அஞ்சும் அடக்கு
பதிவு 1
"அஞ்சும் அடக்கு, அடக்கு"
என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும்
அங்கு இல்லை
அஞ்சும் அடுக்கில்
அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு
அறிந்தேனே
.. திருமந்திரம் 2033
அஞ்சும் அடக்கினால் அது அறிவற்ற சடப்பொருளுக்கு சமம்; தவிர ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை என்கிறார் திருமூலர்.
கூடவே, ஐந்தையும் அடக்காமல் இயங்கும் உபாயத்தை அறிந்து கொண்டேன் என்றும் சொல்கிறார்.
திருவள்ளுவர், பத்திரகிரியார் போன்றோர் சொல்லியிருப்பவைகளை பார்த்தால், அவை திருமூலர் கருத்துக்கு எதிரான கருத்துக்களாக தோற்றம் அளிக்கின்றன.
இதனை எப்படி புரிந்து கொள்வது?
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 2
ஒருமையுள் ஆமைபோல்
ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து
.. திருக்குறள் 126
திருவள்ளுவர் "ஐந்தடக்கல்" என்று கூறுகிறார்; எந்த ஐந்து என்று கூறவில்லை. ஆனால் விளக்கம் கொடுப்பவர்களில் சிலர் "ஐந்து பொறிகள்" என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆமை வரும் ஆட்கண்டு
ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு
ஒடுங்குவது மெக்காலம்?
.. பத்திரகிரியார் (19)
இதற்கு உரை எழுதியவர்கள் "பஞ்சேந்திரியங்களை ஒடுக்கி" என்று குறிப்பிடுகிறார்கள்.
இதைப் போன்றதொரு குறிப்பு கீதையிலும் வருகிறது - -
"தேவைப்படும்போது, ஆமை தன் உடம்பை ஓட்டுக்குள்ளே இழுத்துக் கொள்வது போல், எப்போது தன் ஐம்புலன்களையும் உணர்ச்சிகள் தாக்காமல் எவன் மீட்டுக் கொள்கிறானோ, அவன் அறிவே நிலையானது"
.. பகவத்கீதை (2.58)
மேலே கூறியவற்றுள் "கீதை"
சொல்லும் கருத்தே சரியானதாகும். அது எப்படி என்று பார்ப்போம்.
இவர்களின் கூற்றுக்கும், திருமூலர் கூற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
இவர்கள் ஆரம்ப நிலையில் மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறார்கள். திருமூலர் அறுதி நிலையில் மனிதனிடம் இருக்க வேண்டிய உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார்.
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 3
மனிதனின் சுபாவம் மற்றும் அவனது பழக்கம் பற்றி இரண்டு பழமொழிகள் ...
1. பிறவி குணத்தை மாற்ற
முடியாது.
2. தொட்டில் பழக்கம் சுடுகாடு
மட்டும்.
இந்த இரண்டையும் முழுமையாக ஏற்பதற்கில்லை. பலர் "பிறவி குணத்தையும், தொட்டில் பழக்கத்தையும்" மாற்றிய வரலாறு நிறைய உண்டு.
இது சம்பந்தமாக ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அது மிகுந்த நம்பகத்தன்மை உள்ளதாக இருக்கிறது. அது ..
"Habits die hard"
நேரடியாக பொருள் கூறாமல் சொல்வதாக இருந்தால் "பழக்கம் என்பது எளிதாக மாற்றக்கூடிய ஒன்றல்ல". இதிலிருந்து முயற்சி செய்தால் "பழக்கத்தை" மாற்ற முடியும் என்று புரிந்து கொள்ளலாம்.
ஆக, மாற்ற வேண்டிய ஒன்று "ஐம்புலன்களைத்தான்"; ஆனால், அவற்றை நேரடியாக மாற்ற முடியாது.
கண்டிக்க தக்கது, மாற்ற வேண்டியது "ஐம்புலன்கள்" என்றால், முதலில் அவற்றின் செயல்பாடுகள் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 4
மனிதனின் செயல்பாடுகளுக்கும், "ஐம்புலன்களுக்கும்" என்ன சம்பந்தம்?
"உன்னை நீயே கட்டுப்படுத்தி வளர்ச்சி அடைய முடிந்தால், நீயே உனக்கு நல்ல நண்பன்; உன்னால் உன்னை கட்டுப் படுத்த முடியாமல் நீ வீழ்ச்சி அடைந்தால், நீயே உனக்கு முதல் எதிரி" .. கீதை 6.5; 6.6
இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன ..
1. கட்டுப்படுத்துதல் என்றால்
என்ன?
2. யாரை அல்லது எதை கட்டுப்
படுத்த வேண்டும்?
ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால், கட்டுப்படுத்த வேண்டியது மனிதனை தவறான செயல்களுக்கு இழுத்துச் செல்லும் "ஐம்புலன்களை" என்பது புரியும். ஆனால், எந்தவொரு உந்துதலும் இல்லாமல் அவைகளால் அவ்வாறு செயல்பட முடியாது. அப்படியானால் அவற்றின் பின்னணியில் இருக்கும் காரணி எது?
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 5
ஐம்புலன்களும்
மனிதனை தவறான செயல்களுக்கு இழுத்துச் செல்கிறது என்றால், அதற்கான காரணம் "ஆழ்மனதில் உள்ள பதிவுகளே".
அதேபோல் ஆழ்மனதில் பதிவுகள் எவ்வாறு நிகழ்கின்றன என்று பார்த்தால், அதற்கு காரணியாக இருப்பது "ஐம்புலன்களே".
இது 'கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா' என்ற கதைதான்.
இது ஒரு மாய சுழற்சி. இந்த சுழற்சி 'புற உலகிலிருந்து உள்ளுக்கு, உள்ளுக்குள் இருந்து புற உலகுக்கு' என ஒரு வட்டமாக செயல் படுகிறது.
இந்த சுழற்சி ஏற்படுத்தும் தொல்லைகளை புரிந்து கொண்டு, 'ஐம்புலன்களையும்' எப்படி கையாள்வது எனத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை மிகுந்த அமைதியுடன் வழி நடத்த முடியும்.
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 6
'புற உலகிலிருந்து உள்ளுக்கு, உள்ளுக்குள் இருந்து புற உலகுக்கு' என ஒரு வட்டமாக செயல்படும் சுழற்சியை அறிந்து கொள்ளும் முன், நாம் வேறு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐம்புலன்கள் என்றால், சிலர் 'மெய், வாய், கண், மூக்கு, செவி' என்று சொல்வதுண்டு. அவை 'ஐம்புலன் கருவிகள்'
(sense organs) மட்டுமே. ஐம்புலன்கள் (senses) என்பது அந்தக் கருவிகளையும், மனதையும் இணைக்கும் பாலம்.
'மனதை' ஒரு அதிகாரி என்று எடுத்துக் கொண்டால், ஐம்புலன்கள் மனதின் உதவியாளர்கள்; ஐம்புலன் கருவிகள் அவற்றின் வேலையாட்கள்.
மனம் எதையாவது நினைத்தால் போதும்; ஐம்புலன்களும் உடனே சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்து விடும்.
புதியதாக ஒரு கார் வாங்க வேண்டும் என நினைத்தால், உடனே ஐம்புலன்களும் கருவிகளின் மூலம் தேவையான தகவல்களை சேகரித்து மனதிடம் கொண்டு சேர்த்து விடும்.
கார் வாங்கும் வரை அல்லது கார் வாங்க வேண்டாம் என்று முடிவு எடுக்கும் வரை ஐம்புலன்கள் தகவல்களை திரட்டிக் கொண்டே இருக்கும்.
'நாமும் கொஞ்சம் குடித்தால் என்ன' என்று நினைத்தாலே, அவை ஊரில் எங்கெங்கு சாராயக் கடைகள் உள்ளன என்று தேட ஆரம்பித்து விடும்.
அவற்றிற்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும், அவை நமது மூளையை மழுங்கச் செய்து நம்மை சாராயக்கடை வரைக்கும் இழுத்துச் சென்று விடும்.
(When the mind follows the wandering senses it carries away the understanding, as winds do a boat upon the waters. Gita 2.67)
இனி, உள்ளும் புறமும் நடைபெறும் சுழற்சியை பார்ப்போம்.
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 7
புறவுலகில் மனிதனுக்கு ஏற்படும் அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்கள் மூலமாகவே பெறப்படுகின்றன.
ஐம்புலன்கள் வேலை செய்யாவிட்டால் புறவுலகிலிருந்து எந்த தாக்கமும் மனிதனை வந்தடையாது.
ஆக, சுழற்சியின் ஆரம்ப புள்ளி ஐம்புலன்களே. சுழற்சியின் வட்டப்பாதை ..
பள்ளியில் படிக்கும் சக மாணவன் குறிப்பிட்ட கடையில் ஐஸ்கிரீம் நன்றாக இருக்கும் எனக் கூறுகிறான்.
(1. புறவுலகிலிருந்து புலன்கள் மூலமாக மனிதனிடம் ஏற்படும் தாக்கம்)
மறுநாள் தந்தையுடன் கடைத் தெருவுக்கு செல்லும்போது, அந்தக் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என நினைத்துக் கொள்கிறான்.
(2. தாக்கம் காரணமாக உணர்வு மனதில் "conscious mind" ஒரு பதிவு)
மறுநாள் கடைத் தெருவுக்கு செல்லும்போது தந்தையிடம் கேட்டு, குறிப்பிட்ட கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுகிறான்.
(3. உணர்வு மனதில் இருந்த ஆசை செயலாக
நிறைவேறுகிறது)
ஐஸ்கிரீம் அவனுக்கு பிடித்ததால் தினந்தோறும் அதை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறான்.
(4. தொடர்ந்து நடைபெறும் செயல் பழக்கமாக மாறி ஆழ்மனதில் "subconscious-mind" ஒரு பதிவை ஏற்படுத்துகிறது)
இவை அனைத்தும் புறவுலகிலிருந்து ஆழ்மனம் வரை உள்ள பயணத்தைக் குறிக்கிறது. இனி ஆழ்மனதில் இருந்து புறவுலகம் நோக்கிய பயணம்.
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 8
ஆழ்மனதில் ஏற்படும் பதிவுகளை "வாசனா" பதிவுகள் என்பர்.
மனிதன் பிறக்கும்போதே ஆழ்மனப் பதிவுகளுடனே பிறக்கிறான். அவை முற்பிறவியின் முடிவில் எஞ்சியவை.
1. ஆழ்மனப் பதிவுகளின் காரணமாக, மனிதனிடம் அஹங்காரம் (ego) உருவாகி அழுத்தம் பெறுகிறது.
2. அஹங்காரம் மனிதனிடம் ஆசையை உண்டுபண்ணுகிறது.
3. இதனை ஒட்டியே அவனது சுபாவம் (nature), மனோபாவம் (mental attitude) ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.
4. ஆசைகள் கொடுக்கும் உந்துதல் காரணமாக உணர்வு மனம் ஐம்புலன்கள் மற்றும் ஐம்புலன் கருவிகள் துணை கொண்டு புறவுலகில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
5. அந்த தாக்கத்தின் காரணமாக ஏற்படும் விளைவுகளை ஐம்புலன்கள் மூலமாக உணர்வு மனம் அறிந்து கொள்கிறது.
6. இதன் காரணமாக ஆழ்மனதில் மேலும் பல பதிவுகள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
இந்த சுழற்சிகளின் காரணமாக ஏற்படும் மாற்றங்களே மனிதனின் எதிர்காலத்தை (அடுத்த பிறவியையும்) நிர்ணயம் செய்கின்றன.
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 9
"அஞ்சும் அடக்கு" மற்றும் "ஐந்தடக்கம்" பற்றி திருமூலர், திருவள்ளுவர், பத்திரகிரியார் போன்றவர்கள் சொல்லியதை போன்று கீதையிலும் கிருஷ்ணன் "முதலில் ஐம்புலன்களை கட்டுப்படுத்து; ஏனெனில் அவைதான் ஒரு மனிதனின் அறிவையும், விவேகமாக சிந்திக்கும் திறனையும் அழித்துவிட துடிக்கும் பிரதான எதிரி. எனவே அவைகளை அழித்துவிடு" எனக் கூறுகிறார். .. கீதை 3.41
ஆனால், அத்தகைய வார்த்தைகளுக்கு நேரடியாக பொருள் கொள்ளக்கூடாது.
ஏனெனில், ஐம்புலன் கருவிகளை வேண்டுமானால் அடக்கலாம்; ஆனால் ஐம்புலன்களின் இச்சையை நேரடியாக அடக்க முடியாது.
இருப்பினும், அவற்றின் செயல்படும் வேகத்தை வேறு வழிகளில் மட்டுப் படுத்த முடியும். பின்னர் நாம் வேண்டும் போது மட்டும் அவைகளை செயல்பட வைக்க முடியும்.
உணர்வு மனம் உணர்ச்சி வசப்படக் கூடியது. அது உணர்ச்சி வசப்படாமல் இருந்தால், தேவையற்ற ஆசைகள் மனதில் தோன்றாமல் இருந்தால், ஐம்புலன்களும் கட்டுக்குள் வந்து விடும். அதற்கு உணர்வு மனம் தனித்து இயங்காமல், புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்.
உணர்வு மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால், ஆழ்மனப் பதிவுகளாலும் உணர்வு மனதை உசுப்பேத்த முடியாது. இருந்தாலும் அவை தொடர்ந்து உணர்வு மனதை தொந்திரவு செய்து கொண்டே இருக்கும்.
எனவே, இது சம்பந்தமாக நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான காரியம் .....
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 10
அர்ஜுனன் பகவான் கிருஷ்ணனிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறான்...
"மனிதன் தான் செய்வது பாவம் என்று தெரிந்தும், ஏதோ கட்டாயத்தின் பேரில் செய்வதைப் போன்று தவறு செய்வது ஏன்?" .. கீதை 3.36
அதற்குப் பதிலாக கிருஷ்ணன்
இவ்வாறு கூறுகிறார்...
"அவனிடத்திலுள்ள ரஜோ குணத்தின் காரணமாக அவனிடம் உண்டாகும் ஆசையும், கோபமும் தான் இதற்கு காரணம். இவையே அம்மனிதனின் எதிரிகளாகும்"
.. கீதை 3.37
ஒரு மனிதனிடம் ரஜோ குணம் இருந்தால் அவனிடம் ஆசைகள் பெருக்கெடுக்கும்.
ஆசைகள் பெருகினால் ஐம்புலன்களும் அந்த மனிதனை வெளியில் இழுத்துச் சென்று படுகுழியில் தள்ளி விடும் வாய்ப்புகளும் உண்டு.
அதன் காரணமாக மனிதன் அதிக கோபம் கொள்ள நேரிடலாம்.
ரஜோ குணம் வருவதற்கான காரணம் ஆழ்மனப் பதிவுகளும் அதனால் உருவெடுக்கும் அஹங்காரமும்தான்.
அஹங்காரத்தின் வீச்சு அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட மனிதனிடம் ரஜோ குணம் உருவாகுவது இயற்கையே.
(தொடரும்)
அஞ்சும் அடக்கு
பதிவு 11
ஆழ்மனதில் உள்ள பதிவுகள் தொடர்ந்து தொந்திரவு செய்து கொண்டிருந்தால் உணர்வு மனம் புத்தியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க நேரிடலாம்.
ஆதலால், ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நீக்குவதற்கு தேவையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இது சம்பந்தமாக மேலும் ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உணர்வு மனம் புறவுலகில் பிரவேசிக்க ஐம்புலன்களின் உதவி தேவை. அகவுலகை பொறுத்தவரை அந்தப் பிரச்சினை கிடையாது.
அகத்தில் ஆய்வு (contemplation) செய்வதாக இருந்தாலும், அகத்தை ஆய்வு செய்வதாக இருந்தாலும் அல்லது ரமண மகரிஷி கூறியதுபோல "நான் யார்" என்று ஆராய்ந்து பார்க்க விரும்பினாலும், அங்கு ஐம்புலன்களின் பங்கு என்று எதுவும் கிடையாது.
எனவே அகத்தாய்வில் தினந்தோறும் குறைந்தது அரை மணிநேரம் செலவு செய்தால், அது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்த நல்லதொரு வழியாக இருக்கும்.
( முற்றும்)
No comments:
Post a Comment