"நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே"
.. திருமந்திரம் 85
மேலே உள்ள பாடலின் கடைசி இரண்டு வரிகளில் வரும் வார்த்தைகளை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நமது சுவாசத்திற்கும், "ஓம் நமசிவாய" எனும் மந்திரத்திற்கும் இடையே ஒரு ஒத்திசைவு உள்ளது.
சுவாசம் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் 1:2 என்ற விகிதத்தில் இருக்கும். "ஓம் நமசிவாய" எனும் மந்திரமும் அதே விகிதத்தில் தான் உள்ளது.
(ஓம் .. 3; நமசிவாய .. 6)
எனவே, மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது மௌனமாக "ஓம்" என்று உச்சரியுங்கள்; மூச்சுக் காற்றை வெளி விடும் போது மௌனமாக "நமசிவாய" என்று உச்சரியுங்கள்.
மற்ற மந்திரங்கள் 1:2 என்ற விகிதத்தில் இருக்காது. ஆனால், பயிற்சி செய்யும் பொருட்டு சிறிய மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு - -
அயம் ஆத்மனே
ஓம் சரவணாய
ஓம் கிருஷ்ணாய
ஓம் வெங்கடேச
ஓ லார்ட்
ஓ ஜீசஸ்
இதனை 'பிரணாயாமப் பயிற்சி' செய்யும்போதும் பயன்படுத்தலாம்; சும்மா இருக்கும் மற்ற நேரங்களிலும், மூச்சு வந்து போவதைக் கவனித்து அதனுடன் இந்த மந்திரத்தைச் சேர்த்து சொல்லலாம்.
இந்தப் பயிற்சியை முறையாக செய்து வந்தால், அது உங்களுக்கும், ஆழ்மனப் பதிவுகளுக்கும் இடையே ஒரு நிரந்தரப் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி விடும்.
அதன்பின் ஆழ்மனதில் உள்ள 'எதிர்மறை உணர்ச்சிகளால்' உங்களை உசுப்பேத்த முடியாது.
இதனால்தான் மாணிக்கவாசகரும் "இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி" என்று பாடினாரோ?
இனி, பாதுகாப்பு கவசம் எப்படி உருவாகிறது எனப் பார்ப்போம்.
நாம் தினந்தோறும் தேவாரம். திருவாசகம், கந்த சஷ்டி கவசம் என ஏதாவது ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறோம். அவை ஆழ்மனதில் நினைவுப் பெட்டகத்தில் தங்கி விடுகின்றன. தேவைப்படும்போது அவற்றை நம்மால் நினைவுகூற முடிகிறது.
நாம் சாப்பிடும் உணவு உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் வழியாகப் பயணிக்கிறது.
உணவிலிருந்து சத்துக்களைப் பிரித்தெடுத்து அது இரத்தமாக மாறி நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆக, ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது.
ஆனால், நாம் சுவாசத்தோடு "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரிக்கும்போது என்ன நடக்கிறது?
நாம் சுவாசிக்கும் போது ஆக்சிஜன் மட்டும் வருவதில்லை; கூடவே பிராண வாயுவும் (பிராண சக்தி) உள்ளே வருகிறது.
பயிற்சியாளரின் அனுபவத்தில், உச்சரிக்கப்படும் மந்திரம் பிராண வாயுவோடு இணைந்து உடல் முழுவதும் பரவியிருப்பது போன்ற ஒரு உணர்வு உருவாகிறது.
பிராண வாயு மட்டுமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லக் கூடிய தன்மை உடையது. ஆக, உடல் பிராண வாயுடன் வரும் மந்திரத்தைப் பற்றிக் கொண்டு விடுகிறது.
இதனைத்தான், இந்தப் பற்றுதலைத் தான் திருமூலர் "..ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.." எனக் கூறுகிறார்.
அடுத்த வரியில் "தான் பற்றப் பற்ற" என்று சொல்கிறாரே; அந்தத் "தான்" எதைக் குறிக்கிறது?
"தான்" என்பது தன்னுடைய ஊனுடம்பைத்தான் குறிக்கிறது. அப்படி என்றால், "ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்" என்று சொன்னவர் "தான் பற்றப் பற்ற" என மீண்டும் ஏன் சொல்கிறார்?
உடம்பைப் பார்த்து திருமூலர் "ஒரு தடவை மந்திரத்தைப் பற்றிக் கொண்டதும் நிறுத்திவிடாதே. அந்த மந்திரம் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் பரவ வேண்டும். ஆகவே மீண்டும் மீண்டும் மந்திரத்தைப் பற்றிக் கொண்டே இரு. அப்படிப் பற்றினால்தான் உன்னால் 'தலைப்பட' முடியும்" எனக் கூறுகிறார்.
"தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே". 'தலைப்படும்' என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. நாம் நமக்கே உரிய பாணியில் அதனைப் புரிந்து கொள்வோம்.
உடல் மந்திரத்தை உள்வாங்கி உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் அதனைப் பரவச் செய்து விட்டால், தன்னிச்சையாக அந்த மந்திரம் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.
அத்துடன் நாம் என்ன செயல் செய்து கொண்டிருந்தாலும், அந்த மந்திரம் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.
நாம் அதை உணராமல் இருக்கலாம். ஆனாலும், அது தன்னிச்சையாக உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.
நம் உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் மந்திரத்தை நம்மால் இரு தருணங்களில் உணர முடியும்.
வேலைகள் எதுவுமின்றி சும்மா இருக்கும்போது, நாம் பயிற்சியின் போது உச்சரித்து வந்த மந்திரம் மூச்சோடு கலந்து தானே முன்வந்து நிற்கும் .. (தலைப்படும் தானே!). தவிர, நமது சுவாசத்தைக் கவனித்தால் அதன் கூடவே பயணிக்கும் மந்திரத்தின் அதிர்வலைகளை உணரலாம்.
சிலரால் அதை உணர முடியாமல் போகலாம்.
ஆனால் இரண்டாவது தருணம் மிகச் சரியாக அதை உணர வைக்கும்.
நமது ஆழ்மனதில் 'எதிர்மறை உணர்ச்சியின்' காரணமாக உருவாகும் பதிவுகள், நமது முதல்தர எதிரிகளாகும். அவை எப்போதும் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம்மை உசுப்பேத்தி விடத் தயங்காது. அதன் காரணமாக நாமும் சில காரியங்களைச் செய்து பின்னர் அதன் விளைவுகளைச் சந்தித்து வருந்த நேரிடும்.
இப்பொழுதோ அந்தப் பிரச்சினை இருக்காது. ஏனெனில் நம்முள் உச்சரிக்கப்படும் மந்திரம் உணர்வு மனத்திற்கும், ஆழ்மனத்திற்கும் இடையே ஒரு தடுப்பு கவசமாக மாறி 'எதிர்மறை உணர்ச்சிகள்' நம்மை உசுப்பேத்த விடாமல் பார்த்துக் கொள்ளும்
இதன் காரணமாக, 'எதிர்மறை உணர்ச்சி' பதிவுகள் படிப்படியாக வலிமை இழந்து, சத்துவ குணம் மேலோங்கத் தொடங்கும்.
'எதிர்மறை உணர்ச்சி' பதிவுகள் நீங்க, நீங்க நாமும் நம்மை அறியாமலே சத்துவ குணம் மிக்க மனிதர்களாக மாற ஆரம்பித்து விடுவோம்.
இது தவிர, வேறு ஒரு முக்கிய நன்மையும் நமக்குக் கிட்டும். எந்தவித இடைஞ்சலும் இன்றி நாம் தியானம் செய்ய ஆரம்பித்து விடலாம்.
நாம் செய்த மந்திரத்தோடு இணைந்த மூச்சுப் பயிற்சிக்கும், அட்டாங்க யோகத்தில் வரும் "தாரணைக்கும்" உள்ள வித்தியாசம் என்ன?
"பிரத்தியாகாரம்" என்பது வெளியே சஞ்சரிக்கும் மனதை தடுத்து, அதை உட்பக்கமாக கவனம் செலுத்த வைக்கும் ஒரு செயலாகும். ஏனெனில், மனம் வெளியே செல்லாமல் இருந்தால்தான் நம்மால் "தாரணையைச்" சரியாக கடைப்பிடிக்க முடியும்.
தாரணை வெற்றி பெற வேண்டுமானால் மனதைக் கட்டுக்குள் வைப்பது அவசியமான ஒன்று.
(It is an act of 'over-powering')
மூச்சுப் பயிற்சியில் இதற்கானத் தேவை எதுவும் இல்லை. காரணம் இந்தப் பயிற்சி மனதின் உதவியின்றி நடப்பது.
(It is an act of 'overcoming')
தாரணையில் நாம் மனதில் ஒருமுக கவனத்தைக் கொண்டுவந்து, அதை தியானம் செய்வதற்காகப் பக்குவப் படுத்துகிறோம். ஏனெனில், தாரணையில் ஈடுபடும்போது மனதை தியான நிலைக்குப் பக்குவப் படுத்த வேண்டுமென்ற ஒரு நோக்கம் இருந்தது.
ஆனால், நாம் செய்யும் மூச்சுப் பயிற்சியில் அந்த விதமான நோக்கம் எதுவும் கிடையாது. இருப்பினும், பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றால், மனம் அதற்கான பக்குவத்தை அடைந்து விடுகிறது.
நாம் செய்து வந்த மூச்சுப் பயிற்சியினால் கிடைக்கும் இரண்டாவது மிகப்பெரிய நன்மை, நம்மால் எளிதாக தியான நிலையை அடைந்து விட முடியும் என்பதுதான்.
தியானம் செய்வது எப்படி என்று பலரும் பல விதமாகச் சொல்லித் தருகிறார்கள். முறைகள் வேறுபட்டாலும், அவை அனைத்தும் இறுதியில் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன.
அந்த இலக்கு —
"அஹங்காரத்தின் அழிவு".
No comments:
Post a Comment