒரு மாணவன் "நான் youth கமிட்டியில் இருக்கிறேன். என்னால் சாதிச் சங்கத்தில் சேர முடியாது" என சொல்லி விட்டான். "Youth" என்ற அமைப்பு இல்லாதிருந்தால், அவன் விரும்பாவிட்டால் கூட, அவனை மிக எளிதாகச் சங்கத்தில் சேர்த்திருப்பார்கள்.
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 8)
ஒருமுறை "youth" கமிட்டி சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். நிகழ்ச்சியின் போது மேடையில் பூந்தொட்டிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி, அந்தக் குடியிருப்பில் உள்ள 'குழந்தைகள் பூங்காவில்' இருந்து பூந்தொட்டிகளை ஒரு தள்ளுவண்டியில் வைத்து, அதை குடியிருப்பு பகுதி வழியாக இழுத்துச் சென்றார்கள். சிலர் பின்னால் இருந்து வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றனர்.
(தேவைப்பட்டால் மட்டுமே, நான் அவர்களது செயலில் தலையிடுவேன். மற்றபடி உடனிருந்து அவர்களின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்)
நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் மனைவி சிரித்துக் கொண்டே என்னிடம் "கீழ்வீட்டில் வசிப்பவர் உங்களை ஏசிக்கொண்டிருந்தார்கள்" என்றாள். என்ன சொன்னார்கள் எனக் கேட்டேன். "ஐயோ, ஐயோ, என் மகனை தெருத்தெருவாய் கைவண்டியை இழுக்க வைத்து விட்டார்களே" எனப் புலம்பிக் கொண்டிருந்தார்கள் எனக் கூறினாள். "உண்மைதானே, பொத்திக் பொத்தி வளர்த்த பையன் இப்படி தெருவில் வண்டியை இழுத்துச் சென்றால், புலம்பாமல் என்ன செய்வார்கள்" எனப் பதில் கூறினேன்
நினைத்துப் பாருங்கள்; வீட்டை விட்டு வெளியில் தலை காட்டாத அவன், "youth" என்ற அமைப்பு மட்டும் இல்லாவிட்டால் இத்தகைய செயலில் ஈடுபடுவானா?
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 9)
இளைஞர்கள் வீரியம் மிக்கவர்கள். ஊக்கத்துடன் செயல்படக் கூடியவர்கள். அவர்களுக்கு நல்லதொருப் பாதையைக் காட்டினால், எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
அவர்களிடம் உள்ள சக்தி காட்டாற்று வெள்ளம் போன்றது. வெள்ள நீரைத் தேக்கி மடைமாற்றம் செய்தால், நாட்டில் விவசாயம் பெருகும்; இல்லையெனில் வெள்ள நீர் நாட்டில் மிகுந்த சேதங்களை ஏற்படுத்தக் கூடும்.
இளைஞர்களும் வெள்ள நீரைப் போன்றவர்களே! அவர்களை ஒன்றிணைத்து நல்லதொரு பாதையில் வழிநடத்தத் தவறினால், அவர்கள் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தீங்கிழைத்து விடுவார்கள்.
எனவே கிராமங்களில் வசிக்கும் நல்ல உள்ளம் படைத்தப் பெரியவர்கள்
கிராமத்து இளைஞர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
இளைஞர்கள் ஒன்றிணைந்தால் மட்டும், அவர்கள் நினைத்ததை செயல்படுத்த முடியுமா?
நிச்சயமாக முடியாது!? வேறு இரண்டு நிபந்தனைகளும் உள்ளன. அவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆக மொத்தம் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அவை?
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 10)
இளைஞர்கள் கிராமங்கள் தோறும் ஊர் நலனுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த விரும்பினால், மூன்று நிபந்தனைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். நகரத்தில் உள்ளவர்கள் நகரத்தை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து செயல்படலாம்.
மூன்று நிபந்தனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்ப்போம்.
1. (Coming together is the beginning)
ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்றாக சேருவது அவர்களின் வெற்றிக்கான ஆரம்பம்.
இந்தப் பாடலைப் பாருங்கள்:-
"சிதறிய மேகம்
சேர்ந்து திரண்டால்
மழையெனப் பெய்யாதோ?
ஒருதுளி எல்லாம்
ஓரிடம் சேர்ந்தால்
ஓடையும் ஆகாதோ?
ஓரிரண்டாக
ஓடைகள் சேர்ந்தால்
நதியெனப் பாயாதோ?
உதிரிப் பூக்கள்
ஒன்றாய் கோர்த்தால்
மாலையும் ஆகாதோ?
ஆன்றோர், சான்றோர்
ஓரணி சேர்ந்தால்
மானிடம் வளராதோ?"
இளைஞர்கள் வேகம் மிக்கவர்கள்; துடிப்புடன் செயல் படுபவர்கள். அவர்களை நன்கு வழிநடத்த சான்றோரின் துணை இருப்பது மிகவும் அவசியம்.
2. (Keeping together is the progress)
ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பில் சேர்ந்தே பயணிப்பது முன்னேற்றத்திற்கான அடையாளம்.
ஏனெனில், இளைஞர்கள் தங்களுக்கான அமைப்பை ஏற்படுத்தும் போது, பலர் உண்மையான நோக்கமின்றி ஆர்வக் கோளாறினால் அதில் சேர விருப்பம் தெரிவிக்கலாம். பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகவும் வாய்ப்பு உண்டு.
ஒவ்வொரு இளைஞனும் மதம், இனம், குலம், சாதி, போன்றவற்றின் காரணமாக வேறுபட்டாலும், வீட்டைவிட்டு வீதிக்கு வந்துவிட்டால் அமைப்பின் உறுப்பினர் என்பதை மறக்கக்கூடாது. தனது கிராமத்தின்/ நகர்ப்புற பகுதியின் முன்னேற்றம் மட்டுமே அவனது நினைவில் இருக்க வேண்டும்.
அமைப்பை ஏற்படுத்தியபின் எல்லோரும் ஒரே குழுவாக இயங்க வேண்டும். மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
3. (Working together is the success)
ஒருமித்த கருத்தோடு அனைவரும் இணைந்து செயல்பட்டால், அதுவே வெற்றிக்கான அடையாளம்.
வயது முதிர்ந்த பெரியவர்கள் நல்லவற்றை நினைத்தாலும், அதனைச் செயல்படுத்தும் அளவிற்கு அவர்களின் உடல் ஒத்துழைக்காது. அதேநேரம் அவர்களின் சிந்தனைகளை உள்வாங்கி இளைஞர்கள் செயல்படும்போது நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
வருங்கால சந்ததியினர் நல்ல சூழ்நிலையில் வாழவேண்டுமானால், அந்தச் சூழ்நிலையை இளைஞர்கள் மட்டுமே உருவாக்க முடியும்.
அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.
(தொடரும்)
உண்மை கசக்கும்
(சமத்துவம் - 11)
ஒன்றுகூடி சேவை செய்வது என முடிவு எடுத்தபின், இளைஞர்கள் செய்ய வேண்டியவை:-
1. குறைந்தது 50 இளைஞர்களாவது ஒன்றிணைய வேண்டும். ஒவ்வொரு தெருவிலிருந்தும் 1 அல்லது 2 நபர்கள் சேர வேண்டும். இயக்கம் ஆரம்பித்தபின் பலவிதமான ஏளனங்களைச் சந்திக்க நேரிடும். கூட்டமாக இணைந்திருந்தால் அவை நம்மை பாதிக்காது; இல்லையெனில் ஒருவித சோர்வு வந்துவிடும்.
2. இயக்கத்திற்கு பொதுவான ஒரு பெயரை, அதன் நோக்கத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் வைக்க வேண்டும். உதாரணமாக "மக்கள் நல்வாழ்வு மையம்" என வைக்கலாம்.
3. இயக்கத்தில் தலைவர், செயலர் போன்ற பதவிகள் இருக்கக்கூடாது. ஒரேயொரு ஒருங்கிணைப்பாளர் மட்டும் போதும்.
4. இளைஞர்கள் ஒன்று சேர்ந்தது சேவை செய்வதற்காக. எனவே பதவி, புகழ் போன்றவற்றை விரும்பக்கூடாது. ஆனாலும், நீங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்யும்போது, எதிர்பாராத ஒன்று உங்களை வந்து சேரும்; அதன் பெயர் "ஆத்ம திருப்தி". அதன் சுவையை அனுபவித்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். அதன் எண்ணிக்கை கூடக்கூட, உங்களது மனம் ஆரவாரத்திலிருந்து விலகி அமைதியை நோக்கி பயணிக்கும்.
5. இயக்கத்தின் பணிகளில் மதம், அரசியல், சாதி போன்ற எதுவும் நுழையக் கூடாது.
6. ஒவ்வொரு வாரமும் அரைமணி நேரம் கூடிப் பேசுங்கள். உங்களுக்கே என்னவெல்லாம் செய்யலாம் எனத் தோன்றும்.
7. இயக்கத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செயல் படுங்கள். சேவை மனப்பான்மை மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும்.
8. ஒவ்வொரு இளைஞனது வீட்டிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் மதம், இனம், சாதி எனப் பல காரணங்களால் வித்தியாசமாக இருக்கலாம்.
ஆனால், வீட்டைவிட்டு விலகி வீதிக்கு வந்துவிட்டால் 'தான் ஒரு இந்தியன்' என்ற நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.
9. வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் நல்லதொரு வாழ்வியல் முறையை கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
(தொடரும்)
உண்மை கசக்கும்
சமீப காலமாக "சமூக நீதி, மனித நேயம்" போன்ற வார்த்தைகள் அதிகமாக பேசு பொருளாக உள்ளன.
ஆனால், "சமத்துவ உணர்வு" இல்லாத மனிதர்கள் இவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்க முடியுமா?
ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் "சமத்துவ உணர்வு" உள்ளவர்களாக இருந்தால், ஊழல், லஞ்சம் போன்ற அசிங்கங்கள் அவர்களிடம் இருக்க முடியுமா?
சுய ஒழுக்கம் நிறைந்த மனிதன் இத்தகைய இழி செயலில் ஈடுபடுவானா?
ஆக, தவறு எங்கு ஆரம்பமாகிறது?
குழந்தைகள் பெற்றோர்களை விட அதிகமாக பழகுவது கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்களிடம் தான். ஆனால் அங்கு அவர்களுக்கு ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை எவ்வளவு முக்கியம் எனக் கற்றுத்தரப் படுகிறதா?
ஒழுக்கத்தைப் பயிற்றுவிக்காத கல்வியைக் கற்ற மாணவன், அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போன்றவனே!?
"Without character, education
it's a building sans foundation"
குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தை வகுப்பவர்கள் இதைக் கவனித்தில் கொள்வார்களா!?
(முற்றும்)
No comments:
Post a Comment