க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்.
தலைப்பு வியப்பாக உள்ளது அல்லவா?
க்ஷத்திரிய தர்மம் 'ஒரு மனிதனின் செயல்பாட்டை'
குறிப்பது.
கம்யூனிசம் 'ஒரு மனிதனின் சமுதாய உணர்வை' குறிப்பது.
உண்மையில் இவை இரண்டும் ஒன்றாகக் கைகோர்த்து பயணிக்க வேண்டும்; ஆனால், எதிரும் புதிருமாக காட்சி அளிக்கின்றன. புரியாதப் புதிர் இது. வாழ்க்கையே ஒரு புதிர்தானே!!
Of all the miseries, mystery is the worst misery.
.. (எங்கேயோ படித்தது)
சமர்ப்பணம்
க்ஷத்திரிய தர்மம் .. இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பலருக்கும் பலவிதமான எண்ணங்கள் தோன்றும்.
எனக்கு 'பெருந்தலைவர் காமராஜர்' முகம் மட்டுமே தோன்றுகிறது.
பகவத்கீதை நெடுகிலும் ஒரு க்ஷத்திரியன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பல குறிப்புகள் உள்ளன.
அந்தக் குறிப்புகளை எல்லாம் அவர் படித்தாரா என்பது நமக்குத் தெரியாது; அவரது 'அரசியல் குரு' திரு. சத்தியமூர்த்தி அவர்கள் அவற்றைக் கற்றுக் கொடுத்தாரா என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால், தம் வாழ்நாள் முழுவதும் அவற்றை முழுமையாகக் கடைப்பிடித்தவர் அவர்.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் 'பற்றற்று' வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் ராஜ போக வாழ்க்கையில் இருந்தும், பற்றற்று வாழ்ந்து காட்டியவர் ஜனக மகராஜார். அதனால்தான் அவரை 'ராஜரிஷி' என அழைத்தார்கள்.
காமராஜர் அவர்களோ ஆட்சியில் முதன்மைப்
பொறுப்பில் இருந்தும், ராஜ போக வாழ்க்கையையும் துறந்து எளிய முறையில் வாழ்ந்து காட்டியவர்.
இன்னமும் நல்ல அரசியல்வாதியாக வாழ விரும்புகிறவர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார்.
அவரது திருவடிகளை வணங்கி எனது கருத்துக்களை ஒரு தொடராகப் பதிவிடுகிறேன்.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
முன் குறிப்பு
தொடரின் பிற்பகுதியில் கம்யூனிசம் பற்றிய என் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன். அவை கம்யூனிஸ்ட்டுகள் உட்பட பலரது மனதைக் காயப்படுத்தலாம்; பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
சில நேரங்களில் விதைகளை விதைப்பதற்கு கடப்பாரைக் கம்பியையும் உபயோகிக்க நேரிடுகிறது.
எனது கருத்துக்களில் நியாயம் இருப்பதாகக் கருதினால், சம்பந்தப் பட்டவர்கள் (the politburo of the communist parties) தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.
கம்யூனிஸ்ட்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று பலரும் சந்தேகப் படலாம். அதற்கான விடை தொடரின் முடிவில்!?
முன்னுரை
க்ஷத்திரிய தர்மம் என்பது "வர்ணாஸ்ரம தர்மத்தின்" ஒரு அங்கம். இந்தத் தொடரைப் படிப்பவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம்.
முதலாவது குழு:-
இவர்கள் "வர்ணாஸ்ரம தர்மம்" பற்றி ஏற்கனவே ஒரு முன்முடிவில் இருப்பவர்கள். அதில் ஒரு பிரிவினர் வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொள்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் அதை எதிர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். எனினும், அவர்களது முன்முடிவின் காரணமாக, என்னுடைய சில கருத்துக்கள் இரு பிரிவினருக்குமே எரிச்சல் ஊட்டுவதாக அமையலாம்.
இரண்டாவது குழு:-
இவர்கள் "வர்ணாஸ்ரம தர்மம்" பற்றி எந்தவித முன்முடிவும் எடுக்காதவர்கள். வர்ணாஸ்ரம தர்மம் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் குழம்பிய மன நிலையில் இருப்பவர்கள். இவர்களுக்கு எனது கருத்துக்கள் ஒரு தெளிவைக் கொடுக்கலாம்.
மூன்றாவது குழு:-
இவர்கள் "வர்ணாஸ்ரம தர்மம்" என்றால் என்ன என்றே அறியாத இளைய சமூகத்தினர். இவர்களுக்கு எனது கருத்துக்கள் ஒரு புதிய புரிதலைக் கொடுக்கலாம்.
இருப்பினும், அனைத்து அன்பர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். இந்தத் தொடரில் சொல்லப்படும் கருத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து (share) கொள்ளுங்கள்.
ஒருவகையில், அதுகூட க்ஷத்திரிய தர்மத்திற்கு உட்பட்டதுதான்.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 1
இந்தத் தொடர் மதம் சம்பந்தப் பட்டது அல்ல; நாட்டின் நலம் சம்பந்தப்பட்டது.
தொடரை நிதானமாகப் படித்து, ஆழ்ந்து சிந்தியுங்கள். அதன்பின் எனது கருத்துக்கள் சரியா, இல்லையா என நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
க்ஷத்திரிய தர்மம் என்பது "வர்ணாஸ்ரம தர்மத்தின்" ஒரு அங்கம். இந்து மதத்தை தாக்குபவர்களுக்கு இந்த "வர்ணாஸ்ரம தர்மம்தான்" முக்கிய ஆயுதம். ஒரு மனிதனின் வர்ணம் என்பது பிறப்பாலோ, சாதியாலோ நிர்ணயம் செய்யப்படுவது அல்ல என்று எத்தனை தடவை சொன்னாலும்
அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
வர்ணங்களைப் பற்றி "நான்கு வர்ணங்கள்" என்ற தலைப்பில் நீண்டதொரு விளக்கம் கொடுத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் "piththantnv@blogspot.com" என்ற வலைத்தளத்தில் அதைக் காணலாம்.
எனவே, சில அடிப்படை உண்மைகளை மட்டும் இங்கு பார்த்து விடுவோம்.
"வர்ணாஸ்ரம தர்மம்" என்பதை, "வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம்" என இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
க்ஷத்திரிய தர்மம் என்பது வர்ண தர்மத்தில் உள்ள நான்கு பிரிவுகளில் ஒன்று. இது மனிதனின் குணத்தையும், செயலையும் (கர்மா) வைத்து வகைப்படுத்தப் படுகிறது.
ஆஸ்ரம தர்மம் பற்றி இந்தத் தொடரில் கருத்து ஏதும் சொல்லப் போவதில்லை; அது தேவையும் இல்லை.
நமது நோக்கம், நாம் "க்ஷத்திரிய தர்மத்தை" நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டும்தான்.
"நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவை;
குண, கர்மத்திற்கு தக்கபடி" எனக் கண்ணன் கீதையில் சொல்கிறான்.
"கர்மம்" என்றால் செயல் என்று எல்லாரும் பொதுவாகச் சொல்வதுண்டு.
ஆனால், நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சங்கிலியின் ஒரு முனை "குணம்" என்றால், மறுமுனை "கர்மா" (செயல்) எனப்படும். இடையில் வேறு சில கண்ணிகளும் உள்ளன. குணம் என்று சொல்வது கூட, ஆழ்மனப் பதிவுகளின் அடிப்படையில் வருவதுதான். அந்தக் கண்ணிகள் - -
1. ஆழ்மனப் பதிவுகள்
(Impression of past experiences)
2. குணம்
(Character)
3. மனோபாவம்
(Mental attitude)
4. ஆசை
(Desire)
5. சிந்தனை
(Thought)
6. செயல் (கர்மம்)
(Action)
பல நேரங்களில் இரு மனிதர்களின் செயல்களும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவர்களின் மனோபாவம் வேறாக இருந்தால்!?
ஒரு அலுவலகத்தில் இரண்டு பேர் வேலை செய்கின்றனர். அதில் ஒருவர் லஞ்சம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்; மற்றொருவர் லஞ்சம் வாங்குவதில் குறியாக இருக்கிறார். இருவரது மனோபாவமும் வேறு வேறாக இருக்கும்போது, இருவரது வர்ணத்தையும் ஒரே இடத்தில் வைக்க முடியுமா?
எனவே, "கர்மா" என்ற சொல்லுக்கு 'செயல்' என்று சொல்வதைவிட 'மனோபாவம்' எனப் பொருள் கொள்வது, ஒருவனின் வர்ணத்தை உறுதி செய்வதற்குப் பொருத்தமாக
இருக்கும் என்பது எனது கருத்து.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 2
நான்கு வர்ணங்களைக் குறிப்பிடும் போது, "பிராமணன், க்ஷத்திரியன் .." என்றுதான் குறிப்பிடுகிறார்கள்; "பிராமண தர்மம், க்ஷத்திரிய தர்மம் .." என்றெல்லாம் குறிப்பிடவில்லை. ஆனால், ஒவ்வொரு பிரிவிற்கும் அதற்கென்று தனியே பண்புகளும், விதிகளும் உண்டு. அதன் காரணமாகத்தான் "க்ஷத்திரிய தர்மம்" எனக் குறிப்பிட்டுள்ளேன்.
இந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அரசாங்கமும் பல்வேறு சட்ட விதிகளை இயற்றுகின்றது. அப்படியானால் சட்டம், தர்மம் இரண்டும் ஒன்றுதானா அல்லது ஒன்றுக்கொன்று மாறுபட்டதா?
ஒருமுறை நண்பர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார்.
அது .. "சட்டம், நியாயம், தர்மம் எல்லாம் ஒன்றுதானா அல்லது வேறு வேறா?".
....................................
சட்டம், நியாயம், தர்மம் இவற்றிற்கிடையே என்ன வித்தியாசம்?
ஒரு கல்லூரி ஆசிரியர் தனியாக மாணவர் பயிற்சிப் பள்ளி நடத்துகிறார். அவர் ஆசிரியராக வேலை பார்ப்பதால், அதனை தன் மனைவியின் பெயரில் நடுத்துகிறார்.
சட்டப்படி அந்தப்பள்ளி அவரது மனைவியின் பெயரில் நடப்பதால், அவர் குற்றவாளி அல்ல.
உண்மையில் அந்தப்பள்ளியை அவர்தான் நடத்துகிறார். எனவே நியாயப்படி அவர் குற்றவாளி ஆகிறார்.
ஆனால், அந்த பயிற்சி பள்ளியை நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் தனது கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக செலவிட்டு வருகிறார். எனவே தர்மத்தின்படி பார்த்தால், அவர் குற்றவாளி அல்ல.
மேலேயுள்ள உதாரணத்தின்படி அந்த ஆசிரியர் நியாயத்தின் படி குற்றவாளி; ஆனால், சட்டப்படியும் குற்றவாளி அல்ல, தர்மத்தின் படியும் குற்றவாளி அல்ல.
ஆனால், திருமங்கையாழ்வாரைப் பொறுத்தவரை, அவர்
சட்டப்படி குற்றவாளி ஆகிறார்; தர்மத்தின்படி குற்றமற்றவர் ஆகிறார்.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 3
நான்கு வர்ணங்களைப் பற்றி பல தொடர்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தத் தொடரில் "க்ஷத்திரிய தர்மம்" பற்றி மட்டுமே சற்று விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. மன்னர்கள், சர்வாதிகாரி போன்றோர் ஆட்சி செய்யும்போது, அவர்கள் மக்களைக் கொடுமைப் படுத்தினால், அந்த நாட்டில் புரட்சி வெடித்து விடும். ஆனால், நமது நாட்டிற்கு அது தேவையில்லை. காரணம் .. ஆட்சியாளரை மாற்றும் அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. ஆனால், சரியான ஆட்சியாளரை மக்கள் தேர்வு செய்கிறார்களா? இல்லையெனில் தவறான மனிதர்களை ஏன் ஆட்சியில் அமர்த்துகிறார்கள்?
அதற்கு ஒரே காரணம், நமக்கு "க்ஷத்திரிய தர்மத்தைப்" பற்றி சரியானப் புரிதல் இல்லை என்பதுதான்.
மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையைக் கொடுத்த நாம், ஆட்சியில் அமரும் அரசியல்வாதி "க்ஷத்திரிய தர்மத்தை" கடைப்பிடிப்பவனாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதைக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டோம்?
அதைக் கற்றுக் கொடுக்காத காரணத்தினால்தான், உலக நாடுகளில் முன்னணியில் இருக்க வேண்டிய நமது நாடு சற்று பின்தங்கிய நிலையில் உள்ளது.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 4
நமது நாடு கனிம வளங்கள் மிகுந்த நாடு; நீர்வளம் நிறைந்த நாடு; வருடம் பூராவும் பயிர் செய்யக்கூடிய வசதிபடைத்த நாடு; புத்தி கூர்மையுள்ள (IQ) இளைஞர்கள் அதிகமுள்ள நாடு.
இருந்தும், நமது நாடு ஒரு முன்னணி நாடாக இல்லை. அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்.
பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இருப்பவர்கள் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைபிடிக்காததுதான் அதற்கான காரணம்.
இஸ்ரேல் ஒரு சின்னஞ்சிறு நாடு. கனிம வளங்களோ, நீர் வளமோ இல்லாத நாடு. சுற்றிலும் பகைவர்கள் சூழ்ந்த நாடு. இருந்தும் அந்த நாட்டின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. காரணம் அந்த நாட்டின் அரசியல் வாதிகள் மட்டுமல்ல; சாதாரண மனிதர்களும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைபிடிப்பது தான்.
அவர்களுக்கு க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றி என்ன தெரியும் என எண்ணத் தோன்றுகிறது அல்லவா?
க்ஷத்திரிய தர்மத்தை உள்ளடக்கிய "வர்ணாஸ்ரம தர்மம்" என்பது மனோதத்துவ அடிப்படையில் அமைந்தது. எல்லா மதத்திற்கும், எல்லா நாட்டிற்கும், எல்லாக் காலங்களிலும் பொருந்தக்கூடிய
ஒன்றுதான்.
இஸ்ரேல் நாட்டில் உள்ளவர்கள் "க்ஷத்திரிய தர்மம்" என்றால் என்னவென்று அறியாதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் கடைபிடிக்கும் விதிமுறைகள் "க்ஷத்திரிய தர்மத்தின்" விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெறுவதுதான். அதுதான் அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 5
க்ஷத்திரிய தர்மம் என்பது மனோதத்துவ அடிப்படையில் அமைந்த ஒரு 'கோட்பாடு'. அதன்கீழ் வரும் விதிமுறைகள் காலத்திற்கேற்ப மாறுபடும் தன்மை உடையவை.
ஒருகாலத்தில் "அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல்
..." என்றார்கள். காலங்கள் மாறின; சூழ்நிலைகளும் மாறின. அந்தக் கோஷங்கள் நின்று விட்டன. இப்போது நாம் "இல்லையேல் ..." என்று சொன்னாயே, அதைச் செய்தாயா என்று கேட்டால் அது நமது பயித்தியக்காரத் தனத்தைதான் குறிக்கும்.
நாம் அரசியலமைப்பு சட்டத்தைப் பயன்படுத்துகிறோம். மனுதர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், வழக்கொழிந்து போன ஒன்றை வைத்துக்கொண்டு, இந்து மதத்தை குறை கூறுவது சரியா?
ஒரு காலத்தில் "வேதம் ஓதுபவன் பிராமணன், சண்டை (போர்) போடுகிறவன் க்ஷத்திரியன், வாணிபம் செய்கிறவன் வைஷ்யன் .." என்றார்கள். அப்படியானால் மருத்துவர், பொறியாளர், சட்ட நிபுணர்கள் போன்றோரை சூத்திரர்கள் என்று சொல்ல முடியுமா? அதேபோல், வீதியில் நின்று சண்டை போடுகிறவர்களை எல்லாம் க்ஷத்திரியர்கள் என்று சொல்ல முடியுமா?
மாறிவிட்ட வாழ்க்கை சூழ்நிலையில், அதற்கேற்றவாறு மட்டுமே நாம் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
திருவள்ளுவர் 'வேதம் ஓதுபவன் பிராமணன்' என்று சொல்லவில்லை; "அந்தணர் என்போர் அறவோர்.." என்றுதான் சொன்னார். அதாவது அறவழியில் நடப்பவர்களை அந்தணர் எனக் குறிப்பிடுகிறார் -- அவர்கள் வேதம் ஓதாமல் இருந்தால் கூட!?
க்ஷத்திரியன் என்றால் வெறுமனே போர் புரிபவன் என்று நினைக்கக் கூடாது. காலமாற்றத்திற்கு ஏற்றவாறு
(மாறிவரும் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்றவாறு) நாம் விதிகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 6
இன்றைய சூழலில் ஒரு க்ஷத்திரியன் -- அதிலும் அரசியல் தளத்தில் இறங்குபவன் -- எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
முக்கியமான விதிமுறைகளை மட்டும் பார்ப்போம் ...
1. நியாயத்திற்காகப் போராடுவான்.
2. பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்க மாட்டான்.
3. பிறரது நலத்திற்காக தன்னையும், தனது உறவுகளையும் வருத்துவதற்குத் தயங்க மாட்டான்.
4. நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.
5. தேசத்தின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவான்.
6. நாடு பொருளாதார வளர்ச்சி காண பாடுபடுவான்.
7. நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை போற்றி, மேலும் செம்மைப் படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வான்.
நமக்குள் ஒரு கேள்வி வரும்.
'நியாயத்திற்காகப் போராடுவது' என்றால், கம்யூனிசமும் அதைத்தானே வலியுறுத்துகிறது. அப்படியானால் கம்யூனிசமும், க்ஷத்திரிய தர்மமும் ஒன்றுதானா?
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 7
கம்யூனிசமும், க்ஷத்திரிய தர்மமும் ஒன்றல்ல; ஆனால், அவைகளுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.
க்ஷத்திரிய தர்மம் தனி மனிதன் சார்ந்தது; கம்யூனிசம் சமூகம் சார்ந்தது.
க்ஷத்திரிய தர்மத்தை உள்ளடக்கிய "வர்ணாஸ்ரம தர்மம்", தனி மனிதன் அவனது இயல்புக்கு ஏற்ப கர்மம் செய்து வந்தால் சமூகம் நன்றாக இருக்கும் எனச் சொல்கிறது.
கம்யூனிசமோ சமூகத்தை மாற்றி அமைத்தால், எல்லாமே நன்றாக இருக்கும் எனச் சொல்கிறது. சைனா போன்ற நாடுகள் அதைத்தான் செய்கின்றன. ஆனாலும் அவ்வப்போது எதிர்ப்புகள் கிளம்புகின்றன.
ஏன்!?
இது ஒரு ஜனநாயக நாடு. கம்யூனிசத்தை ஒழுங்காகக் கடைபிடித்திருந்தால், இந்த நாடு கம்யூனிஸ்ட்களின் ஆட்சிக்குள் என்றோ வந்திருக்கும். ஏன் வரவில்லை?
அவர்கள் நியாயத்திற்காகப் போராடவில்லை என்பதுதான் உண்மையான காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 8
வர்ணாஸ்ரம தர்மம் என்பது மனோ தத்துவ ரீதியில் அமைந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்
"Nature Human Behaviour" என்ற அமெரிக்கப் பத்திரிகை மாபெரும் கருத்துக் கணிப்பு ஒன்றை உலகளவில் நடத்தியது. அதன் விளைவாக அது மக்களை
"Reserved, role model, self-centred and average" என நான்கு விதமாகப் பிரித்தது.
இதில் ...
Reserved என்பது 'போதும் என்ற மனநிலையில் (contentment) அமைதியாக ஒதுங்கி வாழ்பவர்களைக் குறிப்பது'. இவர்கள் "un-active type of people". வர்ணாஸ்ரம தர்மத்தில் இவர்களை 'பிராமணன்' என்கிறோம்.
role model and self-centred என்பது 'செயல் திறன் மிக்கவர்களை, எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசையுடன் செயல்படுபவர்களைக் குறிப்பது'. இவர்கள் "active type of people". .. வர்ணாஸ்ரம தர்மத்தில் இவர்களை முறையே 'க்ஷத்திரியன், வைஸ்யன்' என அழைக்கிறோம்.
average என்பது 'செயலூக்கம் இல்லாதவனை, சோம்பல் மிகுந்தவனைக் குறிப்பது. இவர்கள் "inactive type of people". .. வர்ணாஸ்ரம தர்மத்தில் இவர்களை 'சூத்திரன்' என்கிறோம்.
இந்த நான்கு பிரிவு என்பது எப்போதும், எங்கேயும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். ஆட்சி என்று வரும்போது .. அது ஜனநாயக நாடாக இருந்தாலும், சர்வாதிகார நாடாக இருந்தாலும் .. ஆட்சியில் இருப்பவன் க்ஷத்திரிய தர்மத்தின் படி நடக்காவிட்டால் என்றேனும் ஒரு நாள் புரட்சி வெடிப்பதைத் தவிர்க்க முடியாது.
மீண்டும் சொல்கிறேன் .. "க்ஷத்திரிய தர்மம் என்பது தனி மனிதனுக்கானது என்றால், கம்யூனிசம் என்பது சமூகம் சார்ந்தது".
சுதந்திரம் அடைந்த பொழுது நமது நாட்டில் ஜீவானந்தம், நிருபன் சக்கரவர்த்தி போன்ற அற்புதமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் இருந்தார்கள். ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சியால் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட முடியவில்லை. ஏன்?
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 9
ஒரு ஜனநாயக நாட்டில் க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும் கைகோர்த்து பயணம் செய்தால், அந்த நாடு நன்கு வளம் பெறும்.
ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை என்பது எனது அபிப்பிராயம்.
பதிவு 8-ல் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு
க்ஷத்திரியன் கடைபிடிக்க வேண்டிய 7 முக்கிய விதிகளைக் குறிப்பிட்டுள்ளேன். அவற்றைக் கம்யூனிஸ்ட்கள் கடைபிடிக்கிறார்களா?
கம்யூனிசம் என்பது ஒரு தத்துவம். அது எப்போதும் இருக்கும்.
கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இல்லை என்றாலும் கம்யூனிச உணர்வு பலரிடம் இருந்துகொண்டுதான் இருக்கும். கம்யூனிச உணர்வு இல்லாத க்ஷத்திரியனைப் பார்க்க முடியாது. அவனுக்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால், கம்யூனிச உணர்வு கண்டிப்பாக இருக்கும்.
அப்படியானால் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏன் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட முடியவில்லை? அதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.
எதற்காக கம்யூனிசத்தைப் பற்றி இந்தத் தொடரில் எழுத வேண்டும் என சிலர் நினைக்கலாம். எல்லா மனிதர்களாலும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க முடியாது; ஆனால், அவர்களுக்குள் கம்யூனிச உணர்வு இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
உண்மையில் எல்லா மனிதர்களிடமும் இந்த உணர்வு விதையாக உள்ளது. அது முளைத்து வளர்வதற்கான முயற்சியை தனது பிரதானக் கொள்கையாக கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய மறந்து விட்டார்கள்.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 10
குடும்ப அரசியல் செய்யாத அரசியல் கட்சிகள் எவையெனக் கேட்டால், நமக்கு நினைவிற்கு வருவது பி.ஜே.பி. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும்தான்.
பி.ஜே.பி-ஐ விட மூத்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. ஆனாலும், பி.ஜே.பி-ன் வளர்ச்சியை அதனால் எட்ட முடியவில்லை. ஏன்?
முக்கியமான காரணம் எல்லா மனிதர்களையும் அரவணைத்துச் செல்லத் தவறியதுதான்.
திருவள்ளுவர் கூறுகிறார்:-
"செய்தக்க அல்ல செயக்கெடும்
செய்தக்க
செய்யாமை யானும் கெடும்"
.. குறள் 466
ஜனநாயக நாட்டில் மக்களிடம் சமுதாய உணர்வை ஊட்டி, அதன் அடிப்படையில் ஒரு கட்சி இயங்குவது அந்தக் கட்சிக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. ஆனால், கம்யூனிஸ்ட்கள் பொதுமக்களிடம் சமுதாய உணர்வை ஊட்டத் தவறி விட்டார்கள். அதற்கானக் காரணங்கள் என்னென்ன?
முக்கியமான மூன்று காரணங்களைப் பார்ப்போம்:-
1. ஒரு க்ஷத்திரியனிடம்
"நீ கடைப்பிடிக்கும் தர்மத்தை ஒரு வரியில் சொல்" என்றால், அவனது பதில் இவ்வாறு இருக்கும்:-
"இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, பற்றற்று கர்ம யோகத்தை அனுசரிக்க வேண்டும்" .. கீதை 3.7.
ஒரு கம்யூனிஸ்ட் தோழரிடம் "கம்யூனிசம் என்றால் என்னவென்று ஒரு வரியில் சொல்லுங்கள்" எனக் கேட்டால், அவன் "பாசிசம், அதிகார வர்க்கம், சமுதாயப் புரட்சி" என நிறைய சொல்லுவான். ஆனால், மையக் கருத்தை ஒரு வரியில் அவனால் சொல்ல இயலாது.
கார்ல் மார்க்ஸ் அவர்கள் ஒரு ஜெர்மானிய தத்துவ நிபுணர். அதிகார வர்க்கம் தொழிலாளர்களை சுரண்டுவதைப் பார்த்து அது களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் எழுதிய நூல்தான் "Das Kapital".
இந்த நூல்தான் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு வழிகாட்டி. இதை வைத்துக்கொண்டு 'தொழிலாளர்களை யாரும் சுரண்டாமல் பார்த்துக் கொள்வது மட்டும்தான் கம்யூனிசம்'
என்றால் அது சரியா? யாரும் யாரையும் சுரண்டக் கூடாது என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்!?
என்னைப் பொறுத்தவரை, "அடுத்தவன் வயிற்றில் அடிக்கக் கூடாது" -- அதுதான் கம்யூனிசம்.
'நவோதயா பள்ளிக்கூடம் வேண்டாம், நீட் தேர்வு வேண்டாம்' என்று யாரேனும் சொன்னால், அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்திருக்க வேண்டாமா? அதைச் செய்யவில்லையே!? அப்படியானால், அந்தக் கட்சிக்கு சமுதாய உணர்வு இல்லை என்றுதானே அர்த்தம்!?
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 11
2. கார்ல் மார்க்ஸ் தொழிலாளர்களை ஆதிக்க சக்தியினர் சுரண்டுவது கண்டு அதற்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
அதனைக் கருத்தில் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப் பட்டது. நமது நாட்டிலும் தொழிலாளர்களுக்குப் பலவித உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு.
தொழிலாளர் நலனை மட்டும் முன்னிருத்தி கட்சி செயல்பட ஆரம்பித்தது. விளைவு .. தொழிலாளர்களை வழிநடத்த வேண்டிய கட்சி, அவர்களின் பின்னே நடைபோடத் தொடங்கிவிட்டது.
அதன் காரணமாகக் கட்சியால் அவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியவில்லை.
உதாரணமாக கேரளாவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் "நோக்கு கூலி" முறையைத் தடுக்க முடிந்ததா? அதற்கு எதிராக சட்டம் இயற்றிய பின்னும் அது நடைபெற்று வருகிறது என்றுதானே சொல்கிறார்கள்.
அத்துடன் நாட்டில் நடக்கும் பல தவறுகளை, கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டிக்காமல் விட்டு விடுகிறார்கள். சமுதாய உணர்வுடன் செயல்பட வேண்டிய கட்சி அப்படி இருக்கலாமா?
3. நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. எதேச்சாதிகார நாடாக இருந்தால், அங்கு ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்வதில் நியாயம் இருக்கலாம். ஜனநாயக நாட்டில் நக்சல்பாரி போன்ற இயக்கங்களின் தேவை என்ன?
ஆட்சி மாற்றம் வேண்டுமென்று விரும்பினால், அவர்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் 'ஊராட்சி' தேர்தல்களில் வெற்றி பெற்று, அதை நன்கு நிர்வகித்தால் அடுத்தடுத்த ஊராட்சிகளில் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்குமே!!
நல்ல பெயர் கிடைத்தபின் சட்டசபை தேர்தல்களிலும் கலந்து கொள்ளலாமே!?
இத்தகைய வாய்ப்புகள் இருந்தும் அரசோடு ஆயுதம் தாங்கி மோத வேண்டிய அவசியம் என்ன? எதற்காக கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்?
அது, அரசியலில் இருந்துகொண்டே மறைமுகமாக ஜனநாயகத்தைத் தாக்குவது போல் ஆகாதா?
இதுபோன்ற செயல்கள் மக்களிடம் வெறுப்பை வளர்க்கும் என்பது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 12
எதற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி கவலைப்பட வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?
கம்யூனிஸ்டுகள் சாதாரண மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள். அவர்கள் நோக்கம் ஆதிக்க சக்தியை எதிர்ப்பதுதான் என மக்கள் நினைக்கும் படி நடந்து கொள்வதுதான் அவர்கள் செய்யும் பெரும் தவறு.
மக்களிடம் சமுதாய உணர்வை ஊட்டுவது அவர்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே "க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்" கைகோர்த்து பயணிப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும். அது ஜனநாயக நாட்டிற்கு மேலும், மேலும் வலு சேர்க்கும்.
பேரிடர் காலங்களில் ஏழை, எளிய மக்களிடம் இருந்து வெளிப்படும் சமுதாய உணர்வு அபரிமிதமான ஒன்று. அதே போன்ற உணர்வை எல்லாக் காலங்களிலும், எல்லா மக்களும் கடைப்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது கம்யூனிசம் பேசுபவர்களின் கடமையாக இருக்க வேண்டாமா?
அதுதான் இல்லை; நியாயத்திற்காகப் போராடுகிறார்களா என்றால் அதுவும் சந்தேகமாக இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை கம்யூனிசம் என்பதன் பொருள் "அடுத்தவன் வயிற்றில் அடிக்கக் கூடாது". இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், கம்யூனிஸ்ட்கள் தங்கள் கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
எனது கருத்து சரி என்றால், இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் என்ன? (நிறைய கேள்விகள் கேட்கலாம்; ஆனாலும் இரண்டு கேள்விகளோடு நிறுத்திக் கொள்கிறேன்).
1. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 'டாஸ்மாக்' வியாபாரம் இருப்பதால்தான் சம்பளம் கொடுக்க முடிகிறது; இல்லையெனில் மிகவும் கஷ்டமாகிவிடும் எனச் சொல்கிறார்கள்.
அதாவது அடுத்தவன் குடியைக் கெடுத்துத்தான் சம்பளம் கொடுக்க முடிகிறது என்கிறார்கள்.
இந்த நிலையில் 'அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; எங்களுக்கு சம்பளத்தை உயர்த்து' எனப் போராடினால், அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிப்பது முறையா?
2. சமீபத்தில் கேரள ஆளுனர் தெரிவித்த குற்றச்சாட்டு .. "மந்திரிகள் தங்களுக்கு
P.A.-ஆக சிலரை (தங்களுக்கு வேண்டயவர்களை) வேலையில் அமர்த்துகிறார்கள். இரண்டு வருடங்கள் கழிந்ததும் அவர்களை நீக்கிவிட்டு வேறு சிலரை வேலையில் அமர்த்துகிறார்கள். இரண்டு வருடங்கள் மட்டுமே வேலையில் இருந்தாலும் அவர்களுக்கு முழு 'பென்சன்' வழங்கப் படுகிறது".
இந்தக் குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது எனக்குத் தெரியாது. இது உண்மையென்றால், நாம் மறைமுகமாக 'அடுத்தவன் வயிற்றில் அடிக்கிறோம்' என்றுதானே அர்த்தம்!?
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 13
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இது வலிமை மிகுந்த, வளம் நிறைந்த நாடாக இருக்க வேண்டுமென்றால், ஆட்சியில் இருப்பவர்கள் "க்ஷத்திரிய தர்மத்தைக்" கடைப்பிடிக்க வேண்டும்.
பிரதான எதிர் கட்சிகள் மக்களிடம் சமுதாய உணர்வுகளை எழுப்பி, அதன் மூலம் மக்களிடம் நல்லெண்ணத்தை வளர்த்து, எங்களால் இன்னும் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடியும் என நிரூபிக்க வேண்டும்.
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்"
.. குறள் 448
சிறந்த எதிர் கட்சி இல்லையெனில், நாட்டின் ஜனநாயகம் சீரழிந்து விட நிறைய வாய்ப்புகள் உண்டு.
அகில இந்திய அளவில், பரவலாக அறியப்பட்ட கட்சிகள் -- ஆட்சியில் உள்ள பா.ஜ.கா. தவிர -- காங்கிரஸும், கம்யூனிஸ்ட் இரண்டும்தான்.
இவற்றில் காங்கிரஸ் குடும்பக் கட்சியாக மாறி விட்டது. இருப்பது கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுதான்.
ஆனால், அவர்களிடம் நிறைய குறைகள் உள்ளன. எனவே, பலம் பெற்ற எதிர் கட்சியாக இருக்க வேண்டுமென்றால், அது கட்சியின் செயல்பாடு பற்றி "சுய பரிசோதனை" செய்வது மிகவும் அவசியம்.
எனது குற்றச்சாட்டு தவறாகத் தோன்றலாம். எனது நிலைப்பாட்டை நியாயப் படுத்த ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவு கூறுகிறேன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்ந்த நண்பர் என்னிடம் "எங்களின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. நீங்களும் வாருங்களேன்" என்றார்.
நானும் அங்கு எப்படி கலந்துரையாடல் நடைபெறுகிறது என அறிந்து கொள்ளும் ஆவலில் அவருடன் சென்றேன்.
(இது நடந்தது 30 வருஷங்களுக்கு முன்னர்)
மாவட்டத் தலைவர் சுமார் முப்பது நிமிடங்கள் பேசினார். அவர் பேசியதின் சாரம் "நாம் இனியும் ரஷ்யாவைப் பார்; சீனாவைப் பார் என்று பேசக்கூடாது. நாம் நமது நாட்டைப் பற்றி மட்டுமே பேசவேண்டும்..." ஆனால், அரைமணி நேரமும் ரஷ்யாவை ஒப்பிட்டே பேசினார்.
அவர் பேசி முடித்ததும் கூட்டத்தை முடித்து விட்டார்.
அப்போது எனக்கு ஒன்று புரிந்தது. அவர்களின் "பொலிட்பீரோ" எப்படி இயங்குகிறது என எனக்குத் தெரியாது; ஆனால், கீழ் மட்டத்தில் உள்ளவர்களிடம் தேசிய சிந்தனையும் இல்லை, தெளிவான சமுதாயப் பார்வையும் இல்லை.
தோழர் ஜீவானந்தம் போன்றவர்கள் ஆளுமை செலுத்திய கட்சி எப்படி மாறிவிட்டது என அறிந்து வேதனைப் பட்டேன்.
ஏழை, எளிய மக்களுடன் தொடர்பில் உள்ள கட்சி, மக்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்காமல், வெறுமனே தொழிலாளர் நலத்தில் மட்டுமே அக்கறை செலுத்தும் கட்சியாக மாறிவிட்டது.
பிரதான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய கட்சி, பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவருவது வருத்தத்திற்கு உரியது.
பி.ஜே.பி. கட்சியின் பின்னணியில் RSS உள்ளது. அதன் கோட்பாடுகள் அனைவரும் அறிந்த ஒன்று. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்பாடுகள் என்ன என்று நாம் அறிவோமா?
சொல்லப்போனால், RSS-ல் உள்ள தொண்டர்களிடம் இருக்கும் சமுதாய உணர்வு, கம்யூனிஸ்ட் தோழர்களிடம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.
இன்னமும் கூட ஏழை, எளிய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் தங்களின் செயல்பாட்டை "சுய பரிசோதனை" செய்வது அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 14
கம்யூனிசத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று சொல்பவர்கள் மக்களிடம் சமுதாய உணர்வை ஊட்ட வேண்டும்; சமுதாய சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பி.ஜே.பி-யின் பின்னணியில் RSS உள்ளது. அது பலவிதமான சமூக சேவைகள் செய்கிறது.
கம்யூனிசத்தின் வழி நடப்பவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காக என்ன சேவைகள் செய்கின்றன?
எனது இரண்டு அனுபவங்களைச் சொல்லிவிட்டு மீண்டும் க்ஷத்திரிய தர்மம் பற்றி பார்ப்போம்.
1. பல வருடங்களுக்கு முன் 'அறிவொளி இயக்கம்' ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆர்வமுடன் அதில் கலந்து கொண்டேன்.
(சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், அந்த இயக்கம் வெற்றிபெறவில்லை).
நாங்கள் வசித்துவந்த இடத்தின் அருகில் இருந்த குடிசை வாழ் மக்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன் மையக் கருத்து.
பாடம் எடுக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு இடம் கொடுத்தார்கள். முதல் நாள் நிறைய பேர் வந்தார்கள். அடுத்த நாள் பெண்கள் மட்டும் வகுப்பறையில் இருக்க, ஆண்கள் வெளியில் இருந்து கேலி செய்தார்கள். விளைவு அடுத்த நாள் பெண்கள் வருகையும் குறைந்து விட்டது.
அந்தப் பகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் சார்ந்தே இருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால், எல்லாரையும் கட்டாயப் படுத்தி வகுப்பில் கலந்து கொள்ள வற்புறுத்தியிருக்கலாம்.
அத்துடன், வகுப்புகள் நடப்பதை மேற்பார்வை செய்திருந்தாலும், இயக்கத்தில் தொய்வு இருந்திருக்காது. ஒரு நல்ல திட்டம் வீணாகிப் போனது.
பின் குறிப்பு:-
பாடங்கள் நடத்துவதற்கு என்னுடன் இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். ஆக நாங்கள் இருவர் மட்டுமே பயிற்சி கொடுப்பவர்கள்.
நான் அவரிடம் "நான் துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறேன். இது ஒரு சேவை என நினைத்து இங்கு வருகிறேன். நீங்கள் வேலை எதுவும் பார்க்கவில்லை. வேலை தேடும் நீங்கள் எதனால் இங்கு வருகிறீர்கள்?"
அவர் சொன்ன பதில் "இங்கு இவர்களுக்குப் பாடம் எடுத்தால், அதற்காக ஒரு சான்றிதழ் (certificate) தருவார்கள். நான் வேலைக்காக interview-க்குப் போனால், அந்தச் சான்றிதழ் இருந்தால் நல்லதுதானே!"
இருவரும் பாடம் கற்பிக்கத்தான் போனோம். ஆனால் இருவரின் நோக்கமும் வேறு வேறாக இருந்தது.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 15
2. எனக்குத் தெரிந்த சிலர் கந்து வட்டியில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
அவர்களை மீட்டெடுக்க விரும்பினேன்.
அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று ஒரு நிதி நிறுவனம் ஆரம்பித்தேன். நண்பர்கள் என்னை நம்பி பணம் கொடுத்தார்கள்.
'Diminishing Balance' முறையில் வட்டி வாங்கி நண்பர்களுக்கு பகிர்ந்தளித்தேன். நான் நினைத்ததைவிட நிறுவனம் நன்றாக நடந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நண்பரிடம் (அவருக்கு நிறுவனம் பற்றி நன்கு தெரியும்) "என்னால் களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாது; கந்து வட்டி நடத்துபவர்களின் பகையைச் சந்திக்க நேரிடும். தவிர இதைப் பெரியதாகவும் விரிவு படுத்த முடியாது. இது போன்ற நிறுவனத்தை கட்சியை ஆரம்பிக்கச் சொல்லுங்கள். எல்லா வகையிலும் நான் உதவுகிறேன். இதைச் செய்தால் தூத்துக்குடி நகரத்தில் சிறியஅளவில் தொழில் செய்பவர்களை கந்து வட்டி கொடுமையிலிருந்து காப்பாற்றலாம். கட்சி மூலமாக இதைச் செய்யும்போது 'வாராக்கடன்' பிரச்சினையும் வராது. தவிர கட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும்" என்றேன்.
அவர் "கட்சி இதிலெல்லாம் தலையிடாது" என்று சொல்லி விட்டார்.
(இப்போது மோடி அரசு "முத்ரா" திட்டம் என்ற பெயரில், இதுபோன்றதொரு திட்டத்தை வகுத்து சிறப்பாக நடத்தி வருகிறது)
பின்னர் மத்திய அரசு NBFC அமைப்பில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததால், தொடர்ந்து நிதி நிறுவனத்தை நடத்த முடியாமல், நிறுவனத்தை மூடி விட்டேன்.
நிதி நிறுவனம் நடத்திய போது, நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம்!
கூலி வேலை செய்பவர் அவர். எனக்கு நன்கு தெரிந்தவர்.
அவர் 1000 ரூபாய் கடனாகப் பெற்று 'வாரந்தோறும்'
(சனிக்கிழமை) 100 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். அவரிடம் எனது திட்டத்தைப் பற்றி சொன்னேன். அவருக்கு நான் சொன்னது எதுவும் புரியவில்லை; ஆனால், நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று சொன்னார்.
அவரிடம் 1000 ரூபாயைக் கொடுத்து "நீங்கள் வாங்கிய கடனை அடைத்துவிடுங்கள். வழக்கம்போல எனக்கு வாரந்தோறும் 100 ரூபாய் கொடுத்துவிடுங்கள். உங்களது கடனும் விரைவில் அடைந்துவிடும்" என்று சொன்னேன்.
முதல் மாதம் 300 ரூபாய் கட்டினார். இரண்டாவது மாதம் 500 ரூபாய் கட்டினார். மூன்றாவது மாதத்தில் அவரது கடன் முழுவதும் அடைபட்டு விட்டது. (மொத்தமாக அவர் கட்டியிருந்த வட்டி 40 ரூபாய்ககும் குறைவு) ஆனால் கடைசியாக இருந்த நிலுவைத் தொகையை கேட்டு வாங்க வேண்டியிருந்தது. அதற்காக அவரைக் கடிந்து கொண்டேன்.
நான் கடிந்து பேசியதைக் கேட்டவர் "ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசம், sir" என்று சொன்னார்.
ஏனென்று கேட்டதற்கு "எனக்குக் கடன் கொடுத்த கந்து வட்டிக்காரர் ரொம்ப நல்லவர். வட்டி மட்டும்தான் வாங்குவார்; அசலைத் திருப்பிக் கேட்கவே மாட்டார். நீங்கள் அசலையும் திரும்ப வாங்கிக் கொண்டீர்களே" என்றார்.
அவரது பதிலைக் கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை.
இங்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதுதான் கோபம் வந்தது. அவர்களுக்குத் தொழிலாளர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. இருந்தும் பொருளாதாரம் பற்றி ஒரு சாதாரண புரிதலைக் கூட அறியவிடாமல் ..!?
கண்டனக் குரல் எழுப்ப சொல்லிக் கொடுக்கிறார்கள்; போராட சொல்லிக் கொடுக்கிறார்கள்; வேலை நிறுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், பொருளாதாரம் பற்றி ஒரு அடிப்படைப் புரிதலைக் கூட சொல்லிக்கொடுக்க மறந்து விட்டார்கள்.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 16
இனி க்ஷத்திரிய தர்மம் குறித்து பார்ப்போம்.
கீதை மனிதர்களை 'பிராமணன், க்ஷத்திரியன், வைஸ்யன், சூத்திரன்' என நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிறது.
(மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன்: மனிதனின் பிறப்பிற்கும், அவனது வர்ணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அது அவனது குணத்தையும், மனோபாவத்தையும் பொறுத்தது)
இவர்களில் யார் யாரெல்லாம் க்ஷத்திரிய தர்மத்தை நன்கு கடைப்பிடிப்பார்கள் எனப் பார்ப்போம்.
பிராமணன்: இவர் செயலூக்கம் இன்றி ஒதுங்கி வாழ்பவர். மற்றவர்களுக்கு நல்வழியைக் காட்டக்கூடியவர். இவர் எந்த செயல் செய்தாலும், அது க்ஷத்திரிய தர்மத்திற்கு உட்பட்டதாகத்தான் இருக்கும்.
க்ஷத்திரியன்: இவரது இயல்பு 'எந்த நிலையிலும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதுதான்'. இவர் உணர்ச்சி மேலிட செயல் படுபவர். எனவே இவருக்குப் பெரியோரின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.
வைஸ்யன்: இவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்ப்பது நல்லது.
ஒரு பிரிவினர் "self-centred type".
இன்னொரு பிரிவினர் "selfish type".
முதலாவது பிரிவினர் (self-centred) "தான், தன் குடும்பம்" என்று இருப்பவர்கள். பொதுவாழ்வில் ஈடுபட விரும்பினாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக ஒதுங்கியே இருப்பார்கள். தவறான வழியில் பணம் சேர்க்க விரும்ப மாட்டார்கள். யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள். இவர்கள் மனதளவில் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள்.
இரண்டாவது பிரிவினர்: இவர்களும் (selfish) "தான், தன் குடும்பம்" என்று இருப்பவர்கள்தான். இவர்களிடம் க்ஷத்திரிய தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் பேராசை பிடித்தவர்கள். தான் நன்றாக இருப்பதற்கு, அடுத்தவரைப் கெடுக்க வேண்டுமென்றால் தயங்கவே மாட்டார்கள்.
இவர்கள் அரசியலுக்கு வந்தால், நாட்டை சீரழித்து விடுவார்கள்.
சூத்திரன்: இவர்களிடம் சோம்பல் மிகுந்து காணப்படும். பொதுவாழ்வில் நேரடியாக இறங்க மாட்டார்கள். ஆனாலும், ஒரு க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவனைப் பின்பற்றினால், இவர்களும் க்ஷத்திரிய தர்மம் என்றால் என்ன என்று அறியாமலே அதன்வழி நடக்கலாம்.
(தொடரும்)
க்ஷத்திரிய தர்மமும், கம்யூனிசமும்
பதிவு 17
'க்ஷத்திரிய தர்மத்தை' கடைப்பிடிக்கும் மனிதர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்:-
1. தனியாக செயல்படுபவர்கள்
2. குழுவாக செயல்படுபவர்கள்
3. அரசியலில் இறங்கி வேலை செய்பவர்கள்
இவர்களில் தனி ஆளாக ஒரு
மனிதன் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து பொது சேவையில் இறங்கினால், பலவிதமான அதிர்ச்சிகளைச் சந்திக்க நேரிடும். அவற்றைக் கண்டு துவண்டு விடக்கூடாது.
உண்மையில் அவை அவனை மறைமுகமாக 'அகத்தாய்வு' நோக்கி தள்ளிவிடும். பண்பு நிறைந்த மனிதனாக மாற்றுவதற்கு அவை உதவி செய்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
'குழுவாக' செயல்படும் போது இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது.
ஒரு மனிதன் அரசியல்வாதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் பொழுது, அவன் "க்ஷத்திரிய தர்மத்தை" கடைப்பிடிக்கிறானா இல்லையா என்று நாம்தான் கண்டுகொள்ள வேண்டும்.
அவன் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வில்லை எனத் தெரிந்தால், அவனை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தத் தயங்கக் கூடாது. அது நாட்டிற்கு நாம் செய்யும் நன்மையாகும்.
இல்லையெனில், அதுவே நாம் நம் சந்ததியினருக்கு செய்யும் துரோகம் ஆகும்.
(முற்றும்)
No comments:
Post a Comment